June 05, 2013

கதாதரனின் மூன்று கேள்விகள்

கதாதரன் மிகச் சிறியவனாக இருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். தந்தையார் இருந்த காலத்திலேயே குடும்பம் ஒன்றும் செழிப்பான நிலையில் இருக்கவில்லை. மூத்தமகன் ராம்குமார் கொல்கத்தாவுக்குச் சென்று அங்கே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கினார். கதாதரன் அங்கே சென்று அண்ணனோடு இருக்க வேண்டியதாயிற்று.

அண்ணன் ராம்குமாருக்கு கதாதரன் பள்ளிக்குச் சென்று நவீன கல்வி கற்க வேண்டுமென்று ஆசை. அதை அவனிடம் கூறினார். அவனோ ஒரு தெய்வீகப் பாடலைக் கேட்டாலே ஆனந்த பரவசத்தில் மூழ்கிவிடுகிற அற்புதச் சிறுவன். அண்ணன் கூறியதைக் கேட்டதும் அவன் தனக்குத் தானே மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டான்.

“இந்தக் கல்வி கற்பதால் எனக்கு பக்தியும் ஆன்ம போதமும் ஏற்படுமா?” என்பது முதல் கேள்வி. “இல்லை” என்று அழுத்திக் கூறியது மனம்.

“என் தந்தையாரைப் போலவே தெய்வ பயமும், நேர்மையும் கொண்டவனாக என்னை ஆக்குமா?” என்பது இரண்டாவது கேள்வி. “இல்லை” என்றது அவனது மனச்சாட்சி.

“இந்தக் கல்வியின் வழியே நான் கடவுளை உணர்ந்து, அஞ்ஞானத்திலிருந்து தப்பி, உலகப் பொருட்களைத் துய்க்கும் ஆசையிலிருந்து விடுபடுவேனா?” என்பது மூன்றாவது கேள்வி. மனத்தின் பதிலில் மாற்றம் இல்லை.

“பிறகு இந்தக் கல்வியை வைத்துக்கொண்டு என்ன செய்வது! இதனால் உலகின் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து தெய்வ அனுபூதியைத் தரமுடியாது. என் ஆன்மீக லட்சியங்களைத் தூக்கி எறிவதைவிட, வாழ்நாள் முழுவதும் கல்வியறிவு இல்லாதவனாகவே இருந்து, கடவுள் மார்க்கத்தில் செல்வதையே விரும்புகிறேன்” என்று தீர்மானித்தான் கதாதரன்.

ராம்குமார் மீண்டும் கேட்டபோது, “அண்ணா! வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? என் இதயத்தை ஒளிரச் செய்யும் ஞானமே எனக்குத் தேவை. அதற்குப் பின் எனக்குத் தேவைகளே இருக்க மாட்டா” என்றான் கதாதரன் மிக அழுத்தமாக.

மெத்தப் படித்த கல்விமான்களும் இந்தப் படிப்பறிவில்லாப் பரமஹம்சனைத் தேடி வரவேண்டியதாயிற்று பிற்காலத்தில். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் விவேகானந்தர். அந்தச் சிறுவன் கதாதரன்தான் உலகம் போற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

(தகவல்: The Life of Swami Vivekananda - by His Eastern and Western Disciples; Published by Advaita Ashrama, Kolkatta)

2 comments:

Geetha Sambasivam said...

பகிர்வுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

தொடர