June 25, 2004

உ.வே.சா.வின் விளாங்காய்க் கதை

ஒரு ஆசாமி நிறையச் சம்பாதித்தான். நன்றாகத் தனக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தான். எல்லாம் இருந்தும் அவனுக்கு இல்லாதது ஒன்றே ஒன்றுதான்: தருமகுணம். கடற்கரைக் காக்காய்க்குச் கடலைபொறி போடாத கருமி அவன்.

அந்தக் காலத்தில் வங்கி கிடையாது. இவனிடமோ ஏராளமாகப் பொற்காசுகள். செல்வம் 'பெற்றான் பொருள் வைப்புழி' என்று வள்ளுவர் சொல்லியிருக்கும் வங்கியாகிய பசியால் துடிக்கும் வறியவரின் வயிறுபற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதில் நம்பிக்கையில்லை. வயதாகிவிட்டது. ஒரு துணியில் தங்கக் காசுகளை முடிந்து, தன்வீட்டு மண்சுவரில் ஒரு ஓட்டை செய்து, அதில் உள்ளேவைத்துப் பூசிவிட்டான். அவனுக்கு உங்களைப் போல ஒரு நல்ல நண்பன் இருந்தான். அவன் மட்டும் விடாமல் "தர்மம் செய், அதுதான் கடைசி வரையில் உன்னைப் பாதுகாக்கும், உன்னோடு கூடவரும்" என்று சொல்லியபடியே இருப்பான்.

அந்திமக் காலம் வந்தது. நோயிலும் பாயிலும் விழுந்தான் கிழவன். மரணத் தறுவாய். எங்கெங்கோ இருந்த மக்கள் எல்லோரும் வந்து தந்தையின் படுக்கை அருகே நிற்கிறார்கள். அவனது ஆசையை நிறைவேற்றவேண்டுமே. அப்பனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு உபசரிக்கிறார்கள், நச்சரிக்கிறார்கள்.

திடீரென்று கிழவனுக்கு நண்பன் அறம் செய்யச் சொன்னது நினைவுக்கு வந்தது. சாகும்போதாவது தர்மம் செய்யலாமே என்ற எண்ணமும் வந்தது. "சுவருக்குள்ளே பொற்காசு முடிப்பு இருக்கிறது" என்று சொல்லவேண்டும். வாய் அடைத்துவிட்டது. அருகில் நின்ற மகனிடம் கையைப் பொற்கிழி போலக் காண்பித்து, சுவரையும் காண்பித்தான்.

"ஐயோ, அப்பா எதையோ கேட்கிறார். புரிந்துகொண்டு கொடுக்கமுடியாத பாவியாகிவிட்டேனே" என்று நினைத்து ஒரு மகன் கதறினான். இவர் மீண்டும் அதே சைகை காட்டினார்.

"ஆஹா, எனக்குத் தெரிந்துவிட்டது!" ஒரு மகன் கூக்குரலிட்டான். "அவருக்குப் புளிப்பான விளாங்காய் ரொம்பப் பிடிக்கும். அது வேண்டும் என்று கேட்கிறார்" என்றான் ஒருவன்.

"மூன்றாவது வீட்டில் விளாமரம் இருக்கிறது. நான் போய் நிலைமையைச் சொல்லி எப்படியாவது ஒரு காய் வாங்கிக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு இன்னொரு மகன் ஓடினான்.

அவன் வருவதற்குள் கிழவனின் உயிர் பிரிந்தது. சுவற்றில் புதைத்த பொன் குடும்பத்தினருக்கோ, ஏழைகளுக்கோ பயன்படாமல் போயிற்று. ஊர்க்காரன் ஒருவன் சொன்னானாம் "இத்தனைத் துட்டு வச்சிக்கிட்டு என்ன பிரயோசனம்? நாலுபேருக்குச் சோறு போட்டிருந்தா வயிறு குளுந்து வாழ்த்துவாங்க. இப்ப ஒண்ணுமில்லாமப் போயிட்டாம் பாரு. இவன்லாம் பொறந்து என்ன புண்ணியம்?"

இதையும் வள்ளுவன் சொல்கிறான்:

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை


(நன்றியில் செல்வம்: 1003)

[சம்பாதிப்பது ஒன்றே குறியாக வாழ்ந்து, (அந்தப் பொருளை ஏழைகளுக்குக் கொடுப்பதனால் வரும்) புகழை விரும்பாத மனிதர் பிறந்ததே உலகத்துக்குப் பாரம்.]

நன்றி: என் சரித்திரம், எழுதியவர்: உ.வே.சாமிநாதையர், பதிப்பு: டாக்டர் உ.வே.சாமிதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090, தமிழ்நாடு, இந்தியா.

June 24, 2004

நானும் திருக்குறளும்

நான் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டே என்னுடைய எழுத்துக்களை அமைத்துக் கொள்கிறேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மரபிலக்கியம், ராகாகி, தமிழோவியம், இ-சங்கமம் எங்கு எடுத்தாலும் என் கட்டுரைகளின் அடிநாதம் திருக்குறள்தான். ஆனால் அதில் பாரதி, கம்பன், சிலம்பு, மணிமேகலை, தொல்காப்பியம் இன்னும் பிற தமிழ்க் கருவூலங்களிலிருந்தும் எடுத்துப் பயன்படுத்துகிறேன்.

'திருக்குறள்தான் நிறையப் பேர் எழுதிவிட்டார்களே, நீங்களும் ஏன்?' என்று கேட்கலாம். பாரதியையும் கம்பனையும் போலவே ஆழ அகல நுண்மை கொண்டதும் கவிச்சுவை தளும்புவதுமாக இருக்கிறது குறள். அதைக் காலம் காலமாக பலரும் எடுத்துப் பேசுவார்கள், எழுதுவார்கள். தவிர்க்க இயலாது. நான் எழுத ஒரு காரணம் உண்டு.

இரண்டுவருட காலம் குடும்பத்தைவிட்டு அகன்று நான் மட்டும் தனியே திண்டுக்கல்லில் வசிக்க நேர்ந்தது. அப்போது கையில் (சமைத்து, துணிதுவைத்து எல்லாம் செய்தது போக) கொஞ்சம் நேரம் மிச்சம் இருந்தது. அப்போது திருக்குறள் ஆராய்ச்சியில் இறங்கினேன். பலரது உரைகளையும் படித்தேன். தவிர எனக்கேயும் திருவள்ளுவர் இப்படிக் கருதியிருக்கலாம் என்று சில கருத்துகள் தோன்றின. ரால்·ப் வால்டோ எமர்சன் எனக்குச் சிறுவயதிலேயே "உன்னுடைய கருத்து என்ற ஒரு காரணத்துக்காகவே எதையும் ஒதுக்கித் தள்ளாதே" என்று சொல்லிக் கொடுத்திருக்கிறான். ஆகவே இன்னும் குறளில் ஆழச் சென்றேன். என் குறட்காதல் அதிகமாகியதே அன்றிக் குறையவில்லை.

பிறர் கையாளாத, (போதுமான அளவு) விளக்காத, வாழ்க்கையோடு பொருத்திக் காட்டாத, மிகுந்த அழகும் செறிவும் கொண்ட பல குறள்கள் ஒளிந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. அவற்றை விளக்கும் பணியைத் தொடரவேண்டும் என்பதே என் ஆசை.

நான் அப்படிச் செய்வதைப் பொதுவாக யாரும் உணருவதில்லை. காரணம் நான் அவற்றைத் 'திருக்குறள் கட்டுரைகள்' என்று அழைப்பதில்லை. அப்படி ஒரு தலைப்பைப் பார்த்ததுமே முதல் எதிர்வினை "வந்துட்டார்ப்பா, லட்சத்தி ஒண்ணாவது ஆளு. இன்னும் எத்தனை பேர்தான் திருக்குறளையே வெச்சுக்கிட்டு பஜனை பண்ணுவாங்க!" என்பதாக இருக்கும். அதைத் தவிர்க்க விரும்பினேன்.

இன்னொன்று திருக்குறளை நான் இலக்கியவாதியாக அணுகுவதில்லை. வாழ்க்கை, அலுவலகம், உறவுகள், பொருளாதாரம், ஆன்மிகம், காதல், கருணை, கோட்பாடுகள், மேலாண்மை - என்று எந்தத் துறைக்கும் வழிகாட்டியாக அணுகுகிறேன். என்னுடைய நோக்கம் குறளை விளக்குவதல்ல. எந்த ஒரு சூழ்நிலையையும், பிரச்சனையையும் எப்படித் திருக்குறள் விளக்குகிறது என்று காண்பிப்பதுதான்.

இதில் நான் ஓரளவு வெற்றி கண்டிருப்பதாகவும் கருதுகிறேன். "என் மனைவிக்கு வெகுநாட்களாகவே திருக்குறளைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. நான் அங்கொன்று இங்கொன்று என சில குறள்களைப் படித்து உரையும் படிக்கும்போது அது அவளுக்கு சுவாரஸ்யமாகப் படவில்லை. இப்போது எங்கள் இருவருடைய குறையையும் நீக்க வந்துள்ள உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று புரியவில்லை!" என்று நண்பர் ஆர்.எஸ். மணி (கனடா) அவர்கள் சந்தவசந்தத்தில் எழுதியது எனக்கு நோபல் பரிசுக்குச் சமானமானது.

June 20, 2004

சன் சூ-வின் போர்க்கலை

கி.மு. 300-இலிருந்து 500-க்குள் சொல்கிறார்கள் சன் சூ-வின் (Sun Tzu) காலத்தை. தன்னுடைய இளவயதிலேயே எழுதிய The Art of War என்ற இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹோ லூ (வூ-வின் அரசன்) தனது சேனாதிபதியாக நியமித்தானாம். அவருடைய திறமையை மன்னன் சோதித்தது பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு. இங்கே அதற்கு நேரம் இல்லாததால் மேலே போகலாம். இந்த நூலிலிருந்துதான் மா சே துங்-கின் சிறிய சிவப்புப் புத்தகம் (The Little Redbook) வார்த்தைக்கு வார்த்தை பல இடங்களில் கடன் வாங்கி இருக்கிறது.

இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் பெயர் லயனல் கைல்ஸ். பெயரைத் தட்டிக்கொண்டு போனவரோ ஜேம்ஸ் கிளாவல். பிரபல நாவலாசிரியர், ஹாலிவுட் படத் தயாரிப்பாளர், வசனகர்த்தா. இவர் வசனம் எழுதிய The Great Escape (ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஸ்டீவ் மக்வீன், சார்ல்ஸ் பிரான்சன் நடித்தது) மிகப் பெரிய வெற்றிப்படம்.

ஆனால் நான் முக்கியமாகக் கருதுவது இவருடைய நோபிள் ஹவுஸ், கய் ஜின், ஷோகன் போன்ற நாவல்களைத்தாம். ஜப்பானியர்களையும் சீனர்களையும் தன்னுடைய கதையில் கோமாளிகளாக்காமல் அவர்களுடைய கலாச்சாரப் பின்னணியோடு சரியாகப் படம்பிடித்தார். அதிலும் கய் ஜின் படித்தபோதுதான் ஜப்பானில் விலைமாதருக்கு எவ்வளவு அங்கீகாரம் இருக்கிறது என்பதையும், சமுராய்களின் அக்கால வாழ்க்கை எவ்வளவு வறட்டு கவுரவமும் துயரமும் நிரம்பியது என்பதையும் புரிந்துகொண்டேன். (இரண்டு பிராந்தியத் தலைவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு அதைக் கையெழுத்திடுவதற்குச் சமமான சடங்கு என்ன தெரியுமா? இருவரும் ஒன்றாக நின்றுகொண்டு ஒண்ணுக்கடிக்க, அந்த வீழ்ச்சிகள் கலக்கவேண்டும்!).

ஜேம்ஸ் கிளாவல் தொகுத்து, முன்னுரையோடு 'போர்க்கலை'யை வெளியிட்டதும் அது ஆங்கிலம்கூறும் நல்லுலகெங்கும் பற்றிக் கொண்டது. சேனாதிபதிகள், யுத்த நிபுணர்கள் மட்டுமல்லாமல், இதன் யுத்திகளை விற்பனைக்கும், பங்குவணிக முதலீட்டுக்கும், தொழில்முனைவோர் வெற்றிக்கும் பயன்படுத்தலாம் என்று பலரும் சொன்னார்கள். பங்கு வணிகத்திற்கு (F&O segment உட்பட) எப்படிப் பயன்படும் என்று தெரியப் பாருங்கள்: http://www.strategies-tactics.com/suntzu.htm

சரி, அதில் என்னதான் சொல்லியிருக்கிறது? 13 அத்தியாயங்கள் (சன் சூ 13-க்குப் பயப்படவில்லை போலும்) கொண்டது இது. சீனமொழி மூலம் மிகச் சுருக்கமாக இருப்பதாகவும், மொழிபெயர்க்கையில் அது விரிக்கப்பட்டுவிட்டதாகவும் கருதப்படுகிறது. பொதுவாகவே நூல் மொழிபெயர்ப்பில் ஊதித்தான் போகும்.

என்ன சொல்கிறார் சன் சூ? இதோ ஒரு உதாரணம்: "உங்கள் எதிரியையும் தெரிந்து உங்களையும் தெரிந்துகொண்டால், நூறு யுத்தங்களின் விளைவைப் பற்றியும் அஞ்சவேண்டியதில்லை". எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே!

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
(குறள்: 471)

இந்தப் புத்தகத்தைப் படிக்கையில் அடிக்கடி திருக்குறள் நினைவுக்கு வருவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை. இது ரஷ்ய ராணுவத்துக்குக் கட்டாயப் பாடமாம். ஜார்ஜ் புஷ் படித்திருக்கமாட்டார் என்று தோன்றுகின்றது. இதைக் கேளுங்கள்:

"வெற்றிபெற்றபின் எந்த ஊரை வைத்துக் கொள்ள முடியாதோ, அல்லது அப்படியே விட்டால் அதனால் பாதகமில்லையோ, அதைத் தாக்கக் கூடாது."

"போரிட்டு எல்லாப் பொரிலும் வெல்வது சிறப்பல்ல. மிகச் சிறப்பு எதுவென்றால் போரிடாமலே எதிரியின் முரணை அழிப்பதுதான்."

"இதுவரையிலான வரலாற்றில், மிகநீண்டகாலப் போரினாலே ஒரு தேசம் பயனடைந்ததாக எங்குமே சொல்லப்படவில்லை."

ஒற்றர்களைப் பற்றிப் பல விஷயங்களைச் சொல்கிறார் சன் சூ. எதிரி நாட்டில் அவமதிக்கப்பட்ட உயர் அதிகாரிகளை ஒற்றர்களாக்கலாம். அங்குள்ள குடிமக்கள் சிலரை அன்பினால் வென்று ஒற்றர்களாக்கலாம். தங்கத்துக்கு அலையும் வேசியர், அதிகம் தண்டிக்கப் பட்ட குற்றவாளிகள், அநியாயமாய்ப் பதவி உயர்வு மறுக்கப்பட்ட அரசு ஊழியர், கருங்காலிகள் - இவர்கள் எல்லோரையும் பயன்படுத்தி ஒற்றாடலாம். ஆனால் மிகக் கவனத்தோடு இருக்கவேண்டும் என்கிறார்.

மாக்கியவெல்லி-யின் The Prince, மற்றும் மியாமொடோ முசாஷியின் The Book ஆகியவற்றுக்கு இணையாக இதைச் சொல்கிறார்கள். நாம் சாணக்கியனையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். திருக்குறள் இல்லாமலா!

ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும்
(குறள்: 589)

[ஒரே காரியத்தைப் பற்றி விசாரிக்கத் தனித்தனியே மூன்று ஒற்றர்களை ஏவி, அந்த மூவரும் அதே காரியத்துக்கு அனுப்பப் பட்டதை அவர்கள் அறியாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். அந்த மூவரும் தனித்தனியே அறிந்து வருகிற சேதிகளையெல்லாம் சேர்த்துப் பார்த்து அரசன் உண்மையை அறியவேண்டும். - நாமக்கல் கவிஞர் உரை]

திருக்குறள், சாணக்கியன், ஸ்டீவன் கோவி, பீட்டர் டிரக்கர் எல்லோரையும் தக்க அளவில் எடுத்துக் கொண்டு சன் சூவோடு பொருத்திப்பார்க்க வேண்டுமென்று கை துருதுருக்கிறது. அதுவே ஒரு புத்தகமாகிவிடும்.

June 17, 2004

எது 'ஆண்மை'?

என் நண்பனொருவனுக்குத் தான் பெரிய மிருகம் என்று சொல்லிக்கொள்வதில் ரொம்ப விருப்பம். தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அதாவது, தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, தான் உக்கிரமானவன், முரடன், அல்லி சாம்ராஜ்யத்தையே போய் அடக்கிவிடுபவன்... இத்தியாதி, இத்தியாதி. இன்னும் அவனது கட்டில் வித்தைத் திறமை பற்றிய பெருமைகளை நான் சொல்லவில்லை--காரணம் அதை இங்கே நாகரிகமாக எழுத எனது சொற்களஞ்சியம் பத்தாது. இப்படிப்பட்ட மனநிலையில் அவன் பீற்றிக்கொள்ளத் தொடங்கும் போதெல்லாம் அவனது நீண்ட நெடிய கட்டுரை இப்படித்தான் முடியும்: "என்னை வீட்டுவிலங்காக்கத் தக்க ஒருத்தியே எனக்கு மனைவியாக வேண்டும்"! அவன் சொல்லும்போது பார்த்தால் ஏதோவொரு புலியைப் பூனையாக அடக்குகிற சர்க்கஸ் சாகசம் போலத் தோன்றும்.

அப்போது நாங்கள் டெல்லியில் இருந்தோம். அவன் ஒருமுறை பெங்களூருக்குப் போனவன் திடீரென்று அங்கிருந்து தொலைபேசினான். "எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு, இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். டெல்லிக்கு வரும்போது பெண்டாட்டியோடுதான் வருவேன்." ரொம்ப நல்லது, ரிங் மாஸ்டர் கிடைத்துவிட்டாளாக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

கல்யாணம் முடிந்து சிலநாட்களில் அடுத்த தொலைபேசி: "நான் திங்கட் கிழமை புறப்பட்டு, புதன் காலையிலே அங்கே இருப்பேன். ஒரு சின்ன உதவி செய். என் வீட்டுக்குப் போய், கொஞ்சம் சுத்தம் பண்ணி வை. ஆங்... முக்கியமா அங்கே இருக்கிற ரம் மற்றும் பியர் சீசாக்களைக் கண்காணாம அப்புறப்படுத்திடு!" குரலில் கொஞ்சம் அவசரம் தொனித்தது. அச்சமும்தான். வழக்கமான விடலைக் குணம், அவன் சொன்னதை நான் செய்யவில்லை.

டெல்லிக்கு வந்தவன் என்னை வீட்டுக்குக் கூப்பிடவே இல்லை. மெதுவாக அவனது அலுவலகத்தில் பேசினேன். "டேய், நீ பாட்டுக்கு வீட்டைச் சுத்தம் செய்யாம விட்டுட்டே. நான் நல்லா மாட்டிக்கிட்டேன். எல்லாப் பழியையும் உன் தலையிலே போட்டுட்டேன். நான் வீட்டிலே இல்லாதப்போ நீதான் அங்கே வந்து குடிச்சிருப்பேன்னு சொல்லித் தப்பிக்கவேண்டியதாயிடுச்சு" என்றான்.

பழைய புலிவேஷம் எங்கே போயிற்று என்று அடையாளமே தெரியவில்லை. ஒரு திருமணத்தில் அவனது மனைவியைப் பார்த்தேன். சிறிய, பீங்கான் பொம்மை போன்ற, பளபளப்பான வெளிர்நிறத்தில், செதுக்கிய வடிவம் கொண்ட பெண்ணாகத் தெரிந்த அவரின் உதட்டில் இறுக்கம் இருந்தது. "இவன்தானே அத்தனைக் குப்பி பியரும் ரம்மும் குடித்தவன்" என்ற எள்ளல் கண்ணில் தோன்ற என்னைப் பார்த்து மரியாதைக்குப் புன்னகைத்துவிட்டு அகன்றார். "அடக்கு, அடக்கு" என்று துடித்த நம்முடைய நண்பர் இரண்டடி பின்னாலே என்னைப் பார்க்கவே பயந்தவராக அரைப் புன்னகையோடு அகன்றார். என்றைக்குமே நான் செய்யாத தவறுக்காக வருத்தப்பட்டதில்லை. எனவே எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

இன்னொரு நண்பரின் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள். அவருடைய பெயர் சந்திரன் என்று வைத்துக்கொள்வோமே. அவருடைய மணவோலை வந்தது. அப்போது சென்னைக்கு வந்துவிட்டேன். என்னால் போகமுடியவில்லை. சில மாதங்கள் கழித்து இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். "சந்திரன் கல்யாணம் எல்லாம் நல்லபடி நடந்ததா?" என்று விசாரித்தேன். "அது ஒரு பெரிய சோகக் கதை" என்றார் நண்பர். சந்திரனும் பயங்கரத் தண்ணி வண்டிதான். ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலையிலேயே தொடங்கிவிடுவார். அலுவலக நாட்களில் மாலை ஐந்து மணிக்குத் தான் மெல்லத் தொடங்குவார்.

கல்யாணத்தைக் கொண்டாட மாலை நண்பர்களோடு சேர்ந்து குடித்திருக்கிறார். அவருக்கு ஆரம்பிக்கத்தான் தெரியும், நிறுத்தத் தெரியாது. எனவே உத்தேசமாக இரவின் ஒரு பகுதியில் திடீரென்று ஒரு நண்பர் "டேய் சந்திரா, உனக்கு இன்னிக்கு முதல் இரவுடா. போ, அண்ணி காத்திக்கிட்டிருப்பாங்க" என்று சொல்லவும், சந்திரன் தண்ணியை நிறுத்திவிட்டு அண்ணியைப் பார்க்கப் போனார். அண்ணி, திடமான அண்ணி. இவருடைய கோலத்தைப் பார்த்தார். தன்னுடைய முதலிரவிலேயே இப்படிக் குடித்துவிட்டு வருகிற மனிதனுடன் என்னால் வாழ்க்கை நடத்தமுடியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டு, அறையைவிட்டு வெளியேறினார். வரதட்சணையை தரமறுத்து மணவறையிலிருந்து வெளிநடப்புச் செய்ய எவ்வளவு துணிவு வேண்டுமோ அதைவிட இதற்குத் துணிவு வேண்டும். சந்திரன் என் நண்பர்தான். ஆனால், அந்தப் பெண்மணியை நான் அதிகம் மதிக்கிறேன்.

முதலில் சொன்னவருக்கும், சந்திரனுக்கும் என்ன வித்தியாசம்? இதில் எது 'ஆண்மை'?

June 13, 2004

குழலூதும் கண்ணன்: ஒரு படப்பிடிப்பு

நப்பின்னையைப் பற்றிப் பேசும்போது பெரியாழ்வார் பக்கம் கொஞ்சம் திரும்பினோம். யசோதை "வெக்கமிருக்காடா கண்ணா உனக்கு! இப்படி அழுக்காக நிக்கறதைப் பார்த்தால் நப்பின்னை சிரிப்பாளே, வா குளிக்க" என்று அறிவுறுத்திக் கண்ணனைக் கூட்டிக்கொண்டு போன அழகைப் பார்த்ததும் இன்னும் பெரியாழ்வாரைப் படிக்கவேணுமென்று ஆசையாயிற்று.

கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுகின்ற அழகைப் பெரியாழ்வார் சொல்வது அப்படியே சர்க்கரை மலை. "கண்ணன் தனது இடது கன்னத்தைத் தோள்மேலே அழுத்திக்கொள்கிறான்; இரண்டு கைகளையும் புல்லாங்குழலில் சேர்த்து வைக்கிறான்; புருவங்கள் நெறிந்து மேலே உயர்கின்றன; காற்றை உள்ளே இழுத்து ஊதுவதனால் வயிறு குடம்போல உப்பித் தணிகிறது; உதடுகள் இடப்புறமாகக் குவிகின்றன; இப்படி புல்லாங்குழல் ஊதுகிறான்! அதைக்காண அங்கே கோபியர்கள் வந்ததைப் பார்க்க மயிலினங்களும் பெண்மான்களும் சேர்ந்து வந்தாற்போலத் தோன்றுகின்றது. காதல் மிகுதியாலே அவர்களுடைய மலர்சூடிய கூந்தல் அவிழ்ந்து தாழ்கிறது. அணிந்திருக்கும் ஆடை நெகிழ்கிறது. ஒரு கையாலே சரியும் துகிலைப் பிடித்துக்கொண்டு, ஒசிந்து நின்று தம் செவ்வரி படர்ந்த கண் கிருஷ்ணனின் மீதே பதிந்திருக்க அவர்கள் தம்மை மறந்து நிற்கிறார்கள்."

இட அணரைஇடத் தோளடு சாய்த்து
இருகை கூட, புருவம் நெறிந்தேற,
குடவயிறு பட, வாய் கடை கூட,
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
மடமயில்களடு மான்பிணை போலே
மங்கைமார்கள் மலர்க்கூந்தல் அவிழ
உடைநெகிழ ஓர் கையால் துகில் பற்றி
ஒல்கி, ஓடு அரிக்கண் ஓட நின்றனரே
.

(பெரியாழ்வார் திருமொழி - 276)

[அணர் - கன்னம்]

இதிலே இரண்டு துல்லியமான சித்திரங்கள். ஒன்று குழல் ஊதும்போது கண்ணனிடத்தில் ஏற்படுகிற மெய்ப்பாடுகள். அத்துடன் "சிறு விரல் தடவிப் பரிமாற, செங்கண் கோட, செய்ய வாய் கொப்பளிப்ப, குறு வெயர்ப்புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது" என்று 282-ஆம் பாசுரத்தில் பாடுவதையும் சேர்த்துக்கொண்டால் ஒரு அசையும் சித்திரம் முழுமையாகிவிடுகிறது. அடுத்தது, அதைக் கண்டு காதல்மீதூறி நிற்கும் கோபியர்களின் மெய்ப்பாடுகள். எவ்வளவு கச்சிதமான படப்பிடிப்பு!

June 11, 2004

சொல்லுக்கு எத்தனை சொல்?

தமிழிலே சொல், வார்த்தை என்ற இரண்டைத் தவிர 'சொல் என்பதற்கு இணையான சொற்களாக வேறு எதையும் நாம் பயன்படுத்துவதில்லை. தமிழைப் போல வளமான மொழியில் எப்படி இல்லாமல் போகும்? அதிலும் வார்த்தை என்பது வடமொழியிலிருந்து வந்தது. அதையும் விட்டுவிட்டால் 'சொல்' என்கிற ஒரே 'சொல்'தானா தமிழில்!

சொல் என்பதற்கு இணையானவைகளாக நன்னூல் கூறுவது: (அடைப்புக் குறிகளுக்குள் இருப்பது வேர்ச்சொல்)

மாற்றம், நுவற்சி (நுவல்), செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல் (புகல்), மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி (பகர்), இயம்பல் (இயம்பு).

ஆக நம்மிடம் புகலப் போதிய நொடிகள் இருப்பினும் அவற்றை மறந்துவிட்டோம் என்று நான் விளம்பினால், அதற்கு உங்கள் மாற்றம் என்னவாய் இருக்கும்? கொஞ்சம் அறையுங்களேன். ;-)

மாற்றம் என்ற சொல்லை மாத்து என்று கன்னடத்திலும், மாட்ட என்று தெலுங்கிலும் பயன்படுத்துகின்றனர். 'செப்பு' ஏனோ தெலுங்கில்மட்டும்தான் இருக்கிறது. 'செப்புமொழி பதினெட்டுடையாள்' என்று பாரதி சொன்னபிறகு அந்தக் கிளவியை மறந்தே போய்விட்டோம். 'நொடி' என்பது கன்னடத்தில் 'நுடி' என்று வழங்குகிறது. ராஜ்குமார் பல படங்களில் 'கன்னட நுடி'யின் பெருமையைப் பாடியுள்ளார். தமிழில் 'அறை'தல் மலையாளத்தின் 'பறை'தல் ஆகியிருக்கலாமோ என்று எண்ண இடம் இருக்கிறது.

உங்களைக் கரைந்து இவற்றையெல்லாம் நுவல்வதின் பொருள் என்னவென்றால் இனிமேலாவது இவற்றை உங்கள் அன்றாடப் பேச்சில் விளம்பிப் புழக்கத்துக்குக் கொண்டுவரலாமே என்ற அருத்தியில்தான்.

அட.. அருத்தியா... அப்படீன்னா என்ன?

June 10, 2004

யாரந்த நப்பின்னை?

விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும்பற்றி விரிவாகப் பேசும் பாகவதம் கிருஷ்ணாவதாரத்தை மிகமிக விரிவாகப் பேசுகிறது. அது ராதை என்ற பெயரைச் சொல்வதே இல்லை. நப்பின்னை என்பது ராதையல்ல.

திருப்பாவையில் 'நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்' என்று நப்பின்னையை அழைக்கிறார் கோதை. பார்க்கப் போனால் மூன்று பாடல்களில் தொடர்ந்து ஆண்டாள் நப்பின்னையை விவரித்திருக்கிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. ஆண்டாள் அழைக்கின்ற வேளை அதிகாலைப் பொழுது. தந்ததினால் செய்த கால்களையுடைய கட்டில்மேல் கண்ணன் தனது மனைவியான நப்பின்னையின் மார்பின்மேல் தன் மலர்மார்பை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானாம். அவளோ கண்ணன் தன்னைவிட்டு அகன்று போவதையே பொறுக்காதவளாம். எனவே அவளைச் சமாளித்தால்தான் கண்ணன் துயிலெழுந்து வந்து இவர்களது பாவை நோன்புக்கான உக்கமும், தட்டொளியும் (விசிறியும், கண்ணாடியும்) முதலியன தந்து பாவை நோன்பை முடித்து வைப்பான். எனவே அத்தையுடன் தன் சொந்த வீட்டில் இப்படிப் படுத்திருக்கச் சாத்தியம் இல்லை.

அப்படியானால் நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள். ராதையை அத்தை என்றல்லவா சொல்கிறார்கள்?

சிறுவனான கண்ணன் பசுக் கொட்டிலிலே விளையாடி உடலெல்லாம் மண்ணாக்கிக் கொள்கிறான். அவனுடைய தாய் யசோதை சொல்கிறாளாம் "நீ பசுத் தொழுவத்தில் உடலை மண்ணாக்கிக் கொண்டதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. (இந்தக் காலத்தில் ஒரு தாயார் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.) ஆனால் ஊரார் பழிப்பார்களே! அட வெக்கமில்லாத பயலே, உன்னை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாளே! வா குளிக்க" என்று. பாடல் இதோ:

பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்!
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே!
மஞ்சனம் ஆடநீ வாராய்!


(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி: 160)

[பூணி - பசு]

மாமன் மகள் உன் அழுக்குத் திருக்கோலத்தைப் பார்த்துச் சிரிப்பாள் என்று சொல்லித்தான் குளிக்கவைக்கிறாள் யசோதை கண்ணனை. தமிழில் பிஞ்ஞை என்றால் மயில். மயில்தோகைபோன்ற அழகிய கூந்தலை உடையவள் நப்பின்னை என்பது பொருள்.

சிலப்பதிகாரத்தில் நப்பின்னையைப் பற்றி 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகிறது. காட்சி இது: பாண்டிய மன்னன் தவறாகக் கோவலனைக் கொன்றுவிடுகிறான். செங்கோல் வளைந்துவிடுகிறது. இங்கே ஆயர்குடியில் இருக்கும் பெண்களுக்குத் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. பால் தயிராக உறையமாட்டேன் என்கிறது; திரண்ட திமிலை உடைய காளைகளின் கண்களில் நீர் வழிகிறது. முதல்நாள் சிலுப்பி உறியிலே எடுத்து வைத்த வெண்ணை உருக மாட்டேன் என்கிறது. துள்ளிவிளையாடும் இயல்பை உடைய ஆட்டுக்குட்டிகள் அசையாமல் கிடக்கின்றன. பசுக் கூட்டங்கள் தம் உடல் நடுங்க அலறுகின்றன. அவற்றின் கழுத்திலே இருக்கும் மணிகள் காரணமின்றி அறுந்து விழுகின்றன. இவற்றை எல்லாம் பார்த்த மாதரி "இந்த நிகழ்வுகள் நமக்கு ஏதோ ஒரு தீமையை முன்னறிவிக்கின்றன" என்று தன் மகளிடம் சொல்லுகிறாள்.

"இந்தத் துன்பம் நீங்கவேண்டுமானால், மாதர்க்கு அணிகலனாகிய கண்ணகி நம்மோடு இருந்து காண, ஆயர் குல தெய்வமாகிய கண்ணன் தன் மனைவி நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை நாம் ஆடவேண்டும்" என்று மாதரி சொல்கிறாள்.

மகளை நோக்கி "மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும் தான் காண
ஆயர் பாடியில் எருமன்றத்து
மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில்
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்" என்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே


(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை)

[தம்முன் - தன் முன்னவனான பலராமன்]

எனவே கண்ணன் பலராமன் மற்றும் நப்பின்னையோடு பொதுவிடத்தில் வாலசரிதையைக் குரவையாக ஆடியிருக்கிறான். ராதையோடு இவ்வாறு ஆடியிருக்க முடியாது என்று கருதுவோர் உண்டு. பரிபாடலிலும் நப்பின்னை பற்றிய குறிப்பு உண்டு.

மாமன் மகளே ஆனாலும் கண்ணன் அவளை எளிதில் அடைந்துவிடவில்லை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் அவற்றையடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். ஆனால், இந்தக் கதை தென்மாநிலங்களிலேயே அதிகம் வழங்குகிறது என்பர் அறிந்தோர். சன் டி.வி.யின் காலைமலர் நிகழ்ச்சியில் பேசிய ஒரு வைணவ அறிஞர் வட இந்தியாவில் புழங்கும் பாகவதத்தைவிடத் தென்னிந்தியாவில் புழங்கும் பாகவதத்தில் சுமார் 800 (நான் நினைவிலிருந்து தரும் எண்ணிக்கை ஏறக்குறைய இருக்கலாம்) வடமொழிச் செய்யுள்கள் அதிகம் இருக்கின்றன என்று கூறினார். முந்நாளில் தென்னிந்தியாவில் சமஸ்கிருத அறிஞர்கள் அதிகமிருந்தனர், அவர்கள் சிறந்த செய்யுள் இயற்றும் வன்மை பெற்றிருந்தனர், இங்கே பாகவதக் கதைகள் வடக்கை விட அதிகமாகவும் இருந்தன என்பவற்றை இது காட்டுவதாகவும் அவர் சொன்னார்.

திருமாலுக்கு மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்பர். இதிலே நப்பின்னை நீளாதேவி(கடல்தாய்)யின் அவதாரம் என்று வைணவ மரபு உண்டு. எனவே இவரை இளையபிராட்டி என்பதும் ஒரு சம்பிரதாயம். ஆனால் நப்பின்னை மிகவும் விவாதத்திற்குரிய, விவாதிக்கப்பட்ட விஷயம் என்பதல் இந்தப் பத்தியில் நான் சொல்லும் ஒவ்வொன்றும் அறுதியிட்டுச் சொல்லப்படுவனவல்ல.

கடைசியாக ஒரு கேள்வி. கீழே வரும் செய்யுள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுல் ஒன்றான பொய்கையாரின் 'இன்னிலை'யில் காணப்படுகிறது. இதிலே நப்பின்னை என்ற சொல் வரக் காண்கிறோம். என்ன கருத்துப் புலத்தில்?

ஒப்புயர்வில் ஞாலம் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து.


(இன்னிலை: பாடல் 22)

June 08, 2004

பாரதியின் நகைச்சுவை

பொதுவாகவே பாரதியாரின் கவிதைகளை நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு அவரது உரைநடைப் படைப்புகளை வாசிக்கவில்லை. பலதுறைகளிலும் தேர்ச்சியோடு எழுதிய முன்னணி இதழியலாளனாக இருந்த பாரதி பல நகைச்சுவைக் கதைகளையும் எழுதியுள்ளான். உதாரணத்துக்கு இங்கே கொஞ்சம், சின்னச் சங்கரன் கதையிலிருந்து:

சாயங்காலத்துக் கச்சேரி முடிந்தவுடன் கவுண்டரவர்கள் குதிரை வண்டியிலேறி ஊரைச் சுற்றிச் சவாரி செய்துகொண்டு வருவார். கவுண்டநகரம் சரித்திரப் பெருமையும் '§க்ஷத்திர மஹாத்மியமும்' வாய்ந்த ஊராயினும் அளவில் மிகவும் சிறியது. ஐந்து நிமிஷத்துக்குள் குதிரை வண்டி இதைச் சுற்றி வந்துவிடும். இதற்குப் பன்னிரண்டிடத்தில் 'வாங்கா' ஊதுவார்கள். இந்த வாங்கா என்பது பித்தளையில் ஒருவித ஊது வாத்தியம். பறையர் இதனை ஊதிக்கொண்டு ஜமீந்தாரவர்களின் வண்டி முன்னே குடல் தெறிக்க ஓடுவார்கள்.

சில தினங்களில் பல்லக்கு சவாரி நடக்கும். இன்னும் சில சமயங்களில் ஜமீந்தாரவர்கள் ஆட்டு வண்டியிலே போவதுண்டு. ஆட்டுவண்டி சவாரிக்கு உதவுமா என்று படிப்பவர்களிலே சிலர் வியப்படையக் கூடும். இரண்டு ஆடுகளைப் பழக்கப்படுத்தி, அவற்றுக்கிணங்க ஒரு சிறு வண்டியிலே பூட்டி, வண்டி, ஆடுகள் இவற்றைச் சேர்த்து நிறுத்தினால், அவற்றைக் காட்டிலும் குறைந்த பக்ஷம் நாலு மடங்கு அதிக நிறைகொண்ட ஜமீந்தார் ஏறிக்கொண்டு, தாமே பயமில்லாமல் ஓட்டுவார். குதிரைகள் துஷ்டஜந்துக்கள். ஒரு சமயமில்லாவிட்டாலும் ஒரு சமயம் கடிவாளத்தை மீறி ஓடி எங்கேனும் வீழ்த்தித் தள்ளிவிடும். ஆடுகளின் விஷயத்தில் அந்த சந்தேகம் இல்லையல்லவா?

இன்னும் சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம் - ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது - தயார் செய்துகொண்டு வருவார்கள். அதன்மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடன் அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்றுபோகும். பிரக்கினை கொஞ்சம் தான் மிச்சமிருக்கும். எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்து முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர் நின்று அதைத் தள்ளிக்கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒருகையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக்கொண்டு பவனி வருவார்."

எப்படி? சின்னச் சங்கரன் கதை முழுவதிலும் இப்படிப்பட்ட வயிறுபுண்ணாகும் வர்ணனைகளைப் படிக்கலாம். பாரதியாரின் உரைநடை கவிதைக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

June 06, 2004

கொல்லிமலைச் செலவு

கொல்லிமலை இன்னும் முடியலைன்னு சொன்னேன். தொடர்கிறேன்.

சேலத்திலிருந்து ஏற்காடும் கொல்லிமலையும் கிட்டத்தட்ட ஒரே தூரம்தான். ஆனால் ஏற்காட்டில் மக்கள் போய்க் குவிகிறார்கள். கொல்லிமலை கேட்பாரற்றுக் கிடக்கிறது. நாமக்கல், ஆத்தூர், சேந்தமங்கலம், ராசிபுரம் என்று நான்கு பக்கமும் சூழப்பட்ட இந்த மலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு.

காரணம் உண்டு. மலை மிகச் செங்குத்தானது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல் 64 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டிப் போய் உச்சியை அடைந்தால், ஆஹா! என்ன சந்தோஷம். ஒரு நாளைக்கு (5 வருடங்களுக்கு முன்னால்) இரண்டு தடவை பேருந்து நாமக்கல்லிருந்து போகிறது. பயங்கரக்கூட்டம். ஜன்னல் வழியாக உங்களுக்கு முன்னால் துண்டு போட்டுவிடுவார்கள். இடித்துப் பிடித்து உள்ளே முதலில் ஏறி இடம்பிடிக்கும் திறமை இருந்தால் ஒலிம்பிக்ஸ் மெடலுக்கு முயற்சி செய்யலாம். இப்போது அதிக வசதிகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தொந்தரவு வேண்டாம் என்று போய் வாடகை மகிழுந்து (செலவழிக்கக் காசிருந்தால்) கேட்டால், வரமாட்டேன் என்பார்கள். யாருக்கு வேண்டும் 64 கொண்டை ஊசி! சொந்தக் காரில் செல்பவர்கள் அதிஷ்டசாலிகள். நான் போன இடுகையில் சொன்ன 'ஹோட்டல் வல்வில் ஓரி' நீங்கள் போகவேண்டிய அறப்பளீசுரர் கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. முன்னாலேயே இருக்கிறது. (வல்வில் ஓரியைப் பற்றிப் புறாநானூறில் இன்னும் நல்ல பாடல்கள் உள்ளன. பிறகு பேசலாம்.)

அறப்பளீசுரர் கோவில் 2000 ஆண்டுப் பழமை வாய்ந்தது. அறப்பளீசுர சதகம் என்ற நூலும் உண்டு. அறப்பளீசுரர் கோவில் அருகில் அழகான ஓடை. குளித்துக் கொண்டே இருக்கலாம். அங்கே இருக்கும் ஓலைவேய்ந்த கடைகள் ஒன்றில் முன்கூட்டியே போய்ச் சொன்னால்தான் உங்களுக்குச் சிற்றுண்டியோ உணவோ கிடைக்கும். இல்லாவிட்டால் குளித்துவிட்டு வந்து பசியில் தவிக்கவேண்டியதுதான். உங்கள் உடைமைகளை நம்பி அங்கு வைத்துவிட்டுப் போகலாம்.

கோவிலிலிருந்து பக்கத்தில் பயணியர் விடுதி இருந்தது. 15 ரூபாய் கொடுத்தால் படுக்கை மட்டும். பை அல்லது பெட்டியை அப்படியே கட்டிலுக்குக் கீழே வைத்துக்கொண்டு தூங்கவேண்டியது. காலையில் எழுந்தால் சுற்றிலும் இருக்கும் காட்டுக்குள் போய் இறக்குமதி சமாச்சாரங்களை முடித்துக் கொள்ளவேண்டும். பல் கூடத் திறந்தவெளியில் நின்றுதான் தேய்க்கவேண்டும். அதையெல்லாம் சமாளிக்க முடியாதவர்கள் வல்வில் ஓரியில் அறைஎடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.

அருவி நம்பமுடியாத அழகு. பொதுவாக மற்ற இடங்களில் உங்கள் மட்டத்துக்கு மேலே இருந்து விழும் அருவி. இங்கே நீங்கள் கீழே இறங்கிப் போய் அதைச் சந்திக்கவேண்டும். 420 படிகள் என்று நினைவு. இறங்கும் போது சிரமம் தெரியாது. கர்நாடகாவில் ஷராவதி நதியின் குறுக்கே 'ஜோக்' அருவி (சிரிக்காதீர்கள்) பார்த்ததுண்டா, அதுபோலத்தான். பள்ளத்தாக்கில் இறங்கிப் போய் 'ஆகாயகங்கை'யைக் கழுத்துவலிக்க நிமிர்ந்து பார்க்கவேண்டும்.

இறங்கி அருவி இருக்கும் பகுதிக்குப் போனால், 'இது பூலோகம் தானா?' என்ற ஆச்சரியம் உங்களை அமுக்கும். அழகென்றால் அத்தனை அழகு. பூமத்திய ரேகைக் காடுகள் அழியாது இருக்கும் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். கையில் சாப்பிட ஏதாவது கொண்டுபோய்விடுங்கள். இல்லாவிட்டால் திரும்பி மேலே வரும்வரை பசி தாங்காது. திரும்பி மேலே ஏறும்போது உங்கள் இதயத்தின் வலு பரிசோதிக்கப்படும். சிரமமான ஏற்றம். குழந்தைகள் முதியோர் இருந்தால் உட்கார்ந்து உட்கார்ந்து மெல்ல ஏற வேண்டும்.

சனி, ஞாயிறுகளில் சுமோக்களும், குவாலிஸ்களும் பறக்கும். மற்ற மலைத்தலங்களைப் போல் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கூட்டம் இருக்கும். அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. கண்டிப்பாக அரசினர் மூலிகைப் பண்ணையைப் போய்ப் பாருங்கள். தெரிந்தவர்களைக் கேட்டுத் தேன் வாங்குங்கள். விலையில் அடாவடியாகப் பேரம் உண்டு. தெரியாமல் வாங்கினால் வெல்லப்பாகுதான். கவனம் தேவை. அதற்கான நாட்களில் விலைகுறைவாக அன்னாசிப் பழம் கிடைக்கும்.

ஒரே நாள்தான் போனேன். எல்லா இடமும் பார்க்கவில்லை. ஒரு பூங்கா பார்த்தேன். பெயர் மறந்துவிட்டது. நான் போன அன்றைக்கு நாங்கள் மூவர் மட்டுமே. சர்வ சுதந்திரம். தொண்டை கிழியப் பாடினோம். பறவைகளிடம் சங்கதிகள் சொல்லிப் பார்த்தோம். மரநிழலில் மதியம் படுத்துத் தூங்கினோம். பேரானந்தம்.

மீண்டும் போகவேண்டும்.

June 02, 2004

கொல்லிமலை வில்லாளி

நாமக்கல் ராஜா தன் ஊர்ப்பெருமை பேசும்போது, கையோடு கொல்லிமலை பற்றியும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் நண்பர்களோடு கொல்லிமலைக்குப் போனது நினைவுக்கு வந்தது. அங்கே மிகச் சவுகரியமான ஒரு தங்கும் விடுதி கட்டியிருந்தார்கள். எல்லா வசதிகளோடும். என்றால் அங்கே கிண்ண அலைவாங்கி (Dish Antenna) உண்டு. காசிக்குப் போனாலும் கருமம் தொலையவில்லை என்றாற்போல், கொல்லிமலைக்குப் போயும் தவறாமல் அண்ணாமலையும், மன்மத ராசாவும் பார்க்கலாம். அந்த விடுதியின் பெயர் வல்வில் ஓரி.

கொல்லிமலை வல்வில் ஓரியின் ஊர். ஓரி அந்த மலைப்பகுதியின் மன்னன். கடையேழு வள்ளல்களில் ஒருவன். அது என்ன 'வல்வில்'? ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை 'வல்வில்' என்று அழைப்பார்கள். அப்படிப் பார்த்தால் ஏழு மராமரங்களை ஒரே பாணத்தால் துளைத்து, தான் வாலியைக் கொல்லும் வல்லமை உடையவன்தான் என்று அனுமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நிரூபித்த இராமனும் வல்வில்தான். 'வல்வில் இராமன்' என்று அழைத்திருக்கிறார்கள். ஓரியை வல்வில் என்று அழைக்கக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் புறநானூறு (பாடல் 152) பார்க்கவேண்டும். அந்தப் பாடலில் ஒரு இசைவல்ல பாணன் இவ்வாறு சொல்கிறான்:


"நானும், (ஆடற்கலையில் வல்ல) விறலியும், என் குடும்பத்தினரும் (கொல்லிமலையின்) நெருங்கி அடர்ந்த காட்டுவழியே போய்க்கொண்டு இருந்தோம். யானையின் பிளிறலும், புலியின் கர்ஜனையும், காட்டுப் பன்றியின் (Asterix விரும்பிகளுக்கு ஒபிலிக்ஸின் பிரியமான உணவு நினைவுக்கு வரவேண்டுமே) உறுமலும் காதைத் துளைத்தன. நிலத்தில் பார்த்தால் பாம்பும், உடும்பும் நடுங்கவைத்தன.

'விர்ர்ர்'ரென்று ஒரு சத்தம். மலைபோல நின்றுகொண்டிருந்த ஒரு யானை பேரொலியோடு கீழே விழுகிறது. யானையின் மேலே பாயலாமென்று தன் வாயைப் பிளந்தபடியிருந்த புலியொன்று திடீரென்று அலறிச் சுருண்டு விழுகிறது. அதன் கர்ஜனையில் காடே கிடுகிடுக்கிறது. புலியின் வாயிலிருந்து அருவிபோல இரத்தம். அதைப் பார்ப்பதற்குள் ஒரு மான் துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்து போகிறது. அப்பால் உரலைப்போலத் தலையை உடைய காட்டுப் பன்றி ஒன்றும் தரைமீது உருண்டு விழுந்து சாகிறது. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இவ்வளவையும் செய்த அம்பு, இவற்றைத் தாண்டிப் போய் ஒரு புற்றுக்குள் பாய, அதிலிருக்கும் உடும்பு ஒன்று கடைசியாக உயிர்விடுகிறது.

முதலில் யானைமீது அம்பு பாய்ந்ததுதான் எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது. வாய்பிளந்து ரத்தம் கக்கிக் கிடந்த புலி, உருண்டு இறந்த காட்டுப் பன்றி, மான், உடும்பு ஆகியவை கிடந்த காட்சி அந்த அம்பின் கூர்மையையும் வேகத்தையும் எங்களுக்கு உணர்த்தின. திரும்பிப் பார்த்தால் அகன்ற மார்பில் மாலை தொங்க, சந்தனம் பூசி, தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவனாய், புன்முறுவலோடு ஒருவன் நின்றுகொண்டிருந்தான். இவனைப் பார்த்தால் சாதாரண வேட்டுவனைப் போலத் தோன்றவில்லையே..." என்று இவ்வாறு பாணனும் குடும்பத்தினரும் ஆச்சரியப்பட்டு, இவன்தான் ஓரியாக இருக்கவேண்டும் என்று சொல்லி அழகாக இசைக்கிறார்கள். நல்ல ரசனையோடு கேட்கிறான் வந்தவன். பாணன் தன் பாடலின் இறுதியிலே 'ஓரி' என்ற பெயர் வரும்படிப் பாட, அவன் சற்றே முகம் சிவந்து நாணமடைகிறான். (என்ன ஆளுப்பா இவங்கள்ளாம், நம்ம 'முடிசூடா மன்னரு'ங்களைப் பாத்துக் கத்துக்கறதில்லே?)

அதுமட்டுமல்ல, இவர்களுக்கு நிறையப் பொன்னும், மணிகளும் பொருளும் தருவதோடு, வேட்டையாடிய மானின் தசையைப் புழுக்கி உணவாகக் கொடுக்கிறான். (சமீபகாலத்தில் கேள்விப்பட்டது போல இருக்கிறதே!) புத்துருக்கு நெய்போலத் தோன்றும் தேன் கொடுக்கிறான்.

இவன் தான் வல்வில் ஓரி. ஆனால் கொல்லிமலையைப் பற்றி இன்னும் சொல்லி முடிக்கலை. மற்றொரு முறை சொல்வேன்...

செவிலியரும், காதலும்...

நீங்கள் இங்கே தேடி வருகிறீர்கள் என்பதே உங்கள் இலக்கிய ரசனையைக் காட்டுகிறது. (ஐஸ்..ஐஸ்!) சரி, தும்மாதீர்கள். என்னுடைய இரண்டு கட்டுரைகள் கீழ்க்கண்ட சுட்டிகளில் உங்களுக்காக காத்திருக்கின்றன. போய்ப்படித்துப் பாருங்கள். அப்புறம்... ஆமாம்.. கருத்துச் சொல்லுங்கள். சில நாட்களாய் வெளியூர்ப் பயணம். அதனால்தான் மதுரமொழியில் தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. (அட.. காத்தாடிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்.)

கழுவமாட்டோம், கவுரவக்குறைச்சல்

மலரினும் மெல்லியது காதல்

இந்த இடுகையின் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்கிறீங்களா? முதல் கட்டுரை செவிலியர் பற்றியது, இரண்டாவது காதல் பற்றி.