June 13, 2004

குழலூதும் கண்ணன்: ஒரு படப்பிடிப்பு

நப்பின்னையைப் பற்றிப் பேசும்போது பெரியாழ்வார் பக்கம் கொஞ்சம் திரும்பினோம். யசோதை "வெக்கமிருக்காடா கண்ணா உனக்கு! இப்படி அழுக்காக நிக்கறதைப் பார்த்தால் நப்பின்னை சிரிப்பாளே, வா குளிக்க" என்று அறிவுறுத்திக் கண்ணனைக் கூட்டிக்கொண்டு போன அழகைப் பார்த்ததும் இன்னும் பெரியாழ்வாரைப் படிக்கவேணுமென்று ஆசையாயிற்று.

கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுகின்ற அழகைப் பெரியாழ்வார் சொல்வது அப்படியே சர்க்கரை மலை. "கண்ணன் தனது இடது கன்னத்தைத் தோள்மேலே அழுத்திக்கொள்கிறான்; இரண்டு கைகளையும் புல்லாங்குழலில் சேர்த்து வைக்கிறான்; புருவங்கள் நெறிந்து மேலே உயர்கின்றன; காற்றை உள்ளே இழுத்து ஊதுவதனால் வயிறு குடம்போல உப்பித் தணிகிறது; உதடுகள் இடப்புறமாகக் குவிகின்றன; இப்படி புல்லாங்குழல் ஊதுகிறான்! அதைக்காண அங்கே கோபியர்கள் வந்ததைப் பார்க்க மயிலினங்களும் பெண்மான்களும் சேர்ந்து வந்தாற்போலத் தோன்றுகின்றது. காதல் மிகுதியாலே அவர்களுடைய மலர்சூடிய கூந்தல் அவிழ்ந்து தாழ்கிறது. அணிந்திருக்கும் ஆடை நெகிழ்கிறது. ஒரு கையாலே சரியும் துகிலைப் பிடித்துக்கொண்டு, ஒசிந்து நின்று தம் செவ்வரி படர்ந்த கண் கிருஷ்ணனின் மீதே பதிந்திருக்க அவர்கள் தம்மை மறந்து நிற்கிறார்கள்."

இட அணரைஇடத் தோளடு சாய்த்து
இருகை கூட, புருவம் நெறிந்தேற,
குடவயிறு பட, வாய் கடை கூட,
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
மடமயில்களடு மான்பிணை போலே
மங்கைமார்கள் மலர்க்கூந்தல் அவிழ
உடைநெகிழ ஓர் கையால் துகில் பற்றி
ஒல்கி, ஓடு அரிக்கண் ஓட நின்றனரே
.

(பெரியாழ்வார் திருமொழி - 276)

[அணர் - கன்னம்]

இதிலே இரண்டு துல்லியமான சித்திரங்கள். ஒன்று குழல் ஊதும்போது கண்ணனிடத்தில் ஏற்படுகிற மெய்ப்பாடுகள். அத்துடன் "சிறு விரல் தடவிப் பரிமாற, செங்கண் கோட, செய்ய வாய் கொப்பளிப்ப, குறு வெயர்ப்புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது" என்று 282-ஆம் பாசுரத்தில் பாடுவதையும் சேர்த்துக்கொண்டால் ஒரு அசையும் சித்திரம் முழுமையாகிவிடுகிறது. அடுத்தது, அதைக் கண்டு காதல்மீதூறி நிற்கும் கோபியர்களின் மெய்ப்பாடுகள். எவ்வளவு கச்சிதமான படப்பிடிப்பு!

No comments: