January 06, 2008

திருவெம்பாவை - 19

திருச்சிற்றம்பலம்

சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன!

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்!


இந்தப் பாடல் பரிபூரண சரணாகதி நிலையைக் காட்டுகிறது.

'குழந்தையை உன் கையில் கொடுத்துவிட்டோ ம். இனி அவன் உன் பொறுப்பு!' என்று சொல்வது மிகப் பழமையான சொல். அந்தச் சொல்லை உன்னிடம் மிகுந்த அச்சத்தோடு மீண்டும் ஒன்று சொல்கிறோம் கேள்.

'உன் அடியாருக்கு மட்டுமே நாம் வாழ்க்கைப்படவேண்டும். எமது கை உன்னையன்றி வேறொருவருக்கும் தொண்டு செய்யாமல் இருக்கட்டும். இரவானாலும் பகலானாலும் உன் திருவுருவைத் தவிர வேறெதனையும் எமது கண்கள் காணாமல் இருக்கட்டும்.

'இங்கு இவற்றை எல்லாம் எங்களுக்கு நீ அருள்வாயென்றால் சூரியன் எந்தத் திசையில் எழுந்தாலும் எமக்கு என்ன ஆயிற்று!'

சிறப்புப்பொருள்: குழந்தைக்குத் தானாக எதுவும் செய்துகொள்ளத் தெரியாது. பசித்தாலும் உறக்கம் வந்தாலும் வலித்தாலும் அழும். ஒவ்வொரு வகை அழுகையின் பொருளைப் புரிந்துகொண்டு தாய்தான் அதற்கானதைச் செய்ய வேண்டும். அதேபோல, நோன்பிருக்கும் இந்த மகளிரும் சிவனைப் பரிபூரணமாகச் சரணம் அடைந்துவிட்டனர்.

அனைத்தும் அறிந்தவனான அவனிடம் போய், இந்தச் சிறிய விஷயத்தைச் சொல்லவும் அச்சமாக இருக்கிறது. என்றாலும், தமது திருப்திக்காக இவற்றைச் சொல்கின்றனர். முன்னரே,

உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்

என்று ஒன்பதாவது பாசுரத்தில் கூறியதைப் பார்த்தோம். அதோடு மட்டுமல்ல, அத்தகைய அடியவருக்குப் பணி செய்வதும் சிவத் தொண்டே. அதைத் தவிர வேறெதையும் எமது கைகள் செய்யக்கூடாது என்றும் வேண்டுகின்றனர்.

'இரவிலும் பகலிலும் உன் திருவுருவை மட்டுமே எமது கண்கள் காணட்டும்' என்பது மிக முக்கியமான பிரார்த்தனை. வேறெதையும் பார்க்காமல் ஒருவர் எப்படி இருக்க முடியும்?

Gitopadesam small

யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி |
தஸ்யாஹம் ந பரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி ||


என்று பகவான் கீதையில் (அத். 6: ஸ்லோ. 30) சொல்கிறாரல்லவா. இதன் பொருள் 'யார் என்னை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் என்னிடத்திலும் காண்கிறானோ அவன் காட்சியினின்றும் நான் மறைவதில்லை; அவனும் என் காட்சியினின்றும் மறைவதில்லை.'

இவ்வாறே, எதைப் பார்த்தாலும் அதில் உன்னைக் காணவேண்டும் என்பதாக இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அது சரணாகதியின் உச்சநிலை. அப்படிப்பட்ட நிலை வந்தபின்பு ஞானநிலை வெகுதூரத்தில் இல்லை. அதுமட்டுமல்ல, பகவானின் 'என் காட்சியினின்றும் அவர்கள் மறைவதில்லை' என்று வேறு உறுதியளிக்கின்றானே. அப்படி எப்போதும் இறைவனின் பார்வையை விட்டு நீங்காதவர்களுக்கு, சூரியன் எங்கெழுந்தால் என்ன!

இன்னும் வரும்...

1 comment:

vasantruban said...

vasantruban.blogspot.com/searc h/label/GITA

hers u can download in mp3 format