June 06, 2004

கொல்லிமலைச் செலவு

கொல்லிமலை இன்னும் முடியலைன்னு சொன்னேன். தொடர்கிறேன்.

சேலத்திலிருந்து ஏற்காடும் கொல்லிமலையும் கிட்டத்தட்ட ஒரே தூரம்தான். ஆனால் ஏற்காட்டில் மக்கள் போய்க் குவிகிறார்கள். கொல்லிமலை கேட்பாரற்றுக் கிடக்கிறது. நாமக்கல், ஆத்தூர், சேந்தமங்கலம், ராசிபுரம் என்று நான்கு பக்கமும் சூழப்பட்ட இந்த மலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு.

காரணம் உண்டு. மலை மிகச் செங்குத்தானது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல் 64 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டிப் போய் உச்சியை அடைந்தால், ஆஹா! என்ன சந்தோஷம். ஒரு நாளைக்கு (5 வருடங்களுக்கு முன்னால்) இரண்டு தடவை பேருந்து நாமக்கல்லிருந்து போகிறது. பயங்கரக்கூட்டம். ஜன்னல் வழியாக உங்களுக்கு முன்னால் துண்டு போட்டுவிடுவார்கள். இடித்துப் பிடித்து உள்ளே முதலில் ஏறி இடம்பிடிக்கும் திறமை இருந்தால் ஒலிம்பிக்ஸ் மெடலுக்கு முயற்சி செய்யலாம். இப்போது அதிக வசதிகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தொந்தரவு வேண்டாம் என்று போய் வாடகை மகிழுந்து (செலவழிக்கக் காசிருந்தால்) கேட்டால், வரமாட்டேன் என்பார்கள். யாருக்கு வேண்டும் 64 கொண்டை ஊசி! சொந்தக் காரில் செல்பவர்கள் அதிஷ்டசாலிகள். நான் போன இடுகையில் சொன்ன 'ஹோட்டல் வல்வில் ஓரி' நீங்கள் போகவேண்டிய அறப்பளீசுரர் கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. முன்னாலேயே இருக்கிறது. (வல்வில் ஓரியைப் பற்றிப் புறாநானூறில் இன்னும் நல்ல பாடல்கள் உள்ளன. பிறகு பேசலாம்.)

அறப்பளீசுரர் கோவில் 2000 ஆண்டுப் பழமை வாய்ந்தது. அறப்பளீசுர சதகம் என்ற நூலும் உண்டு. அறப்பளீசுரர் கோவில் அருகில் அழகான ஓடை. குளித்துக் கொண்டே இருக்கலாம். அங்கே இருக்கும் ஓலைவேய்ந்த கடைகள் ஒன்றில் முன்கூட்டியே போய்ச் சொன்னால்தான் உங்களுக்குச் சிற்றுண்டியோ உணவோ கிடைக்கும். இல்லாவிட்டால் குளித்துவிட்டு வந்து பசியில் தவிக்கவேண்டியதுதான். உங்கள் உடைமைகளை நம்பி அங்கு வைத்துவிட்டுப் போகலாம்.

கோவிலிலிருந்து பக்கத்தில் பயணியர் விடுதி இருந்தது. 15 ரூபாய் கொடுத்தால் படுக்கை மட்டும். பை அல்லது பெட்டியை அப்படியே கட்டிலுக்குக் கீழே வைத்துக்கொண்டு தூங்கவேண்டியது. காலையில் எழுந்தால் சுற்றிலும் இருக்கும் காட்டுக்குள் போய் இறக்குமதி சமாச்சாரங்களை முடித்துக் கொள்ளவேண்டும். பல் கூடத் திறந்தவெளியில் நின்றுதான் தேய்க்கவேண்டும். அதையெல்லாம் சமாளிக்க முடியாதவர்கள் வல்வில் ஓரியில் அறைஎடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.

அருவி நம்பமுடியாத அழகு. பொதுவாக மற்ற இடங்களில் உங்கள் மட்டத்துக்கு மேலே இருந்து விழும் அருவி. இங்கே நீங்கள் கீழே இறங்கிப் போய் அதைச் சந்திக்கவேண்டும். 420 படிகள் என்று நினைவு. இறங்கும் போது சிரமம் தெரியாது. கர்நாடகாவில் ஷராவதி நதியின் குறுக்கே 'ஜோக்' அருவி (சிரிக்காதீர்கள்) பார்த்ததுண்டா, அதுபோலத்தான். பள்ளத்தாக்கில் இறங்கிப் போய் 'ஆகாயகங்கை'யைக் கழுத்துவலிக்க நிமிர்ந்து பார்க்கவேண்டும்.

இறங்கி அருவி இருக்கும் பகுதிக்குப் போனால், 'இது பூலோகம் தானா?' என்ற ஆச்சரியம் உங்களை அமுக்கும். அழகென்றால் அத்தனை அழகு. பூமத்திய ரேகைக் காடுகள் அழியாது இருக்கும் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். கையில் சாப்பிட ஏதாவது கொண்டுபோய்விடுங்கள். இல்லாவிட்டால் திரும்பி மேலே வரும்வரை பசி தாங்காது. திரும்பி மேலே ஏறும்போது உங்கள் இதயத்தின் வலு பரிசோதிக்கப்படும். சிரமமான ஏற்றம். குழந்தைகள் முதியோர் இருந்தால் உட்கார்ந்து உட்கார்ந்து மெல்ல ஏற வேண்டும்.

சனி, ஞாயிறுகளில் சுமோக்களும், குவாலிஸ்களும் பறக்கும். மற்ற மலைத்தலங்களைப் போல் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கூட்டம் இருக்கும். அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. கண்டிப்பாக அரசினர் மூலிகைப் பண்ணையைப் போய்ப் பாருங்கள். தெரிந்தவர்களைக் கேட்டுத் தேன் வாங்குங்கள். விலையில் அடாவடியாகப் பேரம் உண்டு. தெரியாமல் வாங்கினால் வெல்லப்பாகுதான். கவனம் தேவை. அதற்கான நாட்களில் விலைகுறைவாக அன்னாசிப் பழம் கிடைக்கும்.

ஒரே நாள்தான் போனேன். எல்லா இடமும் பார்க்கவில்லை. ஒரு பூங்கா பார்த்தேன். பெயர் மறந்துவிட்டது. நான் போன அன்றைக்கு நாங்கள் மூவர் மட்டுமே. சர்வ சுதந்திரம். தொண்டை கிழியப் பாடினோம். பறவைகளிடம் சங்கதிகள் சொல்லிப் பார்த்தோம். மரநிழலில் மதியம் படுத்துத் தூங்கினோம். பேரானந்தம்.

மீண்டும் போகவேண்டும்.

2 comments:

பரி (Pari) said...

ஃப்ளைட் புடிச்சு நேரா அங்கெ போய் எறங்கறமாதிரி வச்சிட்டீங்க :-)

Madhurabharati said...

«Ð×õ ¾Ìõ Àâ, «ùÅÇ× ¿øÄ þ¼õ. ¿ñÀ÷¸û §º÷óÐ ƒ¡Ä¢Â¡ô §À¡¸Ïõ.