March 14, 2014

அருணாசல அற்புதம் 8: சுக்குத் தூளும் நாட்டுச் சர்க்கரையும்

மகாதேவ ஐயர் என்ற பக்தர் ஒருவர் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மாத காலமாக விடாமல் விக்கல் ஏற்பட்டது. இதைப் பார்க்கச் சகியாமல் அவருடைய மகன் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளுக்குக் கடிதம் எழுதி, தன் தந்தையின் துன்பத்தை நீக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார். இங்கே இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, மகனுக்குத் தந்தை மேல் இருந்த அக்கறை. இரண்டாவது, பகவான் இதைப் போக்கிவிடுவார் என்ற முழு நம்பிக்கை.

கடிதம் பகவான் கையை எட்டியது. பகவான் தம் அருகிலிருந்து டி.கே. சுந்தரேசய்யரிடம் “காய்ந்த சுக்குத் தூளும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து உட்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்னு கடிதாசு எழுது” என்று கூறினார். பவரோகத்துக்கு மருந்து தரும் ஞானவைத்தியரான பகவான், தன் அன்பரின் உடல் ரோகத்துக்கும் மருந்து சொல்வதை அற்பமாகக் கருதவில்லை. பாசமுள்ள மகனின் அக்கறையும், நம்பிக்கையும் பகவானின் கருணை என்ற சர்வரோக நிவாரிணியைப் பெறத் தவறவில்லை.

பகவான் மருந்து சொன்னதோடு நிற்கவில்லை. அங்கே மாதவன் என்பவர் சேவை புரிந்துவந்தார். அவரைப் பார்த்து, “இந்த மருந்து நம்மிடம் தயாராக இருக்குமே! அதைத் தேடி எடுக்க முடியுமா பார்!” என்றார். மகரிஷிகள் மாதவனுக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை, வேண்டுகோள் விடுத்தார் என்பதை இந்த வார்த்தைகளில் நாம் கவனிக்க வேண்டும். நாமெல்லாம் செல்லுமிடத்தில் அதிகாரம் செய்வதைப் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் மேலோர்களிடம் வினயம் மேலோங்கிக் காணப்படும். ‘பெருக்கத்து வேண்டும் பணிதல்’ என்று இதைத்தான் வள்ளுவர் குறிப்பிட்டார். ‘வித்யா வினய சம்பன்னே’ (கல்வி பணிவைத் தரும்) என்றும் ‘பண்டித சமதர்சினஹ’ (எல்லோரையும் சமமாக நோக்குகிறவன் அறிஞன்) என்றும் பகவத் கீதை (5:18) குறிப்பிடுகிறது. எதனை அறிந்தபின் வேறெதையும் அறிய வேண்டுவதில்லையே அதனை அறிந்த பகவான் வினயமாக நடந்ததில் வியப்பேது!

பகவான் கேட்டதும் மாதவன் அந்த மருந்தைக் கொண்டுவந்து கொடுத்தார். ஒரு சிறிய உருண்டையை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட பகவான் மிச்சத்தை எல்லோருக்கும் வினியோகிக்கச் சொன்னார். எவ்வளவு அரிய பொருளாயினும் பகவான் அதைத் தான்மட்டும் உண்ணும் வழக்கம் கிடையாது. அத்தகைய பாரபட்சங்களை அவர் ஏற்றுக் கொள்வதில்லை. ‘சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று’ (மரணமில்லா வாழ்க்கை தரும் அமுதத்தைக் கூட வேண்டமாட்டார்கள்) என்றல்லவா நம் முன்னோர் கூறினர். அப்படியிருக்க இந்த மருந்து எம்மாத்திரம்?

‘இந்திரர் அமிழ்தம் 
இயைவது ஆயினும் இனிது எனத் 
தமியர் உண்டலும் இலரே’  (புறநானூறு:பாடல்-182)

“ஆஹா! எனக்கு இந்திர லோகத்தின் அமுதம் கிட்டிவிட்டது! நல்லது, நானே இதை அருந்திவிடுகிறேன்” என்று மேலோர்கள் சாப்பிட்டுவிட மாட்டார்களாம். பகவானுக்கென்று தனியாக ஏதாவது மருந்தை யாராவது கொடுத்தால், “இந்த மருந்து எனக்கு நல்லதென்றால் எல்லாருக்கும் நல்லதாகத்தானே இருக்கும்” என்பாராம்.

பகவான் தாமும் சாப்பிட்டு எல்லோருக்கும் அந்த மருந்தை வினியோகித்த பின் சுந்தரேசய்யரிடம், “சரி, இன்றைக்குச் சாயங்காலத் தபாலிலேயே மகாதேவ ஐயருக்குக் கடிதம் எழுதிவிடு” என்றார். “இனி அதற்கென்ன அவசியம் பகவானே! அவருக்காகத்தான் பகவான் மருந்து சாப்பிட்டாச்சே!” என்று வேடிக்கையாக சுந்தரேசய்யர் கூற பகவான் பலமாகச் சிரித்தார். ஆனால், பகவான் கூறியபடிக் கடிதம் போயிற்று. இது அங்கே போய்ச் சேரும் நேரம், சென்னையிலிருந்து கடிதம் வந்துவிட்டது, அதில் பகவான் மருந்தை உட்கொண்ட அதே நேரத்தில், அதாவது முந்தைய நாள் மதியம் 1.00 மணி அளவில், தனது தந்தையின் விக்கல் நின்றுபோனது என்ற தகவல் இருந்தது.

இங்கே ஒரு மகாபாரத சம்பவம் நினைவுக்கு வருகிறது. துர்வாசரையும் அவரது பத்தாயிரம் சீடர்களையும் வனவாசத்திலிருந்த பஞ்சபாண்டவர்களிடம் உணவு முடியும் வேளையில் அனுப்பி வைக்கிறான் துரியோதனன். பாஞ்சாலியிடம் இந்திரன் கொடுத்த அட்சய பாத்திரம் இருந்தது. அதில் பஞ்சபாண்டவர்களுக்கும், வனத்தில் இருக்கும் ரிஷிகளுக்கும், பிறருக்கும் உணவளித்த பின், தானும் உண்டுவிட்டு, பாஞ்சாலி அதனைக் கழுவி வைத்துவிடுவாள். அப்படிக் கழுவி வைத்துவிட்டால் அன்றைய தினம் அதிலிருந்து மேற்கொண்டு உணவு எதுவும் வராது. அதையறிந்த துரியோதனன், அந்தச் சமயத்தில் அங்கு சென்றடையும்படி துர்வாசர் பட்டாளத்தை அனுப்புகிறான்.

இதின் பின்னால் ஒரு கெட்ட எண்ணம். அது என்னவென்றால், துர்வாசருக்கும் சீட கோடிகளுக்கும் பஞ்சபாண்டவர்களால் உணவளிக்க முடியாது, கோபக்கார துர்வாசரின் சாபத்தை அவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்பதுதான்.

துர்வாசர் படையோடு வந்தார். தர்மபுத்திரர், “சுவாமி, தாங்கள் சென்று நீராடி, ஜபதபம் முடித்து வாருங்கள். உணவு தயாராக இருக்கும்” என்று அனுப்பி வைத்தார். பாஞ்சாலிக்குக் கைகால் ஓடவில்லை. ஆனால் அவளுக்குத் தெரியும், கிருஷ்ண பரமாத்மா இருக்கும்வரை பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பது. “ஹே கிருஷ்ணா! இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்டுவிட்டதே. உன்னையன்றிக் காப்பவர் யார் இருக்கிறார்!” என்று உருகி உருகிப் பிரார்த்தித்தாள்.

துவாரகையில் இருந்த கண்ணன் அடுத்த நொடியில் அந்தக் காட்டில் இருந்தான். வந்தவன், பாஞ்சாலியிடம் உன் கஷ்டம் என்னவென்று கேட்காமல், ஒரேயடியாக, “பாஞ்சாலி, எனக்குப் பசி உயிர் போகிறது. முதலில் ஏதாவது சாப்பிடக் கொடு. பிறகு பேசலாம்” என்று அவசரப்படுத்தினான். “கிருஷ்ணா, நான் இருக்கும் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் நீயும் படுத்துகிறாயே” என்று புலம்பினாள் திரௌபதி. “அதெல்லாம் இருக்கட்டும். நீ ஒன்று செய். உன் அட்சய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வா. என்ன இருக்கிறதென்று பார்க்கிறேன்” என்று சொன்னான் கிருஷ்ணன்.

வேறு வழியில்லாமல், அலம்பிக் கவிழ்த்த அட்சய பாத்திரத்தை எடுத்துவந்தாள் திரௌபதி. அதை வாங்கி மேலும் கீழும் பார்த்தான் கிருஷ்ணன். தன் கையால் அதன் உள்பகுதியைத் தடவிப் பார்த்தான் கிருஷ்ணன். “ஆ! இதோ பார். இன்று நீ கீரை சமைத்தாய் போலிருக்கிறதே. நல்லது” என்று சொன்னபடி, ஒட்டிக்கொண்டிருந்த கீரைத் துணுக்கைக் கையில் எடுத்து மிகுந்த ரசனையோடு தன் நாவில் வைத்துச் சுவைத்து உண்டான் கிருஷ்ணன். அதே நேரத்தில் நதியில் குளித்துக் கொண்டிருந்த துர்வாசருக்கும், பத்தாயிரம் சீடர்களுக்கும் வயிறு நிரம்பி ஏப்பம் வந்தது!

குறும்புக்காரக் கிருஷ்ணர் சும்மா இருப்பாரா, பீமனைக் கூப்பிட்டு, நதிக்குப் போய் துர்வாச முனிவரைப் பரிவாரத்தோடு அழைத்து வரச் சொன்னார். எல்லோரும் ஏக காலத்தில் ஏப்பம் விட்டதுமே துர்வாசருக்கு உண்மை புரிந்துவிட்டது. பாண்டவர்களிடம் போய் அவர்கள் அளிக்கும் விருந்தைச் சாப்பிடாவிட்டால் அது அவர்களை அவமரியாதை செய்வதாகும். போதாக்குறைக்கு பீமசேனன் அங்கே வந்து அவர்களைக் கட்டாயம் தம்மிடத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.

பார்த்தார் துர்வாசர். எதிர்க்கரையில் ஏறித் தனது சீடர்களோடு ஓட்டம் பிடித்தார்.

துவாபர யுகத்தில் பார்த்தசாரதி உண்ட ஒரு கீரைத்துண்டு குருவுடன் பத்தாயிரம் சீடர்களின் வயிறை நிரப்பியது. கலியுகத்தில் ரமணர் தம் சீடர்களோடு உட்கொண்ட சுக்கும் சர்க்கரையும் சென்னையிலிருந்த அன்பரின் நோயைத் தீர்த்து வைத்தது. எல்லாம் இறைவனின் மகிமை, ஞானியரின் பெருமை!

February 14, 2014

அருணாசல அற்புதம் 7: “ஓ அப்படியா!”



கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பகவான் ஸ்ரீ ரமணரின் அணுக்கச் சீடராக இருந்தார். அவர் தனது குடும்பத்தில் பல பேரிழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. எப்போதெல்லாம் துயரம் தாங்க முடியாத நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவர் பகவானிடம் முறையிடுவார். அவர் ஒருமுறை பகவானிடம் கூறினார், “நாங்கள் இத்தகைய இன்னல்களால் துயருறும்போது உங்களிடம் மனத்தாலோ, கடிதம் வாயிலாகவோ முறையிடுகிறோம். அப்போது தாங்கள் எங்கள் நிலைமையை அறிந்து இரக்கத்தால் உந்தப்பட்டு ‘இவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே’ என்று வருந்துவதில்லையா?” என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு பகவான் சொன்ன பதில் மிக முக்கியமானது. ஒரு ஞானியின் தன்மையைச் சொல்வது. பகவான் கூறினார், “அப்படி ஒருவன் வருந்துவானேயானால் அவன் ஞானி அல்லன்”!

சுகம்-துக்கம், இன்பம்-துன்பம், புகழ்-இகழ் என்று இப்படிப்பட்ட வாழ்க்கையின் இருமைகளுக்கு அப்பாற்பட்டவன் ஞானி என்றால், அவன் எப்படி வருத்தமடைவான்?

இத்தகைய ஒரு கேள்வியை பக்தர் ஒருவர் மாதா ஸ்ரீ அம்ருதானந்தமயி தேவியிடம் கேட்டபோது அவர் கூறினார், “உங்களோடு சேர்ந்து நானும் வருந்துவேனாகில் நான் எப்படி உங்களுக்கு உதவமுடியும்? கீழே விழுந்தவனைத் தூக்கிவிட வேண்டுமானால், தூக்கிவிடுபவன் பலசாலியாக இருக்க வேண்டுமல்லவா?” என்று. அதுதான் உண்மை.

ஞானிகளுக்குக் கருணை, இரக்கம் ஆகியவை உண்டு. அவை அன்பை அடிநாதமாகக் கொண்டவை. அவர்களுடைய அன்பு வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காத அன்பு. பிரபஞ்சமளாவிய அன்பு. தனக்கென்று வைத்துக்கொள்ளாத அன்பு. “Love gives, gives and forgives; Selfishness gets, gets and forgets" என்று கூறுவார் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா.

அவர்களுக்கெல்லாம் கொடுக்க மட்டுமே தெரியும்.

“நீ கஷ்டப்பட்ட போது நான் உதவினேனே. கொஞ்சமாவது உனக்கு நன்றி இருக்கிறதா? என்னை நீ வந்து பார்ப்பதே இல்லையே. எனக்கு நீ எதுவும் செய்யவே இல்லையே” என்று அவர்கள் பேசமாட்டார்கள். காரணம் என்ன தெரியுமா? எதையுமே அவர்கள் தாம் செய்வதாக நினைப்பதில்லை. தம்மை ஒரு கருவியாகக் கொண்டு இறைவனே செய்கிறான் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்லை, அதுவே உண்மையும்கூட. ஏனென்றால், ரமணர் கூறியதுபோல, “கடவுள் வேறு ஞானி வேறு அல்ல”.

தேவராஜ முதலியார் என்ற அன்பர் தனது ‘தாயும் நீயே தந்தையும் நீயே’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: “எங்களுக்குத் துன்பம் நேரிட்டால் பகவானிடம் (ரமணரிடம்) மனத்திற்குள் முறையிட்டால் நாங்கள் எங்கிருப்பினும் உடனடியாகத் தேவையான உதவி கிடைத்துவிடுகிறது என்பதை நானும் பக்தர்களும் நன்றாக அறிந்துள்ளோம். ஒரு நெடுநாளைய பக்தர் தாம் பகவானிடம் போனமுறை வந்து சென்ற பின்னர் தமக்கேற்பட்ட பல இன்னல்களைப்பற்றி பகவானிடம் கூறுகிறார். பகவானும் அவர் கூறுவதைப் பொறுமையோடு கேட்பதோடல்லாமல், இடையில் ‘ஓ அப்படியா?’ என்று ஏதாவது கூறவும் செய்கிறார்.”

இங்கே ‘ஓ அப்படியா?’ என்பதைப்பற்றிக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நம்மிடம் யாராவது வந்து நமக்குத் தெரியாததைக் கூறினால் நாம் ‘ஓ அப்படியா? என்று கேட்போம். ஆனால் இங்கேயோ, பகவானிடம் தனது துன்பத்தை முறையிட்டு பகவானே தீர்த்துவைத்ததாக ஒருவர் கூறும்போது ‘ஓ அப்படியா?’ என்று சொல்வது பொருந்தவில்லையே என்று நினைக்கலாம். இதற்கும் விடையை தேவராஜ முதலியாரே கூறுகிறார்.

“பகவான் பாசாங்கு செய்ய மாட்டார். பக்தர்கள் துயரத்தில் முறையிடும்போது அவர்களுக்குக் கிடைக்கும் உதவியைக் குறித்து, “ஆம், தானாகவே அப்படி நடக்கும்” என்று கூறினார்” என்று முடிக்கிறார் முதலியார். இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவென்றால், “கடவுள் வேறு ஞானி வேறு அல்ல” என்பதுதான். ஒரு முழுமையான ஞானியிடம் ஓர் அன்பர் முறையிட்டால், அதை நிவர்த்திக்கத் தெய்வம் நேரடியாக, உடனடியாகச் செயலில் இறங்குகிறது. அப்படி தெய்வம் தானே நேரடியாக உதவி செய்துவிடும் என்ற உண்மை ஞானிக்குத் தெரியும். ஆனாலும் எவருக்கு எப்போதெல்லாம் என்ன நடந்திருக்கிறது என்பதை (அறியும் சக்தி இருந்தாலும்) அவற்றையெல்லாம் அறிந்து வைத்துக்கொள்ள ஞானி முற்படுவதில்லை.

ஒரு சராசரி ஆன்மீகத் தரகராக இருந்தால், “ஆமாம், நான்தான் உனக்காகக் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பார்த்தாயா, நான் சொன்னால் கடவுள் கேட்பார். கொண்டா காணிக்கையை” என்று பிடுங்கிவிடுவார். ஆனால் ஞானியரோ இத்தகைய உலகியல் லாபங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். லாபம்-நஷ்டம், இன்பம்-துன்பம், பெருமை-சிறுமை, புகழ்-இகழ் போன்றவை அவர்களைத் தீண்டுவதில்லை.

நாம் சராசரி மனிதர்கள். இவற்றை அறிவதால் நமக்கு என்ன பயன்?

நாமும் பிறர் துன்பங்களை அறிய வருகிறோம், அவர்களோடு சேர்ந்து நாமும் துயரப்படுகிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், வருத்தம் யாருக்கும் பயன் தருவதில்லை. ‘என்னால் என்ன செய்ய முடியும், நானே பலமற்றவன்” என்று நினைத்துவிடுகிறோம். ஆனால், விவேகானந்தர் கூறியது போல, “பலமே உயிர்வாழ்க்கை; பலவீனமே மரணம்”.

நாம் பலவீனர்களல்ல. உடல்பலம், பணபலம், ஆள்பலம். பதவிபலம் என்று பலவகை பலங்கள் இருக்கலாம். இவற்றால் நீங்கள் ஓரளவு உதவமுடியும், மனோபலம் இருந்தால்.

ஆனால், இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவரின் மிகப்பெரிய பாரம்பரியச் சொத்து ஆன்மபலம். அதை அசட்டை செய்துவிட்டோம். அப்படி ஒன்று இல்லை அல்லது அது நமக்குத் தேவையில்லை என்று எண்ணிவிட்டோம். நமது ஆத்மபலத்தை நாமே உணர்வது எப்படி? அதன்மூலமாக நமக்கும் உலகுக்கும் நன்மை செய்வது எப்படி?

இந்த அறிவை நமக்கு மீட்டுத் தரவே பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, ரமண மகரிஷிகள், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், மாதா அமிர்தானந்தமயி தேவி என்று பல அவதாரங்களும், ஞானிகளும், மகான்களும் பாரதமெங்கும் தோன்றி வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள்.

அவர்களைத் துணையாகக் கொண்டால், அவர்களின் கையைப் பிடித்து சரியான வழியில் நடந்தால், மீண்டும் நம்நாடு ஆன்மீக, உலகியல் சிகரங்களை எட்ட நாம் உதவ முடியும். அதன்மூலம் உலகத்தை சொர்க்கமாக்க முடியும். நம்பிக்கை கொள்ளுங்கள், கதவு திறக்கும், வழி தெரியும், வெளிச்சம் விரியும். அந்த வெளிச்சமாக நீங்களே இருக்கக்கூடும்.

January 28, 2014

Mahabalipuram in Pictures - மகாபலிபுரம் காட்சிகள்

Panoramic View of Seashore Temple - கடற்கரைக் கோவிலின் அழகிய தோற்றம்

Seashore Temple Close-up - கடற்கரைக் கோவில் அருகிலிருந்து

Sri Ranganatha Perumal in a Cave Temple - குடைவரைக் கோவிலில் பள்ளிகொண்ட பெருமாள்

Sri Varaha Murthy in a Cave Temple - குடைவரைக் கோவிலில் ஸ்ரீவராஹ மூர்த்தி

One of Pancha Rathas (Five Chariots) - பஞ்சரதங்களில் ஒன்று

January 07, 2014

மகாபலிபுரம் குகைக்கோவிலில் மஹிஷாசுரமர்தினி

மகாபலிபுரம் குகைக்கோவில் ஒன்றில் காணப்படும் அற்புதமான ‘மஹிஷாசுர மர்தினி’ சிற்பம்.

A lovely carving of Mahishasura Mardhini in the cave temple of Mahabalipuram.


Breath-taking, isn't it?

January 06, 2014

ஈன்று புறந்தந்த இன்பம்.....



மகாபலிபுரத்தில் கண்ட காட்சி, இங்கு உலகு கண்டு மகிழ!