June 17, 2004

எது 'ஆண்மை'?

என் நண்பனொருவனுக்குத் தான் பெரிய மிருகம் என்று சொல்லிக்கொள்வதில் ரொம்ப விருப்பம். தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அதாவது, தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, தான் உக்கிரமானவன், முரடன், அல்லி சாம்ராஜ்யத்தையே போய் அடக்கிவிடுபவன்... இத்தியாதி, இத்தியாதி. இன்னும் அவனது கட்டில் வித்தைத் திறமை பற்றிய பெருமைகளை நான் சொல்லவில்லை--காரணம் அதை இங்கே நாகரிகமாக எழுத எனது சொற்களஞ்சியம் பத்தாது. இப்படிப்பட்ட மனநிலையில் அவன் பீற்றிக்கொள்ளத் தொடங்கும் போதெல்லாம் அவனது நீண்ட நெடிய கட்டுரை இப்படித்தான் முடியும்: "என்னை வீட்டுவிலங்காக்கத் தக்க ஒருத்தியே எனக்கு மனைவியாக வேண்டும்"! அவன் சொல்லும்போது பார்த்தால் ஏதோவொரு புலியைப் பூனையாக அடக்குகிற சர்க்கஸ் சாகசம் போலத் தோன்றும்.

அப்போது நாங்கள் டெல்லியில் இருந்தோம். அவன் ஒருமுறை பெங்களூருக்குப் போனவன் திடீரென்று அங்கிருந்து தொலைபேசினான். "எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு, இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். டெல்லிக்கு வரும்போது பெண்டாட்டியோடுதான் வருவேன்." ரொம்ப நல்லது, ரிங் மாஸ்டர் கிடைத்துவிட்டாளாக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

கல்யாணம் முடிந்து சிலநாட்களில் அடுத்த தொலைபேசி: "நான் திங்கட் கிழமை புறப்பட்டு, புதன் காலையிலே அங்கே இருப்பேன். ஒரு சின்ன உதவி செய். என் வீட்டுக்குப் போய், கொஞ்சம் சுத்தம் பண்ணி வை. ஆங்... முக்கியமா அங்கே இருக்கிற ரம் மற்றும் பியர் சீசாக்களைக் கண்காணாம அப்புறப்படுத்திடு!" குரலில் கொஞ்சம் அவசரம் தொனித்தது. அச்சமும்தான். வழக்கமான விடலைக் குணம், அவன் சொன்னதை நான் செய்யவில்லை.

டெல்லிக்கு வந்தவன் என்னை வீட்டுக்குக் கூப்பிடவே இல்லை. மெதுவாக அவனது அலுவலகத்தில் பேசினேன். "டேய், நீ பாட்டுக்கு வீட்டைச் சுத்தம் செய்யாம விட்டுட்டே. நான் நல்லா மாட்டிக்கிட்டேன். எல்லாப் பழியையும் உன் தலையிலே போட்டுட்டேன். நான் வீட்டிலே இல்லாதப்போ நீதான் அங்கே வந்து குடிச்சிருப்பேன்னு சொல்லித் தப்பிக்கவேண்டியதாயிடுச்சு" என்றான்.

பழைய புலிவேஷம் எங்கே போயிற்று என்று அடையாளமே தெரியவில்லை. ஒரு திருமணத்தில் அவனது மனைவியைப் பார்த்தேன். சிறிய, பீங்கான் பொம்மை போன்ற, பளபளப்பான வெளிர்நிறத்தில், செதுக்கிய வடிவம் கொண்ட பெண்ணாகத் தெரிந்த அவரின் உதட்டில் இறுக்கம் இருந்தது. "இவன்தானே அத்தனைக் குப்பி பியரும் ரம்மும் குடித்தவன்" என்ற எள்ளல் கண்ணில் தோன்ற என்னைப் பார்த்து மரியாதைக்குப் புன்னகைத்துவிட்டு அகன்றார். "அடக்கு, அடக்கு" என்று துடித்த நம்முடைய நண்பர் இரண்டடி பின்னாலே என்னைப் பார்க்கவே பயந்தவராக அரைப் புன்னகையோடு அகன்றார். என்றைக்குமே நான் செய்யாத தவறுக்காக வருத்தப்பட்டதில்லை. எனவே எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

இன்னொரு நண்பரின் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள். அவருடைய பெயர் சந்திரன் என்று வைத்துக்கொள்வோமே. அவருடைய மணவோலை வந்தது. அப்போது சென்னைக்கு வந்துவிட்டேன். என்னால் போகமுடியவில்லை. சில மாதங்கள் கழித்து இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். "சந்திரன் கல்யாணம் எல்லாம் நல்லபடி நடந்ததா?" என்று விசாரித்தேன். "அது ஒரு பெரிய சோகக் கதை" என்றார் நண்பர். சந்திரனும் பயங்கரத் தண்ணி வண்டிதான். ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலையிலேயே தொடங்கிவிடுவார். அலுவலக நாட்களில் மாலை ஐந்து மணிக்குத் தான் மெல்லத் தொடங்குவார்.

கல்யாணத்தைக் கொண்டாட மாலை நண்பர்களோடு சேர்ந்து குடித்திருக்கிறார். அவருக்கு ஆரம்பிக்கத்தான் தெரியும், நிறுத்தத் தெரியாது. எனவே உத்தேசமாக இரவின் ஒரு பகுதியில் திடீரென்று ஒரு நண்பர் "டேய் சந்திரா, உனக்கு இன்னிக்கு முதல் இரவுடா. போ, அண்ணி காத்திக்கிட்டிருப்பாங்க" என்று சொல்லவும், சந்திரன் தண்ணியை நிறுத்திவிட்டு அண்ணியைப் பார்க்கப் போனார். அண்ணி, திடமான அண்ணி. இவருடைய கோலத்தைப் பார்த்தார். தன்னுடைய முதலிரவிலேயே இப்படிக் குடித்துவிட்டு வருகிற மனிதனுடன் என்னால் வாழ்க்கை நடத்தமுடியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டு, அறையைவிட்டு வெளியேறினார். வரதட்சணையை தரமறுத்து மணவறையிலிருந்து வெளிநடப்புச் செய்ய எவ்வளவு துணிவு வேண்டுமோ அதைவிட இதற்குத் துணிவு வேண்டும். சந்திரன் என் நண்பர்தான். ஆனால், அந்தப் பெண்மணியை நான் அதிகம் மதிக்கிறேன்.

முதலில் சொன்னவருக்கும், சந்திரனுக்கும் என்ன வித்தியாசம்? இதில் எது 'ஆண்மை'?

No comments: