July 04, 2020

சுவாமி விவேகானந்தரும் ஜான் டி. ராக்ஃபெல்லரும்


(இன்று சுவாமி விவேகானந்தர் நினைவுநாள்)

அது 1894ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. சுவாமி விவேகானந்தர் சர்வமத மஹாசபையில் பேசுவதற்காக சிகாகோ சென்றிருந்த சமயம். அவருடைய பேச்சில் மயங்கிய அமெரிக்கப் பத்திரிகைகள் அவரைச் ‘சூறாவளித் துறவி’ என்றெல்லாம் வர்ணித்தன. அவர் பேசிய இடத்திலெல்லாம் மக்கள் குவிந்தனர்.

அதே சமயத்தில் அங்கிருந்தவர் ஜான் டி. ராக்ஃபெல்லர். பெட்ரோலியம் எண்ணெயில் பெரும் சொத்துக் குவித்தவர். எச்சில் கையால் காக்காய் ஓட்டாத தனவந்தர். அவருடைய நண்பர் வீட்டில்தான் விவேகானந்தர் தங்கியிருந்தார். நண்பரும் பலமுறை அவருக்கு விவேகானந்தரின் பெருமைகளைச் சொல்லி, தன் வீட்டில் வந்து சந்திக்க அழைத்தார். ஆனால் பணம் குவிப்பதைத் தவிர வேறெதிலும் ஆர்வமில்லாத ராக்ஃபெல்லர் அசட்டையாகவே இருந்தார். பணம் சேர்ந்தபோதிலும் ராக்ஃபெல்லரின் உடல்நலம் குன்றத் தொடங்கியிருந்த சமயம் அது.

ஒருநாள் ராக்ஃபெல்லர் அந்த வீட்டைத் தாண்டிப் போகும்போது, தன்னையறியாத ஏதோவொரு உந்துதலில் வீட்டுக்குள் சென்றார். அங்கே பட்லர் அவரை வரவேற்று உட்காரச் சொன்னார். விவேகானந்தர் உள்ளே வாசிப்பறையில் இருந்தார். பட்லர் கூறிய இடத்தில் உட்காராமல், அறிவித்த பின்னர்தான் உள்ளே செல்லவேண்டுமென்ற மரபை மீறி, ராக்ஃபெல்லர் நேராக விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

தலையைக் கவிழ்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார் விவேகானந்தர். நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. ராக்ஃபெல்லரை யாரும் இப்படிச் சாமான்யரைப்போல நடத்தியதில்லை. அதில் அவருக்கு அதிர்ச்சிதான். அதைவிடப் பெரிய அதிர்ச்சி அடுத்து வரப்போவதை அவர் அறியவில்லை.

சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்தார் சுவாமிஜி. அதற்குமுன் அவர் ராக்ஃபெல்லரைப் பார்த்ததில்லை. ராக்ஃபெல்லருக்கு மட்டுமே தெரிந்த, அவரைத் தவிர வேறெவருக்குமே தெரிந்திராத சில ரகசியங்களை, அச்சங்களை விவேகானந்தர் அவரிடம் கூறினார். அதைக் கேட்ட ராக்ஃபெல்லருக்கு அதிர்ச்சியாக, அமானுஷ்யமாக இருந்தது. “உங்களுக்கு இவை எப்படித் தெரியும்? யார் கூறினார்கள்?” என்று கேட்டார் ராக்ஃபெல்லர். 

ஒரு புன்னகையோடு, உளறுகிற குழந்தை ஒன்றைப் பார்ப்பதுபோல அவரைப் பார்த்த சுவாமிஜி, “போனது போகட்டும். மகிழ்ச்சியாக இருங்கள். கவலையில் முழுகியிருக்க வேண்டாம்” என்று கூறினார். பின்னர் சுவாமி ஒரு கேள்வி கேட்டார், “உங்களிடம் மற்றவர்களைப் போல் நூறு மடங்கு செல்வம் குவியக் காரணம் நீங்கள் மற்றவர்களைவிட நூறு மடங்கு புத்திசாலி என்பதாலா?”.

யாரும் அவரிடம் இப்படிப் பேசத் துணிந்ததில்லை. ராக்ஃபெல்லர் கூறினார், “நிச்சயம், நான் 100 மடங்கு அதிக புத்திசாலிதான்!”

சுவாமிஜி பேசிப்பேசி அவரிடம் இருக்கும் மிகையான செல்வம் கடவுளால், பிறருக்கு நன்மை செய்யும் பொருட்டாக அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதாக விளக்கினார். “யோசித்துப் பாருங்கள், இந்தச் செல்வத்தை ஏன் பிறரது நன்மைக்குப் பயன்படுத்தக் கூடாது?” என்று கேட்டார்.

ராக்ஃபெல்லருக்கு இந்தக் கேள்வியே கேலிக்குரியதாகத் தோன்றியது. “நான் இந்தச் செல்வத்தைச் சேர்க்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். இதைத் தூக்கிக்கொடுக்கும் எண்ணம் எனக்கில்லை” என்று மிகவும் பணிவோடு கூறிவிட்டு ராக்ஃபெல்லர் போய்விட்டார்.

மூன்று வாரம் போனது.

விவேகானந்தரைப் பார்க்க மீண்டும் வந்தார் ராக்ஃபெல்லர். விவேகானந்தர் முன் ஏதோவொரு காகிதத்தை வீசி எறிந்தார். அதில் ஒரு தொகையை அவர் ஒரு நற்காரியத்துக்குக் கொடுத்திருப்பதாக இருந்தது. 

அவர் சுவாமிஜியிடம் “இதை நான் செய்திருக்கிறேன், இப்போது சந்தோஷமா? எனக்கு நன்றி சொல்லுங்கள்” என்றார்.

விவேகானந்தர் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை, சிறிது நேரத்துக்குப் பின் கூறினார், “நீங்களல்லவா எனக்கு நன்றி சொல்லவேண்டும்?”

அப்போதைக்கு ராக்ஃபெல்லர் அங்கிருந்து போய்விட்டார். ஆனால், ஒரு மகானின் தொடர்பு யாரையும் அடியோடு மாற்றிவிடும் என்பதில் சந்தேகமில்லை. 

1913ஆம் ஆண்டில் அவர் மிகமிகப் பெரிய நிதி ஆதாரத்துடன் சமுதாயத்திற்கு பெரும் நற்பணிகளைச் செய்த ராக்ஃபெல்லர் அறக்கட்டளையைத் தொடங்கினார். இன்றைக்கும் அவருடைய பெயர் அமெரிக்காவில் நினைக்கப்படுகிறது.

(இதையொட்டி பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா ஒரு முக்கியமான தகவலைக் கூறினார். அது பின்னால்.)

July 03, 2020

புத்தம் சரணம்: தலையின் விலை


இந்தியாவின் பெரும்பகுதியை வென்று தனது மகத சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துப் பேரரசன் என்று பெயர் பெற்றவன் அசோகன். ஆனால் போரினால் ஏற்படும் பேரழிவு மனதைமாற்ற, அவன் புத்த தர்மத்தைச் சரணடைந்ததோடு, அதனைப் பரப்ப இலங்கைக்குத் தன் மகளையும் மகனையும் அனுப்பினான். அவனைப்பற்றிய கீழ்க்கண்ட சம்பவம் நெஞ்சைத் தொடுவதாகும்:

புத்தபிட்சுக்களை எங்கு பார்த்தாலும் அவர்களது பாதத்தில் தலையை வைத்து வணங்குவதை மாமன்னன் அசோகன் வழக்கமாகக் கொண்டிருந்தான். யசன் என்ற அமைச்சன் ஒருவனுக்கு இது பிடிக்கவில்லை. அவனும் புத்த தர்மத்தைப் புதிதாகக் கைக்கொண்டவன்தான். ஒருநாள் அரசனிடம் 'மன்னர்மன்னா, நீங்கள் இந்தத் துறவியரின் பாதத்தில் உங்கள் தலையை வைத்து வணங்குவது உங்களுக்கு அழகல்ல. அதிலும் குறிப்பாகக் கீழ்ச்சாதியிலிருந்து வந்த துறவிகளுக்கு அத்தனை மரியாதை அவசியமுமில்லை' என்று துணிச்சலாகச் சொல்லிவிட்டான்.

அதைக் கேட்டுக்கொண்ட அசோகன் ஒன்று பேசவில்லை. சிலநாட்கள் கழித்துத் தன் அமைச்சர்களை ஒவ்வொருவராக அழைத்து ஆடு, மாடு, கோழி, ஒட்டகம், யானை என்று இவ்வாறு வெவ்வேறு பிராணிகளின் தலையை விற்பதானால் என்ன விலை கிடைக்கும் என்று அறிந்து வரச் சொன்னான். யசனை அழைத்து ஒரு மனிதத் தலையை விற்கவேண்டும், அதற்கு எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்துவரச் சொன்னான்.

எல்லோரும் அவரவர்களுக்கான பிராணித்தலைக்கான விலையை அறிந்துகொண்டு வந்து கூறினார்கள். யசன் வந்து 'மனிதத்தலையை வாங்கிக்கொள்ள யாரும் தயாரில்லை' என்று கூறினான்.

'எதனால்?'

'அது வெறுக்கத் தக்கது. அதனால் ஒரு பயனும் இல்லை.'

'ஒரு தலை மட்டும்தான் அப்படியா. இல்லை, எல்லா மனிதத் தலைகளுமேவா?'

'எல்லாத் தலைகளும் வெறுக்கத் தக்கவைதாம்'

'என்ன! என் போன்ற பேரரசனின் தலையையும் யாரும் விரும்புவதில்லையா?' என்று கேட்டான் அசோகன்.

பதில் சொல்ல அஞ்சிய யசன் மௌனமாக இருந்தான். 'பயப்படாதே யசா! சொல் உண்மையை' என்று அரசன் கட்டளையிட்டான்.

'ஆமாம் பேரரசே, உங்கள் தலையும் வெறுக்கத் தக்கதே' என்றான் யசன்.

'மெய்தான். வெறும் கர்வத்தாலும் மேட்டிமைத்தனத்தாலும் நீ பிட்சுக்களைப் பணிவதைத் தடுக்கப் பார்க்கிறாய். சும்மா கொடுத்தாலும் யாரும் வாங்கத் தயாராக இல்லாத இந்தத் தலையை அவர்களின் பாதத்தில் வைத்து நான் என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன். இதிலே தவறு என்ன வந்துவிட்டது?

'ஒரு துறவியின் ஜாதியைப் பார்க்கிறாயே அல்லது அவரது உயர்வை உன்னால் பார்க்க முடிகிறதா? திருமணத்திற்காக வேண்டுமானால் நீ ஜாதியைக் கேட்டறிந்துகொள்.

'புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? எதிலே ஒன்றுமே இல்லையோ அதிலும் நல்லதைக் காண்பவன் ஞானி என்று கூறியிருக்கிறார். நான் அவரது வார்த்தைகளைக் கடைப்பிடிக்க முயற்சிக்கையில், அதைத் தடுப்பது நீ என்மீது கொண்ட அன்பைக் காண்பிப்பதல்ல. எழுந்தும் விழுந்தும் வணங்கமுடியாமல் என் உடல் ஒரு சவைத்துத் துப்பிய கரும்புச் சக்கையைப்போல நிலத்தில் கிடக்கும்போது அதனால் என்ன பயன்?

'எவனால் சிந்திக்க இயலாதோ அவன் 'நான் மிக உயர்ந்தவன்' என்று கூறிக்கொள்கிறான். இளவரசனோ, பிச்சைக்காரனோ, சதையும் ரத்தமும் எலும்பும் தலையும் எல்லாம் ஒன்றே. ஆடைகளும் ஆபரணங்களுமே அவர்களைப் பிரித்துக் காட்டுவது. ஓர் அறிவாளி ஓர் உடலில் காணும் மெய்யான மேன்மையை இனம் கண்டு அதை வணங்கிப் பணிகிறான்' என்று தெளிவுபடுத்தினான் அசோகன்.

ஆதாரம்: மதுரபாரதி எழுதி கிழக்குப்பதிப்பகம் வெளியிட்ட புத்தம் சரணம்

July 01, 2020

குரு நானக்ஜீ வாழ்க்கையில்: தச்சர் வீட்டு விருந்து



குரு நானக்கும் மர்தானாவும் சைதுபூர் என்ற இடத்தை அடைந்தனர். பிற்காலத்தில் இதைத் தாக்கி அழித்த முகலாய மன்னர் பாபர் இதன் பெயரை எமினாபாத் என்று மாற்றிவைத்தார்.

எமினாபாதில் ஓர் ஏழை மரத்தச்சர் இருந்தார். அவரது பெயர் லாலு. பல தனவந்தர்களின் வீடுகளை அசட்டை செய்துவிட்டு நானக் நேராக லாலுவின் வீட்டுக்குச் சென்றார். அவரது வீட்டில் கிடைத்த வறண்ட ரொட்டியை ஏதோ ராஜவிருந்து போல ருசித்துச் சாப்பிட்டார் நானக். உயர்ந்த க்ஷத்திரிய குலத்தில் பிறந்த நானக் ஒரு தச்சரின் வீட்டில் தங்கியிருக்கும் செய்தி ஊருக்குள் பரவியது. எல்லோரும் அவரைப் பார்க்க வந்தனர். வந்த இடத்தில் குரு நானக் தேவரின் அன்பான, பொருள்பொதிந்த சொற்களால் ஈர்க்கப்பட்டனர். லாலுவும் குருதேவரைத் தனது வீட்டில் இன்னும் சில நாட்கள் தங்கியிருக்குமாறு அன்போடு வேண்டிக் கொண்டார்.

அதே ஊரில் மாலிக் பாகோ என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் சைதுபூர் முஸ்லிம் நிர்வாகியிடம் திவானாக இருந்தார். மாலிக் பாகோ ஒருநாள் ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார். அதற்கு அவ்வூரில் இருந்த இந்து மற்றும் முஸ்லிம் துறவிகளை அழைத்தார். விருந்துநாள் வந்தது. அவரது மாளிகையில் சன்னியாசிகளும் பக்கிரிகளும் பெரும் எண்ணிக்கையில் கூடிவிட்டனர். ஆனால் ஏழை லாலுவின் வீட்டில் தங்கியிருக்கும் தல்வண்டி ஊர்க்கார ஞானியார் மட்டும் வரவில்லை என்பது அவருக்குத் தெரியவந்தது.

மாலிக் பாகோவுக்கு ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் ஆச்சரியம். தன்னுடைய ஆடம்பரமான விருந்து அவருக்கு ஒரு பொருட்டில்லையா! உடனே ஓர் ஏவலாளை அனுப்பி அவரை அழைத்துவரச் சொன்னான்.

"ஐயா! நீங்கள் தங்கியிருக்கும் அந்த ஜாதிகெட்டவனின் விருந்து எனது விருந்தைவிட மேலானதாக உங்களுக்குத் தோன்றுகிறதோ?" என்று கேட்டார் மாலிக்.

"சந்தேகமில்லாமல்" என்றார் நானக்.

"நீங்கள் சாப்பிட்டுப் பார்க்காமலே எப்படித் தீர்மானித்தீர்கள்?"

"எங்கே, என் கையில் இரண்டு ரொட்டிகளைக் கொடு" என்றதும் நெய் சொட்டும் இரண்டும் ரொட்டிகள் நானக்கின் கையில் தரப்பட்டன.

குரு நானக் தனது மற்றொரு கையைக் காட்டினார். அதில் லாலுவின் வீட்டு வறண்ட ரொட்டி இருந்தது. இரண்டு கைகளில் இருந்த ரொட்டிகளையும் அழுத்திப் பிழிந்தார்.

என்ன ஆச்சரியம், மாலிக்கின் ரொட்டியிலிருந்து நெய் சொட்டவில்லை, ரத்தம் சொட்டியது! லாலு வீட்டு ரொட்டிகளில் இருந்து பால் சொட்டியது.

பார்த்த மக்கள் பிரமித்தனர், மாலிக்கோ திகைத்துப் போனார்.

"பெரியோனே! இது என்ன விபரீதம். ஏன் இப்படி நடக்கிறது?" என்று கேட்டார் மாலிக்.

"நீ சற்றும் இரக்கமில்லாமல் எளிய மக்களைப் பிழிந்தெடுத்து அவர்களது ரத்தத்தால் வரும் செல்வத்தைச் சேமிக்கிறாய். அதனால் உனது ரொட்டியிலிருந்து ரத்தம் சொட்டியது. லாலு கடின உழைப்பாளி. பிறர் செல்வத்தின்மேல் ஆசை வைக்காதவன். சம்பாதிக்கிற சிறிது பணத்தில் நிறைவாக வாழ்கிறான். பிறருக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்கிறான். அதனால் அவனுடைய ரொட்டியிலிருந்து பால் சொட்டியது" என்று விளக்கினார் குரு நானக்.

மாலிக் குருதேவரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார். அவரது உபதேசங்களைச் செவிமடுத்து மறுபிறப்பெடுத்தார்.

ஆதாரம்: மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘சீக்கிய மதம்’