December 31, 2007

திருவெம்பாவை - 11

திருச்சிற்றம்பலம்

உய்யும் வழி செய்தோம்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.


'செந்தழல் நிறத்தவனே! மேனியெங்கும் வெண்மையான திருநீறு பூசிய செல்வனே! அழகுநிரம்பிய பொய்கையில் முகேரென்று பாய்ந்து, கைகளால் துழாவித் துழாவிக் குளிக்கிறோம். வழிவழியாக நின் அடியவரான நாங்கள் உனது திருப்பாதங்களைப் போற்றிப் பாடி நல்ல வாழ்வு எய்தினோம்.

'சிறிய இடையைக் கொண்டவரும், தமது பெரிய கண்களிலே அஞ்சனம் இட்டிருப்பவருமான உமையம்மையின் கணவனே! தலைவா! அடியாருக்கு அருளைத் தந்து முக்தியளிக்கும் உன் விளையாட்டுக்கு ஆட்படும் பொருட்டு அவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அவற்றையெல்லாம் நாங்கள் செய்துவிட்டோம். பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்கி நாங்கள் நலிந்துவிடாமல் காப்பாயாக.'

சிறப்புப்பொருள்: மொய் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். 'தேனீ' என்று பொருள் கொண்டு, 'தேனீக்களால் மொய்க்கப்பட்ட பொய்கை என்று பொருள் கூறுவாரும்' உண்டு. இன்னும் சுற்றி வளைத்து தேனீக்கள் மொய்க்கும் பூங்காவால் சூழப்பட்ட பொய்கை என்பாரும் உண்டு. செந்நெருப்பு குளிரும்போது மேலே சாம்பல் படரும். அவ்வாறே, செந்தழல் மேனிச் சிவன் தன்மீது வெண்ணீறாடியிருக்கிறான். 'விபூதி' என்பதே செல்வம். எனவே அவன் செல்வன்.

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே


என்று பாடும் ஞானசம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகம் திருநீற்றையே செல்வம் (அருத்தம்) என்கிறது. அதை அணிந்தவர் செல்வர்தாமே! (திருநீற்றுப் பதிகம் ஓதி உணர்ந்து சுவைக்கத் தக்கது. படிக்கப் படிக்கப் பேரின்பம் தருவது.)

(அருஞ்சொற்பொருள்: மொய் - அழகு, தேனீ; தடம் - அகலமான; முகேர் - தண்ணீருக்குள் பாயும்போது ஏற்படும் ஒலி; ஆர் - அடர்ந்த; செய்யா - சிவந்தவனே; மருங்குல் - இடை; எய்யாமல் - நலிந்து போகாமல், வறுமையடையாமல்)

இன்னும் வரும்...

December 30, 2007

திருவெம்பாவை - 10

திருச்சிற்றம்பலம்

அவனுக்கு ஊர் ஏது, பேர் ஏது!

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.


இந்தப் பாசுரமும் சிவபெருமானின் பெருமையைக் கூறுவதே:

'கீழுலகங்கள் ஏழுக்கும் கீழே, எங்கே சொற்களும் எட்டாதோ, அதற்கப்பாலும் செல்கிறது சிவபெருமானின் திருப்பாத மலர்கள். எல்லாப் பொருள்களும் தம்மாலான உயரத்துக்குச் சென்று முடிந்தபின் அதற்கப்பாலும் உயர்ந்து நிற்கிறது எம்பெருமானின் பூப்புனைந்த சிரம். ஒருபுறம் உமையம்மைக்குக் கொடுத்தமையினாலே அவனது திருமேனி இப்பாலினது எனக் கூறத்தக்கதல்ல. அவன் எல்லாமும் ஆனதால் ஒருவனேயும் அல்லன்.

'வேதங்களும் வானவரும் மானுடரும் துதித்த போதும் அவன் புகழ் வற்றாதது; அவனோ இணையற்ற உயிர்த்தோழன். அவனுக்கு அடியாரோ கணக்கற்றவர்.

'அத்தகைய குற்றமற்ற குலத்தவனான அரனின் கோவிலைச் சார்ந்த பெண்பிள்ளகளே! அவனது ஊர் எந்த ஊர்! எதை அவனது பெயர் என்று கூறுவது? அவனுக்கு யார் உறவினர், யார் அயலவர். அவனை என்னவென்று சொல்லிப் பாடுவது!'

சிறப்புக்குறிப்பு: பாதாளம் ஏழு என்பவை - மகாதலம், ரசாதலம், தராதலம், சுதலம், நிதலம், விதலம், அதலம். இவ்வாறு கீழும் மேலும் எவ்வளவு அவன் வியாபித்திருக்கிறான் எனக் கூறுவதும், திருவண்ணாமலைத் தலபுராணத்தின் வேறொரு வடிவே. அவனை 'சிவபுராண'த்தில்

... ... ... ... வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா


என்றும் வர்ணிக்க முற்படுகிறாரல்லவா மாணிக்க வாசகர்.

எல்லா மனிதரிலும் ஆண்பாற் கூறுகளும் பெண்பாற்கூறுகளும் இருப்பதை விஞ்ஞானம் கூறுகிறது. சிவபெருமானை மாதொருபாகனாகக் காண்பதும் அந்தப் புரிதலைக் காட்டுவதே.

எந்தப் பெயரால் அழைத்தாலும் இறைவன் ஏன் என்று கேட்கிறான், எவற்றுள்ளும் வியாபித்து நிற்கிறான் என்பதனாலே 'ஏதவன் ஊர், ஏதவன் பேர்' என்கிற மலைப்பு ஏற்படுகிறது. விருப்பும் வெறுப்பும் மனிதரின் மனவிகாரங்கள். இறைவனுக்கு அத்தகைய வேறுபாடுகள் இல்லை. அதுமட்டுமல்ல, விருப்பு வெறுப்புகளால் அலைக்கழிக்கப் படுபவர்களுக்கு அவன் புலப்படுவதும் இல்லை. எனவேதான் 'ஆருற்றார், ஆரயலார்' என்கிற சமத்துவ பாவம்.

இந்தப் புரிதல் வந்தபின் அவனது புகழும் சொற்களைக் கடந்ததாகிறது. எனவேதான் 'அவனைப் பாடுவது எப்படி?' என்கிற பெருமலைப்பு. ஆனால் அவ்வாறான எல்லையற்ற தன்மையே அவனது எல்லையற்ற புகழுமல்லவா?

இன்னும் வரும்...

December 28, 2007

திருவெம்பாவை - 9

திருச்சிற்றம்பலம்

மிகப் பழையவன், புதியவற்றுக்கும் புதியவன்!

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.


Omkara smallசென்ற பாடல் வரையிலும் எழுந்து வரச் சோம்பல்படும் தோழியைரைப் பார்த்துப் பாடியவர்கள் இந்தப் பாடலில் தொடங்கிப் பெருமானின் புகழைப் பாடுகின்றனர்.

'மிகப் பழமையானவற்றுளெல்லாம் பழமையானவனே, பின்னர் மிகப் புதுமையெனக் கருதுபவை அனைத்துக்கும் புதுமையானவனே!

'செம்மையான அடியாராகிய நாங்கள் உன்னை மட்டுமே தலைவனாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் உனது அடியார்களின் தாள்களைப் பணிவோம்.

'அவர்களுக்கே நாங்கள் உரிமையுடையவர்கள் ஆவோம். அவ்வாறு உனக்கு யார் அடியாரோ அவரே எமக்குக் கணவராக முடியும். அவர்கள் விரும்பியபடியே தொண்டராக இருந்து பணி செய்வோம். இத்தகைய வாழ்க்கையை நீ அருளுவாயென்றால் எமக்குக் குறையெதுவும் இருக்காது.'

சிறப்புக் குறிப்பு: நாமறிந்த, அறியாத அனைத்துக்கும் மூலகாரணமானவன் சிவபெருமானே. நமக்குப் பின்னும் அடுத்தடுத்த ஊழிகளிலும் தொடர்ந்து இருக்கப் போகும் அவனை எல்லாவற்றுள்ளும் புதுமையென்று கருதுவதில் தவறென்ன. 'உன்னையும் உன் அடியாரையும் மட்டுமே பணிவோம்' என்று உறுதியோடு இருக்கும் இம்மகளிர் சிவநிந்தனை செய்வாருக்கு வாழ்க்கைப்பட்டால் அவர் வாழ்க்கை முழுதுமே துன்பமாகிவிடாதோ. எனவேதான் நாம் விரும்பியவாறு கணவரை நீ எமக்கு அருளிவிட்டால் பின்னர் எமக்குக் குறையெதுவும் இருக்காது என்கின்றனர்.

பாவை நோன்பு நோற்பதன் ஒரு காரணம் எனக்கு இத்தகைய கணவன் வாய்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதும் ஆகும். இந்தப் பாடலில் அதனை இவர்கள் செய்கின்றனர்.

(அருஞ்சொற்பொருள்: பேர்த்தும் -> பெயர்த்தும் - அதற்குப் பின்னரும், மீண்டும்; பெற்றி - தன்மை; உகந்து - விரும்பி; தொழும்பு - அடிமைத் தொண்டு, பக்தி)

December 27, 2007

திருவெம்பாவை - 8

திருச்சிற்றம்பலம்

ஏழைபங்காளனைப் பாடுவோம் வா!

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.


Kozhiஅழைக்க வந்த தோழியர் குழாம் இப்போது விடியலுக்கான அறிகுறிகளைக் கூறுகின்றனர்:

'கோழி கூவி விட்டது. எங்கு பார்த்தாலும் பறவைகள் சப்தஸ்வரங்களை இசைக்கின்றன. எங்கிலும் வெண்மையான சங்கு ஒலிக்கிறது.

'தனக்கு இணையாக எவருமில்லாத பரஞ்சோதியை, இணையற்ற உயர்கருணையை, ஈடில்லாத சத்தியப் பொருள்களைப் பாடுகிறோம், அதை நீ கேட்கவில்லையா? வாழ்க நீ! இப்படியும் ஒரு தூக்கமா?

'வாயைத் திறந்து 'வருகிறேன்' என்று சொல்லமாட்டாயோ! இதுதான் நீ கருணைக் கடலான பரமனின்மீது கொண்ட பக்தியா?

'ஊழிக்காலத்தில் தனியொரு முதல்வனாக நிற்பவனை, ஏழையரின் துன்பத்தில் பங்கேற்பவனைப் பாடுவோம் வா!'

சிறப்புக் குறிப்பு: சிலம்பல் என்பதற்கு ஒலியெழுப்புதல் என்று பொருள். தொடர்ந்து ஒலியெழுப்புவதனாலேயே மகளிர் காலில் அணியும் ஓர் அணிக்குச் சிலம்பு என்று பெயர் வந்தது. குருகு என்றால் நாரை என்றும் பொதுவாகப் பறவைகள் என்றும் பொருள் உண்டு.

இந்தப் பாடல் சிவபெருமானை 'ஏழைபங்காளன்' என்ற மிக அழகிய அடைமொழியால் அழைக்கிறது. வந்தியின் உதிர்ந்த பிட்டைக் கூலியாக ஏற்று, உடைந்த வைகைக் கரைக்கு மண்கொட்டி அணைபோட வந்து, பிரம்படி வாங்கிய அந்தப் பெருமானை, 'ஏழைபங்காளன்' என்று அழைப்பதில் தவறு என்ன?

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சங்க இலக்கியம் சங்கையில்லாமல் முழங்குகிறது. ஆயினும் மனிதன் குறைமதியின் காரணமாகத் தனது துன்பங்களுக்கு இறைவனைக் காரணமாகக் காட்டுகிறான். மட்டுமின்றி, இறைவனின் இருப்பையே மறுக்கிறான். ஆயினும், அவரவர் வினைப்பயனையும் மீறி, அவர்களது பக்தியின் உயர்வு கருதி, இறைவன் அவர்களது துன்பத்தைத் தான் ஏற்கிறான்.

பக்தி என்பதற்கு வெறும் இறைவன்பால் வைத்த பற்று என்று மட்டும் கொள்வது சரியல்ல. எல்லா உயிரையும் தம்முயிர் போல் கருதிப் பொருளாலும் உடலாலும் மனதாலும் சேவை செய்தலும் கருணை காட்டுதலும் இறைவனிடம் காட்டும் பக்தியே. உடல் மற்றும் மனத்தூய்மைகளுக்கான நல்லொழுக்கத்தில் நிற்றலும் பக்தியின் ஒரு முக்கியக் கூறே. கள், களவு, பிறர்மனை விரும்புதல், பொறாமை, பேராசை, ஆணவம் ஆகியவற்றைத் தவிர்த்து வாழ்தலும் பக்தியின் இன்றியமையாக் கூறுகளே.

நந்தனாருக்காக நந்தியை விலகச் செய்த ஏழைபங்காளனை இந்த மார்கழி நன்னாளில் துதித்துப் பாடுவோம், வாருங்கள்.

(அருஞ்சொற்பொருள்: ஏழில் - சப்தஸ்வரம்; கேழில் -> கேழ் + இல் - உவமையில்லாத; இயம்புதல் - ஒலித்தல்)

இன்னும் வரும்...

December 25, 2007

திருவெம்பாவை - 7

கொடுநெஞ்சம் கொண்ட அறிவிலியோ நீ!

திருச்சிற்றம்பலம்

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறா யின்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.


Soolam'தாயே! அமரர்களுக்கும் சிந்திப்பதற்கு அரிய தனித்தன்மை கொண்டவன், பெரும்புகழ் கொண்டவனான சிவனுடைய திருச்சின்னங்களைக் கேட்டாலே 'சிவசிவா' என்று புலம்புவாய். அவனைத் தென்னவன் என்று கூறினால் போதும் நீ தீயில் விழுந்த மெழுகுபோல உருகிவிடுவாய்.

'இன்றைக்கு நாங்கள் சேர்ந்தும் தனித்தனியாகவும் 'என்னவனே', 'என் அரசனே', 'இனிய அமுதம் போன்றவனே' என்று கொஞ்சநஞ்சமா சொல்லியிருக்கிறோம்! இவ்வளவையும் கேட்டுக்கொண்டு, கொடுநெஞ்சம் கொண்ட அறிவிலி போல சும்மா கிடக்கிறாயே. உன் துயிலின் இயல்புதான் என்ன!'

Lord Siva 1சிறப்புப் பொருள்: சிவனைப் பற்றிக்கூடக் கூறுவது வேண்டாம், அவனது திருச்சின்னங்களாக சூலம், வெண்ணீறு, மான், மழு, பிறை, புலித்தோல் என்று இவற்றில் ஏதாவது ஒன்றன் பெயர் உன் காதில் விழுந்தால் போதும் நீ 'சிவசிவ' என்று ஜபிக்கத் தொடங்கிவிடுவாய். அதிலும் 'தென்னா' என்றால் தீயிலிட்ட மெழுகாகவே உருகுவாயே என்பது வீட்டுக்குள்ளிருக்கும் பெண்ணின் பக்திச் சிறப்பைக் காட்டுவது.

Soolamஆனாலும் பலரும் பலவாறு சேர்ந்தும் தனித்தும் பாடிய துதிகளைக் கேட்டும் யாரொருவர் சற்றும் இளகாது, மனதில் பக்திப் பரவசம் தோன்றாது, கேட்டும் கேளாதவர் போல் இருக்கிறாரோ, அவர் நெஞ்சம் கல் போன்றது மட்டுமல்ல, அவர்களை அறிவிலி என்று கூறினாலும் தகும் என்பது குறிப்பு.

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே


என்றல்லவோ திருமூலர் கூறுகிறார்.

(அருஞ்சொற்பொருள்: உன்னல் - நினைத்தல்; இருஞ்சீரான் - பெரும்புகழ் கொண்டவன்; அரையன் - அரசன்; வாளா - எதுவும் செய்யாமல்)

இன்னும் வரும்...

திருவெம்பாவை - 6

திருச்சிற்றம்பலம்

நான் வந்து எழுப்புகிறேன் என்றவளே, எங்கே போனாய்?

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்


'பெண்மானே! நேற்றைக்கு நீ என்ன சொன்னாய்? உங்களை நான் முதலில் வந்து எழுப்புவேன் என்று சொன்னாய் அல்லவா? இப்போது நீ போன இடம் தெரியவில்லையே. உனக்கு வெட்கமாக இல்லையா!

தேவருலகமும் மண்ணுலகமும் பிற உலகங்களில் உள்ளோரும் அறிவதற்கு அரியவன் சிவபெருமான். அவன் தானே வந்து நம்மைக் காத்து அருள்கின்றான். அவனது பாதத்தை வானுலகம் கழலாகச் சூழ்ந்துள்ளது. அப்பேர்ப்பட்ட பாதங்களைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கும் நீ பதில் பேசமாட்டேன் என்கிறாயே. நாங்கள் பாடுவதைக் கேட்டு உனக்கு உடலெல்லாம் உருகிப் போகவில்லையோ?

நமக்கும் பிறருக்கும் தலைவனான சிவனைப் பாட வாராயோ!'

சிறப்புக் குறிப்பு: 'நென்னலே' என்ற சொல் நேற்று என்று பொருள்படும். திருக்குறளில் இச்சொல் 'நெருநல்' என்று பயின்று வருகிறது: 'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு' என்று நிலையாமையைச் சொல்கிறது அந்தக் குறள். 'நென்னே' என்று கன்னடத்திலும் 'இன்னலே' என்று மலையாளத்திலும் இச்சொல் காணப்படுகிறது.

வந்த தோழிமார் 'ஊனே உருகாய்' என்கின்றனர். பக்தியினால் உடலும் உள்ளமும் உருகிப் போகும். 'ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்த செல்வமே, சிவபெருமானே' என்று திருவாசகத்தின் (பிடித்த பத்து) வேறோர் இடத்தில் மாணிக்கவாசகர் கூறுகிறார். உணவும் உறக்கமுமே கதியாக இருப்பவர்களுக்கு உள்ளொளி வருதல் அரிது. அதனால் பாவை நோன்புக் காலத்தில் கொழுப்புச் சத்து மிகுந்த 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம்' என்கிறாள் கோதை நாச்சியார். வள்ளலாரும் 'பசித்திரு, தனித்திரு, விழித்திரு' என்று கூறினார்.

தவசியரின் இயல்பு பற்றிக் கூறவந்த குமர குருபரர்:

துயிற்சுவையும் தூநல்லார் தோள்சுவையும் எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவ என்றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பவர் கொள்பபோல் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பினவர்.

....(நீதிநெறி விளக்கம்-85)

(உறங்கும் சுகமும், மகளிர் கலவிச் சுகமும் உணவைச் சுவைத்து உண்பதால் வருபவை. இதை உணர்ந்ததனால், பிற மனிதரைப் போல வாழ்க்கையில் இடிபட விரும்பாத வீரமுடைய தவசியர் பைத்தியக்காரர்களைப் போல (உணவில் கவனம் செலுத்தாமல்) உணவு உண்ணுவர்.)

இன்னும் வரும்...

December 22, 2007

திருவெம்பாவை - 5

திருச்சிற்றம்பலம்

Udayam

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்


'பாலும் தேனும் ஒழுகப் பேசுகிற புளுகுணிப் பெண்ணே! திருமாலும் பிரம்மனும் அவனை முழுதாகக் காணமுடியவில்லை. அப்பேர்ப்பட்ட ஜோதி மலையாக நின்றவனை நீ அறிந்துகொண்டதாகப் பொய்சொல்கிறாயே. அவனை பூவுலகத்தவரும் வானவரும் மற்றையவரும் கூட முழுதாக அறிய இயலவில்லை.

அவனுடைய எழிலையும் நமது பாவங்களைக் களைந்து ஆட்கொள்ளும் சீலத்தையும் புகழ்ந்து பாடி நாங்கள் 'சிவனே, சிவனே' என்று கூவுகிறோம். அப்படியும் உனக்கு விழிப்பு வரவில்லையே, மணமிக்க கூந்தலையுடையவளே! இதுவா உன் தன்மை?'

சிறப்புக் குறிப்பு: 'மாலறியா நான்முகனும் காணா மலை' என்பது அண்ணாமலை. இவ்வடி திருவண்ணாமலையின் தலபுராணத்தைக் குறிப்பிடுகிறது. அதைக் கீழே தந்துள்ளேன். மாணிக்க வாசகர் திருவெம்பாவையைத் திருவண்ணாமலையில்தான் அருளினார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

திருவண்ணாமலைத் தலவரலாறு

ஒரு சமயம் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்தது. சண்டை வலுத்தது. பிரபஞ்சம் ஸ்தம்பித்து நின்றது. தேவர்களுக்குக் கவலையாகிவிட்டது. ஓடிச் சென்று சிவபெருமானிடம் இந்தச் சண்டையைத் தீர்த்து வையுங்கள் என்று முறையிட்டனர்.

Arunachalam

சிவன் தன்னை ஓர் அக்கினித் தூணாக நிறுத்திக்கொண்டார். அதிலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டது. "எனது உச்சியையும், பாதத்தையும் யார் கண்டுபிடிக்கிறாரோ அவரே பெரியவர்" என்றது அக்குரல். விஷ்ணு ஒரு காட்டுப் பன்றியின் வடிவம் எடுத்துத் தரையைக் குடைந்து கீழே பாதத்தைத் தேடிச் சென்றார். பிரம்மாவோ ஓர் அன்னத்தின் வடிவம் எடுத்து உச்சியைக் காணப் பறந்து சென்றார். வெகுதூரம் மேலே சென்ற பின்னும் உச்சி தெரியவில்லை. ஒரு தாழம்பூ கீழே விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்தப் பூ சிவனின் தலையிலிருந்து விழுந்திருக்க வேண்டும் என்று ஊகித்த பிரம்மா அதைக் கையில் கொண்டுபோனால் தான் உச்சியை எட்டியதற்குச் சான்றாகிவிடும் என்று எண்ணினார். விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வந்து சிவனைப் போற்றித் துதித்தார். ஆனால் பிரம்மாவின் பொய் அம்பலமாகி, வெட்கப்பட்டு நின்றார்.

அந்த நெருப்புத் தூண் கண் கூசுமளவிற்கு ஒளிமிகுந்ததாக இருந்தது. யாருமே பார்க்க முடியவில்லை. எனவே சிவபெருமான் தன்னை அருணாசல மலையாக மாற்றிக்கொண்டு அங்கே நின்றார். 'எவ்வாறு நிலவு சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகிறதோ அவ்வாறே எல்லா ஆன்மிகத் தலங்களும் இங்கிருந்தே தமது புனிதத் தன்மையைப் பெறும்' என்று வாய்மலர்ந்தருளினார். ஓம் என்னும் பிரணவம் அருணாசலமே.

ஒளித்தூணாக இறைவன் நின்றதைப் போற்றுமுகமாகவே ஒவ்வோராண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று வரும் திருக்கார்த்திகைத் திருநாளில் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 'நான்தான் இந்த உடல் என்ற தேகாத்ம பாவத்தை ஒழித்து, மனத்தை ஹிருதயத்தில் நிறுத்தி தன்னையே இரண்டற்ற பொருளாகவும், எல்லாவற்றின் ஒளியாகவும் காணுவதே, பிரபஞ்சத்தின் மையமாகிய அண்ணாமலையார் தீப தரிசனமாகும்' என்று ரமணர் இவ்விழாவின் சிறப்பை விளக்குகிறார்.

வைஷ்ணவர்கள் அண்ணாமலையைத் திருமாலின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் என்று கருதுகிறார்கள். அருணாசலேசுவரர் கோவிலில் அண்ணாமலையார் சன்னதியின் பின்புறத்தில் வேணுகோபாலசுவாமி இருக்கிறார். இந்தக் கோவில் வேணுகோபாலசுவாமி கோவிலாகவே அரசின் ஆவணங்களில் பதியப்பட்டிருக்கிறது என்பது பி.வி. நரசிம்ம சுவாமி அவர்கள் சொல்லும் வியப்பான செய்தி.

-நான் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ரமண சரிதம் நூலிலிருந்து

[அருஞ்சொற்பொருள்: பொக்கம் - பொய்; படிறீ - பொய் கூறுபவள்; கோதாட்டும் - பாவங்களை நீக்கும்; ஏலக்குழல் - நறுமணமூட்டப்பட்ட கூந்தல்]

இன்னும் வரும்...

திருவெம்பாவை - 4

திருச்சிற்றம்பலம்

தூங்கி வீணாகக் காலத்தைக் கழிக்காதே!

Shakuntala-ravivarma-edited

ராஜா ரவிவர்மாவின் 'சகுந்தலை' ஓவியத்தின் ஒரு பகுதி


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்(து)
எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்


கீழ்க்கண்ட உரையாடல் மற்றொரு வீட்டு வாசலில் நடக்கிறது. அந்த வீட்டுப் பெண்ணும் எழுந்து வெளியே வரவில்லை. வந்த குழுவினரில் ஓர் இளம்பெண் கேட்கிறாள்:

'ஒளிவீசும் முத்தைப் போலப் புன்னகை செய்பவளே! உனக்கு மட்டும் இன்னும் விடியவில்லையா?'

அதற்கு அவள் பதில் கூறுகிறாள், 'அழகான கிளியைப் போலப் பேசும் நமது தோழிமார் எல்லாரும் வந்துவிட்டார்களா என்ன!' ஏதோ நான்மட்டும்தான் எழுந்து வராததைப் போலப் பேசுகிறீர்களே என்பது உட்குறிப்பு. அதுமட்டுமல்ல, மற்றவர்கள் வரட்டும், அப்புறமாக நான் வருகிறேன், அதுவரையில் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேன் என்றும் உணர்த்துகிறாள். 'Buying time' என்பது இதுதான்

'நாங்கள் வந்திருப்பவர்களின் தலையை எண்ணி அதற்குப்பின் உன் கேள்விக்குப் பதில் சொல்கிறோம். அதுவரையில் தூங்கித் தூங்கி வீணாகக் காலத்தைப் போக்காதே.

இப்போது உடனடியாக நாங்கள் எண்ணிச் சொல்ல மாட்டோ ம். ஏன் தெரியுமா? வானத்தின் அமுதம் போன்றவனை, வேதங்கள் எல்லாம் கூறும் உயர்ந்த உட்பொருள் ஆனவனை, காண்பதற்கு மிக இனியவனை (நம் சிவபெருமானை) நாங்களெல்லாம் பாடிப்பாடி உள்ளம் கசிந்து உருகிக் கொண்டிருக்கிறோம்.

வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப் பார். எண்ணிக்கை குறைவாக இருந்தால் நீ எங்களோடு சேர வேண்டாம். மறுபடியும் போய்ப் படுத்துத் தூங்கிக்கொள்' என்கின்றனர்.

சிறப்புக் குறிப்பு: தெய்வ காரியம் செய்வதை ஒத்திப்போடச் சாக்குத் தேடக்கூடாது. இந்தப் பெண் 'மற்ற எல்லோரும் வந்துவிட்டாரோ' என்று கேட்பது தனது தூக்கத்தைத் தொடர்வதற்குத்தானே. அதுமட்டுமல்ல, பக்தியோடு தொடர்புடையதான பூஜை, விரதம், தவம், யோகம் ஆகிய சாதனைகளுக்கு இடையூறாக வருபவற்றில் மிக முக்கியமானது உறக்கம். அதனால்தான் சேஷாத்ரி சுவாமிகள் எல்லோரிடமும் 'தூங்காதே, எமன் வந்து தூக்கிக்கொண்டு போய்விடுவான்' என்று கூறுவார். ஏன், உலகியல் வாழ்விலும் அதிகத் தூக்கம் நமது சாதனைக்கு இடையூறுதானே.

நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
-(திருக்குறள் 605)


என்று வள்ளுவப் பெருந்தகை நமக்கு எச்சரிக்கை தந்திருக்கிறாரே. 'ஒரு முக்கியமான செயலைச் செய்யத் தொடங்காமல் காலந்தாழ்த்துதல் (அல்லது அதைத் தொடங்கி நெடுங்காலத்துக்கு நீட்டித்துச் செய்தல்), தேவையானதைச் செய்ய மறந்து போதல், செய்யச் சோம்பல் படுதல், செய்யாமல் தூங்கிப் போய்விடுதல் ஆகிய நான்கு குணங்களும் வாழ்க்கையில் சீரழிந்து போவார் விரும்பி ஏறுகின்ற மரக்கப்பல் ஆகும்' என்று தெளிவாகக் கூறி வைத்திருக்கிறார் வள்ளுவர். அப்படியிருக்க நோன்புக் காலத்தில் தூக்கத்தைத் தொடரவும், சற்றே தாமதமாக வந்து தோழியர் குழாத்தில் சேரவும் சாக்குப் போக்குகளைத் தேடுவது எப்படி நியாயமாகும்!

[அருஞ்சொற்பொருள்: ஒண்ணித்திலம் -> ஒள் + நித்திலம் - ஒளிவீசும் முத்து; புலர்ந்தின்றோ - விடியவில்லையா; விழுப்பொருள் - உயர்ந்த பொருள்; நெக்கு - நெகிழ்ந்து, உருகி; கெடுநீரார் - கெட்டுப்போகும் தன்மை உடையவர்]

இன்னும் வரும்...

December 20, 2007

திருவெம்பாவை - 3

திருச்சிற்றம்பலம்

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதனென்(று) அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.

LordShiva2-Profileஅடுத்து ஓர் இல்லத்தின் கதவு மூடியிருக்கிறது. அவள் வழக்கமாக வருகிறவள். மகளிர் குழுவுக்கு இதைப் பார்த்ததும் அவளும் உறங்குகிறாளோ என்று ஐயம். அவர்கள் கூறுகின்றனர், 'முத்துப் போன்று வெளுத்த சிரிப்பை உடையவளே! எப்போது நாங்கள் வருவதற்கு முன்னரே கதவைத் திறந்துகொண்டு வந்து எங்கள் முன் நின்றபடி 'சிவன் என் அப்பன், ஆனந்தன், அமுதன்' என்று தித்திக்கத் தித்திக்க வாயில் எச்சிலூறும்படிப் பேசுவாயே. இன்றைக்கு என்ன ஆயிற்று? வா! வந்து கதவைத் திற' என்றனர்.

'சிவன்மீது பற்றுக்கொண்ட நீங்களெல்லாம் மிகவும் பழைய அன்பர்கள். உங்களுக்கு எல்லா நியமங்களும் நன்றாகத் தெரியும். நான் அப்படியா! அன்பர் குழாத்துக்குப் புதியவள். என்னுடைய குறைவுகளை மன்னித்து உங்களில் ஏற்றுக்கொண்டால் ஏதேனும் குற்றமாகிவிடுமா என்ன?' என்று கொஞ்சம் நக்கலாகவே சொல்கிறாள்.

'அடடடடே! அப்படியெல்லாம் சொல்லிக் கொள்ளாதே. சிவன்மீது நீ கொண்ட பக்தி எங்கள் எல்லோருக்கும் தெரியாதா என்ன?'

இவளுடைய நையாண்டி தொடர்கிறது. 'மனது மிக அழகாக இருப்பவர்கள் நமது சிவனைப் பாடமாட்டார்களோ!' என்று பழிக்கிறாள்.

'உன்னைப் போய்க் கூப்பிட்டோ மே, எங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' என்று போலியாக அலுத்துக் கொள்கிறார்கள் தோழிகள்.

சிறப்புக் குறிப்பு: 'முத்தன்ன வெண்ணகை' என்பது மிக அழகான தொடர். முத்தின் வெண்மை தூய வெண்மையல்ல. அதில் சற்றே மஞ்சள் இருக்கும். மனிதரின் பல்லும் அப்படியே. வெளிநாடுகளில் வெண்சாயம் அடித்துக் கொள்பவர் பற்கள் மட்டுமே பளிச்சிடும் வெள்ளையாக இருக்கும்.

'சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை' என்கிறாள் அழைக்கப்படும் பெண். அதில் எவ்வளவு நையாண்டி இருக்கிறதோ அவ்வளவே உண்மையும் உள்ளது. 'நீங்களெல்லாம் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் என்னைப் பழித்துப் பேசுகிறீர்கள். உங்கள் தோற்றத்தைப் போலவே மனமும் அழகாக இருந்தால் எவ்வளவு நல்லது!' என்று அவள் கூறுவதைப் போல இருக்கிறது.

இறைவன் புறத்தோற்றத்தின் அழகுக்கு மயங்குகிறவன் அல்ல. அன்பு, கருணை, பக்தி, மனநிறைவு இவையே உள்ளத்துக்கு அழகு தருபவை. கர்வம், கோபம், காமம், பேராசை, பொறாமை, பொய்ம்மை, வெறுப்பு ஆகியவை மனதில் நிறைந்திருக்குமேயானால் அவர்களது பக்தி முழுமையான பலனைத் தருவதில்லை.

ஆனால் தனது தோழிகளுக்குக் கூறுவது போல அவள் இறைவனின் ஒரு கருணைச் செயலையும் நினைவு கூறுகிறாள். தீமையிலேயே உழல்கிறவர்கள் மீது அவனது அருட்பார்வை விழுந்துவிட்டால் அவர்களைப் 'புன்மை தீர்த்து' ஆட்கொள்கிறான்! பணமே குறியாக இருந்த பட்டினத்தாருக்கும், காமத்தில் புழுத்துப் போன அருணகிரிக்கும் இறைவன் அருளவில்லையோ. இறைவனே அப்படிச் செய்யும் போது சீனியர் பக்தைகளாகிய நீங்கள், ஜூனியரான எனது 'புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ' என்கிறாள்.

ஆனால், அது எல்லோருக்கும் நடப்பதில்லை. நாம் சித்தத்தை வாய்மையாலும் பக்தியாலும் கருணையாலும் பற்றின்மையாலும் அழகுசெய்துகொண்டு சிவனைத் துதிப்போமேயானால் நிச்சயம் அவன் நமக்கு அருள் செய்வான் என்பதில் ஐயமில்லை.

[அருஞ்சொற்பொருள்: அத்தன் - தந்தை; அள்ளூறி - வாயில் எச்சிலூறி; பத்துடையீர் - ஈசன்பால் பற்றுடையீர்]

இன்னும் வரும்...

December 19, 2007

திருவெம்பாவை - 2

திருச்சிற்றம்பலம்

படுக்கையின்மீது நேசம் வைத்தாயோ?

Natarajar small

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.


மற்றொரு வீட்டுக்கு வந்தனர் இளம்பெண் குழுவினர். அங்கேயும் அதே கதைதான். மார்கழி மாதத்துக் குளிரில் போர்த்திப் படுத்துத் தூங்கச் சுகமாக இருக்கிறது.

அழைக்க வந்தவர் கூறுகின்றனர்: 'செம்மையான நகைகளை அணிந்தவளே! ராப்பகலாக நாம் பேசிக்கொண்டிருப்போமே, அப்போதெல்லாம் 'பரஞ்சோதியான ஈசனின் மீதுதான் நான் அன்பு வைத்திருக்கிறேன்' என்று கூறினாய். அந்த அன்பை எப்போதிலிருந்து நீ மலர்மஞ்சத்தின்மீது வைத்தாய்?

உடனே துள்ளி எழுந்து வந்தாள் தூங்கியவள். 'சீசீ! இதென்ன வார்த்தை! விளையாடவும் என் மீது பழி கூறவும் இதுவா இடம்? நாம் யார்? வானவர்களும் வந்து புகழ்பாட இயலாத அளவுக்கு ஒளிவீசுகின்ற மலர்ப்பாதத்தைக் கொண்டவன், நமக்கு அப்பாதத்தைத் தந்தருளுவதற்காக தேசமெங்கும் நிறைந்தவன், ஆனால் சிவலோகத்தை இருப்பிடமாகக் கொண்டவன், சிதம்பரத்தில் இருக்கும் சிற்றம்பலத்தவனான ஈசனின் அன்பர்கள் அல்லவோ!' என்று கூறியபடி வந்து இவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.

சிறப்புக் குறிப்பு: விராட்புருஷனான இறைவனின் வடிவத்தில் அவனது இருதயத் தலமாகக் குறிக்கப்படுவது சிதம்பரம். இங்கே ஒரு காலத்தில் தில்லை மரங்கள் நிரம்பியிருந்ததால் இதற்குத் தில்லை என்று பெயர் வந்தது. இம்மரங்கள் தற்போது பிச்சாவரம் உப்பங்கழிக் காடுகளில் காணப்படுகின்றன. பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாயத் தலம். ஒரு பாதத்தை முயலகன் மீது பதித்து மறுபாதத்தைத் தூக்கியாடும் கூத்தபிரான் நடனக் கலைஞர்களின் இஷ்டதெய்வம். நந்தனாருக்கு நந்தி விலகி தரிசனம் கொடுத்த தலம் இது. இங்கே இருப்பது கனகசபை, பொற்சபை, சிற்சபை என்று அழைக்கப்படும். சிதம்பரம் என்பது ஞானாகாசம் அல்லது மெய்யறிவு வெளி. அம்மெய்ஞ்ஞான வெளியிலிருந்துதான் திருமறைகள் கிளம்புகின்றனவாம்.

சிதம்பரத்தின் பெருமையைப் பேசவந்த நாவுக்கரசர் 'குறைவிலாத அன்ன தானம் நிகழும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னுலகத்தையும் தரும். இந்தப் புவி வாழ்வை விரும்பியே என் அன்பு சுழல்வதைக் கண்டு, நான் இன்பம் பெறும்படியாக இப்பிறவியிலேயே மேலும் பலவற்றைத் தருமோ!' என்று கூறி வியக்கிறார்.

அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே

(நாவுக்கரசர் தேவாரம்)

அப்பேர்ப்பட்ட பெருமையுடைய தலத்திலுள்ள 'கூத்தரசனின் அன்பர்களில் நானும் ஒருத்தி' என்று மிடுக்கோடு எழுந்து வருகிறாள் உறக்கம் கலைந்த பெண்.

இன்னும் வரும்...

திருவெம்பாவை - 1

திருச்சிற்றம்பலம்

ஆதியந்தம் இல்லா அருட்பெரும் சோதி

Photo Sharing and Video Hosting at Photobucketசிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாது பெரும் சோதி வடிவில் ஓங்கி நின்ற திருவண்ணாமலை அக்னித் தலமாகும். அதனால்தான் இதன் அறிமுகத்திலேயே அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் பின்னணியில் அண்ணாமலை தெரியும்படியான புகைப்படத்தை இட்டிருந்தேன். இங்கேதான் மாணிக்கவாசகர் திருவெம்பாவையைப் பாடினார். திருவெம்பாவையின் மற்றொரு சிறப்பு தன்னை ஒரு பெண்ணாக பாவித்து மணிவாசகர் பாடியது. ஏன், திருப்பாவையைப் பாடியதே பெரியாழ்வார்தான் என்ற ஒரு கருத்தும் உண்டே.

இங்கே நாம் நனிசொட்டும் பக்திச் சுவையை மட்டும் எடுத்துக்கொண்டு மேலே செல்வோம். முதலில் பாசுரம்:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.


பாவை நோன்பு நோற்கும் இளம்பெண்கள் கூட்டமொன்று சிவபெருமானின் பெருமையைப் பாடியபடி செல்கிறது. அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு தோழியில் வீட்டு வாசலில் அவளை எழுப்பும்பொருட்டுப் பாடுகின்றார்கள். அவள் எழுந்திருக்கவில்லை. "ஒளிபொருந்திய பெரிய கண்களை உடைய பெண்ணே, உனக்கென்ன இரும்புக் காதா? நாங்கள்
எல்லோரும் அடிமுடி அறியாத பெருஞ்சோதியான சிவனைப் பாடுகிறோம். அதைக் கேட்டபின்னும் தூங்குவாயோ! தெருவிலே நாங்கள் மகாதேவனின் திருவடிகளை வாழ்த்தும் ஒலியைக் கேட்டதுமே, நெஞ்சு விம்மி, மெய்ம்மறந்து, மலர்கள் தூவப்பெற்ற
மஞ்சத்தில் புரண்டு புரண்டு நிலையற்றுப் போய்விடுவாயே. இன்றைக்கு ஏன் இப்படித் தூக்கம்? இதுவா உனது தன்மை!'' என்று அவர்கள் வியந்தும் பழித்தும் கூறுகிறார்கள்.

சிறப்புப் பொருள்: அண்ணாமலைப் புராணத்தில் வருகின்றது சிவபெருமான் அடிமுடி காணாத நெருப்பு லிங்கமாக நின்ற கதை. அதை வேறோரிடத்தில் காண்போம். அதுமட்டுமல்ல, இறைவன் தோற்றமும் அழிவும் இல்லாதவன்; ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் கட்டைவிரல் அளவே ஆன சோதி வடிவில் இருப்பவன். 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி' என்பது இதையும் குறிக்கும். இந்தச் சோதியைத் திருமூலர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி யீசனைச் சொல்லும் எப்போதும்
உளங்கொளி யூனிடை நின்றுயிர்க்கின்ற
வளங்கொளி எங்கும் மருவி நின்றானே

(திருமந்திரம் 2687)

[அருஞ்சொற்பொருள்: வாள் - ஒளி (பொருந்திய); தடம் - பெரிய; வளருதல் - கண்வளர்தல், உறங்குதல்; போதார் -> போது + ஆர் - மலர்தூவப்பட்ட; அமளி - மஞ்சம்; இங்ஙன் - இவ்வாறு; பரிசு - தன்மை]

December 18, 2007

மாணிக்கவாசகர் - 3

Photo Sharing and Video Hosting at Photobucketஅரிமர்த்தன பாண்டியன் மீண்டும் அமைச்சராகத் தன்னிடம் இருக்கக் கோரியும் அதனை விரும்பாத திருவாதவூரார் சிவத்தலங்களைத் தரிசித்தவாறு திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கும் சிவபிரான் அவர்முன்னர் ஒரு வேதியர் போல வந்தார்.

அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.

'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.

'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர், வாதவூரார் சொல்லச் சொல்லச் செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
Photo Sharing and Video Hosting at Photobucket முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லைவாழ் அந்தணர் ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையாரும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனமகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத் துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு. மேற்கொண்டு திருவெம்பாவைப் பாடல்களைப் பார்க்கலாம்...

(மாணிக்க வாசகர் சரித்திரம் முற்றும். தகவல் உதவி: அபிதான சிந்தாமணி)

மதுரபாரதி

மாணிக்கவாசகர் - 2

Photo Sharing and Video Hosting at Photobucket அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, முன்னரே அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். (நம்ம ஊர் ஒண்ணாங்கிளாஸ் டீச்சர் குடுக்கற தண்டனை மாதிரி இருக்குதே :-)) அந்தக் காலத்தில் மந்திரிகளைக்கூடத் தண்டிக்கமுடிந்தது என்பதைக் கேட்கவும் நன்றாக இருக்கிறது!

சரி, வாதவூராருக்கு அப்படித் தண்டனை கொடுத்ததும் ஒருவகையில் நல்லதாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் வைகையில் தண்ணீர் வருமா? (தமிழின் மிகப்பழைய நூலான பரிபாடல் வைகையாற்றில் ஏராளமாகத் தண்ணீர் ஓட, அதிலே ஆண்களும் பெண்களும் சிறாரும் குளித்து மகிழ்ந்த காட்சிகளை விலாவாரியாக விவரித்து வயிற்றெரிச் சலைக் கொட்டிக்கொள்கிறது.) சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். தாங்குமா? கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். ஒரே ஒரு வந்திக் கிழவி, பிட்டு சுட்டு விற்பவள், மட்டும் தனிக்கட்டை. அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது
என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் 'வேலையைத்' தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. அங்கே பார்த்தால் ஐயா கொன்றை மரத்தடியில் குறட்டை! ('அரசு அலுவலகத்தில் தூங்கிய முதல் ஆள் நீர்தான்' என்று ஞானக்கூத்தன் முரசு கட்டிலில் தூங்கிய மோசிகீரனாரைப் பற்றிப் பாடுவார். அது நினைவுக்கு வருகிறது.)

கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்துபோனான். ஆனால் அவன்மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து
உயிர்களின்மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்தவண்ணம் இருந்தார்.

இன்னும் உண்டு...

மதுரபாரதி

மாணிக்கவாசகர் - 1

Photo Sharing and Video Hosting at Photobucket பாண்டிய நாட்டில் அமாத்திய குலத்தில் அந்தணப் பெருந்தகையான சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார் திருவாதவூரார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

ஒருமுறை மன்னன் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் வாதவூராரிடம் கோடிப் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான்.

வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் 'சிவஞானபோதம்' என்றார்.Photo Sharing and Video Hosting at Photobucket
'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நானுமது அடிமையாவேன்' என்றார் வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரிக் கோலத்தை அகற்றி, கோவணம் பூண்டு, வாய்பொத்தி குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்து கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி வாதவூரார் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. அவை இங்கே இருக்கின்றன. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து
சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெய்யிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் வாதவூராரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். மதுரை வெய்யில் அப்போதும்
கொடுமைதான் போலிருக்கிறது! அதற்கும் வாதவூரார் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். வாதவூரார் சிவனை தியானித்தார்.

உடனே சிவபெருமான் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

இன்னும் உண்டு...

மதுரபாரதி

December 17, 2007

திருவெம்பாவை: ஓர் அறிமுகம்

மார்கழி மாதம் வந்துவிட்டது. ஊரெங்கும் திருப்பாவையும் திருவெம்பாவையும் அதிகாலையில் ஒலிக்கும். திருப்பள்ளியெழுச்சியும்தான். மதுரமொழியில் திருவெம்பாவைப் பாடல்களின் பொருளை இடலாம் என்று நண்பர் ஒருவர் கூறினார். இதோ இந்த அறிமுகத்துடன் அதைத் தொடங்குவோம்.
Photo Sharing and Video Hosting at Photobucket திருவெம்பாவை பாவைப்பாடல் வகையைச் சேர்ந்தது. இது அம்பாளைக் குறித்து நோன்பு நோற்பது. ஆயினும் காலக்கிரமத்தில் தமது விருப்ப தெய்வத்தைக் குறித்துப் பாடுவதாக ஆயிற்று. திருவெம்பாவை சிவபெருமானைக் குறித்தும் திருப்பாவை திருமாலைக் குறித்தும் பாடுகின்றன. 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்ற பெருமையைப் பெற்ற திருவாசகத்தின் 7வது பகுதியாகத் திருவெம்பாவை அமைந்துள்ளது. இருபது பாடல்களைக் கொண்டது.

வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்ற வள்ளலாரின் வார்த்தைகள் போதுமே திருவாசகத்தின் அழகையும் பக்திச் சுவையையும் தெளிவுபடுத்த! மார்கழி நோன்பு என்று அறியப்படும் இந்நோன்பு தைந்நோன்பு என்று சங்க நூல்களில் அறியப்பட்டிருந்தது. அதற்கான பின்புலம் மற்றும் வரலாற்றை அறியக் கீழ்க்கண்ட சுட்டிகளில் பாருங்கள்:

http://www.tamilonline.com/thendral/Content.aspx?id=74&cid=8
http://groups.google.com/group/muththamiz/msg/80a069fba925edf6

பாவை நோன்பு தனது விருப்ப தெய்வத்தின் அருளைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல் மணமாகாத கன்னியர் தமது விருப்பத்துக்கு உகந்த கணவனைப் பெற வேண்டி, இறைவனைத் துதித்து, விரதங்கள் இருக்கும் நோன்பாகவும் இருந்தது. மார்கழி மாதத்தின் குளிரில் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் துதித்துப் பாடி, உணவு உடை அலங்காரங்களை மிக எளிமையாகச் செய்வது இந் நோன்பின் அங்கங்களாக இருந்தன என்பது பாவைப்பாடல்களின் வழியே தெரிய வருகின்றது.

திருவெம்பாவைப் பாடல்களின் பொருளுக்குள் நுழைவதற்கு முன்னால், 'சித்தம்' மடற்குழுவில் நான் எழுதிய மாணிக்கவாசகர் சரித்திரத்தையும் இங்கே இட்டுவிடுகிறேன்.

மதுரபாரதி
Arunachaleswarar Temple Photo credit: Siva Seshappan