July 04, 2020

சுவாமி விவேகானந்தரும் ஜான் டி. ராக்ஃபெல்லரும்


(இன்று சுவாமி விவேகானந்தர் நினைவுநாள்)

அது 1894ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. சுவாமி விவேகானந்தர் சர்வமத மஹாசபையில் பேசுவதற்காக சிகாகோ சென்றிருந்த சமயம். அவருடைய பேச்சில் மயங்கிய அமெரிக்கப் பத்திரிகைகள் அவரைச் ‘சூறாவளித் துறவி’ என்றெல்லாம் வர்ணித்தன. அவர் பேசிய இடத்திலெல்லாம் மக்கள் குவிந்தனர்.

அதே சமயத்தில் அங்கிருந்தவர் ஜான் டி. ராக்ஃபெல்லர். பெட்ரோலியம் எண்ணெயில் பெரும் சொத்துக் குவித்தவர். எச்சில் கையால் காக்காய் ஓட்டாத தனவந்தர். அவருடைய நண்பர் வீட்டில்தான் விவேகானந்தர் தங்கியிருந்தார். நண்பரும் பலமுறை அவருக்கு விவேகானந்தரின் பெருமைகளைச் சொல்லி, தன் வீட்டில் வந்து சந்திக்க அழைத்தார். ஆனால் பணம் குவிப்பதைத் தவிர வேறெதிலும் ஆர்வமில்லாத ராக்ஃபெல்லர் அசட்டையாகவே இருந்தார். பணம் சேர்ந்தபோதிலும் ராக்ஃபெல்லரின் உடல்நலம் குன்றத் தொடங்கியிருந்த சமயம் அது.

ஒருநாள் ராக்ஃபெல்லர் அந்த வீட்டைத் தாண்டிப் போகும்போது, தன்னையறியாத ஏதோவொரு உந்துதலில் வீட்டுக்குள் சென்றார். அங்கே பட்லர் அவரை வரவேற்று உட்காரச் சொன்னார். விவேகானந்தர் உள்ளே வாசிப்பறையில் இருந்தார். பட்லர் கூறிய இடத்தில் உட்காராமல், அறிவித்த பின்னர்தான் உள்ளே செல்லவேண்டுமென்ற மரபை மீறி, ராக்ஃபெல்லர் நேராக விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

தலையைக் கவிழ்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார் விவேகானந்தர். நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. ராக்ஃபெல்லரை யாரும் இப்படிச் சாமான்யரைப்போல நடத்தியதில்லை. அதில் அவருக்கு அதிர்ச்சிதான். அதைவிடப் பெரிய அதிர்ச்சி அடுத்து வரப்போவதை அவர் அறியவில்லை.

சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்தார் சுவாமிஜி. அதற்குமுன் அவர் ராக்ஃபெல்லரைப் பார்த்ததில்லை. ராக்ஃபெல்லருக்கு மட்டுமே தெரிந்த, அவரைத் தவிர வேறெவருக்குமே தெரிந்திராத சில ரகசியங்களை, அச்சங்களை விவேகானந்தர் அவரிடம் கூறினார். அதைக் கேட்ட ராக்ஃபெல்லருக்கு அதிர்ச்சியாக, அமானுஷ்யமாக இருந்தது. “உங்களுக்கு இவை எப்படித் தெரியும்? யார் கூறினார்கள்?” என்று கேட்டார் ராக்ஃபெல்லர். 

ஒரு புன்னகையோடு, உளறுகிற குழந்தை ஒன்றைப் பார்ப்பதுபோல அவரைப் பார்த்த சுவாமிஜி, “போனது போகட்டும். மகிழ்ச்சியாக இருங்கள். கவலையில் முழுகியிருக்க வேண்டாம்” என்று கூறினார். பின்னர் சுவாமி ஒரு கேள்வி கேட்டார், “உங்களிடம் மற்றவர்களைப் போல் நூறு மடங்கு செல்வம் குவியக் காரணம் நீங்கள் மற்றவர்களைவிட நூறு மடங்கு புத்திசாலி என்பதாலா?”.

யாரும் அவரிடம் இப்படிப் பேசத் துணிந்ததில்லை. ராக்ஃபெல்லர் கூறினார், “நிச்சயம், நான் 100 மடங்கு அதிக புத்திசாலிதான்!”

சுவாமிஜி பேசிப்பேசி அவரிடம் இருக்கும் மிகையான செல்வம் கடவுளால், பிறருக்கு நன்மை செய்யும் பொருட்டாக அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதாக விளக்கினார். “யோசித்துப் பாருங்கள், இந்தச் செல்வத்தை ஏன் பிறரது நன்மைக்குப் பயன்படுத்தக் கூடாது?” என்று கேட்டார்.

ராக்ஃபெல்லருக்கு இந்தக் கேள்வியே கேலிக்குரியதாகத் தோன்றியது. “நான் இந்தச் செல்வத்தைச் சேர்க்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். இதைத் தூக்கிக்கொடுக்கும் எண்ணம் எனக்கில்லை” என்று மிகவும் பணிவோடு கூறிவிட்டு ராக்ஃபெல்லர் போய்விட்டார்.

மூன்று வாரம் போனது.

விவேகானந்தரைப் பார்க்க மீண்டும் வந்தார் ராக்ஃபெல்லர். விவேகானந்தர் முன் ஏதோவொரு காகிதத்தை வீசி எறிந்தார். அதில் ஒரு தொகையை அவர் ஒரு நற்காரியத்துக்குக் கொடுத்திருப்பதாக இருந்தது. 

அவர் சுவாமிஜியிடம் “இதை நான் செய்திருக்கிறேன், இப்போது சந்தோஷமா? எனக்கு நன்றி சொல்லுங்கள்” என்றார்.

விவேகானந்தர் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை, சிறிது நேரத்துக்குப் பின் கூறினார், “நீங்களல்லவா எனக்கு நன்றி சொல்லவேண்டும்?”

அப்போதைக்கு ராக்ஃபெல்லர் அங்கிருந்து போய்விட்டார். ஆனால், ஒரு மகானின் தொடர்பு யாரையும் அடியோடு மாற்றிவிடும் என்பதில் சந்தேகமில்லை. 

1913ஆம் ஆண்டில் அவர் மிகமிகப் பெரிய நிதி ஆதாரத்துடன் சமுதாயத்திற்கு பெரும் நற்பணிகளைச் செய்த ராக்ஃபெல்லர் அறக்கட்டளையைத் தொடங்கினார். இன்றைக்கும் அவருடைய பெயர் அமெரிக்காவில் நினைக்கப்படுகிறது.

(இதையொட்டி பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா ஒரு முக்கியமான தகவலைக் கூறினார். அது பின்னால்.)

July 03, 2020

புத்தம் சரணம்: தலையின் விலை


இந்தியாவின் பெரும்பகுதியை வென்று தனது மகத சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துப் பேரரசன் என்று பெயர் பெற்றவன் அசோகன். ஆனால் போரினால் ஏற்படும் பேரழிவு மனதைமாற்ற, அவன் புத்த தர்மத்தைச் சரணடைந்ததோடு, அதனைப் பரப்ப இலங்கைக்குத் தன் மகளையும் மகனையும் அனுப்பினான். அவனைப்பற்றிய கீழ்க்கண்ட சம்பவம் நெஞ்சைத் தொடுவதாகும்:

புத்தபிட்சுக்களை எங்கு பார்த்தாலும் அவர்களது பாதத்தில் தலையை வைத்து வணங்குவதை மாமன்னன் அசோகன் வழக்கமாகக் கொண்டிருந்தான். யசன் என்ற அமைச்சன் ஒருவனுக்கு இது பிடிக்கவில்லை. அவனும் புத்த தர்மத்தைப் புதிதாகக் கைக்கொண்டவன்தான். ஒருநாள் அரசனிடம் 'மன்னர்மன்னா, நீங்கள் இந்தத் துறவியரின் பாதத்தில் உங்கள் தலையை வைத்து வணங்குவது உங்களுக்கு அழகல்ல. அதிலும் குறிப்பாகக் கீழ்ச்சாதியிலிருந்து வந்த துறவிகளுக்கு அத்தனை மரியாதை அவசியமுமில்லை' என்று துணிச்சலாகச் சொல்லிவிட்டான்.

அதைக் கேட்டுக்கொண்ட அசோகன் ஒன்று பேசவில்லை. சிலநாட்கள் கழித்துத் தன் அமைச்சர்களை ஒவ்வொருவராக அழைத்து ஆடு, மாடு, கோழி, ஒட்டகம், யானை என்று இவ்வாறு வெவ்வேறு பிராணிகளின் தலையை விற்பதானால் என்ன விலை கிடைக்கும் என்று அறிந்து வரச் சொன்னான். யசனை அழைத்து ஒரு மனிதத் தலையை விற்கவேண்டும், அதற்கு எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்துவரச் சொன்னான்.

எல்லோரும் அவரவர்களுக்கான பிராணித்தலைக்கான விலையை அறிந்துகொண்டு வந்து கூறினார்கள். யசன் வந்து 'மனிதத்தலையை வாங்கிக்கொள்ள யாரும் தயாரில்லை' என்று கூறினான்.

'எதனால்?'

'அது வெறுக்கத் தக்கது. அதனால் ஒரு பயனும் இல்லை.'

'ஒரு தலை மட்டும்தான் அப்படியா. இல்லை, எல்லா மனிதத் தலைகளுமேவா?'

'எல்லாத் தலைகளும் வெறுக்கத் தக்கவைதாம்'

'என்ன! என் போன்ற பேரரசனின் தலையையும் யாரும் விரும்புவதில்லையா?' என்று கேட்டான் அசோகன்.

பதில் சொல்ல அஞ்சிய யசன் மௌனமாக இருந்தான். 'பயப்படாதே யசா! சொல் உண்மையை' என்று அரசன் கட்டளையிட்டான்.

'ஆமாம் பேரரசே, உங்கள் தலையும் வெறுக்கத் தக்கதே' என்றான் யசன்.

'மெய்தான். வெறும் கர்வத்தாலும் மேட்டிமைத்தனத்தாலும் நீ பிட்சுக்களைப் பணிவதைத் தடுக்கப் பார்க்கிறாய். சும்மா கொடுத்தாலும் யாரும் வாங்கத் தயாராக இல்லாத இந்தத் தலையை அவர்களின் பாதத்தில் வைத்து நான் என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன். இதிலே தவறு என்ன வந்துவிட்டது?

'ஒரு துறவியின் ஜாதியைப் பார்க்கிறாயே அல்லது அவரது உயர்வை உன்னால் பார்க்க முடிகிறதா? திருமணத்திற்காக வேண்டுமானால் நீ ஜாதியைக் கேட்டறிந்துகொள்.

'புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? எதிலே ஒன்றுமே இல்லையோ அதிலும் நல்லதைக் காண்பவன் ஞானி என்று கூறியிருக்கிறார். நான் அவரது வார்த்தைகளைக் கடைப்பிடிக்க முயற்சிக்கையில், அதைத் தடுப்பது நீ என்மீது கொண்ட அன்பைக் காண்பிப்பதல்ல. எழுந்தும் விழுந்தும் வணங்கமுடியாமல் என் உடல் ஒரு சவைத்துத் துப்பிய கரும்புச் சக்கையைப்போல நிலத்தில் கிடக்கும்போது அதனால் என்ன பயன்?

'எவனால் சிந்திக்க இயலாதோ அவன் 'நான் மிக உயர்ந்தவன்' என்று கூறிக்கொள்கிறான். இளவரசனோ, பிச்சைக்காரனோ, சதையும் ரத்தமும் எலும்பும் தலையும் எல்லாம் ஒன்றே. ஆடைகளும் ஆபரணங்களுமே அவர்களைப் பிரித்துக் காட்டுவது. ஓர் அறிவாளி ஓர் உடலில் காணும் மெய்யான மேன்மையை இனம் கண்டு அதை வணங்கிப் பணிகிறான்' என்று தெளிவுபடுத்தினான் அசோகன்.

ஆதாரம்: மதுரபாரதி எழுதி கிழக்குப்பதிப்பகம் வெளியிட்ட புத்தம் சரணம்

July 01, 2020

குரு நானக்ஜீ வாழ்க்கையில்: தச்சர் வீட்டு விருந்து



குரு நானக்கும் மர்தானாவும் சைதுபூர் என்ற இடத்தை அடைந்தனர். பிற்காலத்தில் இதைத் தாக்கி அழித்த முகலாய மன்னர் பாபர் இதன் பெயரை எமினாபாத் என்று மாற்றிவைத்தார்.

எமினாபாதில் ஓர் ஏழை மரத்தச்சர் இருந்தார். அவரது பெயர் லாலு. பல தனவந்தர்களின் வீடுகளை அசட்டை செய்துவிட்டு நானக் நேராக லாலுவின் வீட்டுக்குச் சென்றார். அவரது வீட்டில் கிடைத்த வறண்ட ரொட்டியை ஏதோ ராஜவிருந்து போல ருசித்துச் சாப்பிட்டார் நானக். உயர்ந்த க்ஷத்திரிய குலத்தில் பிறந்த நானக் ஒரு தச்சரின் வீட்டில் தங்கியிருக்கும் செய்தி ஊருக்குள் பரவியது. எல்லோரும் அவரைப் பார்க்க வந்தனர். வந்த இடத்தில் குரு நானக் தேவரின் அன்பான, பொருள்பொதிந்த சொற்களால் ஈர்க்கப்பட்டனர். லாலுவும் குருதேவரைத் தனது வீட்டில் இன்னும் சில நாட்கள் தங்கியிருக்குமாறு அன்போடு வேண்டிக் கொண்டார்.

அதே ஊரில் மாலிக் பாகோ என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் சைதுபூர் முஸ்லிம் நிர்வாகியிடம் திவானாக இருந்தார். மாலிக் பாகோ ஒருநாள் ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார். அதற்கு அவ்வூரில் இருந்த இந்து மற்றும் முஸ்லிம் துறவிகளை அழைத்தார். விருந்துநாள் வந்தது. அவரது மாளிகையில் சன்னியாசிகளும் பக்கிரிகளும் பெரும் எண்ணிக்கையில் கூடிவிட்டனர். ஆனால் ஏழை லாலுவின் வீட்டில் தங்கியிருக்கும் தல்வண்டி ஊர்க்கார ஞானியார் மட்டும் வரவில்லை என்பது அவருக்குத் தெரியவந்தது.

மாலிக் பாகோவுக்கு ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் ஆச்சரியம். தன்னுடைய ஆடம்பரமான விருந்து அவருக்கு ஒரு பொருட்டில்லையா! உடனே ஓர் ஏவலாளை அனுப்பி அவரை அழைத்துவரச் சொன்னான்.

"ஐயா! நீங்கள் தங்கியிருக்கும் அந்த ஜாதிகெட்டவனின் விருந்து எனது விருந்தைவிட மேலானதாக உங்களுக்குத் தோன்றுகிறதோ?" என்று கேட்டார் மாலிக்.

"சந்தேகமில்லாமல்" என்றார் நானக்.

"நீங்கள் சாப்பிட்டுப் பார்க்காமலே எப்படித் தீர்மானித்தீர்கள்?"

"எங்கே, என் கையில் இரண்டு ரொட்டிகளைக் கொடு" என்றதும் நெய் சொட்டும் இரண்டும் ரொட்டிகள் நானக்கின் கையில் தரப்பட்டன.

குரு நானக் தனது மற்றொரு கையைக் காட்டினார். அதில் லாலுவின் வீட்டு வறண்ட ரொட்டி இருந்தது. இரண்டு கைகளில் இருந்த ரொட்டிகளையும் அழுத்திப் பிழிந்தார்.

என்ன ஆச்சரியம், மாலிக்கின் ரொட்டியிலிருந்து நெய் சொட்டவில்லை, ரத்தம் சொட்டியது! லாலு வீட்டு ரொட்டிகளில் இருந்து பால் சொட்டியது.

பார்த்த மக்கள் பிரமித்தனர், மாலிக்கோ திகைத்துப் போனார்.

"பெரியோனே! இது என்ன விபரீதம். ஏன் இப்படி நடக்கிறது?" என்று கேட்டார் மாலிக்.

"நீ சற்றும் இரக்கமில்லாமல் எளிய மக்களைப் பிழிந்தெடுத்து அவர்களது ரத்தத்தால் வரும் செல்வத்தைச் சேமிக்கிறாய். அதனால் உனது ரொட்டியிலிருந்து ரத்தம் சொட்டியது. லாலு கடின உழைப்பாளி. பிறர் செல்வத்தின்மேல் ஆசை வைக்காதவன். சம்பாதிக்கிற சிறிது பணத்தில் நிறைவாக வாழ்கிறான். பிறருக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்கிறான். அதனால் அவனுடைய ரொட்டியிலிருந்து பால் சொட்டியது" என்று விளக்கினார் குரு நானக்.

மாலிக் குருதேவரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார். அவரது உபதேசங்களைச் செவிமடுத்து மறுபிறப்பெடுத்தார்.

ஆதாரம்: மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘சீக்கிய மதம்’

June 30, 2020

ரமணரின் மனதைப் படிக்க முயன்ற சேஷாத்ரி சுவாமிகள்!

ரமணரின் மனதைப் படிக்க முயன்ற சேஷாத்ரி சுவாமிகள்!

சேஷாத்ரி சுவாமிகள் பத்தொன்பதாவது வயதில் சன்னியாசம் வாங்கிக்கொண்டார். அதற்கு முன்பே சோடசாட்சரி மந்திரம், மூக பஞ்சசதி போன்றவை இவரது நாவில் எப்போது ஓடிக்கொண்டே இருக்கும். ஒருநாள் ஐந்து சிகரங்களோடு கூடிய அண்ணாமலையை ஓர் அட்டையில் வரைந்து பூஜையில் வைத்திருந்தார். விசேடம் என்னவென்றால் அதுவரை அவர் அருணாசலத்தைப் பார்த்ததில்லை என்பதுதான். அப்போதே அவருக்குள் அருணாசலத்தின் அழைப்பு கேட்டுவிட்டது என்பதை இது உணர்த்துகிறது.

எதிரிலிருப்பவர்கள் மனதில் இருப்பதை இவரால் படிக்க முடிந்தது. ஒருமுறை இவர் ரமணர் முன்னால் சற்று நேரம் உட்கார்ந்துகொண்டிருந்தார். அப்போது ரமணர் மாமரத்தடி குகையில் இருந்தார். எவ்வளவு முயன்றும் அவரது மனதில் இருப்பது சேஷாத்ரி சுவாமிகளுக்குத் தெரியவில்லை. "இந்த மனுஷன் என்ன நினைக்கிறான்னு ஒண்ணுமே புரியல்லியே" என்று முணுமுணுத்தாராம்.

நம் போன்றவர்களின் மனம் எண்ணங்களாலானது. ஒரு வெங்காயத்தை இதற்கு ஒப்பிடலாம். உடனடியாகத் தோன்றும் எண்ணங்களிலிருந்து புறப்பட்டு ஆழப் புதைந்து கிடக்கும் நினைவுகள்வரை மனத்தில் இருக்கின்றன. ஆனால் வெங்காயத்தைப் போலவே உரித்து உரித்து மனதையும் இல்லாமலாக்கலாம் என்று புறப்பட்டால் நடவாத காரியமாக இருக்கிறது. ஏனென்றால் ஓர் எண்ணத்தை அகற்றினால் அந்த இடத்திலே பல எண்ணங்கள் முளைத்து விடுகின்றன.

எண்ணங்களும், ஆசைகளும் செயலுக்குக் காரணமாக இருக்கின்றன. செயல்கள் நல்லவையா தீவையா என்பதைப் பொறுத்து நமக்குப் பாவ புண்ணியம் ஏற்படுகிறது. இவற்றின் தொகுப்பே கர்மவினை என்று நாம் பார்த்தோம். வங்கியிலே ஒருவருக்குக் கணக்கு இருந்தால் அதில் பணம் இருக்கும்வரை அவர் வங்கியோடு தொடர்பு கொண்டுதான் ஆகவேண்டும். அவர் கடன் வாங்கியிருந்தாலும் வங்கி அவரை விடாது. பாவ புண்ணியங்களின் பலனும் கடன் மற்றும் வங்கிச் சேமிப்பு போன்றதுதான். கணக்கைத் தீர்த்தே ஆகவேண்டும்.

ஒவ்வொரு ரூபாய் வந்ததும் ஒருவன் 'ஏது இந்தப் பணம்?' என்று கேட்டால் அது அவன் சம்பாதித்தது அல்லது கடன் வாங்கியது என்று அப்பணம் புறப்பட்ட இடத்தைக் கண்டுபிடிக்கலாம். அதேபோல ஒவ்வோர் எண்ணமும் எங்கே இருந்து புறப்பட்டது இது என்று கேட்கச் சொன்னார் ரமணர். அப்படிச் செய்வதன் மூலம் எண்ணத்தின் பிறப்பிடமாகிய மனத்தைக் கண்டறியலாம். அந்த மனம் உங்கள் தொடர்ந்த கேள்விக்கு அஞ்சி ஆன்மாவில் தஞ்சம் புகும். இது மனோநாசம் எனப்படும்.

யாருடைய மனம் அழிந்துவிட்டதோ, அவனுக்குச் சுயமான விருப்பு வெறுப்புகள் இல்லை. அவன்தான் ஞானி. அவன் நிரந்தரமாய்த் தன் ஆன்மாவிலேயே திளைத்து இருக்கிறான். ரமணர் அப்படிப்பட்டவர். அவருக்கென்று மனம் ஏதுமில்லை. எனவேதான் சேஷாத்ரி சுவாமிகளால் அவர் மனதைப் படிக்க இயலவில்லை.

- மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ரமண சரிதம் நூலிலிருந்து.

June 17, 2020

குரு நானக்ஜீ வாழ்க்கையில்: மருத்துவர் வந்தார்



வளர வளர நானக் தனிமையைத் தேடுவது அதிகமாயிற்று. பல நாட்கள் மவுனமாக தியானத்தில் அமர்ந்துவிடுவான். தனிமையை நாடும் மகனின் போக்கு பெற்றோருக்குக் கவலையைத் தந்தது. உலகைப் பற்றிய அக்கறை இன்மை ஒரு மனநோயாகத் தோன்றத் தொடங்கியது.

அந்த ஊரில் ஹரிதாஸ் என்று ஒரு மனநோய் மருத்துவர் இருந்தார். நானக்கைப் பரிசோதிக்க ஒருநாள் அவரை அழைத்து வந்தனர். ஹரிதாஸ் நானக்கின் நாடியைச் சோதிக்கும் பொருட்டாக அவனது கையைத் தொட்டார். "மருத்துவரே, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான் நானக். "நான் உன் நோய் இன்னதென்று அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்" என்று விடை கூறினார்.

சிறுவன் சிரித்துவிட்டு கீழ்க்கண்ட ('சபத் கீர்த்தன்' என்று அழைக்கப்படும்) பாடலைக் கூறினான்:

எனக்காக ஒரு மருத்துவர் வந்திருக்கிறார்!
அவர் கையைப் பிடித்து நாடியை உணர்கிறார்.
நாடி என்ன சொல்லமுடியும்?
வலியோ நெஞ்சின் ஆழத்தில்.
மருத்துவரே, உங்களை நலமாக்கிக் கொள்ளுங்கள்,
உங்கள் நோயை முதலில் அறியுங்கள்,
அதன் பின்னர் பிறரது நோயைக் கண்டுபிடிக்கும் 
மருத்துவர் என்று உங்களை அழைத்துக் கொள்ளலாம்.
(மலர் கி வர், மொஹல்லா 1)

"ஓஹோ! எனக்கு உடல்நலமில்லை, மருந்து தேவை என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட்டார்.

"ஆமாம். உங்கள் ஆன்மாவில் வியாதி. நோயின் பெயர் அஹங்காரம். வாழ்வின் ஆதாரமான கடவுளிடமிருந்து உங்களைப் பிரிப்பது அதுதான்" என்று கூறினார் நானக்.

மேலும் நானக் கூறினார்:

ஒளிமிக்கவனின் திருநாமம் மனிதனிடம் இருந்தால்
அவனது உடல் பொன்னாகும், ஆன்மா தூய்மையடையும்;
நோய்களும் நோவும் அகன்றுவிடும்,
ஓ நானக், அவன் சத்தியத் திருநாமத்தாலே காப்பாற்றப்படுவான்
(மலர் கி வர், மொஹல்லா 1)

வெகுநேரம் நானக்கிடம் பேசிக்கொண்டிருந்த ஹரிதாஸ், தெய்வச் சிறுவனை வணங்கினார். அவனது பெற்றோர்களிடம், "கவலை வேண்டாம். உலகின் நோயை அகற்றும் பிள்ளையை நீங்கள் பெற்றெடுத்திருக்கிறீர்கள்" என்று கூறிவிட்டுப் போனார்.

மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘சீக்கிய மதம்’ நூலிலிருந்து...

May 25, 2020

ரொம்ப விலைகூடின கதை!


கதைகளின் மூலம் மொழியார்வம், அறிவுத்தேடல், கற்பனைத் திறன் இன்ன பிறவற்றை வளர்க்க உழைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கதையிரதம் - (https://www.kathaonratha.org) அமைப்பு. அதன் கதைசொல்லிகளுக்காக (Reading Coaches), இந்தக் கதை கூறப்பட்டது.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் சின்னக்கதை ஒன்றை எடுத்து அதன் பாத்திரங்களுக்குப் பெயரும் வடிவமும் கொடுத்துச் சொல்லப்பட்ட கதை இது. ரசியுங்கள். நன்றி.

April 04, 2020

திருமூலர்: பிராணாயாமம் தரும் களிப்பு



போதைகளில் பலவகை உண்டு. அரசியல், அந்தஸ்து, பணம், அழகு, பதவி, சொத்து, தங்கம், மது எனப் பலவகை போதைகளில் திளைக்கும்போது மனிதனுக்குத் தலைகால் தெரியாது. துச்சாதனனைப் பற்றிச் சொல்லவரும் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் “கரைதத்தி வழியும் செருக்கினால், கள்ளின் சார்பின்றியே வெறி சான்றவன்” என்கிறார். அவனுக்குத் தனது செருக்கே போதைதரப் போதுமானதாக இருக்கிறதாம்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள், “Don't I look stoned" (நான் போதையில் இருப்பதுபோல் தோன்றவில்லையா?) என்று கேட்டுவிட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதைப் பார்க்கவே நமக்கு போதை வரும். நாம் எல்லோருமே போதையைத் தாண்டிய பெருங்களிப்புத் தருகின்ற அந்த மருந்தை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அதை அறியாமல்தான் வெளியே எதையெதையோ தேடிப் பிடித்துத் தின்றும், புகைத்தும், அருந்தியும் சிறிது நேர போதையில் ஆழ்த்திக்கொண்டு, அறிவையும் மனதையும் உடலையும் கெடுத்துக்கொள்கிறோம்.

அப்படியல்லாமல், ஆனந்தக் களிப்பைப் பெற நமக்குள் வழியுண்டு. அதைப்பற்றி மிக அழகாகத் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்:

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே

(திருமந்திரம், மூன்றாம் தந்திரம் 5. பிராணாயாமம், பாடல் 3)

பறவையைவிட வேகமாகச் செல்லும் குதிரை என்பது நமது மூச்சு. அதனை (பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியால் கட்டுப்படுத்தி) அதன்மேல் சவாரி செய்தால், நாம் கள் உண்ணாமலே நமக்குப் பெருங்களிப்பை (பிராணாயாமம்) தரும். கள் உண்டவனோ தள்ளாடி நடப்பான். ஆனால் பிராணாயாமப் பயிற்சி மேற்கொண்டவன் துள்ளித் துள்ளி உற்சாகமாக நடப்பான். போதைப்பொருள் உட்கொண்டவன் சிறிதுநேரம் வானத்தில் பறப்பதுபோல உணர்ந்தாலும், அது இறங்கியவுடன் மிகுந்த சோர்வுக்கும் தளர்ச்சிக்கும் ஆளாவான். ஆனால், பிராணாயாமத்தால் ஏற்படும் களிப்பு ஒருவரிடம் இருக்கும் சோம்பலை நிரந்தரமாக அகற்றிவிடும்.

உள்ளதைத்தான் சொல்கிறார் திருமூலர். ஆனால், உணர்வுடையோர் மட்டுமே அதைப் புரிந்துகொள்வர். புரிந்துகொள்வதுதான் தொடக்கம். பின்னர் அதைக் கற்கவேண்டும். கற்றபின் செய்யவேண்டும்.

அது நம்முள்ளிருக்கும் பேரானந்தத்தின் ஊற்றுக்கண்ணைத் திறக்கும் வழிகளில் ஒன்று.

இன்னும் நிறையப் பலன்கள் உண்டு. இறைவன் சித்தம் இருந்தால் மேலும் பார்க்கலாம்.

தாயுமானவர் அருளிய ‘பொருள் வணக்கம்’ - 5

சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத்
    தன்மை நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்
    றியக்கஞ் செய்யும்
சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான
    துரிய வாழ்வைத்
தீதில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச்
    சிந்தை செய்வாம்.

பொருள்:
சாதி, குலம், பிறப்பு-இறப்பு, பந்தம்-முக்தி, அருவம்-உருவம், குணம்-குறி எனப்படும் எதுவுமில்லாமல், எல்லாப் பொருட்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளூடுருவிப் பிரிவற நின்று இயக்குகிற சோதியை, மிகப்பெரிய தூயவெளியை, மனமானது இல்லாதுபோகும் நிலையான துரியநிலையின் வாழ்வாகிறதை, தீதற்ற, யாவற்றுக்கும் உயர்ந்ததாம் பரம்பொருளை நம் சிந்தையில் எப்போதும் தியானித்திருப்போம்.

“எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்று இயக்கஞ் செய்யும்” என்பதன் பொருளை அப்படியே “ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்” என்கிற ஈசாவஸ்ய உபநிஷதத்தின் தொடக்க வரியிலேயே காணலாம்.

இந்த அருமையான பாடல் அத்வைதத்தின் மிகவுயர்ந்த நிலையான துரீயத்தை அழகாக விளக்குகிறது. ‘பிரக்ஞானம் பிரம்மா’ என்ற மஹாவாக்கியத்தின் விளக்கமாகவும் உள்ளது.