December 26, 2013

புத்தம் சரணம்: சாரிபுத்திரரின் கதை

குருவின்மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதைக் காட்ட ஒரு கதை:

சிராவஸ்தி நகருக்குத் தெற்கே ஒரு நதி இருந்தது. அதன் அக்கரையில் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருப்பவர்களைக் கடைத்தேற்றும் பொருட்டு ஒருநாள் ததாகதர் அங்கு சென்றார். அங்கே நதிக்கரையிலிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார். அவரது தோற்றப் பொலிவைக் கண்டு ஈர்க்கப்பட்ட கிராமத்து மக்கள் அங்கே திரண்டனர். ஆனால் புத்தர் தனது தர்மத்தை விளக்க முற்பட்டபோது அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.

ததாகதர் கிளம்புவதைப் பார்த்த சாரிபுத்திரருக்குத் தானும் அவரது அறவுரையைக் கேட்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவர் வந்தபோது ஆற்றின் கரையில் படகு இருக்கவில்லை. ஆனால் ஆழமாகவும் வேகமாகவும் நீர் ஓடிக்கொண்டிருந்தது. 'இந்த நீரின்மேல் நடந்துபோய் நான் ததாகதரை அடைவேன். என்னை இது தடுக்காது' என்று கூறியபடி அவர் அதில் கால் வைத்தார். நதி ஒரு சலவைக்கல் தளம்போலக் காலுக்கடியே கிடந்தது.

நதியின் நடுப்பகுதியை அடைந்தபோது நீரோட்டம் மிகுந்த விசைகொண்டதாக இருந்தது. பேரலைகள் வீசின. அவரது மனம் தளர்ந்தது. உடனே அவரது
கால்கள் நீரில் அமிழத் தொடங்கின. மீண்டும் புத்தர்மேல் மனதைச் செலுத்தி உறுதிப்படுத்திக் கொண்டு நடந்தபோது நீர் அவரைத் தாங்கி நின்றது.
படகோ பாலமோ இல்லாமல் அத்தனை சுழல்கொண்டு ஓடும் நீரைக் கடந்து அவரால் எப்படி வரமுடிந்தது என்று வியப்போடு சாரிபுத்திரரை அவர்கள்
கேட்டனர்.

'புத்தரின் குரலைக் கேட்கும்வரை நான் அறியாமையில் இருந்தேன். அவரது மொழி எனக்குத் தெளிவைத் தந்தது. எனவே அவரது சொற்பொழிவை
இங்கு கேட்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தேன். நம்பிக்கை ஒன்றே என்னை இங்கு அழைத்துவந்தது. இப்போது நான் ஐயனின் திருமுன்னர்
மகிழ்ச்சியோடு நிற்கிறேன்' என்று கூறினார் சாரிபுத்திரர்.

'நன்றாகக் கூறினாய் சாரிபுத்திரா. நீ கொண்டது போன்ற நம்பிக்கையே உன்னைப் பிறவிக்கடலில் அக்கரை சேர்க்கும்' என்று கூறிய ததாகதர் 'நீங்கள்
உங்கள் தளைகளை அறுத்தெறிந்து உலகவாழ்வின் மறுகரையை அடையும் சத்தியத்தை அறிய வாருங்கள்' என்றார். பின்னர் தனது தர்மத்தை அவர்
விளக்கிக் கூறியபோது அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு, மனம்மாறி தர்மத்தில் சரண்புகுந்தனர்.

புத்தம் சரணம்கிழக்கு பதிப்பகம் வெளியீடு

December 21, 2013

புத்தம் சரணம் - பூரணனின் உறுதி



புத்த பிட்சுக்கள் எத்தனை மன உறுதியோடும், தத்துவத்தில் நம்பிக்கையோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் தமது தர்மத்தைப் பரப்பினர் என்பதற்குப் பூரணனின் கதை ஒரு சான்று.

ஒரு தனவந்தரின் சேவையில் தாசிப் பெண்ணொருத்தி இருந்தாள். அவள் தன் எஜமானரிடம் மிகுந்த விசுவாசத்தோடு இருந்து சேவை செய்ததால், அவளது வேண்டுகோளுக்கிணங்கி அந்த தனவந்தர் அவளைத் தன் படுக்கையறைக்குள் அனுமதித்தார். அவர்களுக்குப் பிறந்தவன்தான் பூரணன். அவன் தனது தந்தைவழிப் பாட்டனாரின் வீட்டில் தனது மூன்று அண்ணன்மாருடன் வளர்ந்து வந்தான்.

பூரணன் அறிவிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியதோடு வணிகத்தில் கணக்கின்றிச் சம்பாதித்தான். அவன் கப்பலில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தான். அவனது திறமை அவனை வணிகர் குழாத்தின் தலைவனாக உயர்த்தியது. ஒருமுறை அவன் வெளிநாட்டிற்குச் சென்று கப்பலில் திரும்பும்போது அதில் சிராவஸ்தியிலிருந்து புத்த தர்மத்தைச் சார்ந்த திரிபுஷன், பல்லிகன் இருவரும் அவனோடு அதில் பயணம் செய்தனர். புத்தர் ஞானம் பெற்றவுடன் முதன்முதலாக அவருக்கு அரிசிப் புட்டும் தேனும் கொண்டுபோய்க் கொடுத்தவர்கள் இவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

இவர்கள் இருவரும் கப்பலில் பயணம் செய்தாலும் வேளைதோறும் தமது தர்மத்தின் கடமைகளைத் தவறாது செய்வதைப் பார்த்தான் பூரணன். அவர்கள் காலையிலும் மாலையிலும் தர்மசூத்திரங்களை ஓதினர், தியானம் செய்தனர், மலர்கள் தூவி நறும்புகை எழுப்பினர். அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. அவர்களிடம் போய்ப் பூரணன், 'சகோதரர்களே! நீங்கள் யாருடைய மாணாக்கர்கள்? நீங்கள் பின்பற்றும் அறம் யார் படிப்பித்தது?' என்று பலவகையாகக் கேட்டு புத்தரைப் பற்றி அறிந்துகொண்டான்.

கப்பலில் இருந்து இறங்கிச் சிராவஸ்திக்குப் போன கையோடு அவன் அனாதபிண்டிகரைப் பார்த்தான். அவர் பூரணனைச் சாக்கிய முனியிடம் அழைத்துச் சென்றார். சாக்கிய முனி பூரணனின் தயார்நிலையைப் புரிந்துகொண்டு அவனுக்குச் சன்னியாச தீட்சை அளித்தார். அப்போது புத்தர் கூறினார், 'எனக்கு ஒருவர் தரக்கூடிய மிகப் பெரும் பரிசு, அவர் புத்த தர்மத்தை மேற்கொள்வதுதான்.' தியாகமே புத்த தர்மத்தின் தலையாய ஒழுக்கம் என்பதையும் சுருக்கமாகப் பூரணனுக்கு வலியுறுத்தினார்.

அருகிலே சுரோணபரந்தா என்ற ஓரிடம் இருந்தது. அங்கே சற்றும் முன்னேறாத, கொடுமையான தன்மையைக் கொண்டிருந்த காட்டுவாசிகள் வசித்தனர். பூரணன் அங்கு சென்று அவர்களைப் பௌத்தர்களாக மாற்ற விரும்பினான்.

'சுரோணபரந்தாவின் வாசிகள் முரடர்கள், கொலைக்கு அஞ்சாதவர்கள், முன்கோபிகள், வசவுகளை அள்ளித் தெளிப்பவர்கள். பூரணா, உன்னைப் பார்த்தால் அவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு பழிப்பார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டார் புத்தர்.

'பகவ! சுரோணபரந்தாவின் வாசிகள் என் முகத்துக்கு நேராக என்னை ஏசினால், தீய வார்த்தைகளால் பழித்தால், நான் இப்படிக் கருதுவேன்: இந்த சுரோணபரந்தா மக்கள் எத்தனை நல்லவர்கள். இவர்கள் மிக மென்மையானவர்கள். என்னைக் கல்லாலோ கையாலோ அடிக்கவில்லையே'

'ஒருவேளை அவர்கள் உன்னைக் கல்லாலோ கையாலோ அடித்தால் என்ன நினைப்பாய் பூரணா?'

'இவர்கள் எத்தனை மென்மையானவர்கள், கல்லாலும் கையாலும்தான் அடிக்கிறார்கள். என்னைக் கம்பாலோ கத்தியாலோ தாக்கவில்லையே என்று நினைப்பேன்.'

'அவர்கள் உன்னைக் கம்பாலோ கத்தியாலோ தாக்கினால் என்ன நினைப்பாய் பூரணா?'

'இவர்கள் எத்தனை மென்மையானவர்கள், கம்பாலும் கத்தியாலும்தான் தாக்குகிறார்கள். என்னைக் கொன்றுவிட வில்லையே என்று நினைப்பேன்.'

'அவர்கள் உன்னைக் கொல்ல முயற்சித்தால் என்ன நினைப்பாய் பூரணா?'

'பகவ! இந்தச் சுரோணபரந்தாவின் மக்கள் எத்தனை நல்லவர்களும் மென்மையானவர்களும்! துன்பமயமான இந்த உடலை விட்டு எளிதில் நீங்க இவர்கள் உதவி செய்கிறார்களே என்று நினைப்பேன்.'

'நல்லது பூரணா! சுரோணபரந்தாவில் புத்த தர்மத்தைப் பிரசாரம் செய்ய நீயே தகுந்தவன். அதற்கான பொறுமையின் உச்சம் உனக்கே வாய்த்திருக்கிறது. விடுதலை பெற்றுவிட்ட நீ மற்றவர்களையும் விடுவி. மறுகரையை அடைந்துவிட்ட நீ மற்றவர்களையும் கரையேற்று' என்று கூறித் ததாகதர் அவனை ஆசிர்வதித்து அனுப்பிவைத்தார்.

ஆதாரம்: புத்தம் சரணம், கிழக்கு பதிப்பகம் வெளியீடு

December 06, 2013

அருணாசல அற்புதம் 6: அகத்தில் உள்ளது சுகம்

அறிவியல் வளர்ந்த வரலாற்றைப் படித்தால், இறவா மருந்தையும் (காயகற்பம், Elixir of life), இரும்பு போன்ற கீழ்நிலை உலோகங்களைப் பொன்னாக்கும் வழியையும் (ரசவாதம், Alchemy) கண்டுபிடிக்கும் முயற்சிகளில்தான் மருத்துவம், வேதியியல் போன்றவை வளர்ந்தன என்று பார்க்கிறோம். எல்லா நோய்களையும் குணமாக்கும் 'சர்வரோக நிவாரணி’ (panacea) ஒன்று உண்டு என்றுகூட மனிதன் நம்பி அதைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைச் செய்ததுண்டு. இவையெல்லாம் வெளிப்புறமான, உலகாயதமான வழிகள். மிக நீண்ட வழிகள். இவற்றில் பெற்ற வெற்றிகளால் இன்று மனிதனுக்கு ஆயுள் நீடித்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் சுகவாழ்க்கை கிட்டியிருக்கிறதா என்பது கேள்விக்குறி.


சுகமான, அமைதியான வாழ்க்கை என்பது உடலைமட்டும் பொறுத்ததல்ல. அதனால்தான் நமது சித்தர்கள் சுகவாழ்க்கைக்கு முக்கியம் அகவாழ்க்கை என்பதை உணர்ந்தார்கள். அதன் தரத்தை மேம்படுத்த பிராணாயாமம், யோகம், தியானம் என்னும் அற்புத முறைகளை வகுத்தார்கள். எப்படி ஒரு நதியைக் கடக்கப் படகு ஓட்டை, உடைசல் இல்லாமல் இருக்க வேண்டுமோ, அதுபோல, உலகவாழ்க்கை என்னும் நதியைக் கடந்து ஆன்மீகத்தின் உச்சமாகிய அனுபூதியைப் பெறுவதற்கு உடல்நலம் மிகவும் அவசியம் என்பதால் அவர்கள் உடலை வலுவாக்க ஹடயோகத்தையும் வகுத்தார்கள். பிராணாயாமம், ஹடயோகப் பயிற்சிகளின் வழியே உடலின் உள்ளேயும் வெளியேயும் இரும்புபோல ஆக்க முடியும் என்பதைப் பல ஹடயோகிகள் மருத்துவ உலகுக்கு நிரூபித்துள்ளனர்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளை பாரதத்துக்கு அப்பால் உள்ள ஆன்மீக சாதகர்களுக்கு அறியத் தந்தவர் பால் பிரண்டன் என்ற ஆங்கிலேயப் பத்திரிகையாளர். அவர் தனது ‘A Search in Secret India' என்ற நூலில் பிளேடு தின்று அமிலம் குடிக்கும் யோகி, மண்ணுக்குள்ளே மூச்சுக்கூட விடமுடியாமல் புதைந்து வாரக்கணக்கில் உயிரோடு இருக்க வல்ல யோகி, கேட்ட மாத்திரத்தில் அரியவகைப் பழங்களை வரவழைத்துத் தரமுடிந்த யோகி எனப் பலவகைப்பட்ட யோகிகளைச் சந்தித்ததை மிகச் சுவையாக விவரித்திருக்கிறார். இவையெல்லாம் மிகுந்த முயற்சியின் பேரில் அடையப்படும் சக்திகள்தாம். அதேநேரத்தில் இவற்றின் மாயைக்கு மயங்கி மற்றவர்களையும் மயக்கிக் காலம் கழிப்பது முற்றிலும் வீணானது.

இதை உணர்த்தவே ரமண மகரிஷி, கோரக்நாதர் மற்றும் அல்லமர் இடையே நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுவதுண்டு. கோரக்நாதர் கடுமையான ஹடயோகப் பயிற்சிகளின் மூலம் உடலின் குற்றங்களை நீக்கி, வலுப்படுத்தி ஆயிரம் ஆண்டுகள் வாழும் காயசித்தியை அடைந்தார். அது அவருக்குப் பெரும் கர்வத்தைக் கொடுத்தது. அவர் ஞானிகள், புண்ணிய புருஷர்களை அணுகித் தம் உடலைச் சோதிக்கும்படிக் கூறுவார். ஒரு வாளை எடுத்து அவர்மீது வீசினால், அது அவர் உடலில் பட்டதும், ஒரு வெண்கல மணியைப் போல ‘டணார்’ என்று ஒலியெழுப்பிச் சற்று நேரம் ரீங்காரமிட்டு அடங்கும். காயசித்தியை மரணமில்லாப் பெருவாழ்வென்று நினைத்துவிட்ட அவர் அந்தக் கர்வத்தோடு அதே பகுதியில் வாழ்ந்து வந்த அல்லம பிரபு என்ற ஞானியை அணுகினார். அல்லமரை சாட்சாத் ஸ்ரீ சங்கரரின் அவதாரம் என்று கருதியதோடு, மக்கள் பெருமளவில் சென்று பார்த்து ஆனந்தமடைவது கோரக்நாதருக்குத் தெரியவந்தது.

அல்லமரிடம் போய்த் தனது அதிசாமர்த்தியத்தைக் காண்பிக்க ஆவல் கொண்டார் கோரக்நாதர். போய்ப் பார்த்தால், அத்தனை பிரபலமாக இருந்த அல்லம பிரபுவோ மெலிந்து நலிந்த தேகம் கொண்டவராக இருந்தார். கோரக்நாதருக்கு அவரைப் பார்க்க ஏளனமாக இருந்தது. தாம் சிரித்ததோடு உரக்கவே கேலி செய்தும் பேசினார், “ஆஹா! உங்களை எல்லோரும் பெரிய ஞானி, மரணத்தை வென்றவர் என்றல்லவா சொல்கிறார்கள். இந்த வற்றல் உடம்பை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கே மரணத்துக்குப் பயப்படாமல் இருப்பது! இங்கே என் உடலைப் பாருங்கள். என்ன வலிமை, என்ன உறுதி! எவரும் இதைச் சிதைக்க முடியாது. சந்தேகமிருந்தால் நீங்கள் ஒரு வாளால் வெட்டிப் பாருங்கள். அப்போதுதான் நான் அடைந்துள்ள காயசித்தியின் மகிமை உங்களுக்குப் புரியும்” என்றெல்லாம் சவால் விட்டார்.

“அன்பரே, இவை ஆபத்தான சோதனைகள், நமக்கு வேண்டாம். இவற்றில் எனக்கு ஆர்வமும் இல்லை” என்றார் அல்லமர். விடாமல் கோரக்நாதர் வற்புறுத்தினார். வேறு வழியின்றி அல்லம பிரபு ஒரு கத்தியை எடுத்து கோரக்நாதரின் உடலில் பாய்ச்சினார். அந்தக் கத்தி அவரது உடலுக்குள் நுழையவே இல்லை. மாறாக, ஒரு உலோகத்தைத் தாக்கிய அதிர்வு கொண்ட ஒலியை எழுப்பியது, அவ்வளவுதான். அதைக் கண்டு தாம் வியப்புற்றவர் போலப் பேசினார் அல்லம பிரபு, “அன்பரே, நீங்கள் அடைந்துள்ளது மிக அற்புதமான ஆற்றல். நல்லது, நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். எப்படி நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் உங்கள்மீது கத்தி வீசினேனோ, அதேபோல நீங்கள் என்மீது கத்தி வீச வேண்டும். இந்தாருங்கள் வாள்” என்றார்.

‘நானோ பல ஆண்டுகள் பயிற்சியில் காயசித்தி பெற்றவன். இவரோ வற்றல் சாமியார். நாம் கத்தி பாய்ச்சி இவர் இறந்து போனால் வம்பு வரும்’ என்று பயந்தார் கோரக்நாதர். “வேண்டாம் சுவாமி, நீங்கள் கத்தி பட்டால் இறந்து போவீர்கள், நான் செய்யமாட்டேன்” என்று மறுத்தார். “அதனாலென்ன, நான் இறந்து போனால் நஷ்டம் எதுவுமில்லை. அதற்கு உங்களைப் பொறுப்பாளி ஆக்கவும் மாட்டேன்” என்று உறுதியளித்தார் கோரக்நாதர்.

அதற்கு உடன்பட்ட கோரக்நாதர் வாளைக் கையில் வாங்கி அல்லமரின் மீது பாய்ச்சினார். இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழாக என்று பலவகைகளில் வாளை வீசினார். அந்த வாள் எந்தத் தடங்கலும் இல்லாமல் அல்லமரின் உடல் ஏதோ காற்றால் ஆனதுபோலப் போய் வந்ததே அன்றி, அல்லமருக்கு எதுவும் ஆகவில்லை. கோரக்நாதருக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை. “நான் என்ன சாதித்தேன்! இந்த மண்பாண்டம் போன்ற உடலை வச்சிரமாக்கினேன், அவ்வளவுதான். ஆனால் பூஞ்சையாகக் காணும் உங்கள் உடலோ, பௌதிக விதிகளை மீறியிருக்கிறது. நீங்கள் உன்னதமான ஞானநிலையில் இருப்பவர். அருள்கூர்ந்து என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு ஞானப்பாதையைக் காட்டி அருள வேண்டும்” என்று மன்றாடிப் பிரார்த்தித்தார்.

இதைத்தான் தாயுமானவரும் பாடினார்:

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி 
ஆளினும் கடல்மீதினிலே 
ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக 
அம்பொன் மிக வைத்த பேரும் 
நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர் 
நெடுநாள் இருந்த பேரும் 
நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் 
உறங்குவதுமாக முடியும் 
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே 
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப் 
பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற 
பரிசுத்த நிலையை அருள்வாய் 
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற 
பரிபூரண ஆனந்தமே.

இப்போது நான் சொல்ல வருவது ஆசைப்படாதீர்கள் என்றல்ல. அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குச் செலவிடும் உடல், மனச் சக்திகளின் ஒரு பகுதியையாவது ஆன்மத் தேடலில் செலவிட்டால், நமக்கு நிம்மதியான, ஆனந்தம் நிரம்பிய வாழ்க்கை கிடைக்கும். மன அழுத்தம், கொந்தளிப்பு, கோபதாபம், விருப்பு வெறுப்பு, மனச்சிதைவு என்று பல்வேறு மனரீதியான துன்பங்களுக்கும் நோய்களுக்கும் ஆளாகி, உறக்கம் இழந்து தவிக்க மாட்டோம். நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அன்பும் ஆனந்தமும் கொடுப்பவர்களாக வாழ்வோம். இதுதான் மெய்யான ஆன்மீகத்தின் சிறப்பு. இதைச் செய்ய ஆசைப்படுங்கள்.

உங்களைத் தேடி குரு வருவார்.

(தொடரும்)