மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியே தற்கால மதுரைநகர் வளர்ந்து பின் விரிவடைந்துள்ளது. தற்போது இருக்கும் சொக்கநாதர் கோவில் (இவ்வளவு பெரிதாக) கட்டப்பட்டதும், அதைச் சுற்றி வளர்ந்திருக்கும் நகரும் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் ஏற்பட்டவை என அறிகிறேன். கி.பி. 13 முதல் 16 ஆம் நூற்றாண்டுவரை மதுரை தில்லி சுல்தான்களின் ஆட்சியின்கீழ் இருந்ததாகவும், மாலிக் காபூர் மதுரையைத் தாக்குகையில் இங்கிருந்த கோவில்களைச் சிதைத்து, அவற்றிற்கு வழிவழியாக அரசர்கள் கொடுத்திருந்த செல்வங்களைக் கவர்ந்து சென்றதாகவும் சரித்திரம் சொல்கிறது. அவர்களே கோட்டைகளையும் தகர்த்திருக்கலாம்.
இந்தக் கோட்டைதான் மதுரைக் கோட்டை என இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கூறப்பட்டதோ? இந்த சந்தேகம் ஏற்பட்டதற்குக் காரணம் சிலப்பதிகாரமும், பரிபாடலும் மதுரையைப் பற்றிச் சொல்லும் சில தகவல்கள்.
சிலப்பதிகாரத்தின் மதுரையில் சிவன், திருமால், பலராமன், முருகன் ஆகியோரின் கோவில்களும், அறச்சாலைகளும், அரசனின் அரண்மனையும் இருந்தனவாம்.
நுதல்விழி நாட்டத்து இறையோன் கோவிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோவிலும்
(சிலப்பதிகாரம்: ஊர்காண் காதை: அடிகள் 6-12)
[நுதல்விழி நாட்டத்து இறைவன் - நெற்றிக்கண் பார்வை உடைய சிவன்; உவணச் சேவல் உயர்த்தோன் - கருடக்கொடியை உடைய திருமால்; மேழி வலன் உயர்த்த - ஏரை ஆயுதமாக ஏந்திய பலராமன்; கோழிச்சேவற்கொடியோன் - முருகன்]
ஆனால் இவையெல்லாம் இருந்த மதுரை நகரை அடைவதற்குக் கோவலன் ஒரு கோட்டைவாயில் வழியே நுழையவேண்டியிருந்தது. கோட்டையைச் சுற்றி காவற்காடும், அகழியும் இருந்தது. யானகைள் வருவதற்காக நிலத்தின் அடியே ஒரு சுருங்கைப் பாதை (சுரங்கம்) அமைக்கப்பட்டிருந்தது. கோவலன் அதன் வழியே மதுரைக்குள் நுழைந்தான் என்று சொல்கிறது சிலப்பதிகாரம்:
பெருங்கரை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகி
(சிலப்பதிகாரம்: ஊர்காண் காதை: 64-65)
பழமுதிர் சோலையின் மிக அருகே இருக்கிறது நூபுரகங்கை. இதை சிலப்பதிகாரமும் பரிபாடலும் 'சிலம்பாறு' என்று குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம் சொன்னதுபோல யானை செல்வதற்கான சுருங்கை வழி ஒன்று இருந்ததையும் பரிபாடல் குறிப்பிடுகிறது:
நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து
கடுமா களிறு அணைத்துக் கைவிடு நீர்போலும்
நெடுநீர் மலி புனல் நீண்மாடக் கூடல்
(பரிபாடல் 20: அடிகள் 104-106)
நீண்ட சுரங்கப் பாதை வழியே வந்த கோபம்கொண்ட யானைகள் தம் தும்பிக்கை வழியே தண்ணீரைப் பீய்ச்சுவதுபோலும் மதுரைக்கோட்டையின் மேலிருந்து சலதாரைகள் வழியே நீர் விழுந்ததாம்.
இதைத் தவிர திருப்பரங்குன்றத்தில் ஒரு அருவி இருந்ததாகவும், அங்கே மதுரைவாசிகள் மிக உல்லாசமாகப் போய் நீராடியதையும் மிக விரிவாகச் சொல்கிறது பரிபாடல். அதைக் கேட்டுப் பெருமூச்சுத்தான் விடமுடிகிறது.
மதுரை மற்றும் திருமாலிருஞ்சோலை பற்றி நான் அறிய மிக உதவியாக இருந்தவை:
http://www.thisaigal.com/july04/tnkovilunicod.html
http://www.amutha.net/madurai/temple/01.htm
பிறகோட்டைகளைப் பற்றிப் பேசினால், செஞ்சி, புதுக்கோட்டை போன்ற பல இடங்களில் சற்றே காலத்தால் பிந்திய கோட்டைகள் காணக்கிடைக்கின்றன. ஆனால் 2000 ஆண்டுகளுக்குமுன் பேசப்படுபவை மண்மேடிட்டுப் போயிருக்கும் என்பது அதிக சாத்தியம். அவற்றைத் தொலையுணர்தல் (remote sensing) மூலம் இனங்காண முடியுமா என்று தெரியவில்லை.
தொலையுணர்தல் மூலம் காணப்பட்டதாகச் செய்தித்தாள்களில் வந்தவை: குஜராத் கடற்கரையில் சிறிது தூரத்தில் மூழ்கிக்கிடக்கும் துவாரகா நகர், கடலுக்கடியில் இலங்கைக்கு இராமபிரானால் போடப்பட்ட சேது. ஆனால் இன்றைக்கு முயற்சித்தால் கூகிள் தேடலில் இரண்டு செய்திகளுமே எனக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறது. நம்முடைய காலத்தில் அகழ்வு மற்றும் ஆராய்ச்சி நமது கொள்கைகளுக்கேற்ற ஆதாரங்கள் தேடுவதாக இருக்கிறதோ என்றும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.
ஆனால் நந்திதா கிருஷ்ணா (இயக்குநர், சி.பி. ஆர்ட் காலரி) ஒரு அகழ்வாய்வு நிபுணரின் சொற்பொழிவைப் பற்றிப் பேசுகிறார். அதிலே வட இந்தியாவில் 35 இடங்களிலே மகாபாரதம் சம்பந்தப்பட்ட அகழ்வுகள் நடந்து அவற்றில் ஏராளமான உடைந்த மண்பாண்டங்கள், அம்புநுனிகள், இரும்புப் பொருள்கள், இன்னும் பல சான்றுகள் கிடைத்ததாகவும் சொல்கிறார். அவர் எழுப்பும் கேள்வியும் இதுதான்: எல்லாம் கிடைத்தும் இவ்வாராய்ச்சிகள் காரணம் சொல்லாமல் நிறுத்தப்பட்டன. ஏன்? வேறு எந்த நாட்டிலேனும் இப்படித் தனது தொல்லிலக்கியம் பேசுகிறவற்றுக்குச் சான்று கிடைத்தால் அது மேற்கொண்டு தொடராமல் நிறுத்தப்படுமா? இந்தக் கட்டுரையும் முழுவதும் படித்தறியத் தக்கது: http://www.veda.harekrsna.cz/encyclopedia/krishna-archeology.htm
The most intriguing element here is the ancient underwater sandbank known as Adam's Bridge, which connects India to Sri Lanka. Geological evidence shows that an isthmus, which, according to temple records was breached by a violent storm in 1480, once bridged the gap. Some new pictures taken by a NASA satellite show this "bridge" in all its glory. The 30-km-long connection, which stretches across the Palk Strait, is actually a narrow and shallow ridge of sand and rocks connecting Mannar Island in Sri Lanka to Pamban Island in India.
கட்டுரையை முழுதும் படிக்க: http://www.the-week.com/23mar16/life12.htm
இராமரின் பாலம் Adam's Bridge ஆகிவிட்டதையும் கவனிக்கவேண்டும்.
ஒரு சில கோட்டைகளைப் பற்றிய சுவாரசியமான பவித்ராவின் கட்டுரைகள் படிக்க: http://pavithra.blogdrive.com/archive/cm-7_cy-2004_m-7_d-27_y-2004_o-5.html
எப்படியானாலும், விவரங்களையும் ஆதாரங்களையும் தெரிவிப்பதுதான் என் வேலை. அதைச் செய்துவிட்டேன். யார் எதை எப்போது தோண்டுகிற காலம் வரும், நிரூபிப்பார்கள் என்பதெல்லாம் நமது அறிவுக்கு எட்டுவதாக இல்லை.
1 comment:
ÅÃÄ¡üÚ ÌÈ¢ôÒ¸¨Ç ÀÊì¸ þÉ¢¨Á¡ö ¯ûÇÐ.
§¸¡ÒÃò¾¢ø ¬í¸¢§ÄÂá ? ¾Á¢ú¿¡ðÎ ¾Äí¸ÙìÌ þýÛõ ¦ºøÄ¡¾¾¡ø þÐ ÀüÈ¢ ¦¾Ã¢Â¡Ð.
¦¾¡¼÷óÐ ±ØÐí¸û
«ýÒ¼ý ¾õÀ¢
¸ƒý
Post a Comment