கி.மு. 300-இலிருந்து 500-க்குள் சொல்கிறார்கள் சன் சூ-வின் (Sun Tzu) காலத்தை. தன்னுடைய இளவயதிலேயே எழுதிய The Art of War என்ற இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹோ லூ (வூ-வின் அரசன்) தனது சேனாதிபதியாக நியமித்தானாம். அவருடைய திறமையை மன்னன் சோதித்தது பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு. இங்கே அதற்கு நேரம் இல்லாததால் மேலே போகலாம். இந்த நூலிலிருந்துதான் மா சே துங்-கின் சிறிய சிவப்புப் புத்தகம் (The Little Redbook) வார்த்தைக்கு வார்த்தை பல இடங்களில் கடன் வாங்கி இருக்கிறது.
இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் பெயர் லயனல் கைல்ஸ். பெயரைத் தட்டிக்கொண்டு போனவரோ ஜேம்ஸ் கிளாவல். பிரபல நாவலாசிரியர், ஹாலிவுட் படத் தயாரிப்பாளர், வசனகர்த்தா. இவர் வசனம் எழுதிய The Great Escape (ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஸ்டீவ் மக்வீன், சார்ல்ஸ் பிரான்சன் நடித்தது) மிகப் பெரிய வெற்றிப்படம்.
ஆனால் நான் முக்கியமாகக் கருதுவது இவருடைய நோபிள் ஹவுஸ், கய் ஜின், ஷோகன் போன்ற நாவல்களைத்தாம். ஜப்பானியர்களையும் சீனர்களையும் தன்னுடைய கதையில் கோமாளிகளாக்காமல் அவர்களுடைய கலாச்சாரப் பின்னணியோடு சரியாகப் படம்பிடித்தார். அதிலும் கய் ஜின் படித்தபோதுதான் ஜப்பானில் விலைமாதருக்கு எவ்வளவு அங்கீகாரம் இருக்கிறது என்பதையும், சமுராய்களின் அக்கால வாழ்க்கை எவ்வளவு வறட்டு கவுரவமும் துயரமும் நிரம்பியது என்பதையும் புரிந்துகொண்டேன். (இரண்டு பிராந்தியத் தலைவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு அதைக் கையெழுத்திடுவதற்குச் சமமான சடங்கு என்ன தெரியுமா? இருவரும் ஒன்றாக நின்றுகொண்டு ஒண்ணுக்கடிக்க, அந்த வீழ்ச்சிகள் கலக்கவேண்டும்!).
ஜேம்ஸ் கிளாவல் தொகுத்து, முன்னுரையோடு 'போர்க்கலை'யை வெளியிட்டதும் அது ஆங்கிலம்கூறும் நல்லுலகெங்கும் பற்றிக் கொண்டது. சேனாதிபதிகள், யுத்த நிபுணர்கள் மட்டுமல்லாமல், இதன் யுத்திகளை விற்பனைக்கும், பங்குவணிக முதலீட்டுக்கும், தொழில்முனைவோர் வெற்றிக்கும் பயன்படுத்தலாம் என்று பலரும் சொன்னார்கள். பங்கு வணிகத்திற்கு (F&O segment உட்பட) எப்படிப் பயன்படும் என்று தெரியப் பாருங்கள்: http://www.strategies-tactics.com/suntzu.htm
சரி, அதில் என்னதான் சொல்லியிருக்கிறது? 13 அத்தியாயங்கள் (சன் சூ 13-க்குப் பயப்படவில்லை போலும்) கொண்டது இது. சீனமொழி மூலம் மிகச் சுருக்கமாக இருப்பதாகவும், மொழிபெயர்க்கையில் அது விரிக்கப்பட்டுவிட்டதாகவும் கருதப்படுகிறது. பொதுவாகவே நூல் மொழிபெயர்ப்பில் ஊதித்தான் போகும்.
என்ன சொல்கிறார் சன் சூ? இதோ ஒரு உதாரணம்: "உங்கள் எதிரியையும் தெரிந்து உங்களையும் தெரிந்துகொண்டால், நூறு யுத்தங்களின் விளைவைப் பற்றியும் அஞ்சவேண்டியதில்லை". எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் (குறள்: 471)
இந்தப் புத்தகத்தைப் படிக்கையில் அடிக்கடி திருக்குறள் நினைவுக்கு வருவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை. இது ரஷ்ய ராணுவத்துக்குக் கட்டாயப் பாடமாம். ஜார்ஜ் புஷ் படித்திருக்கமாட்டார் என்று தோன்றுகின்றது. இதைக் கேளுங்கள்:
"வெற்றிபெற்றபின் எந்த ஊரை வைத்துக் கொள்ள முடியாதோ, அல்லது அப்படியே விட்டால் அதனால் பாதகமில்லையோ, அதைத் தாக்கக் கூடாது."
"போரிட்டு எல்லாப் பொரிலும் வெல்வது சிறப்பல்ல. மிகச் சிறப்பு எதுவென்றால் போரிடாமலே எதிரியின் முரணை அழிப்பதுதான்."
"இதுவரையிலான வரலாற்றில், மிகநீண்டகாலப் போரினாலே ஒரு தேசம் பயனடைந்ததாக எங்குமே சொல்லப்படவில்லை."
ஒற்றர்களைப் பற்றிப் பல விஷயங்களைச் சொல்கிறார் சன் சூ. எதிரி நாட்டில் அவமதிக்கப்பட்ட உயர் அதிகாரிகளை ஒற்றர்களாக்கலாம். அங்குள்ள குடிமக்கள் சிலரை அன்பினால் வென்று ஒற்றர்களாக்கலாம். தங்கத்துக்கு அலையும் வேசியர், அதிகம் தண்டிக்கப் பட்ட குற்றவாளிகள், அநியாயமாய்ப் பதவி உயர்வு மறுக்கப்பட்ட அரசு ஊழியர், கருங்காலிகள் - இவர்கள் எல்லோரையும் பயன்படுத்தி ஒற்றாடலாம். ஆனால் மிகக் கவனத்தோடு இருக்கவேண்டும் என்கிறார்.
மாக்கியவெல்லி-யின் The Prince, மற்றும் மியாமொடோ முசாஷியின் The Book ஆகியவற்றுக்கு இணையாக இதைச் சொல்கிறார்கள். நாம் சாணக்கியனையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். திருக்குறள் இல்லாமலா!
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் (குறள்: 589)
[ஒரே காரியத்தைப் பற்றி விசாரிக்கத் தனித்தனியே மூன்று ஒற்றர்களை ஏவி, அந்த மூவரும் அதே காரியத்துக்கு அனுப்பப் பட்டதை அவர்கள் அறியாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். அந்த மூவரும் தனித்தனியே அறிந்து வருகிற சேதிகளையெல்லாம் சேர்த்துப் பார்த்து அரசன் உண்மையை அறியவேண்டும். - நாமக்கல் கவிஞர் உரை]
திருக்குறள், சாணக்கியன், ஸ்டீவன் கோவி, பீட்டர் டிரக்கர் எல்லோரையும் தக்க அளவில் எடுத்துக் கொண்டு சன் சூவோடு பொருத்திப்பார்க்க வேண்டுமென்று கை துருதுருக்கிறது. அதுவே ஒரு புத்தகமாகிவிடும்.
June 20, 2004
சன் சூ-வின் போர்க்கலை
Posted by
Madhurabharati
at
5:12 PM
Subscribe to:
Post Comments (Atom)


1 comments:
அருமையான தகவல். வாழ்துக்கள்.
Post a Comment