June 02, 2004

கொல்லிமலை வில்லாளி

நாமக்கல் ராஜா தன் ஊர்ப்பெருமை பேசும்போது, கையோடு கொல்லிமலை பற்றியும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் நண்பர்களோடு கொல்லிமலைக்குப் போனது நினைவுக்கு வந்தது. அங்கே மிகச் சவுகரியமான ஒரு தங்கும் விடுதி கட்டியிருந்தார்கள். எல்லா வசதிகளோடும். என்றால் அங்கே கிண்ண அலைவாங்கி (Dish Antenna) உண்டு. காசிக்குப் போனாலும் கருமம் தொலையவில்லை என்றாற்போல், கொல்லிமலைக்குப் போயும் தவறாமல் அண்ணாமலையும், மன்மத ராசாவும் பார்க்கலாம். அந்த விடுதியின் பெயர் வல்வில் ஓரி.

கொல்லிமலை வல்வில் ஓரியின் ஊர். ஓரி அந்த மலைப்பகுதியின் மன்னன். கடையேழு வள்ளல்களில் ஒருவன். அது என்ன 'வல்வில்'? ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை 'வல்வில்' என்று அழைப்பார்கள். அப்படிப் பார்த்தால் ஏழு மராமரங்களை ஒரே பாணத்தால் துளைத்து, தான் வாலியைக் கொல்லும் வல்லமை உடையவன்தான் என்று அனுமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நிரூபித்த இராமனும் வல்வில்தான். 'வல்வில் இராமன்' என்று அழைத்திருக்கிறார்கள். ஓரியை வல்வில் என்று அழைக்கக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் புறநானூறு (பாடல் 152) பார்க்கவேண்டும். அந்தப் பாடலில் ஒரு இசைவல்ல பாணன் இவ்வாறு சொல்கிறான்:


"நானும், (ஆடற்கலையில் வல்ல) விறலியும், என் குடும்பத்தினரும் (கொல்லிமலையின்) நெருங்கி அடர்ந்த காட்டுவழியே போய்க்கொண்டு இருந்தோம். யானையின் பிளிறலும், புலியின் கர்ஜனையும், காட்டுப் பன்றியின் (Asterix விரும்பிகளுக்கு ஒபிலிக்ஸின் பிரியமான உணவு நினைவுக்கு வரவேண்டுமே) உறுமலும் காதைத் துளைத்தன. நிலத்தில் பார்த்தால் பாம்பும், உடும்பும் நடுங்கவைத்தன.

'விர்ர்ர்'ரென்று ஒரு சத்தம். மலைபோல நின்றுகொண்டிருந்த ஒரு யானை பேரொலியோடு கீழே விழுகிறது. யானையின் மேலே பாயலாமென்று தன் வாயைப் பிளந்தபடியிருந்த புலியொன்று திடீரென்று அலறிச் சுருண்டு விழுகிறது. அதன் கர்ஜனையில் காடே கிடுகிடுக்கிறது. புலியின் வாயிலிருந்து அருவிபோல இரத்தம். அதைப் பார்ப்பதற்குள் ஒரு மான் துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்து போகிறது. அப்பால் உரலைப்போலத் தலையை உடைய காட்டுப் பன்றி ஒன்றும் தரைமீது உருண்டு விழுந்து சாகிறது. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இவ்வளவையும் செய்த அம்பு, இவற்றைத் தாண்டிப் போய் ஒரு புற்றுக்குள் பாய, அதிலிருக்கும் உடும்பு ஒன்று கடைசியாக உயிர்விடுகிறது.

முதலில் யானைமீது அம்பு பாய்ந்ததுதான் எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது. வாய்பிளந்து ரத்தம் கக்கிக் கிடந்த புலி, உருண்டு இறந்த காட்டுப் பன்றி, மான், உடும்பு ஆகியவை கிடந்த காட்சி அந்த அம்பின் கூர்மையையும் வேகத்தையும் எங்களுக்கு உணர்த்தின. திரும்பிப் பார்த்தால் அகன்ற மார்பில் மாலை தொங்க, சந்தனம் பூசி, தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவனாய், புன்முறுவலோடு ஒருவன் நின்றுகொண்டிருந்தான். இவனைப் பார்த்தால் சாதாரண வேட்டுவனைப் போலத் தோன்றவில்லையே..." என்று இவ்வாறு பாணனும் குடும்பத்தினரும் ஆச்சரியப்பட்டு, இவன்தான் ஓரியாக இருக்கவேண்டும் என்று சொல்லி அழகாக இசைக்கிறார்கள். நல்ல ரசனையோடு கேட்கிறான் வந்தவன். பாணன் தன் பாடலின் இறுதியிலே 'ஓரி' என்ற பெயர் வரும்படிப் பாட, அவன் சற்றே முகம் சிவந்து நாணமடைகிறான். (என்ன ஆளுப்பா இவங்கள்ளாம், நம்ம 'முடிசூடா மன்னரு'ங்களைப் பாத்துக் கத்துக்கறதில்லே?)

அதுமட்டுமல்ல, இவர்களுக்கு நிறையப் பொன்னும், மணிகளும் பொருளும் தருவதோடு, வேட்டையாடிய மானின் தசையைப் புழுக்கி உணவாகக் கொடுக்கிறான். (சமீபகாலத்தில் கேள்விப்பட்டது போல இருக்கிறதே!) புத்துருக்கு நெய்போலத் தோன்றும் தேன் கொடுக்கிறான்.

இவன் தான் வல்வில் ஓரி. ஆனால் கொல்லிமலையைப் பற்றி இன்னும் சொல்லி முடிக்கலை. மற்றொரு முறை சொல்வேன்...

7 comments:

பரி (Pari) said...

நல்லா படம் காட்டி கதை சொல்லிருக்கீங்க :-) நல்லா இருக்கு
மராமரம் பாடத்துல படிச்சதோட சரி. இது இப்போவும் இருக்கா?

Madhurabharati said...

ú¢îº£í¸Ç¡ Àâ, ¿øÄÐ. ÁáÁà ¬Ã¡ö ¦¾¡¼÷¸¢ÈÐ. ²¾¡ÅÐ ¾¼Âõ ¸¢¨¼ò¾¡ø þθ¢§Èý.

arulselvan said...

நன்றாக இருக்கிறது இந்த வகையான இலக்கியப் பார்வை. ஆனால் இந்த உடும்பு கொல்லிமலை வாசியா இல்லே தென்னமரிக்காவிலிருந்து வந்த விருந்தாளியா? நம்ப ஊர் ஜாடையாவே இல்லையேன்னு பாத்தேன். :-).

அன்புடன்
அருள்

Madhurabharati said...

¿ýÈ¢ «Õû. ºÃ¢Â¡ò¾¡ý ÒÊí¸. þÐ ¦ÅÇ¢¿¡ðÎî ºÃì̾¡ý. ¯ûé÷ò ¾¢Õ×ÕÅõ ¸¢ð¼Å¢ø¨Ä. «¾¡ý..†¢..†¢...

arulselvan said...

இங்கெ இருக்குது புடிச்சிக்கோங்க:

http://www.v-liz.co.uk/india/sub/monitors.htm#monit

(மரத்திமேலே கூட - நல்ல ப்ஹொடொ ஒன்று)

உடும்பு பத்தி வேட்டைக் கதை ஒண்ணு அப்புறமா சொல்றேன். முன்னெல்லாம் கோயம்பத்தூர் பேரூர் இல்ல, அதுக்கு பக்கத்து குன்றுகளில் நெறய கிடைக்கும்.


அருள்

arulselvan said...

இங்கெ இருக்குது புடிச்சுக்கோங்க:

http://www.v-liz.co.uk/india/sub/monitors.htm#monit

(மரத்திமேலே கூட - நல்ல போட்டோ ஒன்று)

உடும்பு பத்தி வேட்டைக் கதை ஒண்ணு அப்புறமா சொல்றேன். முன்னெல்லாம் கோயம்பத்தூர் பேரூர் இல்ல, அதுக்கு பக்கத்து குன்றுகளில் நெறய கிடைக்கும்.

அருள்

Anonymous said...

மது,

மராமரம் என்பது தமிழ்ப் பெயர். வால்மிகி சால மரம் என்று சொல்கிறார். சால மரத்தின் தாவரப் பெயர் Shorea Robusta. படம் இங்கே இருக்கிறது: http://www.life.uiuc.edu/plantbio/263/image/dipteros.jpg

ஹரி கிருஷ்ணன்