January 13, 2008

திருப்பள்ளியெழுச்சி - 5

திருச்சிற்றம்பலம்

போக்கும் வரவும் இல்லாதவன்

பூதங்கள்தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள்முன் வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


'பஞ்ச பூதங்களின் உள்ளும் உறைபவனாக நீ இருக்கிறாய். அதுமட்டுமல்லாமல் உனக்குப் போக்கும் வரவும் கிடையாது என்றெல்லாம் அறிஞர்கள் புகழ்ந்து பாடுகின்றனர், ஆடுகின்றனர். அவற்றை நான் கேட்டிருக்கின்றேன். ஆனால் உன்னைப் பார்த்ததாக யாரும் கூறி நான் கேட்கவில்லை.

'குளிர்ச்சியான வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் உறைகின்றவனே, எங்கள் சிந்தனைக்கும் எட்டாதவனே. எமக்கு முன்னே தோன்றி, எமது குற்றங்களையெல்லாம் களைந்து ஆட்கொண்ட எம்மானே! பள்ளி எழுந்தருள்வாயாக.'

சிறப்புப்பொருள்: உலகம் ஐம்பூதங்களால் ஆனது. பஞ்ச பூதங்களிலும் இறைவன் இருக்கின்றான் என்றால் உலகின் ஒவ்வொரு அணுவிலும் அவன் இருக்கிறான். ஆனால் அறிஞர்களோ அவனது போக்கு வரவில்லா நிரந்தர இருப்பைப்பற்றி அறிவுபூர்வமாகப் பாடுகிறார்கள். அவனோ அறிவினால் அறியத் தக்கவனல்லன். எனவேதான் புலவர்கள் என்னதான் பாடினாலும் ஆடினாலும் அவர்கள் மெய்யாகவே இறைவனைக் கண்டுணர்ந்தவர்கள் அல்லர்.

ஆனால் மாணிக்க வாசகர் போன்ற ஞானியரோ தமது எல்லையற்ற பக்தியினாலும் தவத்தினாலும் இறைவனை ஈர்த்துவிடுகின்றனர். அத்தகையோரிடம் சிறிது குற்றங்கள் இருப்பினும், இறைவன் தானே எதிர்வந்து, குற்றங்களைக் களைந்து அவர்களை ஆட்கொள்கிறான்.

மனம், அறிவு ஆகியவை உடல் சார்ந்தவை. எவனொருவன் தன்னைத் தனது உடலும் உடல் சார்ந்தவைகளும்தான் எனத் தவறாக நினைக்கிறானோ அவனுக்கு மெய்யறிவு துலங்குவதில்லை. 'இது நானல்ல, இது நானல்ல (நேதி, நேதி) என்று உடல்சார்ந்தவற்றை ஒவ்வொன்றாக ஒதுக்கினான் என்றால் இறுதியாக எஞ்சுவது 'நான்' ஆக இருக்கும். அதுதான் சுயதரிசனம். அதுதான் ஞானநிலை. அதுதான் ரமணர் போன்றோர் நிலைத்திருந்த ஆத்மானந்த அனுபவ நிலை.

அந்த நிலை நம் போன்றோருக்கு ஊகிக்கவும் அரிது என்பதனாலேயே 'சிந்தனைக்கும் அரியாய்' என்கிறார். ஆனால் இறைவன் தனது பரம கருணையினாலே, நாம் நமது அறிவின்மீதும், உடலின்மீதும் கொண்ட அபிமானங்களை அகற்றிச் சரணடைவோமேயானால், அவனே நமது குற்றங்களை அகற்றி ஆட்கொள்கிறான். 'நீ இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் இறைவன் உன்னை நோக்கிப் பத்து அடி எடுத்து வைக்கிறான்' என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியது இதைத்தான்.

(அருஞ்சொற்பொருள்: ஏதம் - குற்றம்.)

இன்னும் வரும்...

January 12, 2008

திருப்பள்ளியெழுச்சி - 4

திருச்சிற்றம்பலம்

என்னையும் நீ ஆண்டுகொண்டனையே ஐயா!

இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!


'மார்கழி மாதத்தின் இந்த அதிகாலைப் பொழுதில் உன் சன்னதியில் அமர்ந்து சிலர் வீணையும் சிலர் யாழும் வாசிக்கின்றனர். மற்றொரு பக்கம் சிலர் ரிக் முதலான வேதங்களால் உன்னைத் தோத்தரிக்கின்றனர்.

'சிலர் நெருங்கத் தொடுத்த மாலைகளைக் கையிலேந்தி வருகின்றனர். உன்னைத் தொழுபவர் சிலர், அழுபவர் சிலர், பக்திப் பெருக்கால் மயங்கி விழுபவர் சிலர். மற்றும் சிலர் தம் தலைக்கு மேலே கையை உயர்த்திக் கூப்பி வணங்குகின்றனர்.

'ஆவுடையார் கோவிலில் உறையும் சிவபெருமானே! விழுமிய பக்தியைக் காட்டும் இந்தச் செயல்களுள் எவற்றையும் நான் செய்யாத போதும், என்னை ஆட்கொண்டு, இனிய அருளை வழங்கும் எம்பெருமானே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக.'

சிறப்புப்பொருள்: எல்லோரும் அவரவரால் முடிந்த வழிகளில் இறைவனை வழிபடுகின்றனர். இவை எதையுமே செய்யாதவரும் உள்ளனர். அவர்கள் மனதிலே மட்டும் பக்தி கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் எம்பெருமானே, எந்தவகை பக்தியாக இருந்தாலும் அதனை ஏற்று, பக்தி செய்பவரை ஆட்கொண்டு, அருள் செய்கிறான் என்பது இப்பாடலால் பெறப்படுகிறது.

'என்னால் பாட முடியவில்லையே', 'என்னால் பூத்தொடுத்துச் சாற்ற முடியவில்லையே', 'என்னால் வேதம் ஓத முடியவில்லையே' என்று நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்காமல், நமக்கு எது முடியுமோ அதை நிச்சயம் செய்ய வேண்டும். எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு இறையருள் கிடைக்கவில்லை என்று பேசுவதில் பலன் இல்லை.

வறியவர்க்கு அன்னதானம் செய்தல், அடியவர்க்கு அமுது செய்வித்தல், பக்திப் பனுவல்களான தேவாரம், திருவாய்மொழி, திருவாசகம், திருப்புகழ், சஹஸ்ரநாமங்கள், புஜங்கம் என்று அருளாளர்கள் நமக்கு எவ்வளவோ அருளிச் சென்றிருக்கிறார்கள். ஓரிடத்தில் அமர்ந்து, மனதை ஒருமைப்படுத்தி, இவற்றைப் பாராயணம் செய்யவேண்டும். ஞானிகளின் அருளுரைகளைப் படிக்க வேண்டும். இறைவனே வந்து நம் பொருட்டாக ஸ்ரீமத் பகவத் கீதையை அருளிச் செய்திருக்கிறான். அதைப் படிக்கவேண்டும்.

பராயணம் என்ற சொல்லுக்கு 'செல்லுதல், இறுதி லட்சியம்' என்றெல்லாம் பொருள்கள் உண்டு. சம்சாரக் கடலின் மறுகரைக்குச் செல்ல இறைவன் திருநாமமும், அவன் புகழைப் பேசும் பக்தி நூல்களும் துணைசெய்யும். நம்பாதவர்களின் கேள்விகளாலும், வாழ்க்கையின் சோதனைகளாலும் நமது பக்தி ஆட்டம் கண்டுவிடாத உறுதியைத் தரும். நமது அனுபவத்துக்கேற்பப் புதிய புரிதல்களை உண்டாக்கும்.

இன்னும் வரும்...

January 11, 2008

திருப்பள்ளியெழுச்சி - 3

திருச்சிற்றம்பலம்

எல்லோரும் அறிவதற்கு அரியவன்,
எமக்கோ எளியவன்!


Thinnappan

கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி, ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது, விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவ பெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


'பூங்குயில்கள் கூவுகின்றன, கோழிகள் கூவுகின்றன. சிறு பறவைகள் கீச்சிடுகின்றன. சங்கின் பேரொலி கேட்கிறது.

'உதய திசையில் அடர்ந்து வரும் ஒளியைக் கண்டு தாரகையில் ஓடி ஒளிந்துகொண்டன. திருப்பெருந்துறையை இருப்பிடமாகக் கொண்ட பரமனே! உன்னுடைய கழலணிந்த இரு தாள்களையும் அன்போடு எமக்குக் காண்பித்து அருள்வாய்!

'எல்லோருக்கும் உன்னை அறிவது மிகக் கடினமாக இருக்கிறது. ஆனால், நீ எமக்கு எளிதாகப் புலப்படுகிறாய். எம்பெருமானே! பள்ளி எழுவாயாக!'

சிறப்புக்குறிப்புகள்: எல்லோரும் என்பது மனிதர் தவிர்த்த உயிர்கள். இதிலே யக்ஷ கின்னர் கந்தர்வர்கள், தேவர்கள் போன்றோர் அடங்குவர். அவர்களெல்லாம் வானுலகில் வசித்து உயர்ந்த இன்பங்களை அனுபவிப்பதாகத் தோன்றினாலும், அவையும் பிறவிகளும் பதவிகளுமே ஆம். அதனால்தான்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!


என்று ஆழ்வார் பாடினார். பக்தியில் தோய்தலும், பழுத்துத் தவம் முயல்வதும், தவம் பலித்துத் தன்னை உணர்தலும், மெய்ஞ்ஞான சித்தியும் மனிதருக்கே உரியன என்று பெரியோர் கூறுகின்றனர். நம் கண்முன்னே ஜீவன் முக்தர்களாக வாழ்ந்தவர்களைப் பார்த்திருக்கிறோம், பார்க்கிறோம்.

திண்ணன் என்ற வேடனின் எல்லையற்ற அன்புக்கு எளிவந்த பிரானாக ஆனவனல்லவா அவன். ஆனால் எல்லோரும் அவனுடைய செருப்புக் காலையும் எச்சில் நீரையும் பன்றிக் கறியையும் பேசுகிறார்கள். அவையல்ல முக்கியம். அவனுடைய பக்தியின் உயர்வுதான் முக்கியம்.

சிவலிங்கத்தின் கண்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்துத் தனது ஒரு கண்ணை அம்பால் பிடுங்கி அப்பினான். அந்தக் கண்ணில் ரத்தம் நின்றது. ஆனால் லிங்கத்தின் மறுகண்ணில் ரத்தம். உடனே தயங்காமல் தனது மற்றொரு கண்ணையும் பிடுங்கி அப்பினான். பிறகு கேவிக்கேவி அழுதானாம். தன் இரு கண்களும் போய்விட்டனவே என்றா? இல்லை, சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே. மூன்றாவது கண்ணில் ரத்தம் வழிந்தால் அப்புவதற்குத் தனக்கும் மூன்று கண்கள் இல்லையே என்று அழுதானாம்.

அவ்வாறு தனது உடலுக்கு ஏற்படும் ஊறையும் வலியையும் பொருட்படுத்தாமல் (தான் உடல் என்று கருதி அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிராமல், தேகான்ம பாவத்தை விடுத்து), புறக்கண்களைப் பொருட்படுத்தாமல் அகக்கண்ணால் நோக்கினால், சீவனுக்குச் சிவன் காண எளியவனாவான் என்பதே திண்ணப்பன் என்னும் வேடன் கண்ணப்பன் ஆனதன் தத்துவம்.

ஆன்மீக முயற்சிக்கு உறுதுணை என்ற அளவிலேதான் உடலைப் பேண வேண்டுமே அல்லாது, அதன் அழகும் சுகமும் வலிவும் வண்ணமும் லட்சியங்கள் அல்ல. இந்த ஒளி மனதில் உதயமானால் பிற உலகியல் எண்ணங்கள் என்னும் தாரகைகள் மனதில் ஒளியிழக்கும்.

(அருஞ்சொற்பொருள்: ஓவின - இல்லாமற்போயின)

இன்னும் வரும்...