July 21, 2013

அருணாசல அற்புதம் 5: ரமணரின் சம்பாத்தியம்

ஒரு ஊரில் கோடீசுவரர் ஒருவர் இருந்தார். வயது எழுபதுக்கு மேல். அவருக்கு நான்கு மகன்கள். அவர் மிகுந்த பக்திமான். அந்த ஊருக்கு ஒரு மகான் வந்தார். தனவந்தர் அவரைத் தன் வீட்டுக்கு அமுது செய்விக்க அழைத்தார்.

மகானும் தனவந்தர் வீட்டுக்குச் சென்றார். வந்தவருக்குப் பாதபூஜை செய்தபின் சற்றே பேசிக்கொண்டிருந்தார்கள். மகான் நல்ல தபஸ்வி. எப்போதும் ‘அருணாசலம், அருணாசலம்!’ என்று இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார். அவருக்குத் தம் முன்னே இருப்பவரைப் பற்றி எல்லாமும் அறியும் ஆற்றல் இருந்தது. ஆனாலும், மரியாதை நிமித்தமாகச் செல்வந்தரைப் பற்றிய விவரங்களை விசாரித்தார். முதலில், “அருணாசலம்! நீங்கள் மிகவும் இளமையாகத் தெரிகிறீர்களே, உங்களுக்கு வயது 60 இருக்குமா?” என்று கேட்டார். அதற்குச் செல்வந்தர் தனக்கு வயது ஐந்து என்று கூறினார்! சுற்றியிருந்த எல்லோரும் தனவந்தர், மகானிடமே பொய் சொல்கிறாரே என்று எண்ணி அதிர்ச்சி அடைந்தனர்.

“அருணாசலம்! இறைவன் உங்களுக்கு நிறையச் செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். உங்கள் சொத்தின் மதிப்பு பல கோடி இருக்குமே!” என்றார் மகான். “அப்படி எல்லாம் இல்லை ஐயா. நான் சேர்த்தது என்னமோ இரண்டு லட்சம்தான்” என்றார் செல்வந்தர். இன்னொரு பொய்யா என்று மருகினர் அருகிருந்தோர். இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் செல்வந்தரின் மனைவியும் ஒரு மகனும் வந்து மகானை நமஸ்கரித்தனர்.

“அருணாசலம்! நல்லது. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டார் மகான். “இறைவன் எனக்குக் கொடுத்திருப்பது ஒரே ஒரு பிள்ளைதான்” என்றார் செல்வந்தர். சுற்றியிருந்தவர்கள், ‘இந்த மனிதனுக்கு இவரிடம் இப்படிப் பொய் சொல்ல என்ன நெஞ்சுரம்!’ என்று எண்ணினர். கிளம்பிப் போய்விடலாமா என்றுகூட நினைத்தனர்.

அப்போது மகான் அவரை ஆசிர்வதித்து, “இங்கிருக்கும் எல்லோரும் நீங்கள் என்னிடம் அடுக்கடுக்காகப் பொய் சொல்வதாக எண்ணுகிறார்கள். ஏன், பேசாமல் எழுந்து போய்விடலாமா என்ற எண்ணம்கூட அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் உங்கள் விடைகள் மிகச் சரியானவையே. சற்றே அதை இவர்களுக்கு விளக்கிச் சொல்வோமா?” என்று கூறித் தொடர்ந்தார், “நான் வயதைக் கேட்டபோது ஐந்து என்று கூறினார். ஏன் என்று சொல்லுங்கள்.”

“சுவாமி! நான் உலகில் பிறந்து எழுபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்பது, உறங்குவது, சுயநலமான வேலைகள் செய்வது என்று அதில் 67 ஆண்டுகள் போய்விட்டன. பக்தி, சமூகத் தொண்டு, இறைப்பணி, பெரியோரைப் போற்றுதல், நல்லவை கேட்டல் என்று இவற்றுக்காகச் செலவழித்தது ஐந்து ஆண்டுகள் மட்டுமே. அதுதான் என் உண்மையான வயது என்று நினைக்கிறேன்” என்றார் செல்வந்தர் மிகப் பணிவுடன்.

“அருணாசலம், அருணாசலம்! உங்கள் சொத்து விவரமும் சொல்லிவிடுங்கள்” என்றார் மகான். “ஐயா, நான் பொன்னும், நிலபுலன்களும் என்று எவ்வளவு குவித்திருக்கிறேன் என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது. எல்லாம் இறைவன் கொடுத்த சொத்துத்தான். ஆனால், ஏழைகள் பசி தீர்க்கவும், உலக நன்மைக்கும், தெய்வப் பணிக்கும் நான் செலவிட்டது இரண்டு லட்சம்தான். அதுதான் நான் இந்த உலகைவிட்டு நீங்கும்போது என்னோடு வரப்போகும் சொத்து. அதையே எனது சொத்து என்று குறிப்பிட்டேன்” என்றார் செல்வந்தர்.

“அருணாசலம்! மிக உண்மை. உங்கள் ஒரே மகன் பற்றியும் கூறிவிடுங்கள்.”

“எனக்குப் பிறந்தவர்கள் நான்கு மகன்கள். ஆனால் நான் சொன்னதைக் கேட்பவன். பெரியோரை மதிப்பவன், தீய வழிக்குப் போகாதவன் இதோ இங்கிருக்கும் ஒருவன்தான். அதனால்தான் எனக்கிருப்பது ஒரு பிள்ளை என்று கூறினேன்” என்றார் செல்வந்தர்.

சேஷாத்ரி சுவாமிகள் ரமணரின் ‘சம்பாத்தியம்’ குறித்துக் கூறியதும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய முதலியார் என்று ஒரு ரமண அன்பர் இருந்தார். அவர் தனது வருவாயிலிருந்து ஏராளமாக அன்னதானம் செய்தார். நிறையச் சொத்துக்கள் கொண்டவர். ஆனால் மேலும் மேலும் சம்பாதிப்பதில் காட்டிய தீவிர ஆர்வத்தில் ஒரு சிறிதளவுகூட அவருக்கு ஆன்மீக முயற்சிகளில் இல்லை. சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம் ஜபம், தியானம் போன்ற ஆன்ம சாதனைகளின் அவசியத்தைப் பலமுறை வற்புறுத்தினார். அவர் ஈடுபாடு காட்டவே இல்லை. சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம் ஒருமுறை “முதலியார்வாள், இதைக் கேளும். என் இளைய சகோதரனின் வருமானம் பத்தாயிரம் ரூபாய். எனது வருமானமோ ஆயிரம் ரூபாய். நீர் நூறு ரூபாய் சம்பாத்தியமாவது தேடக்கூடாதா?” என்று கேட்டார்.

சுவாமிகள் தனது ‘இளைய சகோதரன்’ என்றது ரமணரை! ‘சம்பாத்தியம்’ என்றது ஆன்ம சக்தியை. தாமே ஞானியாக இருந்தபோதும் அவர் அடக்கத்தோடு தனது சம்பாத்தியத்தைக் குறைத்துக் கூறிக்கொண்டதையும் பார்க்க வேண்டும்.

நாமும் பொழுது விடிந்து பொழுதுபோனால் சம்பாதிக்கவே ஓடுகிறோம், தேடுகிறோம், அலைகிறோம், உடலும் மனமும் களைத்துப் போகிறோம். போகும் வழியில் ஒரு கோவிலைப் பார்த்தால் நெஞ்சைத் தொட்டுக் கொள்கிறோம், சிலர் தம் விரல்களை முத்தமிட்டுக் கொள்வதும் உண்டு! ஆனால் ஐந்து நிமிடமாவது கண்களை மூடி, நம்மையும் இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்த அந்த எல்லையற்ற பேரருளை நம் மனதுக்குள்ளே எண்ணி, உணர்ந்து, பேரானந்தம் அடைய நமக்கு நேரமில்லை என்கிறோம்.

முதலில் கூறிய செல்வந்தரைப் போல, ஆன்ம பலம் சேர்க்கச் செலவழிக்காத நேரமும், நல்லதற்குச் செலவழிக்காத பணமும், நன்முறையில் வளராத சந்ததியும் நமக்குப் பயன்படாதவை என்பது மட்டுமல்ல. சமுதாயத்துக்கும் கேடுதான். இதைப் புரியவைக்கத்தான் பெரியோர்கள் உலகில் தோன்றி, ‘இப்படி வாழ்வது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம்’ என்று முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள்.

“நூறு ரூபாய் சம்பாத்தியமாவது தேடக்கூடாதா?” என்று சேஷாத்ரி சுவாமிகள் கேட்டது நம்மை நோக்கியும்தான்!

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

July 03, 2013

அருணாசல அற்புதம் 4: வீடு புகுந்து வேரறுப்பவன்

அகம் என்ற சொல்லுக்கு உள், மனம், வீடு என்று பல அர்த்தங்கள் உண்டு. இன்னொரு பொருளும் உண்டு. அதற்குப் பின்னால் வருகிறேன்.

நாம் ஒருவருக்கு வீட்டின் ஓர் அறையை வசிக்கக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவன் உள்ளே புகுந்தான். மெல்ல மெல்ல வியாபித்து வீடு முழுவதையும் தன்னதாக்கிக் கொண்டுவிட்டான். போதாததற்கு வீட்டுக்குள் நாம் வைத்திருந்த பொருட்கள் எல்லாவற்றையும் வெளியே தூக்கி எறிந்து விடுகிறான். தன் பொருட்களால் நிரப்பி வைக்கிறான்.



இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவனை வெறுப்பதற்குப் பதிலாக நாம் அவனை எப்போதையும்விட அதிகம் நேசிக்கத் தொடங்குகிறோம். “அப்பா, தயவு செய்து இந்த வீட்டைவிட்டுப் போய்விடாதே! என்னால் ஒருகணம்கூட நீ இல்லாமல் இருக்க முடியாது” என்று சொல்லித் தவித்துப் புலம்பத் தொடங்குகிறோம்.

சரி என்று அவனும் தொடர்ந்து குடியிருக்கிறான். குடியிருப்பதற்கு நாம் அவனுக்குக் குடக்கூலி தரவேண்டியிருக்கிறது. அப்படிக் கொடுத்தாலும் சும்மா இருக்கிறானா! தான் இருக்கும் வீட்டையே இடித்துப் போட்டுவிடுகிறான். தரைமட்டமாக்கி விடுகிறான். ஏனென்றால், அப்படி இடிக்க அனுமதித்தால்தான், இந்த அகத்தை நொறுக்கித் தரைமட்டமாக்கினால்தான், அவன் தரும் வீட்டை நாம் பெற முடியும்.

அருணாசலமென அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

என்று தொடங்குகிறது பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் எழுதிய அருணாசல அக்ஷரமணமாலை.

பகவான் பதினான்கு வயதுச் சிறுவனாக, வெங்கட்ராமன் என்ற பெயருடன் மதுரையில் இருந்தபோது வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் அருணாசலத்திலிருந்து வருவதாகச் சொன்னார். அருணாசலம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில் வெங்கட்ராமனின் அகத்தில் அருணாசலம் புகுந்துவிட்டது. அதுவே அவரை ‘பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி’ என்ற ஆன்மீக தீபமாக மாற்றி உலகுக்கு ஒளிகாட்ட வைத்தது.

நம் அகத்தை நாம் காமம், குரோதம், மோகம், லோபம், மதம் மாத்சரியம் என்ற தீக்குணங்களால் நிரப்பி வைத்திருக்கிறோம். இவை ‘மனித இயல்புகள்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ‘தவறு செய்வது மனித இயல்பு’ என்று யாரொ சொன்னதை வைத்து, ‘தவறு செய்வதே மனித இயல்பு’ என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். எப்போதோ ஒருமுறை தவறிப்போய்ச் செய்வதுதான் தவறு. அப்படி எப்போதோ ஒருமுறை மனிதன் தவறக்கூடும் என்பதுதான் உண்மை. நாமோ, அறிந்தோ அறியாமலோ, செய்யத் தகாதவற்றைச் செய்து கொண்டிருப்பதே மனித இயல்பு என்று நம்பிவிட்டோம். இவைதாம் நமக்கு மகிழ்ச்சியைத் தருவன என்று நம்பி இவற்றால் எல்லையற்ற மனரீதியான, உடல்ரீதியான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தவறு, குற்றம், இயல்பு, வாழ்க்கை முறை என்று ஒன்றையொன்று பிரித்தறிய இயலாதவர்களாகிவிட்டோம்.

ஆனாலும், நம் முன்னோர் செய்த புண்ணியத்தால், ஒருநாள் திடீரென அருணாசலம் வந்து அகத்தில் புகுந்துகொள்கிறது, வெங்கட்ராமனுக்கு ஏற்பட்டது போலவே. வெங்கட்ராமனின் தயார்நிலை வேறு நமது நிலை வேறு. ஆனாலும் அந்த அருணகிரி விடுவதில்லை. அகத்தில் மெல்லப் புகுந்து ஒரு ஓரமாக உட்கார்ந்துகொள்கிறது. ஓரறையிலிருந்து மற்றோர் அறைக்குப் பரவுகிறது. பிறகு பார்த்தால் அகம் முழுவதும் அதுவே ஆக வியாபித்து விடுறது. நம்மை அழச் சொல்கிறது, சிரிக்கச் சொல்கிறது, கருணை காட்டச் சொல்கிறது; பொய்கூறிய உடனே நாவைக் கடித்துக் கொள்ள வைக்கிறது. வேண்டாததைப் பார்க்கவொட்டாமல் இமையை இழுத்து மூடுகிறது. நமது கடுமையான சூழலின் தாக்கத்தையும் மீறி நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.

அதுமட்டுமா, வீட்டுக்குள் நாம் நிரப்பி வைத்திருந்த காமம், குரோதம் முதலிய, நாம் நண்பர்களாக நினைத்த ஆறு எதிரிகளை, வெளியே விரட்டிவிடுகிறது. தனது குணங்களாகிய அன்பு, இரக்கம், கருணை, சாந்தம், ஆனந்தம் முதலியவற்றால் அகத்தை நிரப்பி வைக்கிறது. பக்தியை ஆழப்படுத்துகிறது.

அருணாசலம் என அகமே நினைத்ததால் வந்த வினை இது. உள்ளே நுழைந்தவன் உரிமையாளன் ஆகிவிட்டான். அத்தோடு விடவில்லை.

அகம் என்ற சொல்லுக்கு இன்னும் ஒரு பொருள் இருக்கிறது என்றுதானே தொடங்கினேன். அகங்காரம், ஆணவம், அகந்தை என்பதுதான் அந்த இன்னொரு பொருள். முதலில் நம்முடைய மனமாகிய அகத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, நம் மனதை ஆட்டிப்படைக்கும் அகங்காரமாகிய அகத்தை வேரறுக்கிறான் அருணாசலன். பின்னர், தான் குடியிருந்த வீடாகிய மனதையே இல்லாமல் செய்கிறான்.

‘மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்’ என்றுதானே கவிஞர் கூறினார்!

அகத்தில் நுழைந்து அகத்தை அறுத்த அருணாசலன் இவற்றைச் செய்வது எதற்காக என்றால் பேரின்ப வீடாகிய அகத்தை நமக்குத் தருவதற்காகத்தான். இதில் நாம் எப்படி அவனுடன் ஒத்துழைக்கலாம் என்பதையும் வரும் நாட்களில் பார்க்கலாம். பகவான் மற்றும் பிற மகான்களின் வாழ்க்கை நமக்குக் காட்டும் ஒளியிலே இதைப் பார்க்கலாம். நாமும் ஆன்மீகம் என்னும் ராஜபாட்டையில் நடைபோட முயலலாம்.

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

June 21, 2013

அருணாசல அற்புதம் 3: “எனக்கு ஒரே ஒரு ருசி”


ஒருமுறை ஔவைப் பாட்டி வழுதி என்பவன் திருமணத்துக்குப் போயிருந்தாளாம். அவன் தமிழில் மிகத் தேர்ந்தவன். அங்கே நடந்த விருந்தில் அவள் எவையெல்லாம் உண்டாளாம் தெரியுமா? எல்லாப்புறமும் பலரால் நெருக்குண்டாளாம், பிடித்துத் தள்ளுண்டாளாம். கூட்டத்தைத் தாண்டி அவளால் உணவுக் கூடத்துக்குள் நுழையே முடியவில்லை. மிகவும் நேரமாகிப் போகவே பசி அதிகமாகி, உடல் வாடிப் போயிற்றாம்!

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண் டிலேன்.

ஆனால் குமரகுருபரர் சொல்கிறார், யாரொருவர் இந்த உலக வாழ்க்கையிலே மொத்துண்ண, அதாவது இடிபட, விரும்பவில்லையோ, அவர்கள் பைத்தியக்காரன் சாப்பிடுவதைப் போல சாப்பிடுவாராம். பைத்தியக்காரன் எப்படிச் சாப்பிடுவான்? முதலில் அவனுக்கென்று ஏதும் விருப்பம் கிடையாது. விரும்பினாலும் கொடுப்பார் கிடையாது. அப்படியே தவறிப்போய் யாரேனும் சுவையான பண்டங்களை அவன் முன்னால் வைத்தாலும் அதில் கவனம் செலுத்தாமல், தன் கையில் என்ன எடுக்கிறோம், வாயில் என்ன போகிறது, அது எப்படிச் சுவையாக இருக்கிறது என்பவற்றை அறியாமல் சாப்பிடுவான்.

துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவ என்றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர். (நீதிநெறிவிளக்கம் - 85)

நன்கு சாப்பிட்டால் தூக்கம் ரொம்ப சுவாரசியமாக வரும். சாப்பிடும் உணவிலேயே காம உணர்ச்சியைத் தூண்டும் பொருள்களும் உள்ளன. இதைப் புரிந்துகொண்டதனால், எவனொருவன் எல்லோரையும் போல உலக வாழ்க்கையில் அடிபட விரும்பவில்லையோ, அவன் பைத்தியக்காரனைப் போல, உணவில் சிறிதும் அக்கறை காட்டாமல் சாப்பிடுவானாம்!

ஔவையார் சாப்பிடப் போய் உலகோரிடையே இடிபட்டார். குமரகுருபரரோ சாப்பிட்டுவிட்டு அதனால் உலக வாழ்க்கையில் அடிபட மாட்டேன் என்கிறார்.

ஒரு பித்தனுக்கோ கவனித்துச் சோறு போட யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு ஞானிக்கு அப்படியல்ல. ஸ்ரீ ரமண மகரிஷிகளுக்குப் பலபேர் பல பொருட்களைக் கொண்டு வருவார்கள். பக்தர்கள் கொண்டுவரும் உணவுப் பண்டங்களை எல்லாம் பழனி சுவாமி ஒன்றாகக் கலப்பார். ஒரு கவளம் அதில் ரமணருக்குக் கொடுப்பார். அவ்வளவுதான். மீதியிருப்பது மற்றவர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படும். இறுதிவரையில் ரமணர் குழம்பு, ரசம், காய், பாயசம் என்று தனித்தனியே உணவு உண்டதில்லை.

இந்தச் சமயத்தில் தேவராஜ முதலியார் சொல்லும் ஒரு சம்பவம் நினைவுகூரத் தக்கது. ரமணாச்ரமம் ஏற்பட்டுவிட்ட சமயம். போஸ் என்ற பக்தரின் தாயார் பலவித உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டு வந்து உணவு வேளையின் போது பகவானுக்கும் பக்தர்களுக்கும் பரிமாறினார். வழக்கம்போல ரமணர் ஒவ்வொன்றிலும் சிறிது, சிறிது எடுத்துக் கலந்து சாப்பிட்டார். போஸ் வங்காளி ஆதலால் தேவராஜ முதலியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லிவிட்டு ரமணர் இவ்வாறு கூறினார், "இனிமேல் இப்படிச் சிரமப்பட்டு வகைவகையாக உணவு தயாரித்துக் கொண்டு வரவேண்டாம் என்று அந்த அம்மாவிடம் சொல்லுங்கள். உங்கள் எல்லோருக்கும் பலவிதமான ருசிகள் உள்ளன; எனக்கோ ஒரே ஒரு ருசிதான். உங்களுக்குப் 'பலவற்றில்' ருசி; எனக்கு எப்போதும் 'ஒன்றில்'தான் ருசி. நான் எல்லாவற்றையும் கலந்து ஒன்று சேர்த்துச் சாப்பிடுகிறேன் என்பதையும் கவனித்திருப்பீர்கள்."

நாமெல்லாம் ஞானிகள் அல்ல. அதற்காக, நாவின் ருசியே குறியாக அலையவேண்டியதும் இல்லை. இப்போது மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு மீறிய வளர்ச்சியும், எடையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோரும் தம் குழந்தைகள் எத்தனைக்கெத்தனை நிறையச் சாப்பிடுகிறார்களோ அத்தனைக்கதனை ஆரோக்கியம் என்று நினைத்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு உடல் உழைப்புக் கிடையாது. அரை கிலோ மீட்டர் நடப்பதென்றாலும் ஏதோ ஒரு வாகனத்தைத் தேடுகிறோம். அளவுக்கதிகமான உடல் பருமன் சிறு வயதிலேயே சர்க்கரை நோய், இதய நோய், நீங்காத சோர்வு, புத்தி மந்தம் போன்ற பலவகைச் சிக்கல்களில் கொண்டுபோய் விடுகிறது. மற்றவர்கள் கேலி செய்வதால் ஏற்படும் மனவியல் ரீதியான சிக்கல்கள் வேறு.

அரை வயிற்றுக்கு உணவு, கால்வயிறு நீர் உட்கொள்ள வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். மீதி கால்வயிறு காலியாக இருக்க வேண்டும். நம்முடைய இரைப்பை சுருங்கி விரிவதன் மூலம்தான் உணவு செரிக்கிறது. அது சுருங்கவே முடியாமல் தலையணையில் பஞ்சு அடைப்பது போல உணவை அடைத்துவிட்டால்.....!

வயது ஏற ஏற, பிற சுவைகளைக் குறைத்துக் கொண்டே வந்து ஒரே சுவை, அதாவது இறைவனின் அழகிய வடிவத்தின் சுவை, அவனுடைய திகட்டாத திருப்பெயரின் மீது சுவை என்று மாறிவிட்டால், வாழ்க்கை அதிகம் சுவைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

(தொடரும்)

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

June 13, 2013

அருணாசல அற்புதம் 2: கிரிவலம் தரும் பெருநலம்

ரமணாச்ரமத்திலிருந்து அண்ணாமலை தரிசனம்

சென்ற ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று ஆருத்திரா தரிசனம் என்னும் திருவாதிரை நாள் வந்தது. அது சிவபெருமானுக்கு விசேடமான நாட்களில் ஒன்று. மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுதையே!என்றுதான் சிவபக்த சிரோமணியான நந்தனார் சிதம்பரத்துக்குப் போய்த் திருச்சிற்றம்பலவனைத் தரிசிக்க ஆசைகொண்டு பாடினார்.

ஆனால் 1879ஆம் ஆண்டில் ஆருத்திரா தரிசனம் டிசம்பர் 29ஆம் தேதியன்று வந்தது. அன்றிரவு மணி ஒன்று இருக்கும். திருச்சுழி என்ற ஊரில் அழகம்மாள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும் அவ்வூர்க் கோவிலுக்குள் பூமிநாதர் நுழையவும் சரியாக இருந்தது. இப்போதுபோல மகப்பேறு வசதிகள் இல்லாத காலத்தில் அவருடன் இருந்தவர் கண் தெரியாத ஒரு பெண்மணி. ஆனால், என்ன ஆச்சரியம்! குழந்தை பிறந்த அதே நேரத்தில் அவள் கண்முன்னே ஒரு மின்னல்வெட்டு தோன்றி மறைந்தது. அழகம்மை, இவன் தெய்வீகப் பிறவியாக இருக்கவேண்டும்என்றாள் அந்த முதியவள்.

அந்தக் குழந்தைதான் வெங்கட்ராமன். பின்னாளில் ரமண மகரிஷி என்ற மாபெரும் ஞானச்சுடராகத் திருவண்ணாமலையில் பிரகாசிக்கப் போகிறவன். ரமணரையே அருணாசலத்தின் அற்புதம் என்று கூறிவிட முடியும். அகிலமெல்லாம் அத்தலத்தின் மகிமை பரவியுள்ளதென்றால் அதற்கு வித்திட்டவர் ரமணர்தான். 

மலையைச் சுற்றுவதா?

பதினான்காம் வயதில் ஞானத்தைப் பெற்றுவிட்ட, அதற்குப் பிறகு எந்தவித ஆன்மீக சாதனையும் தேவைப்படாத ரமணரும்கூட செம்மலையாக நின்ற செம்மலை வலம் வருவதில் பெருமகிழ்ச்சி கண்டதுண்டு.

தேவராஜ முதலியார் என்றொரு ரமண பக்தர் இருந்தார். நல்ல அரசுப் பதவியில் இருந்த அவர் தன்னைப் பெரிய அறிவாளி என்று நினைப்பார். அதே நேரத்தில் சோம்பேறித்தனமும் அவரிடம் இருந்தது. ஜடமான அந்த மலையைச் சுற்றி வருவதில் என்ன பயன் என்று நினைத்துக் கொள்வார். பிற்காலத்தில் அவர் ரமணாச்ரமத்துக்கே வந்து தங்கிவிட்டார். அப்போது தனது சந்தேகத்தை மகரிஷியிடம் கேட்டேவிட்டார்.

அதற்கு பகவான் கூறினார், “கிரிப்பிரதட்சிணம் செய்வது எல்லோருக்கும் நல்லதே. அதில் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமில்லை. நம்பிக்கை உள்ளவரோ அற்றவரோ ஆனாலும் எப்படி நெருப்பு தன்னைத் தீண்டியவரைச் சுடுகிறதோ, அதுபோலவே இம்மலையும் தன்னை வலம்வரும் எல்லோருக்கும் நன்மை தரும்.”

கேள்வி கேட்பதே அறிவின் அடையாளம் என்று நினைப்பவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். தேவராஜ முதலியாரும் அப்படிப்பட்டவர்தான். சர்க்கரை இனிக்குமா?” என்று கேட்டுக்கொண்டே இருப்பவனுக்கு அதன் சுவை புரிவதே இல்லை; ஒரு துளி எடுத்து நாக்கில் வைத்துக்கொள்பவன் அதற்குப் பிறகு கேள்வி கேட்பதில்லை. தேவராஜ முதலியாரும் கிரிவலத்தின் பலனைப் பற்றி ரமணரைக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுப்பவராகவே இருந்தார்.

இத்தனை கேள்விகளை ஏன் எழுப்புகிறாய்? எந்தப் பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உடற்பயிற்சியாவது ஆகிவிடும், போய் வாஎன்றார் ஒருமுறை. மற்றொரு முறை ஒருமுறை சுற்றி வா. அருணாசலம் உன்னை வசீகரிப்பதை நீயே உணர்வாய்என்றார்.

இறுதியாக முதலியார் இரு வாரங்களுக்கு ஒருமுறை திருச்சுற்று வரத் தொடங்கினார். அவர் கூறுகிறார், “ஆரம்ப நாட்களில் எனது இப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடந்தன. பகவான் என்னிடம் கூறியிருந்தபடியே அருணாசலம் என்னை ஈர்க்கத் தொடங்கியது.....பிரதட்சிணம் செய்வதால் எல்லா விதத்திலும் நற்பயன் பெற்றிருக்கிறேன் என்பது என் அனுபவம்.

தமிழறிஞரும் கவிஞருமான முருகனார் பெற்ற அனுபவம் இன்னும் உயர்ந்தது. நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எனக்குத் தேகான்ம புத்தி (உடலே தான் என்னும் உணர்வு) மறைந்ததுஎன்கிறார்.

தியானம் செய்ய இயலாதவர்கள் அருணாசலத்தைப் பிரதட்சிணம் செய்வதால் தம் முயற்சியில் வெற்றி பெறுவர்என்று ரமண பகவான் பலரிடமும் சொன்னதுண்டு.


முயற்சி செய்துதான் பாருங்களேன்!

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

June 05, 2013

கதாதரனின் மூன்று கேள்விகள்

கதாதரன் மிகச் சிறியவனாக இருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். தந்தையார் இருந்த காலத்திலேயே குடும்பம் ஒன்றும் செழிப்பான நிலையில் இருக்கவில்லை. மூத்தமகன் ராம்குமார் கொல்கத்தாவுக்குச் சென்று அங்கே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கினார். கதாதரன் அங்கே சென்று அண்ணனோடு இருக்க வேண்டியதாயிற்று.

அண்ணன் ராம்குமாருக்கு கதாதரன் பள்ளிக்குச் சென்று நவீன கல்வி கற்க வேண்டுமென்று ஆசை. அதை அவனிடம் கூறினார். அவனோ ஒரு தெய்வீகப் பாடலைக் கேட்டாலே ஆனந்த பரவசத்தில் மூழ்கிவிடுகிற அற்புதச் சிறுவன். அண்ணன் கூறியதைக் கேட்டதும் அவன் தனக்குத் தானே மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டான்.

“இந்தக் கல்வி கற்பதால் எனக்கு பக்தியும் ஆன்ம போதமும் ஏற்படுமா?” என்பது முதல் கேள்வி. “இல்லை” என்று அழுத்திக் கூறியது மனம்.

“என் தந்தையாரைப் போலவே தெய்வ பயமும், நேர்மையும் கொண்டவனாக என்னை ஆக்குமா?” என்பது இரண்டாவது கேள்வி. “இல்லை” என்றது அவனது மனச்சாட்சி.

“இந்தக் கல்வியின் வழியே நான் கடவுளை உணர்ந்து, அஞ்ஞானத்திலிருந்து தப்பி, உலகப் பொருட்களைத் துய்க்கும் ஆசையிலிருந்து விடுபடுவேனா?” என்பது மூன்றாவது கேள்வி. மனத்தின் பதிலில் மாற்றம் இல்லை.

“பிறகு இந்தக் கல்வியை வைத்துக்கொண்டு என்ன செய்வது! இதனால் உலகின் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து தெய்வ அனுபூதியைத் தரமுடியாது. என் ஆன்மீக லட்சியங்களைத் தூக்கி எறிவதைவிட, வாழ்நாள் முழுவதும் கல்வியறிவு இல்லாதவனாகவே இருந்து, கடவுள் மார்க்கத்தில் செல்வதையே விரும்புகிறேன்” என்று தீர்மானித்தான் கதாதரன்.

ராம்குமார் மீண்டும் கேட்டபோது, “அண்ணா! வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? என் இதயத்தை ஒளிரச் செய்யும் ஞானமே எனக்குத் தேவை. அதற்குப் பின் எனக்குத் தேவைகளே இருக்க மாட்டா” என்றான் கதாதரன் மிக அழுத்தமாக.

மெத்தப் படித்த கல்விமான்களும் இந்தப் படிப்பறிவில்லாப் பரமஹம்சனைத் தேடி வரவேண்டியதாயிற்று பிற்காலத்தில். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் விவேகானந்தர். அந்தச் சிறுவன் கதாதரன்தான் உலகம் போற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

(தகவல்: The Life of Swami Vivekananda - by His Eastern and Western Disciples; Published by Advaita Ashrama, Kolkatta)

June 01, 2013

அருணாசல அற்புதம் 1: செம்மலைக்கு நிகர் எம்மலை!

அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம் 
அது பூமியின் இதயம்

என்பது அருணாசல மகாத்மியத்தில் நந்தி வாக்காக வருவது. இந்த அழகிய செய்யுளை எழுதியவரோ அருணாசலம் என்று கூறியவுடனே நம் நினைவுக்கு வருகின்ற பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள். எல்லாத் தலங்களையும் விட மகிமையில் உயர்ந்தது என்பதனாலே இது ‘தலம் யாவினும் அதிகம்’ என்று சொல்லப்படுகிறது.

வணிகமும் செல்வமும் செழிக்கும் இடங்களையே தேடித்தேடிப் போய்க் குடியேறிக் கொண்டிருக்கிற காலம் இது. ஆனால் திருவண்ணாமலைத் தலமோ அருளாலே நிறைந்தது. ‘என்றுமே அறவோர் அன்பர்க்கு இருப்பிடம்’. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான சித்தர்கள் வசிக்குமிடம். “ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் அருணாசலம்” அல்லவோ அது. தபோதனர் என்றால் தவத்தையே செல்வமாக, தவத்தால் பெற்ற ஞானத்தையே பெருஞ்செல்வமாகக் கொண்டவர்களைக் குறிக்கும். ஞானிகளை மட்டுமல்லாமல் ஆன்மீகத் தேடல் கொண்ட அனைவரையும் இந்த மலை வா என்று அழைத்தபடியே இருக்கும்.

அருணம் என்றால் சிவந்த நிறம். அசலம் என்றால் மலை. இந்தப் பகுதியில் வசிப்போர் செம்மலை என்று பெயரிட்டுக்கொள்வதுண்டு. சோணம் என்றாலும் சிவப்புதான். சோணாசலம் என்ற பெயரும் அண்ணாமலைக்கு உண்டு. ‘சித்திரமாம் இஃதெல்லாம் செம்மலையே’ என்று ரமணர் அருணாசல பஞ்சரத்னத்தில் கூறுகிறார்.

குன்றாத நெருப்புக் குன்றம்

சிவப்பு நெருப்பின் நிறம். அண்ணாமலை என்பது அக்கினி மலை. அந்த அக்கினி மலையை அடையாளம் காட்டுவதாகத்தான் இங்கே அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளன்று இந்தக் குன்றத்தின் உச்சத்தில் ஏற்றப்படுகின்றது. ஆண்டுதோறும் இந்த ஞானப் பேரொளியின் தரிசனத்தை அன்பர்கள் தொலைக்காட்சி வழியே கண்டு களித்திருப்பீர்கள்.

இந்த நெருப்புக் குன்றம் வெறும் பௌதிகப் பொருளல்ல. வெறும் கல்லென்று இதைக் கருதுவதற்கில்லை. இது ‘சித்கனம்’ எனப்படும் ஞானத்திரள். அதனால்தான் திருஞானசம்பந்த மூர்த்திகள் திருவண்ணாமலைத் தேவாரத்தில் ‘ஞானத்திரளாய் நின்ற பெருமான்’ என்று விதந்து பாடுகிறார். அதற்கொரு புராணக் கதை உள்ளது.

சிவமலையே இந்தச் செம்மலை

ஒருமுறை பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்றொரு விவாதம் எழுந்தது. விவாதம் வலுத்து, சண்டை என்ற நிலைக்குப் போய்விட்டது. படைப்புக்கும் கடவுளுக்கும் காக்கும் கடவுளுக்கும் இடையே போர் மூண்டால் பிரபஞ்சம் என்ன ஆவது? அப்படியே அச்சத்தில் உறைந்து நின்றது. தேவர்கள் எல்லாரும் ஓடிச் சென்று சிவபெருமானிடம் இதற்கு வழி செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.

நீறாடிய பெருமான் நெருப்புத் தூணாக மாறி அங்கே நின்றுவிட்டான். போராடிய இருவருக்கும் அசரீரியாக ஒரு குரல் கேட்டது, “எனது பாதத்தையும், உச்சியையும் கண்டுபிடிக்க இருவரும் ஆளுக்கொரு புறமாகப் புறப்படுங்கள். யார் முதலில் இரண்டில் ஒன்றை எட்டுகிறாரோ, அவரே பெரியவர்!” என்றது அந்தக் குரல். “நல்லது, நாமே அதிக சக்திசாலி, சவாலைச் சந்தித்து, வெற்றி பெற்று எமது மேன்மையை உலகுக்கு நாட்டுவோம்” என்று இருவருமே எண்ணினர்.

திருமாலுக்கு வராக அவதாரம் எடுத்த அனுபவம் கைகொடுத்தது. தான் ஒரு காட்டுப்பன்றியாக மாறி, பூமியைக் குடைந்துகொண்டு அக்னிஸ்தம்பத்தின் அடியை நோக்கிக் கிளம்பினார். பூதேவி எப்படியும் அவருக்கு உதவியாகத்தானே இருப்பாள்!

பிரம்மா அன்னத்தை வாகனமாகக் கொண்டவர். ஆனால் இந்தமுறை வானில் ஏறி உயரப் பறக்க வேண்டிய நிலை வரவே, தானே தன் வாகனத்தின் வடிவெடுத்து, அன்னமாகப் பறந்தார். மேலே, மேலே போய்க்கொண்டே இருக்கிறார், ஆனால் உச்சியை அடைய முடியும் என்று தோன்றவில்லை. அவ்வளவு உயர்ந்து நின்றது அந்த செஞ்சடை நெருப்புத் தூண்.

சற்றே மனம் தளர்ந்த நேரத்தில்தான் பிரம்மா அந்தத் தாழம்பூவைப் பார்த்தார். அது செஞ்சடையிலிருந்துதான் விழுந்திருக்க வேண்டும். “இதைக் கொண்டுபோய்க் காண்பித்தால் போதுமே, நாம் உச்சியை அடைந்ததற்குச் சாட்சியாக இருக்குமே” என்று ஓர் எண்ணம் தோன்ற, அந்தத் தாழம்பூவைக் கையில் பற்றிக்கொண்டு, தாழ இறங்கினார். அவரது தாழ்ச்சிக்கு அதுவே காரணமானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

திருமாலுக்கும் எட்டவில்லை சோதிவானவனின் திருவடி. ஆனால், தனது இயலாமையை ஒப்புக்கொண்டு மேலே ஏறிவந்தார். பொய்மையைத் துணைக் கொள்ளாத காரணத்தால் அவரும் நிலையில் தாழாது உயர்ந்தார். சிவஜோதியைத் துதித்துப் பாடி நின்றது நீலமணி நெருப்பு! தாழம்பூவைச் சாட்சியாகக் கொண்டு தாழ்ந்த செயல் செய்த பிரம்மனோ வானவர்முன் வெட்கித் தலைகுனிய வேண்டியதாயிற்று.

அடிமுடி காணாத அக்கினியின் பிரகாசத்தையும் வெப்பத்தையும் தாள முடியாமல் வானோரும் மண்ணோரும் தவித்தனர். “ஐயனே! குளிர வேண்டும்!” என்று மன்றாடினர். கையில் நெருப்பேந்தினாலும் தலையில் கங்கையை வைத்திருக்கும் ஐயனோ கருணைகூர்ந்து, “குளிர்ந்தோம்! ஆதவனின் ஒளியைப் பெற்று நிலவு எப்படி அமுத ஒளியைத் தருகிறதோ, அதுபோல புவியின் எல்லா ஆன்மீகத் தலங்களும் அண்ணாமலையிடமிருந்தே தெய்வீக சக்தியைப் பெற்று ஒளிதரும்” அன்று அருளினார் அரவணி பூண்ட ஐயன்.

இத்தலத்தை நினைத்ததும் அத்தன் ஆனந்தன் அருணா ரமணனே நமது நினைவுக்கு வருகிறான் என்றபோதும், சேஷாத்திரி சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் போலப் பல மகான்களின் வசிப்பிடமாக இருந்து சித்தபூமியாக இருந்து வருவது அருணாசலம். இதனை வலம்வருவதன் பெருமை சொல்லி மாளாதது. வரும் நாட்களில் இவற்றைப் பற்றி மேலும் மேலும் பார்த்து நம் அருணகிரி வலத்தைத் தொடர்வோம்.

(தொடரும்)

- ’Impress Mag' இதழில் வெளியான எனது கட்டுரைத் தொடரின் முதல் பகுதி

March 04, 2010

புத்தரின் வாழ்வில்

 

தவத்தின் எதிரிகள்

கௌதமரின் தவத்தைக் கலைக்க அடுத்து வந்தவன் மாரன். (மாரன்: மறலி-தொன்மையான வேதம் கூறும் அஹி, விருத்ரன், நமூசி, விடாப்பிடியன் என்போர் இவரேயாம் என்று கூறுகிறார்கள் ஆனந்த குமாரஸ்வாமி மற்றும் ஐ.பி. ஹார்னர் தமது 'கோதம புத்தர்' என்ற நூலில்.)

மாரன் காமத்துக்கு மட்டும் தேவனல்ல, மரணத்தை விளைவிப்பவனும் அவனே. மிக இனிமையான குரலில் கௌதமரிடம் அவன் "அன்பிற்கினியவனே! நீ வாழ வேண்டியவன். வாழ்வதன் மூலமே நீ அறத்தை அனுசரிக்க முடியும். வாழ்வில் எதைச் செய்தாலும் சிரமப்படாமல் செய்ய வேண்டும். எவ்வளவு இளைத்துவிட்டாய்! எதற்காக இத்தனை கஷ்டம். சன்னியாச வாழ்க்கையால் எதைச் சாதிக்கப் போகிறாய். மனம் என்பதோ அடங்காத ஒன்று. சொல்வதைக் கேள், சுகமாய் இரு" என்று கூறினான்.

"மாரனே, தீயவை அனைத்துக்கும் தோழனே! எனக்கு ஆசைகாட்டப் பார்க்கிறாயா? நான் எளியவனாக இருக்கலாம். ஆனால், என் குறிக்கோள் மிக உயர்வானது. மரணமே வாழ்வின் முடிவாக இருக்கும் பட்சத்தில் அதைத் தவிர்க்க நான் முயலமாட்டேன். என்னிடம் அஞ்சாமை, விவேகம், உறுதி ஆகியவை உள்ளன. யாராலும் என்னை நிறுத்த முடியாது. அசுரனே! உன்னை நான் வெற்றி காண்பேன்.

உனது பட்டாளத்தின் முதல் வரிசையில் ஆசைகள் என்ற போர்வீரர்களை அனுப்புகிறாய்.

அடுத்த வரிசை சோர்வும், தளர்வும்;

மூன்றாவது வரிசையில் பசி, தாகம்;

நான்காவதோ காமம்;

ஐந்தாவதாகச் சோம்பேறித்தனமும் உறக்கமும்;

சந்தேகங்கள் ஏழாமவை;

எட்டவதாகப் போலித்தனமும் கோபமும்;

இறுதியில் சுய தம்பட்டம், பேராசை, முகஸ்துதி, வீண்கர்வம், மற்றவர்களை மட்டம் தட்டுதல்.

இவையல்லவோ உன் படையின் அணிவகுப்பு? தேவர்களையும் மனிதர்களையும் இந்தப் படைகளால் நீ பணியவைத்திருக்கிறாய். நான் விவேகத்தால் இவற்றை அழிப்பேன். பிறகு நீ மாரனே, என்ன செய்வாய்?” என்று தீரத்துடன் மாரனுக்குச் சவால் விட்டார் கௌதமர்.

கௌதமரின் உறுதியான விடையால் மானபங்கமுற்ற மாரன் சிறிதே தளர்ச்சி அடைந்து விலகினான்.

மாரனின் இரண்டாவது முயற்சி

மாரன் தன் முதல் முயற்சியில் தோல்வி கண்டாலும் விடுவதாக இல்லை. அதிலும் உணவு உட்கொள்ளாத கௌதமர் கிட்டத்தட்ட ஒரு நடமாடும் எலும்புக்கூடாக ஆகிவிட்டதில் அவனுக்கு நம்பிக்கை துளிர்த்தது. நைரஞ்சன நதிக்கரையில் உயிர்போகும் நிலையில் உட்கார்ந்து தவம் செய்யும் கௌதமரிடம் வந்து மீண்டும் வசீகரமான குரலில், “கௌதமரே! வற்றி வாடிப்போய் விட்டீரே. சாவு மிக அருகில் உள்ளது. வாழ்வதில்தான் பயன் உண்டு. பிரம்மசரியத்தைக் கைக்கொண்டு, வேள்வி புரிந்தால் புண்ணியத்தை அடையலாம். இந்தச் சிரமமான முயற்சிகள் எதற்கு?” என்று கேட்டான்.

கௌதமர் அதற்கு விடையாக, “தீயவனே! சுயநலம் கருதியே நீ இங்கு வந்திருக்கிறாய். எனக்குப் புண்ணியம் வேண்டாம். யாருக்கு வேண்டுமோ அவர்களிடம் போய் உன் உபதேசத்தைச் செய்.

“சிரத்தை, தவம், தீவிரம், வைராக்கியம் ஆகியவை என்னிடம் உள்ளன. என்னிடம் நீ வாழ்வைப் பற்றிப் பேசத் துணியாதே.

“நதிகள்கூட வறண்டு போகின்றன. எனது குருதி ஏன் வறளக்கூடாது? ரத்தம் வறண்டால், கபமும் பித்தநீரும் வறண்டுவிடும். என் உடலின் மாமிசம் வற்றிப் போகப் போக, என் அறிவு தெளிவடைகிறது. எனது மனம் ஒருமுகப்படுகிறது. எனது விவேகம் உறுதியாகிறது. மிக அதிகத் துன்பத்துடன் வாழும்போது, எனக்குக் காமம் ஏற்படுவதில்லை. என் தூய்மையைப் பார்த்தாயா?” என்றார்.

மாரனின் அரசுக்கே இது பெரிய சவால். அவனது ஆட்சி அழிக்கப்படலாம். இதை அவன் எதிர்கொண்டாக வேண்டும். தன் துணைவர்களைக் கேட்டபோது கௌதமருடன் போரிடுவதே ஒரே வழி என்று கூறினர். நினைத்தாலே அச்சம் தரும் கொடூரமான தன் படையை அணிவகுத்து வந்தான் மாரன். அவனது படைவீரர்கள் நினைத்த உருவத்தை எடுக்கும் மாயையில் வல்லவர்கள். அவர்களின் கைகளிலும் கால்களிலும் ஆயிரக் கணக்கான சர்ப்பங்கள் சுற்றிக்கொண்டு சீறியவண்ணம் இருந்தன. இடிகள், விற்கள், வேல்கள், முட்சங்கிலிகள், தடிகள், வாட்கள் என்று நினைத்தும் பார்க்கமுடியாத ஆயுதங்களை அவர்கள் ஏந்தி வந்தனர். அவர்கள் கோரமான, கோபமான முகத்தை உடையவர்களாக இருந்தனர். அவர்களின் கனத்த, அகன்ற நாவு வாய்க்கு வெளியே தொங்கியது. யானைத் தந்தம் போலக் கோரைப் பற்கள் இருந்தன. தம் ஆயுதங்களால் தாக்கியது போக அவர்கள் மலைகளையும் மரங்களையும் கூட எடுத்து கௌதமரின் மேல் எறிந்தார்கள்.

கௌதமரின்மேல் எதை எறிந்தாலும் அது பூவாக மாறி அவர்மீது பொழிந்தது.

மாரன் தானே நெருப்பாக மாறி கௌதமர் மீது நெருப்பு மழை பொழிந்தான். பயனில்லை.

மாரன் தானே காற்றாக மாறி கௌதமர் மீது புயலாக வீசினான். பயனில்லை.

வன்முறையால் கௌதமரை வெல்லமுடியாது என்று புரிந்துகொண்டான் மாரன். உடனே அவன் அப்சரசுகளை அனுப்பினான். ஒப்பற்ற அழகும், கலைகளில் தேர்ச்சியும் கொண்ட அவர்கள், தங்களால் இயன்ற அளவு கௌதமரின் மனத்தைக் காம வயப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்தனர். தங்கள் முப்பத்திரண்டு வகை அங்க லாவண்யங்களை மயக்குறும் வண்ணம் வெளிப்படுத்தினர். தேனினும் இனிய குரலில் காதல்மொழி பேசினர். ஓர் ஆடவனைக் கிளர்ச்சியூட்டுவதற்கான ஆயிரம் காமக்கலைகளையும் அவர்கள் கௌதமரின்மேல் பிரயோகித்தனர்.

கௌதம பிட்சு எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருந்ததன் மூலம் மாரனின் ஆட்சியை நிர்மூலமாக்கினார்.

இதைப் பார்த்து தேவர்கள் வியந்து, “கௌதம பிட்சுவைப் பாருங்கள். அவர் பரிசுத்தமானவராகவும் கருணையால் நிரம்பியவராகவும் இருக்கிறார். உலகின் இருள் சூரியக் கதிரின் எதிரே நில்லாததுபோல அவரது விடாமுயற்சியால் அவர் சத்தியத்தை அடைவார். சத்தியம் அவருக்கு ஒளி தரும்” என்று கூறிப் போற்றினார்கள்.

- நான் எழுதிய புத்தம் சரணம் நூலிலிருந்து

நீதிநெறி விளக்கம் - சில செய்யுள்கள்

“ஆஹா! ஸ்கூலுக்குப் போறேனே, ஒரே ஜாலியா இருக்கே” என்று கூறியபடி பள்ளிக்குக் கிளம்பும் குழந்தையை நாம் இதுவரை பார்த்ததில்லை. சரியாக பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில்தான் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, இருமல், ஜுரம் என்று ஏதாவது குழந்தைக்கு வரும். அதிலும் பரிட்சை நாளன்றைக்குக் கேட்கவே வேண்டாம்.

படிக்கத் தொடங்கும் காலத்தில் அது மலைவாழையாக இனிப்பதில்லை. ஆனால், சிரமப்பட்டு, ராப்பகலாகக் கண்விழித்துப் பல ஆண்டுகள் கல்வி கற்று, அது ஒருவனின் நற்குணத்துக்கும் நல்வாழ்க்கைக்கும் ஆதாரமாக அமையும்போது, இன்பம் தருகிறது. மிகத் தாமதமாக. ஆனால் ஒருவன் தொடர்ந்து காம நுகர்ச்சியில் ஊன்றி இருந்தால், அவ்வாறு துய்க்கும் காலத்தில் அது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சி போலத் தோன்றுகிறது. ஒரு சமயம் அதுவும் கைத்துப் போகிறது. அவ்வாறு அலுத்துப் போனபின்னர், அவன் வீண்செய்த நேரமும், சக்தியும் புலப்படுகிறது. காமத்தைக் கட்டுக்குள் வைத்துப் பிறவற்றையும் செய்தவர் தன்னைவிட முன்னே எங்கோ சென்றுவிட்டார் என்பது புரிகிறது. கட்டற்ற காமம் உடல்நலக் கேடுகளைத் தருகிறது.

சுருக்கமாகச் சொன்னால், கல்வி தொடக்கத்தில் துன்பமாகவும், காலக்கிரமத்தில் இன்பமாகவும் இருக்கிறது. வரம்பற்ற காமமோ, முதலில் இன்பம் போலத் தோன்றி, பின்னாளில் மிகப் பெரிய துன்பத்தைத் தருகிறது.

தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்
மடங்கொன்றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம்
முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது.
(2)

உண்பது இன்பம், உறங்குவது இன்பம். கவிதை இன்பம், காட்சிகள் இன்பம். கற்பது இன்பம், கடவுளை எண்ணி இருப்பதும் இன்பம். மனவாசலைத் திறந்து வைத்தால் ஒருவன் பெறத்தக்க இன்பங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், சில நிமிடங்களே அனுபவிப்பதான காமம் மனதை ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டால், பிற இன்பங்களை அந்த மனம் அடையாளம்கூடக் காண்பதில்லை. இறையுணர்வு என்கிற பேரின்பப் பெருங்கடலில் திளைத்திருப்பவர் சென்று உலக இன்பம் என்னும் சேற்றுக்குட்டையில் விழுவார்களோ?

சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில்.
87

வெளியே பார்வைக்கு ஒருவன் அனைத்தையும் துறந்துவிட்டவன் போலத் தோன்றுகிறான். ஆனால் அவன் மனமோ ஒவ்வோர் உலகப் பொருளையும் நாடி அலைகிறது. மனத்தால் துறவில்லாத ஒருவன் அணிந்திருக்கும் தவப்போர்வை ஒரு சாதாரண சட்டையளவுக்குக் கூட அவனுக்குப் பாதுகாப்புத் தராது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களில், குறைந்த பட்சம் மெய்யையாவது சட்டை மூடிக் காக்கும். ஆனால் மனத்தளவில் வைராக்கியமில்லாத துறவுப் போர்வையோ அவனது உடலைக்கூடப் போர்த்தாது. (என்றால், பிற புலன்களைப்பற்றிப் பேசவே தேவையில்லை.)

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது.
92

ஒல்லியாக இருக்கும் ஒருவன் விழுந்தால் அவன் அடிபடாமல் தப்பித்துவிடலாம். ஆனால் பருத்த உடலுடையவன் விழுந்தால் அடிபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது. (இறகு போன்று) கனமற்ற பொருள் தடாலென்று விழாது. அப்படியே விழுந்தாலும் நொறுங்கிவிடாது. ஆனால் (பூசணிக்காய் போன்ற) கனத்த, பெரிய உடலைக் கொண்டதன் வீழ்ச்சி தடாலடியாக (ஆரவாரத்தோடு கூடியதாக) இருக்கும் என்பதோடு அந்த வீழ்ச்சி அதற்குப் பெரிய பாதிப்பையும் உண்டாக்கும். (பெரியவர்களாகக் கருதப்படுபவர்களின் வீழ்ச்சியும் பெரிதாகவே இருக்கும்.)

மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப
வலியார்மற் றொன்றானு முய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமா லுய்யா பிற.
95

நீதிநெறி விளக்கச் செய்யுள்களை இயற்றியவர் குமரகுருபர சுவாமிகள்.

அன்புடன்
மதுரபாரதி

February 23, 2010

தேவாரம் - 2

 
சிவராத்திரிக்குத் தேவாரம் எழுதியபின்னர் மனமெங்கும் தேவாரம் நிறைந்துபோனது. குறிப்பாக இந்தப் பனுவல்களின் சுவை தித்தித்தபடியே இருக்கவே, இப்பதிகத்திலிருந்தே தொடரலாம் என்று தோன்றியதும் இறைச் சித்தமே.

திருச்சிற்றம்பலம்.

வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே


வெண்சங்கின் துண்டு ஒன்றைப் போன்ற மண்டையோட்டைக் கையில் ஏந்தியவன்; வெள்ளிக் கம்பியை முறுக்கினாற் போன்று (மார்பில்) விழுந்து ஒளிர்கின்ற முப்புரி நூலை உடையவன்; பரந்த சடாமுடியின் மேலே வெள்ளித் தகடு போன்ற பிறையை அணிந்தவன்; வெண்மையான எலும்பை அணிந்தவன்; வெண்மையான திருநீற்றைத் தனது பவளம்போலும் உடலின் மீது பூசியவன் வேதியனான சிவபெருமான்.

அருஞ்சொற்பொருள்: குழை - சங்கு; துணி - துண்டு; வெள்ளென்பு - வெள்ளெலும்பு.

உடலைத் துறந்துல(கு) ஏழுங் கடந்துலவாத துன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட(ல்) ஆகுங் கனகவண்ணப்
படலைச் சடைப் பரவைத் திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கட் டுணிநெஞ்சமே


பொன் வண்ணமாகிப் பரந்த சடையில் கடலையொத்து அலைவீசும் கங்கையையும், குளிர்ந்த நிலவுத் துண்டத்தையும் வைத்தவனும், மேனியெங்கும் சுடுகாட்டுச் சாம்பரைப் பூசியவனுமான கடவுளுக்கு (சிவபிரானுக்கு) அடிமையாகக் கட்டுண்டு கிட (எனது) நெஞ்சே! (அவ்வாறு கட்டுண்டு கிடப்பாயேயானால், அழிவதாகிய (இந்த உடலை நீத்து) ஏழு உலகங்களையும் கடந்து, வற்றாத துன்பத்தை இயல்பாகக் கொண்ட (உலகியல் வாழ்க்கை என்னும்) கடலைக் கடந்து உய்வு பெற்று சிவசாயுச்சியம் அடைதலுங் கூடும்.

பொருள் விளக்கம்: ஒரு விறகுக் கட்டு இருக்கிறது. அந்தக் கயிற்றை அவிழ்க்க வரவில்லை என்றால், மற்றொரு கயிற்றால் இறுகக் கட்டினால் முதலில் கட்டியிருந்த கயிறு தளரும். அப்போது அவிழ்ப்பது எளிதாகும். அதுபோல, சிவனிடம் மனதை அடிமையாக்கிக் கட்டுண்டால் உலகப் பற்றென்னும் கட்டு நீங்கி விடுதலை பெறலாம். எவன் கட்டுப்பட, கட்டுப்பாட்டுக்கு உட்பட மறுக்கிறானோ, அவனுக்கு மெய்யான விடுதலை கிடைப்பதில்லை.

அருஞ்சொற்பொருள்: பரவை - கடல்; திரை - அலை; உலவாத - வற்றாத.

முழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பெருஞ் சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத்
தொழப்படுந்தேவர்தம்மால் தொழுவிக்குந்தன் றொண்டரையே


நெருப்பனைய தனது உடல்முழுவதும் வெண்ணீற்றைப் பூசியவனும், பொற்குன்றம்போலும் பேரொளி வீசுபவனுமாகிய எமது பிரானை இகழ்கின்றீரோ நீர்! எந்தத் தேவர்களெல்லாம் மனிதராலே தொழப்படுகின்றனரோ, அவர்களே வந்து, தன்னைத் தொழும் தனதடியாரைத் தொழும்படிச் செய்துவிடுவான் எமதிறைவன்.

திருச்சிற்றம்பலம்.

Posted by Picasa

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 2

நான் பலமுறை காஞ்சிபுரம் சென்றிருக்கிறேன். கைலாசநாதர் கோவிலுக்குச் சென்றதில்லை. ஆனால் சென்ற ஆண்டு ஜூலையில் அங்கு போனபோது, அது ஏதோ தேவலோகக் காட்சிபோலத் தோன்றியது. அதன் தொன்மை, அழகு, செய்நேர்த்தி எல்லாமே என்னை வேறொரு உலகுக்குக் கொண்டு சென்றது. அவ்வளவுதான், எடு கேமராவை. சுட்டுத் தள்ளினேன். விளைவைக் கீழே பாருங்கள்:

 

 

 

 
Posted by Picasa

February 12, 2010

சிவராத்திரிக்கு தேவாரம்

 

நெருப்பின் நிறம் கொண்டவனே! உன் முன்னாலேயே உன்னைப் புகழ்ந்து பேசினால் அது முகஸ்துதி ஆகிவிடும். (அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா?) இந்த மூன்று உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன் நீயல்லவோ! உன்னை நினைத்தபடியேதான் என் உயிர் என்னை விட்டு அகலும். எம்பிரானே! உன்னை நான் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்: அப்படி என் உயிர் பிரிந்த பின்னர் நீ என்னை மறந்துவிடாதே!

முன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்
கன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே


(திருநாவுக்கரசர், தேவாரம்: 5210)

உன்னையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க (வேண்டும் என்று) நான் விரும்பினாலும், இறையவனே! நீ என்னை விடுவதில்லை. உன்னை நினைக்கத் தொடங்கிய உடனேயே (என் மனதை மாற்றி) மறக்கச் செய்து வேறொன்றன் பின்னால் செல்லும்படிச் செய்துவிடுகிறாய்.

(இதில் விந்தை என்ன தெரியுமா?) உன்னை எப்போதும் நான் மறந்திருந்தாலும், உனக்கு நான் இனியவனாகவே இருக்கிறேன். (இப்படி இருப்பதில்) எனக்குச் சமமானவர் வேறு யாரேனும் இருக்கிறார்களோ!

நின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்
பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே


(திருநாவுக்கரசர், தேவாரம்: 5211)

திருச்சிற்றம்பலம்.
Posted by Picasa