June 24, 2004

நானும் திருக்குறளும்

நான் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டே என்னுடைய எழுத்துக்களை அமைத்துக் கொள்கிறேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மரபிலக்கியம், ராகாகி, தமிழோவியம், இ-சங்கமம் எங்கு எடுத்தாலும் என் கட்டுரைகளின் அடிநாதம் திருக்குறள்தான். ஆனால் அதில் பாரதி, கம்பன், சிலம்பு, மணிமேகலை, தொல்காப்பியம் இன்னும் பிற தமிழ்க் கருவூலங்களிலிருந்தும் எடுத்துப் பயன்படுத்துகிறேன்.

'திருக்குறள்தான் நிறையப் பேர் எழுதிவிட்டார்களே, நீங்களும் ஏன்?' என்று கேட்கலாம். பாரதியையும் கம்பனையும் போலவே ஆழ அகல நுண்மை கொண்டதும் கவிச்சுவை தளும்புவதுமாக இருக்கிறது குறள். அதைக் காலம் காலமாக பலரும் எடுத்துப் பேசுவார்கள், எழுதுவார்கள். தவிர்க்க இயலாது. நான் எழுத ஒரு காரணம் உண்டு.

இரண்டுவருட காலம் குடும்பத்தைவிட்டு அகன்று நான் மட்டும் தனியே திண்டுக்கல்லில் வசிக்க நேர்ந்தது. அப்போது கையில் (சமைத்து, துணிதுவைத்து எல்லாம் செய்தது போக) கொஞ்சம் நேரம் மிச்சம் இருந்தது. அப்போது திருக்குறள் ஆராய்ச்சியில் இறங்கினேன். பலரது உரைகளையும் படித்தேன். தவிர எனக்கேயும் திருவள்ளுவர் இப்படிக் கருதியிருக்கலாம் என்று சில கருத்துகள் தோன்றின. ரால்·ப் வால்டோ எமர்சன் எனக்குச் சிறுவயதிலேயே "உன்னுடைய கருத்து என்ற ஒரு காரணத்துக்காகவே எதையும் ஒதுக்கித் தள்ளாதே" என்று சொல்லிக் கொடுத்திருக்கிறான். ஆகவே இன்னும் குறளில் ஆழச் சென்றேன். என் குறட்காதல் அதிகமாகியதே அன்றிக் குறையவில்லை.

பிறர் கையாளாத, (போதுமான அளவு) விளக்காத, வாழ்க்கையோடு பொருத்திக் காட்டாத, மிகுந்த அழகும் செறிவும் கொண்ட பல குறள்கள் ஒளிந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. அவற்றை விளக்கும் பணியைத் தொடரவேண்டும் என்பதே என் ஆசை.

நான் அப்படிச் செய்வதைப் பொதுவாக யாரும் உணருவதில்லை. காரணம் நான் அவற்றைத் 'திருக்குறள் கட்டுரைகள்' என்று அழைப்பதில்லை. அப்படி ஒரு தலைப்பைப் பார்த்ததுமே முதல் எதிர்வினை "வந்துட்டார்ப்பா, லட்சத்தி ஒண்ணாவது ஆளு. இன்னும் எத்தனை பேர்தான் திருக்குறளையே வெச்சுக்கிட்டு பஜனை பண்ணுவாங்க!" என்பதாக இருக்கும். அதைத் தவிர்க்க விரும்பினேன்.

இன்னொன்று திருக்குறளை நான் இலக்கியவாதியாக அணுகுவதில்லை. வாழ்க்கை, அலுவலகம், உறவுகள், பொருளாதாரம், ஆன்மிகம், காதல், கருணை, கோட்பாடுகள், மேலாண்மை - என்று எந்தத் துறைக்கும் வழிகாட்டியாக அணுகுகிறேன். என்னுடைய நோக்கம் குறளை விளக்குவதல்ல. எந்த ஒரு சூழ்நிலையையும், பிரச்சனையையும் எப்படித் திருக்குறள் விளக்குகிறது என்று காண்பிப்பதுதான்.

இதில் நான் ஓரளவு வெற்றி கண்டிருப்பதாகவும் கருதுகிறேன். "என் மனைவிக்கு வெகுநாட்களாகவே திருக்குறளைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. நான் அங்கொன்று இங்கொன்று என சில குறள்களைப் படித்து உரையும் படிக்கும்போது அது அவளுக்கு சுவாரஸ்யமாகப் படவில்லை. இப்போது எங்கள் இருவருடைய குறையையும் நீக்க வந்துள்ள உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று புரியவில்லை!" என்று நண்பர் ஆர்.எஸ். மணி (கனடா) அவர்கள் சந்தவசந்தத்தில் எழுதியது எனக்கு நோபல் பரிசுக்குச் சமானமானது.

No comments: