September 08, 2004

ஆணழகனின் அலங்காரம்

ஆண்களின் அலங்காரம் எப்படி இருந்தது ஓர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்? இதைப் படியுங்கள்:

தனது சுருள்சுருளான தலைமுடியில் எண்ணெய் தடவிவிட்டு, அதை வாசனைக் கொட்டைகள் போட்டு அரைத்த நறுமண மயிர்ச்சாந்தினால் (ஷாம்பூ!) நன்றாகக் கழுவினான். விரலை முடிக்குள்ளே விட்டு, சிக்கு அவிழ்த்து, ஈரம் காயும்படிக் கோதியபடி, அதிலே அகில்புகை காட்டினான்.

மலையிலும், நிலத்திலும், மரக்கிளையிலும், சுனையிலும் வளரும் தேன்சுமந்த வண்ணவண்ணமான பூக்களை ஆய்ந்து, கலந்து தொடுத்த மாலையோடு, வெண்மையான பனங்குருத்தைத் தொடுத்த கண்ணியையும் தன்னுடைய தலையின் உச்சியில் அச்சம் தரும்படி அணிந்துகொண்டிருக்கிறான். இந்தப் பூமாலைகளைச் சுற்றி வண்டுகள் பறக்கும் ஓசை யாழிசைப்பது போல இருக்கிறது.

அதற்குமேல் ஒரு சுற்று மல்லிகையும், அரளியும் சேர்த்துக்கட்டிய சரத்தைச் சுற்றியிருக்கிறான். ஒரு காதிலே பார்த்தால் சிவந்த தீக் கொழுந்துபோல அழகான ஒரு மலர்க்கொத்து. பருத்த தோளின்மீது ஒரு பசுந்தளிர்க் கொத்து காற்றில் அசைகிறது. விரிந்து, புடைத்த வலுவான மார்பின்மீது நகைகளுக்கு நடுவில் வாசனைபொருந்திய சந்தனமாலையும் பொலிகிறது. அவனுடைய உருண்டு திரண்ட கையிலே அழகான வில் வைத்திருக்கிறான். தேர்ந்தெடுத்த அம்புகள் வைத்திருக்கிறான்.

நுண்மையான பூவேலை செய்த கச்சையை இடுப்பில் இறுக்கிக் கட்டியிருக்கிறான்.

----

மேற்கண்டவாறு வர்ணிக்கிறது அந்தக் காலத்து அழகான ஆண்மகனைக் குறிஞ்சிப்பாட்டு. இது பத்துப்பாட்டு வரிசையில் எட்டாவது. இதன் ஆசிரியர் கபிலர். குறிஞ்சித் திணைப் பாடல்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் மிகச்சிறந்ததாக இது கருதப்படுவதால் இதை 'பெருங்குறிஞ்சி' என்று அழைப்பார்கள். 261 அடிகளைக் கொண்ட இந்த நூலின் ஓரிடத்தில் தொண்ணூற்றொன்பது மலர்களின் பட்டியல் தரப்படுகிறது. அக்காலத்தில் என்னென்ன மலர்கள் இருந்தன என்று அறிய இது ஒரு நல்ல ஊற்றம்.

----

மேலே கண்ட விவரணையைத் தரும் பாடற்பகுதி இதோ: (கடினமாக இருந்தாலும் ஒருமுறையாவது படித்துப் பாருங்கள்)

எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்
தண் நறுந் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை 110

அணிமிகு வரி மிஞறு ஆர்ப்ப, தேம் கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங்குஞ்சியின்
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறுந்தொடையல் வெண்போழ்க் கண்ணி
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி
பைங்காற் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ, செந்தீ
ஒண் பூம் பிண்டு ஒரு காது செரீஇ
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி 120

மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்றுபடு நறுந்தார் பூணொடு பொலிய
செம்பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக்கையின்
வண்ண வரிவில் ஏந்தி, அம்பு தெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்குஅறக் கட்டி 125

இப்படி மேலே நடக்கிறது கதை. அவன் தன்னோடு ஒரு பயங்கரமான வேட்டை நாயை அழைத்து வருகிறான். அதைப் பார்த்து பயந்து போகின்றனர் கதாநாயகியும் தோழியரும். அப்போது அங்கே ஒரு காட்டு யானை வருகிறது.

இதற்குமேல் நான் சொல்லமாட்டேன். ஊகிக்க முடியாதவர்கள் குறிஞ்சிப்பாட்டைப் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அது சரி, இப்போது ஏன் பூ வைத்துக்கொள்வது பெண்கள்மட்டுமே என்றாகிவிட்டது? (தலைக்குக் குளித்து, சிக்கெடுத்துக் காயவைக்கும்போது சர்தார்ஜிகளைப் பார்க்கவேண்டும்; சிலசமயம் பின்னாலிருந்து பார்த்துப் பெண்தானோ என்று ஏமாந்தது உண்டு.

September 07, 2004

மரணத்தின் வாசலில்...

நாமெல்லோரும் வசதியாக, சவுகரியமாக, நல்ல வேலை மற்றும் வருமானத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில்கூடப் பொழுதுவிடிந்து பொழுதுபோனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும், நமது தொழிலிலும், நமது நாட்டின்மீதும் இன்ன பிறவற்றின் மீதும் எண்ணற்ற குறைகளைச் சொல்லியே காலத்தைக் கழிக்கிறோம். அலுத்துக் கொள்கிறோம். தேடிப் பிடித்த வசவுகளால் வைகிறோம். நம்மையும் நோகடித்துக்கொண்டு பிறரையும் நோகச் செய்கிறோம்.

ஒரு மரணதண்டனைக் கைதியின் மனநிலையும், வாழ்வும் எப்படி இருக்கும்? அதுவும் செய்யாத கொலைக்காகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தால்?

சி.ஏ. பாலன் என்ற பொதுவுடைமைக் கட்சித் தொண்டர் திருப்பூரில் நடந்த ஒரு கொலைக்காக 1950-ல் கைது செய்யப்பட்டார். அவர்தான் கொலையாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோயம்புத்தூர் சிறையில், தூக்குமரத்தின் அருகில் இருக்கும் மரணதண்டனைக் கைதிகளுக்கான death row-வில் சிறிய அறையில் அடைத்துவைக்கப் பட்டிருந்தார். அதைப் பற்றி அவர் எழுதுவது:

====
மேற்கோள்:::
====

பத்தடி நீளமும் எட்டடி அகலமும் கொண்ட ஓர் அறையில் இரவும் பகலும் அடைத்துப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். அதுவும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவனை.

அங்கே அவனால் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சூரியனைப் பார்க்க முடியும். இரவில் நிலவைப் பல வருடங்கள் நான் காணவே இல்லை. தேய்பிறையின்போது காலையிலும் வளர்பிறையின்போது மாலை நான்கு மணிக்கும் சூரிய வெளிச்சத்தின் பிரகாசத்தில் ஒளி மங்கிய சந்திரனை மட்டுமே என்னால் காணமுடிந்தது. வசந்த ருதுவின் பூரண நிலவைக் கம்பிகளுக்கிடையே நோக்கியவாறு நான் வெகுநேரம் நின்று கொண்டிருந்தது உண்டு.

காலையில், காலைக்கடன்களுக்காகக் காவலாள் பார்வையில் வெளியே விடப்படும்போது, கிருஷ்ணபட்சத்தின் ஆரம்பமானால், கோயமுத்தூரைத் தொட்டபடி மேற்குத் திசையில் இயற்கை அமைத்ததொரு உறுதியான கோட்டை போல உயர்ந்து நிற்கும் மேற்கு மலைத் தொடர்களின் உச்சியிலே மறையப் போகும் மனக்கலக்கத்துடன் வாடிய முகத்துடன் விளங்கும் வெண்மதியையும், தனது செங்கதிர்களைப் பரப்பிக்கொண்டு ஒரு புதிய காலகட்டத்தின் உதயம்போல் குணதிசையில் எழும்புகிற பாலசூரியனையும் பார்த்துக் கொண்டு நிற்பது எனது வழக்கம். 'கண்ணுள்ளபோது காட்சி தெரியாது' என்று சொல்வது போல இவைகளையெல்லாம் வேண்டுமளவு பார்க்கக் கொடுத்து வைத்தவர்களுக்கு இந்த உதயாஸ்தமனங்களில் அசாதாரணமாக ஒன்றும் தோன்றாது. எனக்கோ மனத்துக்குள் ஏதேதோ காவிய ரசனை.

வேண்டாம்; அங்கெல்லாம் ஒன்றும் போகவேண்டாம். உன்மத்தமோ சித்தப் பிரமையோ ஏற்பட்டுவிடும். இப்போது வாழவேண்டும்! ஆத்ம தைரியத்தோடும் ஆதர்ச நிஷ்டையோடும் வாழவேண்டும். மரணதண்டனை ரத்தாகி இனி ஒரு வாழ்க்கை கிட்டுமானால் ஆரோக்கியமுள்ளவனாக வாழவேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய வெண்டுமென்றால் இலட்சியம் எப்படியோ, அப்படி ஆரோகியமும் இன்றியமையாதது. ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவைகளே என்னுடைய கோஷங்களாக இருக்கட்டும். உள்ளுணர்ச்சியோ மற்றெதுவுமோ எனக்கு ஏற்பட்டதனால் அல்ல. என்னால் எடுக்கப்படவேண்டிய--நான் எடுத்துக்கொண்ட தீர்மானம் இது.

====
:::மேற்கோள் முடிவு
====

பத்துமாதமும் 27 நாட்களும் மரணதண்டனைக் கைதியாகச் சொல்லொணாத் துன்பங்களைத் தாங்கியபின், உச்சநீதிமன்றம் வரை மரணதண்டனையை ஊர்ஜிதம் செய்துவிட்டபின், இறுதியில் அப்போதைய தமிழக இராஜாஜி மந்திரிசபை மற்றும் மக்களின் இயக்கங்கள், பொதுவுடமைத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவரது மரணதண்டனையை ஜனாதிபதி ஆயுள்தண்டனையாகக் குறைத்தார்.

சி.ஏ. பாலன் தனது இந்த அனுபவத்தை மலையாளத்தில் எழுத, அதை தூக்குமரத்தின் நிழலில் என்று தலைப்பிட்டு ஹேமா ஆனந்ததீர்த்தன் மிக அருமையாக மொழிபெயர்த்து, குமுதத்தில் தொடராக வெளிவந்தது. வாழ்க்கையை மதிக்கும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது.

Are we counting our blessings?

September 06, 2004

பாரதிக்கு வெண்பா அஞ்சலி



பம்மாத்துப் பாவலர் பாகுத் தமிழதனைச்
சும்மாத் துருப்பிடிக்க விட்டக்கால் - செம்மாந்துவீரத்
திருக்குரலால் வெற்றிக் கவிசமைத்த
காரக் கவிமகனே காப்பு.

மீசை வளர்க்கலாம் மேற்பாகை கட்டலாம்
ஆசையினால் உன்பேர் அணிந்திடலாம் - ஓசைக்
குரலெடுத்துப் பாடிடலாம் கோமகனே நின்போல்
வருவதுண்டோ நாவினிலே வாக்கு!

பாஞ்சாலி சூளுரைத்த பாட்டைப் படிக்காத
நோஞ்சான் தமிழன் நொடியட்டும் - வாஞ்சையுடன்
மோகக் குயிலியவள் மூட்டும் வெறியிசையைத்
தாகத்தால் மாந்தல் தவம்.

இருமையிலா மேனிலையில் எல்லாமும் நானே
ஒருமையெனப் பாடியவா ஒற்றைக் - கருமுகிலை
நண்பனிளங் காதலியாம் சேவகனாம் தாயுமெனும்
பண்பினுக்கோ ரெல்லை பகர்.

வேழம் மிதித்தெல்லாம் வீழுகில்லாய் நீயென்று
ஆழக் குரல்வளைய ழுத்துகிறோம் - பாழும்
பிரிவுகளால் பேதமையால் உட்பகையால் பின்னே
சரியுமுனம் நின்கவியே சார்பு.