February 09, 2017

ஸ்ரீ ரமண தரிசனம் - 1


ரமணரை அறிய நினைப்பது ஒரு முயற்சிதானே தவிர, அது இயலக்கூடுவது அல்ல. ஒரு ஞானியை இன்னொரு ஞானியே அறியமுடியும் என்பார் ரமண பகவான். ஒரு பக்தனை, ஒரு யோகியைப் பார்த்த உடனே புற அடையாளங்கள் அவனை இனம் காட்டும். ஒரு ஞானிக்கு எந்த வெளிப்படையான சின்னங்களும் கிடையாது. ரமணரே சொல்லும் கதை ஒன்று உண்டு. அது பிரபுலிங்க லீலை என்ற நூலில் இருக்கும் 'மருள சங்கரதேவரின் கதை' என்பதாகும்.

மருள என்றால் கன்னடத்தில் பைத்தியக்காரன் என்று பொருள். இந்த மருள சங்கரதேவர் ஒரு மடத்தின் வெளியே எச்சில் இலைகள் எறியப்படும் இடத்தில் வாழ்ந்தார். மடாதிபதியோ மற்றவர்களோ இவரைப் பற்றி அறிய மாட்டார்கள். ஒருமுறை அல்லம பிரபு என்னும் உலகறிந்த ஞானி அந்த வழியே போகும்போது மருள சங்கரர் அந்தக் குப்பையிலிருந்து எழுந்து வந்து அல்லமரின் முன்னே நெடுக விழுந்து நமஸ்கரித்தார். அல்லமர் அவரை அப்படியே தூக்கி எடுத்து அரவணைத்தார். இருவருக்குமே மற்றவரின் அருமை தெரிந்திருந்தது என்பார் ரமணர்.

நம்மைப் போலவே சாப்பிட்டு, உறங்கி, உலவி, பேசி, பல வேலைகள் செய்யும் இவரிடம் அப்படி என்ன இருக்கிறது என்று நினைத்தவர்கள் பலருண்டு. அவரது தரிசனத்தால் பலன்பெறும் அரிய சந்தர்ப்பம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை என்றுதான் அதற்குப் பொருளே தவிர, பகவான் தானாகவேதான் எப்போதும் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் "பகவானுடைய சிரிப்பைவிட அழகான பொருளொன்று உலகில் இருப்பதாக என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை" என்றார் சாட்விக். அருளின், கருணையின், ஞானத்தின் சிரிப்பல்லவா அது. அதைவிட அழகு வேறெது இருக்கமுடியும்.

ஆதாரம்: மதுரபாரதியின் ரமண சரிதம்

No comments: