December 26, 2013

புத்தம் சரணம்: சாரிபுத்திரரின் கதை

குருவின்மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதைக் காட்ட ஒரு கதை:

சிராவஸ்தி நகருக்குத் தெற்கே ஒரு நதி இருந்தது. அதன் அக்கரையில் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருப்பவர்களைக் கடைத்தேற்றும் பொருட்டு ஒருநாள் ததாகதர் அங்கு சென்றார். அங்கே நதிக்கரையிலிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார். அவரது தோற்றப் பொலிவைக் கண்டு ஈர்க்கப்பட்ட கிராமத்து மக்கள் அங்கே திரண்டனர். ஆனால் புத்தர் தனது தர்மத்தை விளக்க முற்பட்டபோது அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.

ததாகதர் கிளம்புவதைப் பார்த்த சாரிபுத்திரருக்குத் தானும் அவரது அறவுரையைக் கேட்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவர் வந்தபோது ஆற்றின் கரையில் படகு இருக்கவில்லை. ஆனால் ஆழமாகவும் வேகமாகவும் நீர் ஓடிக்கொண்டிருந்தது. 'இந்த நீரின்மேல் நடந்துபோய் நான் ததாகதரை அடைவேன். என்னை இது தடுக்காது' என்று கூறியபடி அவர் அதில் கால் வைத்தார். நதி ஒரு சலவைக்கல் தளம்போலக் காலுக்கடியே கிடந்தது.

நதியின் நடுப்பகுதியை அடைந்தபோது நீரோட்டம் மிகுந்த விசைகொண்டதாக இருந்தது. பேரலைகள் வீசின. அவரது மனம் தளர்ந்தது. உடனே அவரது
கால்கள் நீரில் அமிழத் தொடங்கின. மீண்டும் புத்தர்மேல் மனதைச் செலுத்தி உறுதிப்படுத்திக் கொண்டு நடந்தபோது நீர் அவரைத் தாங்கி நின்றது.
படகோ பாலமோ இல்லாமல் அத்தனை சுழல்கொண்டு ஓடும் நீரைக் கடந்து அவரால் எப்படி வரமுடிந்தது என்று வியப்போடு சாரிபுத்திரரை அவர்கள்
கேட்டனர்.

'புத்தரின் குரலைக் கேட்கும்வரை நான் அறியாமையில் இருந்தேன். அவரது மொழி எனக்குத் தெளிவைத் தந்தது. எனவே அவரது சொற்பொழிவை
இங்கு கேட்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தேன். நம்பிக்கை ஒன்றே என்னை இங்கு அழைத்துவந்தது. இப்போது நான் ஐயனின் திருமுன்னர்
மகிழ்ச்சியோடு நிற்கிறேன்' என்று கூறினார் சாரிபுத்திரர்.

'நன்றாகக் கூறினாய் சாரிபுத்திரா. நீ கொண்டது போன்ற நம்பிக்கையே உன்னைப் பிறவிக்கடலில் அக்கரை சேர்க்கும்' என்று கூறிய ததாகதர் 'நீங்கள்
உங்கள் தளைகளை அறுத்தெறிந்து உலகவாழ்வின் மறுகரையை அடையும் சத்தியத்தை அறிய வாருங்கள்' என்றார். பின்னர் தனது தர்மத்தை அவர்
விளக்கிக் கூறியபோது அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு, மனம்மாறி தர்மத்தில் சரண்புகுந்தனர்.

புத்தம் சரணம்கிழக்கு பதிப்பகம் வெளியீடு

December 21, 2013

புத்தம் சரணம் - பூரணனின் உறுதி



புத்த பிட்சுக்கள் எத்தனை மன உறுதியோடும், தத்துவத்தில் நம்பிக்கையோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் தமது தர்மத்தைப் பரப்பினர் என்பதற்குப் பூரணனின் கதை ஒரு சான்று.

ஒரு தனவந்தரின் சேவையில் தாசிப் பெண்ணொருத்தி இருந்தாள். அவள் தன் எஜமானரிடம் மிகுந்த விசுவாசத்தோடு இருந்து சேவை செய்ததால், அவளது வேண்டுகோளுக்கிணங்கி அந்த தனவந்தர் அவளைத் தன் படுக்கையறைக்குள் அனுமதித்தார். அவர்களுக்குப் பிறந்தவன்தான் பூரணன். அவன் தனது தந்தைவழிப் பாட்டனாரின் வீட்டில் தனது மூன்று அண்ணன்மாருடன் வளர்ந்து வந்தான்.

பூரணன் அறிவிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியதோடு வணிகத்தில் கணக்கின்றிச் சம்பாதித்தான். அவன் கப்பலில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தான். அவனது திறமை அவனை வணிகர் குழாத்தின் தலைவனாக உயர்த்தியது. ஒருமுறை அவன் வெளிநாட்டிற்குச் சென்று கப்பலில் திரும்பும்போது அதில் சிராவஸ்தியிலிருந்து புத்த தர்மத்தைச் சார்ந்த திரிபுஷன், பல்லிகன் இருவரும் அவனோடு அதில் பயணம் செய்தனர். புத்தர் ஞானம் பெற்றவுடன் முதன்முதலாக அவருக்கு அரிசிப் புட்டும் தேனும் கொண்டுபோய்க் கொடுத்தவர்கள் இவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

இவர்கள் இருவரும் கப்பலில் பயணம் செய்தாலும் வேளைதோறும் தமது தர்மத்தின் கடமைகளைத் தவறாது செய்வதைப் பார்த்தான் பூரணன். அவர்கள் காலையிலும் மாலையிலும் தர்மசூத்திரங்களை ஓதினர், தியானம் செய்தனர், மலர்கள் தூவி நறும்புகை எழுப்பினர். அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. அவர்களிடம் போய்ப் பூரணன், 'சகோதரர்களே! நீங்கள் யாருடைய மாணாக்கர்கள்? நீங்கள் பின்பற்றும் அறம் யார் படிப்பித்தது?' என்று பலவகையாகக் கேட்டு புத்தரைப் பற்றி அறிந்துகொண்டான்.

கப்பலில் இருந்து இறங்கிச் சிராவஸ்திக்குப் போன கையோடு அவன் அனாதபிண்டிகரைப் பார்த்தான். அவர் பூரணனைச் சாக்கிய முனியிடம் அழைத்துச் சென்றார். சாக்கிய முனி பூரணனின் தயார்நிலையைப் புரிந்துகொண்டு அவனுக்குச் சன்னியாச தீட்சை அளித்தார். அப்போது புத்தர் கூறினார், 'எனக்கு ஒருவர் தரக்கூடிய மிகப் பெரும் பரிசு, அவர் புத்த தர்மத்தை மேற்கொள்வதுதான்.' தியாகமே புத்த தர்மத்தின் தலையாய ஒழுக்கம் என்பதையும் சுருக்கமாகப் பூரணனுக்கு வலியுறுத்தினார்.

அருகிலே சுரோணபரந்தா என்ற ஓரிடம் இருந்தது. அங்கே சற்றும் முன்னேறாத, கொடுமையான தன்மையைக் கொண்டிருந்த காட்டுவாசிகள் வசித்தனர். பூரணன் அங்கு சென்று அவர்களைப் பௌத்தர்களாக மாற்ற விரும்பினான்.

'சுரோணபரந்தாவின் வாசிகள் முரடர்கள், கொலைக்கு அஞ்சாதவர்கள், முன்கோபிகள், வசவுகளை அள்ளித் தெளிப்பவர்கள். பூரணா, உன்னைப் பார்த்தால் அவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு பழிப்பார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டார் புத்தர்.

'பகவ! சுரோணபரந்தாவின் வாசிகள் என் முகத்துக்கு நேராக என்னை ஏசினால், தீய வார்த்தைகளால் பழித்தால், நான் இப்படிக் கருதுவேன்: இந்த சுரோணபரந்தா மக்கள் எத்தனை நல்லவர்கள். இவர்கள் மிக மென்மையானவர்கள். என்னைக் கல்லாலோ கையாலோ அடிக்கவில்லையே'

'ஒருவேளை அவர்கள் உன்னைக் கல்லாலோ கையாலோ அடித்தால் என்ன நினைப்பாய் பூரணா?'

'இவர்கள் எத்தனை மென்மையானவர்கள், கல்லாலும் கையாலும்தான் அடிக்கிறார்கள். என்னைக் கம்பாலோ கத்தியாலோ தாக்கவில்லையே என்று நினைப்பேன்.'

'அவர்கள் உன்னைக் கம்பாலோ கத்தியாலோ தாக்கினால் என்ன நினைப்பாய் பூரணா?'

'இவர்கள் எத்தனை மென்மையானவர்கள், கம்பாலும் கத்தியாலும்தான் தாக்குகிறார்கள். என்னைக் கொன்றுவிட வில்லையே என்று நினைப்பேன்.'

'அவர்கள் உன்னைக் கொல்ல முயற்சித்தால் என்ன நினைப்பாய் பூரணா?'

'பகவ! இந்தச் சுரோணபரந்தாவின் மக்கள் எத்தனை நல்லவர்களும் மென்மையானவர்களும்! துன்பமயமான இந்த உடலை விட்டு எளிதில் நீங்க இவர்கள் உதவி செய்கிறார்களே என்று நினைப்பேன்.'

'நல்லது பூரணா! சுரோணபரந்தாவில் புத்த தர்மத்தைப் பிரசாரம் செய்ய நீயே தகுந்தவன். அதற்கான பொறுமையின் உச்சம் உனக்கே வாய்த்திருக்கிறது. விடுதலை பெற்றுவிட்ட நீ மற்றவர்களையும் விடுவி. மறுகரையை அடைந்துவிட்ட நீ மற்றவர்களையும் கரையேற்று' என்று கூறித் ததாகதர் அவனை ஆசிர்வதித்து அனுப்பிவைத்தார்.

ஆதாரம்: புத்தம் சரணம், கிழக்கு பதிப்பகம் வெளியீடு

December 06, 2013

அருணாசல அற்புதம் 6: அகத்தில் உள்ளது சுகம்

அறிவியல் வளர்ந்த வரலாற்றைப் படித்தால், இறவா மருந்தையும் (காயகற்பம், Elixir of life), இரும்பு போன்ற கீழ்நிலை உலோகங்களைப் பொன்னாக்கும் வழியையும் (ரசவாதம், Alchemy) கண்டுபிடிக்கும் முயற்சிகளில்தான் மருத்துவம், வேதியியல் போன்றவை வளர்ந்தன என்று பார்க்கிறோம். எல்லா நோய்களையும் குணமாக்கும் 'சர்வரோக நிவாரணி’ (panacea) ஒன்று உண்டு என்றுகூட மனிதன் நம்பி அதைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைச் செய்ததுண்டு. இவையெல்லாம் வெளிப்புறமான, உலகாயதமான வழிகள். மிக நீண்ட வழிகள். இவற்றில் பெற்ற வெற்றிகளால் இன்று மனிதனுக்கு ஆயுள் நீடித்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் சுகவாழ்க்கை கிட்டியிருக்கிறதா என்பது கேள்விக்குறி.


சுகமான, அமைதியான வாழ்க்கை என்பது உடலைமட்டும் பொறுத்ததல்ல. அதனால்தான் நமது சித்தர்கள் சுகவாழ்க்கைக்கு முக்கியம் அகவாழ்க்கை என்பதை உணர்ந்தார்கள். அதன் தரத்தை மேம்படுத்த பிராணாயாமம், யோகம், தியானம் என்னும் அற்புத முறைகளை வகுத்தார்கள். எப்படி ஒரு நதியைக் கடக்கப் படகு ஓட்டை, உடைசல் இல்லாமல் இருக்க வேண்டுமோ, அதுபோல, உலகவாழ்க்கை என்னும் நதியைக் கடந்து ஆன்மீகத்தின் உச்சமாகிய அனுபூதியைப் பெறுவதற்கு உடல்நலம் மிகவும் அவசியம் என்பதால் அவர்கள் உடலை வலுவாக்க ஹடயோகத்தையும் வகுத்தார்கள். பிராணாயாமம், ஹடயோகப் பயிற்சிகளின் வழியே உடலின் உள்ளேயும் வெளியேயும் இரும்புபோல ஆக்க முடியும் என்பதைப் பல ஹடயோகிகள் மருத்துவ உலகுக்கு நிரூபித்துள்ளனர்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளை பாரதத்துக்கு அப்பால் உள்ள ஆன்மீக சாதகர்களுக்கு அறியத் தந்தவர் பால் பிரண்டன் என்ற ஆங்கிலேயப் பத்திரிகையாளர். அவர் தனது ‘A Search in Secret India' என்ற நூலில் பிளேடு தின்று அமிலம் குடிக்கும் யோகி, மண்ணுக்குள்ளே மூச்சுக்கூட விடமுடியாமல் புதைந்து வாரக்கணக்கில் உயிரோடு இருக்க வல்ல யோகி, கேட்ட மாத்திரத்தில் அரியவகைப் பழங்களை வரவழைத்துத் தரமுடிந்த யோகி எனப் பலவகைப்பட்ட யோகிகளைச் சந்தித்ததை மிகச் சுவையாக விவரித்திருக்கிறார். இவையெல்லாம் மிகுந்த முயற்சியின் பேரில் அடையப்படும் சக்திகள்தாம். அதேநேரத்தில் இவற்றின் மாயைக்கு மயங்கி மற்றவர்களையும் மயக்கிக் காலம் கழிப்பது முற்றிலும் வீணானது.

இதை உணர்த்தவே ரமண மகரிஷி, கோரக்நாதர் மற்றும் அல்லமர் இடையே நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுவதுண்டு. கோரக்நாதர் கடுமையான ஹடயோகப் பயிற்சிகளின் மூலம் உடலின் குற்றங்களை நீக்கி, வலுப்படுத்தி ஆயிரம் ஆண்டுகள் வாழும் காயசித்தியை அடைந்தார். அது அவருக்குப் பெரும் கர்வத்தைக் கொடுத்தது. அவர் ஞானிகள், புண்ணிய புருஷர்களை அணுகித் தம் உடலைச் சோதிக்கும்படிக் கூறுவார். ஒரு வாளை எடுத்து அவர்மீது வீசினால், அது அவர் உடலில் பட்டதும், ஒரு வெண்கல மணியைப் போல ‘டணார்’ என்று ஒலியெழுப்பிச் சற்று நேரம் ரீங்காரமிட்டு அடங்கும். காயசித்தியை மரணமில்லாப் பெருவாழ்வென்று நினைத்துவிட்ட அவர் அந்தக் கர்வத்தோடு அதே பகுதியில் வாழ்ந்து வந்த அல்லம பிரபு என்ற ஞானியை அணுகினார். அல்லமரை சாட்சாத் ஸ்ரீ சங்கரரின் அவதாரம் என்று கருதியதோடு, மக்கள் பெருமளவில் சென்று பார்த்து ஆனந்தமடைவது கோரக்நாதருக்குத் தெரியவந்தது.

அல்லமரிடம் போய்த் தனது அதிசாமர்த்தியத்தைக் காண்பிக்க ஆவல் கொண்டார் கோரக்நாதர். போய்ப் பார்த்தால், அத்தனை பிரபலமாக இருந்த அல்லம பிரபுவோ மெலிந்து நலிந்த தேகம் கொண்டவராக இருந்தார். கோரக்நாதருக்கு அவரைப் பார்க்க ஏளனமாக இருந்தது. தாம் சிரித்ததோடு உரக்கவே கேலி செய்தும் பேசினார், “ஆஹா! உங்களை எல்லோரும் பெரிய ஞானி, மரணத்தை வென்றவர் என்றல்லவா சொல்கிறார்கள். இந்த வற்றல் உடம்பை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கே மரணத்துக்குப் பயப்படாமல் இருப்பது! இங்கே என் உடலைப் பாருங்கள். என்ன வலிமை, என்ன உறுதி! எவரும் இதைச் சிதைக்க முடியாது. சந்தேகமிருந்தால் நீங்கள் ஒரு வாளால் வெட்டிப் பாருங்கள். அப்போதுதான் நான் அடைந்துள்ள காயசித்தியின் மகிமை உங்களுக்குப் புரியும்” என்றெல்லாம் சவால் விட்டார்.

“அன்பரே, இவை ஆபத்தான சோதனைகள், நமக்கு வேண்டாம். இவற்றில் எனக்கு ஆர்வமும் இல்லை” என்றார் அல்லமர். விடாமல் கோரக்நாதர் வற்புறுத்தினார். வேறு வழியின்றி அல்லம பிரபு ஒரு கத்தியை எடுத்து கோரக்நாதரின் உடலில் பாய்ச்சினார். அந்தக் கத்தி அவரது உடலுக்குள் நுழையவே இல்லை. மாறாக, ஒரு உலோகத்தைத் தாக்கிய அதிர்வு கொண்ட ஒலியை எழுப்பியது, அவ்வளவுதான். அதைக் கண்டு தாம் வியப்புற்றவர் போலப் பேசினார் அல்லம பிரபு, “அன்பரே, நீங்கள் அடைந்துள்ளது மிக அற்புதமான ஆற்றல். நல்லது, நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். எப்படி நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் உங்கள்மீது கத்தி வீசினேனோ, அதேபோல நீங்கள் என்மீது கத்தி வீச வேண்டும். இந்தாருங்கள் வாள்” என்றார்.

‘நானோ பல ஆண்டுகள் பயிற்சியில் காயசித்தி பெற்றவன். இவரோ வற்றல் சாமியார். நாம் கத்தி பாய்ச்சி இவர் இறந்து போனால் வம்பு வரும்’ என்று பயந்தார் கோரக்நாதர். “வேண்டாம் சுவாமி, நீங்கள் கத்தி பட்டால் இறந்து போவீர்கள், நான் செய்யமாட்டேன்” என்று மறுத்தார். “அதனாலென்ன, நான் இறந்து போனால் நஷ்டம் எதுவுமில்லை. அதற்கு உங்களைப் பொறுப்பாளி ஆக்கவும் மாட்டேன்” என்று உறுதியளித்தார் கோரக்நாதர்.

அதற்கு உடன்பட்ட கோரக்நாதர் வாளைக் கையில் வாங்கி அல்லமரின் மீது பாய்ச்சினார். இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழாக என்று பலவகைகளில் வாளை வீசினார். அந்த வாள் எந்தத் தடங்கலும் இல்லாமல் அல்லமரின் உடல் ஏதோ காற்றால் ஆனதுபோலப் போய் வந்ததே அன்றி, அல்லமருக்கு எதுவும் ஆகவில்லை. கோரக்நாதருக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை. “நான் என்ன சாதித்தேன்! இந்த மண்பாண்டம் போன்ற உடலை வச்சிரமாக்கினேன், அவ்வளவுதான். ஆனால் பூஞ்சையாகக் காணும் உங்கள் உடலோ, பௌதிக விதிகளை மீறியிருக்கிறது. நீங்கள் உன்னதமான ஞானநிலையில் இருப்பவர். அருள்கூர்ந்து என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு ஞானப்பாதையைக் காட்டி அருள வேண்டும்” என்று மன்றாடிப் பிரார்த்தித்தார்.

இதைத்தான் தாயுமானவரும் பாடினார்:

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி 
ஆளினும் கடல்மீதினிலே 
ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக 
அம்பொன் மிக வைத்த பேரும் 
நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர் 
நெடுநாள் இருந்த பேரும் 
நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் 
உறங்குவதுமாக முடியும் 
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே 
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப் 
பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற 
பரிசுத்த நிலையை அருள்வாய் 
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற 
பரிபூரண ஆனந்தமே.

இப்போது நான் சொல்ல வருவது ஆசைப்படாதீர்கள் என்றல்ல. அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குச் செலவிடும் உடல், மனச் சக்திகளின் ஒரு பகுதியையாவது ஆன்மத் தேடலில் செலவிட்டால், நமக்கு நிம்மதியான, ஆனந்தம் நிரம்பிய வாழ்க்கை கிடைக்கும். மன அழுத்தம், கொந்தளிப்பு, கோபதாபம், விருப்பு வெறுப்பு, மனச்சிதைவு என்று பல்வேறு மனரீதியான துன்பங்களுக்கும் நோய்களுக்கும் ஆளாகி, உறக்கம் இழந்து தவிக்க மாட்டோம். நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அன்பும் ஆனந்தமும் கொடுப்பவர்களாக வாழ்வோம். இதுதான் மெய்யான ஆன்மீகத்தின் சிறப்பு. இதைச் செய்ய ஆசைப்படுங்கள்.

உங்களைத் தேடி குரு வருவார்.

(தொடரும்)

July 21, 2013

அருணாசல அற்புதம் 5: ரமணரின் சம்பாத்தியம்

ஒரு ஊரில் கோடீசுவரர் ஒருவர் இருந்தார். வயது எழுபதுக்கு மேல். அவருக்கு நான்கு மகன்கள். அவர் மிகுந்த பக்திமான். அந்த ஊருக்கு ஒரு மகான் வந்தார். தனவந்தர் அவரைத் தன் வீட்டுக்கு அமுது செய்விக்க அழைத்தார்.

மகானும் தனவந்தர் வீட்டுக்குச் சென்றார். வந்தவருக்குப் பாதபூஜை செய்தபின் சற்றே பேசிக்கொண்டிருந்தார்கள். மகான் நல்ல தபஸ்வி. எப்போதும் ‘அருணாசலம், அருணாசலம்!’ என்று இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார். அவருக்குத் தம் முன்னே இருப்பவரைப் பற்றி எல்லாமும் அறியும் ஆற்றல் இருந்தது. ஆனாலும், மரியாதை நிமித்தமாகச் செல்வந்தரைப் பற்றிய விவரங்களை விசாரித்தார். முதலில், “அருணாசலம்! நீங்கள் மிகவும் இளமையாகத் தெரிகிறீர்களே, உங்களுக்கு வயது 60 இருக்குமா?” என்று கேட்டார். அதற்குச் செல்வந்தர் தனக்கு வயது ஐந்து என்று கூறினார்! சுற்றியிருந்த எல்லோரும் தனவந்தர், மகானிடமே பொய் சொல்கிறாரே என்று எண்ணி அதிர்ச்சி அடைந்தனர்.

“அருணாசலம்! இறைவன் உங்களுக்கு நிறையச் செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். உங்கள் சொத்தின் மதிப்பு பல கோடி இருக்குமே!” என்றார் மகான். “அப்படி எல்லாம் இல்லை ஐயா. நான் சேர்த்தது என்னமோ இரண்டு லட்சம்தான்” என்றார் செல்வந்தர். இன்னொரு பொய்யா என்று மருகினர் அருகிருந்தோர். இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் செல்வந்தரின் மனைவியும் ஒரு மகனும் வந்து மகானை நமஸ்கரித்தனர்.

“அருணாசலம்! நல்லது. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டார் மகான். “இறைவன் எனக்குக் கொடுத்திருப்பது ஒரே ஒரு பிள்ளைதான்” என்றார் செல்வந்தர். சுற்றியிருந்தவர்கள், ‘இந்த மனிதனுக்கு இவரிடம் இப்படிப் பொய் சொல்ல என்ன நெஞ்சுரம்!’ என்று எண்ணினர். கிளம்பிப் போய்விடலாமா என்றுகூட நினைத்தனர்.

அப்போது மகான் அவரை ஆசிர்வதித்து, “இங்கிருக்கும் எல்லோரும் நீங்கள் என்னிடம் அடுக்கடுக்காகப் பொய் சொல்வதாக எண்ணுகிறார்கள். ஏன், பேசாமல் எழுந்து போய்விடலாமா என்ற எண்ணம்கூட அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் உங்கள் விடைகள் மிகச் சரியானவையே. சற்றே அதை இவர்களுக்கு விளக்கிச் சொல்வோமா?” என்று கூறித் தொடர்ந்தார், “நான் வயதைக் கேட்டபோது ஐந்து என்று கூறினார். ஏன் என்று சொல்லுங்கள்.”

“சுவாமி! நான் உலகில் பிறந்து எழுபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்பது, உறங்குவது, சுயநலமான வேலைகள் செய்வது என்று அதில் 67 ஆண்டுகள் போய்விட்டன. பக்தி, சமூகத் தொண்டு, இறைப்பணி, பெரியோரைப் போற்றுதல், நல்லவை கேட்டல் என்று இவற்றுக்காகச் செலவழித்தது ஐந்து ஆண்டுகள் மட்டுமே. அதுதான் என் உண்மையான வயது என்று நினைக்கிறேன்” என்றார் செல்வந்தர் மிகப் பணிவுடன்.

“அருணாசலம், அருணாசலம்! உங்கள் சொத்து விவரமும் சொல்லிவிடுங்கள்” என்றார் மகான். “ஐயா, நான் பொன்னும், நிலபுலன்களும் என்று எவ்வளவு குவித்திருக்கிறேன் என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது. எல்லாம் இறைவன் கொடுத்த சொத்துத்தான். ஆனால், ஏழைகள் பசி தீர்க்கவும், உலக நன்மைக்கும், தெய்வப் பணிக்கும் நான் செலவிட்டது இரண்டு லட்சம்தான். அதுதான் நான் இந்த உலகைவிட்டு நீங்கும்போது என்னோடு வரப்போகும் சொத்து. அதையே எனது சொத்து என்று குறிப்பிட்டேன்” என்றார் செல்வந்தர்.

“அருணாசலம்! மிக உண்மை. உங்கள் ஒரே மகன் பற்றியும் கூறிவிடுங்கள்.”

“எனக்குப் பிறந்தவர்கள் நான்கு மகன்கள். ஆனால் நான் சொன்னதைக் கேட்பவன். பெரியோரை மதிப்பவன், தீய வழிக்குப் போகாதவன் இதோ இங்கிருக்கும் ஒருவன்தான். அதனால்தான் எனக்கிருப்பது ஒரு பிள்ளை என்று கூறினேன்” என்றார் செல்வந்தர்.

சேஷாத்ரி சுவாமிகள் ரமணரின் ‘சம்பாத்தியம்’ குறித்துக் கூறியதும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய முதலியார் என்று ஒரு ரமண அன்பர் இருந்தார். அவர் தனது வருவாயிலிருந்து ஏராளமாக அன்னதானம் செய்தார். நிறையச் சொத்துக்கள் கொண்டவர். ஆனால் மேலும் மேலும் சம்பாதிப்பதில் காட்டிய தீவிர ஆர்வத்தில் ஒரு சிறிதளவுகூட அவருக்கு ஆன்மீக முயற்சிகளில் இல்லை. சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம் ஜபம், தியானம் போன்ற ஆன்ம சாதனைகளின் அவசியத்தைப் பலமுறை வற்புறுத்தினார். அவர் ஈடுபாடு காட்டவே இல்லை. சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம் ஒருமுறை “முதலியார்வாள், இதைக் கேளும். என் இளைய சகோதரனின் வருமானம் பத்தாயிரம் ரூபாய். எனது வருமானமோ ஆயிரம் ரூபாய். நீர் நூறு ரூபாய் சம்பாத்தியமாவது தேடக்கூடாதா?” என்று கேட்டார்.

சுவாமிகள் தனது ‘இளைய சகோதரன்’ என்றது ரமணரை! ‘சம்பாத்தியம்’ என்றது ஆன்ம சக்தியை. தாமே ஞானியாக இருந்தபோதும் அவர் அடக்கத்தோடு தனது சம்பாத்தியத்தைக் குறைத்துக் கூறிக்கொண்டதையும் பார்க்க வேண்டும்.

நாமும் பொழுது விடிந்து பொழுதுபோனால் சம்பாதிக்கவே ஓடுகிறோம், தேடுகிறோம், அலைகிறோம், உடலும் மனமும் களைத்துப் போகிறோம். போகும் வழியில் ஒரு கோவிலைப் பார்த்தால் நெஞ்சைத் தொட்டுக் கொள்கிறோம், சிலர் தம் விரல்களை முத்தமிட்டுக் கொள்வதும் உண்டு! ஆனால் ஐந்து நிமிடமாவது கண்களை மூடி, நம்மையும் இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்த அந்த எல்லையற்ற பேரருளை நம் மனதுக்குள்ளே எண்ணி, உணர்ந்து, பேரானந்தம் அடைய நமக்கு நேரமில்லை என்கிறோம்.

முதலில் கூறிய செல்வந்தரைப் போல, ஆன்ம பலம் சேர்க்கச் செலவழிக்காத நேரமும், நல்லதற்குச் செலவழிக்காத பணமும், நன்முறையில் வளராத சந்ததியும் நமக்குப் பயன்படாதவை என்பது மட்டுமல்ல. சமுதாயத்துக்கும் கேடுதான். இதைப் புரியவைக்கத்தான் பெரியோர்கள் உலகில் தோன்றி, ‘இப்படி வாழ்வது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம்’ என்று முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள்.

“நூறு ரூபாய் சம்பாத்தியமாவது தேடக்கூடாதா?” என்று சேஷாத்ரி சுவாமிகள் கேட்டது நம்மை நோக்கியும்தான்!

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

July 03, 2013

அருணாசல அற்புதம் 4: வீடு புகுந்து வேரறுப்பவன்

அகம் என்ற சொல்லுக்கு உள், மனம், வீடு என்று பல அர்த்தங்கள் உண்டு. இன்னொரு பொருளும் உண்டு. அதற்குப் பின்னால் வருகிறேன்.

நாம் ஒருவருக்கு வீட்டின் ஓர் அறையை வசிக்கக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவன் உள்ளே புகுந்தான். மெல்ல மெல்ல வியாபித்து வீடு முழுவதையும் தன்னதாக்கிக் கொண்டுவிட்டான். போதாததற்கு வீட்டுக்குள் நாம் வைத்திருந்த பொருட்கள் எல்லாவற்றையும் வெளியே தூக்கி எறிந்து விடுகிறான். தன் பொருட்களால் நிரப்பி வைக்கிறான்.



இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவனை வெறுப்பதற்குப் பதிலாக நாம் அவனை எப்போதையும்விட அதிகம் நேசிக்கத் தொடங்குகிறோம். “அப்பா, தயவு செய்து இந்த வீட்டைவிட்டுப் போய்விடாதே! என்னால் ஒருகணம்கூட நீ இல்லாமல் இருக்க முடியாது” என்று சொல்லித் தவித்துப் புலம்பத் தொடங்குகிறோம்.

சரி என்று அவனும் தொடர்ந்து குடியிருக்கிறான். குடியிருப்பதற்கு நாம் அவனுக்குக் குடக்கூலி தரவேண்டியிருக்கிறது. அப்படிக் கொடுத்தாலும் சும்மா இருக்கிறானா! தான் இருக்கும் வீட்டையே இடித்துப் போட்டுவிடுகிறான். தரைமட்டமாக்கி விடுகிறான். ஏனென்றால், அப்படி இடிக்க அனுமதித்தால்தான், இந்த அகத்தை நொறுக்கித் தரைமட்டமாக்கினால்தான், அவன் தரும் வீட்டை நாம் பெற முடியும்.

அருணாசலமென அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

என்று தொடங்குகிறது பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் எழுதிய அருணாசல அக்ஷரமணமாலை.

பகவான் பதினான்கு வயதுச் சிறுவனாக, வெங்கட்ராமன் என்ற பெயருடன் மதுரையில் இருந்தபோது வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் அருணாசலத்திலிருந்து வருவதாகச் சொன்னார். அருணாசலம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில் வெங்கட்ராமனின் அகத்தில் அருணாசலம் புகுந்துவிட்டது. அதுவே அவரை ‘பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி’ என்ற ஆன்மீக தீபமாக மாற்றி உலகுக்கு ஒளிகாட்ட வைத்தது.

நம் அகத்தை நாம் காமம், குரோதம், மோகம், லோபம், மதம் மாத்சரியம் என்ற தீக்குணங்களால் நிரப்பி வைத்திருக்கிறோம். இவை ‘மனித இயல்புகள்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ‘தவறு செய்வது மனித இயல்பு’ என்று யாரொ சொன்னதை வைத்து, ‘தவறு செய்வதே மனித இயல்பு’ என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். எப்போதோ ஒருமுறை தவறிப்போய்ச் செய்வதுதான் தவறு. அப்படி எப்போதோ ஒருமுறை மனிதன் தவறக்கூடும் என்பதுதான் உண்மை. நாமோ, அறிந்தோ அறியாமலோ, செய்யத் தகாதவற்றைச் செய்து கொண்டிருப்பதே மனித இயல்பு என்று நம்பிவிட்டோம். இவைதாம் நமக்கு மகிழ்ச்சியைத் தருவன என்று நம்பி இவற்றால் எல்லையற்ற மனரீதியான, உடல்ரீதியான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தவறு, குற்றம், இயல்பு, வாழ்க்கை முறை என்று ஒன்றையொன்று பிரித்தறிய இயலாதவர்களாகிவிட்டோம்.

ஆனாலும், நம் முன்னோர் செய்த புண்ணியத்தால், ஒருநாள் திடீரென அருணாசலம் வந்து அகத்தில் புகுந்துகொள்கிறது, வெங்கட்ராமனுக்கு ஏற்பட்டது போலவே. வெங்கட்ராமனின் தயார்நிலை வேறு நமது நிலை வேறு. ஆனாலும் அந்த அருணகிரி விடுவதில்லை. அகத்தில் மெல்லப் புகுந்து ஒரு ஓரமாக உட்கார்ந்துகொள்கிறது. ஓரறையிலிருந்து மற்றோர் அறைக்குப் பரவுகிறது. பிறகு பார்த்தால் அகம் முழுவதும் அதுவே ஆக வியாபித்து விடுறது. நம்மை அழச் சொல்கிறது, சிரிக்கச் சொல்கிறது, கருணை காட்டச் சொல்கிறது; பொய்கூறிய உடனே நாவைக் கடித்துக் கொள்ள வைக்கிறது. வேண்டாததைப் பார்க்கவொட்டாமல் இமையை இழுத்து மூடுகிறது. நமது கடுமையான சூழலின் தாக்கத்தையும் மீறி நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.

அதுமட்டுமா, வீட்டுக்குள் நாம் நிரப்பி வைத்திருந்த காமம், குரோதம் முதலிய, நாம் நண்பர்களாக நினைத்த ஆறு எதிரிகளை, வெளியே விரட்டிவிடுகிறது. தனது குணங்களாகிய அன்பு, இரக்கம், கருணை, சாந்தம், ஆனந்தம் முதலியவற்றால் அகத்தை நிரப்பி வைக்கிறது. பக்தியை ஆழப்படுத்துகிறது.

அருணாசலம் என அகமே நினைத்ததால் வந்த வினை இது. உள்ளே நுழைந்தவன் உரிமையாளன் ஆகிவிட்டான். அத்தோடு விடவில்லை.

அகம் என்ற சொல்லுக்கு இன்னும் ஒரு பொருள் இருக்கிறது என்றுதானே தொடங்கினேன். அகங்காரம், ஆணவம், அகந்தை என்பதுதான் அந்த இன்னொரு பொருள். முதலில் நம்முடைய மனமாகிய அகத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, நம் மனதை ஆட்டிப்படைக்கும் அகங்காரமாகிய அகத்தை வேரறுக்கிறான் அருணாசலன். பின்னர், தான் குடியிருந்த வீடாகிய மனதையே இல்லாமல் செய்கிறான்.

‘மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்’ என்றுதானே கவிஞர் கூறினார்!

அகத்தில் நுழைந்து அகத்தை அறுத்த அருணாசலன் இவற்றைச் செய்வது எதற்காக என்றால் பேரின்ப வீடாகிய அகத்தை நமக்குத் தருவதற்காகத்தான். இதில் நாம் எப்படி அவனுடன் ஒத்துழைக்கலாம் என்பதையும் வரும் நாட்களில் பார்க்கலாம். பகவான் மற்றும் பிற மகான்களின் வாழ்க்கை நமக்குக் காட்டும் ஒளியிலே இதைப் பார்க்கலாம். நாமும் ஆன்மீகம் என்னும் ராஜபாட்டையில் நடைபோட முயலலாம்.

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

June 21, 2013

அருணாசல அற்புதம் 3: “எனக்கு ஒரே ஒரு ருசி”


ஒருமுறை ஔவைப் பாட்டி வழுதி என்பவன் திருமணத்துக்குப் போயிருந்தாளாம். அவன் தமிழில் மிகத் தேர்ந்தவன். அங்கே நடந்த விருந்தில் அவள் எவையெல்லாம் உண்டாளாம் தெரியுமா? எல்லாப்புறமும் பலரால் நெருக்குண்டாளாம், பிடித்துத் தள்ளுண்டாளாம். கூட்டத்தைத் தாண்டி அவளால் உணவுக் கூடத்துக்குள் நுழையே முடியவில்லை. மிகவும் நேரமாகிப் போகவே பசி அதிகமாகி, உடல் வாடிப் போயிற்றாம்!

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண் டிலேன்.

ஆனால் குமரகுருபரர் சொல்கிறார், யாரொருவர் இந்த உலக வாழ்க்கையிலே மொத்துண்ண, அதாவது இடிபட, விரும்பவில்லையோ, அவர்கள் பைத்தியக்காரன் சாப்பிடுவதைப் போல சாப்பிடுவாராம். பைத்தியக்காரன் எப்படிச் சாப்பிடுவான்? முதலில் அவனுக்கென்று ஏதும் விருப்பம் கிடையாது. விரும்பினாலும் கொடுப்பார் கிடையாது. அப்படியே தவறிப்போய் யாரேனும் சுவையான பண்டங்களை அவன் முன்னால் வைத்தாலும் அதில் கவனம் செலுத்தாமல், தன் கையில் என்ன எடுக்கிறோம், வாயில் என்ன போகிறது, அது எப்படிச் சுவையாக இருக்கிறது என்பவற்றை அறியாமல் சாப்பிடுவான்.

துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவ என்றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர். (நீதிநெறிவிளக்கம் - 85)

நன்கு சாப்பிட்டால் தூக்கம் ரொம்ப சுவாரசியமாக வரும். சாப்பிடும் உணவிலேயே காம உணர்ச்சியைத் தூண்டும் பொருள்களும் உள்ளன. இதைப் புரிந்துகொண்டதனால், எவனொருவன் எல்லோரையும் போல உலக வாழ்க்கையில் அடிபட விரும்பவில்லையோ, அவன் பைத்தியக்காரனைப் போல, உணவில் சிறிதும் அக்கறை காட்டாமல் சாப்பிடுவானாம்!

ஔவையார் சாப்பிடப் போய் உலகோரிடையே இடிபட்டார். குமரகுருபரரோ சாப்பிட்டுவிட்டு அதனால் உலக வாழ்க்கையில் அடிபட மாட்டேன் என்கிறார்.

ஒரு பித்தனுக்கோ கவனித்துச் சோறு போட யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு ஞானிக்கு அப்படியல்ல. ஸ்ரீ ரமண மகரிஷிகளுக்குப் பலபேர் பல பொருட்களைக் கொண்டு வருவார்கள். பக்தர்கள் கொண்டுவரும் உணவுப் பண்டங்களை எல்லாம் பழனி சுவாமி ஒன்றாகக் கலப்பார். ஒரு கவளம் அதில் ரமணருக்குக் கொடுப்பார். அவ்வளவுதான். மீதியிருப்பது மற்றவர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படும். இறுதிவரையில் ரமணர் குழம்பு, ரசம், காய், பாயசம் என்று தனித்தனியே உணவு உண்டதில்லை.

இந்தச் சமயத்தில் தேவராஜ முதலியார் சொல்லும் ஒரு சம்பவம் நினைவுகூரத் தக்கது. ரமணாச்ரமம் ஏற்பட்டுவிட்ட சமயம். போஸ் என்ற பக்தரின் தாயார் பலவித உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டு வந்து உணவு வேளையின் போது பகவானுக்கும் பக்தர்களுக்கும் பரிமாறினார். வழக்கம்போல ரமணர் ஒவ்வொன்றிலும் சிறிது, சிறிது எடுத்துக் கலந்து சாப்பிட்டார். போஸ் வங்காளி ஆதலால் தேவராஜ முதலியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லிவிட்டு ரமணர் இவ்வாறு கூறினார், "இனிமேல் இப்படிச் சிரமப்பட்டு வகைவகையாக உணவு தயாரித்துக் கொண்டு வரவேண்டாம் என்று அந்த அம்மாவிடம் சொல்லுங்கள். உங்கள் எல்லோருக்கும் பலவிதமான ருசிகள் உள்ளன; எனக்கோ ஒரே ஒரு ருசிதான். உங்களுக்குப் 'பலவற்றில்' ருசி; எனக்கு எப்போதும் 'ஒன்றில்'தான் ருசி. நான் எல்லாவற்றையும் கலந்து ஒன்று சேர்த்துச் சாப்பிடுகிறேன் என்பதையும் கவனித்திருப்பீர்கள்."

நாமெல்லாம் ஞானிகள் அல்ல. அதற்காக, நாவின் ருசியே குறியாக அலையவேண்டியதும் இல்லை. இப்போது மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு மீறிய வளர்ச்சியும், எடையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோரும் தம் குழந்தைகள் எத்தனைக்கெத்தனை நிறையச் சாப்பிடுகிறார்களோ அத்தனைக்கதனை ஆரோக்கியம் என்று நினைத்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு உடல் உழைப்புக் கிடையாது. அரை கிலோ மீட்டர் நடப்பதென்றாலும் ஏதோ ஒரு வாகனத்தைத் தேடுகிறோம். அளவுக்கதிகமான உடல் பருமன் சிறு வயதிலேயே சர்க்கரை நோய், இதய நோய், நீங்காத சோர்வு, புத்தி மந்தம் போன்ற பலவகைச் சிக்கல்களில் கொண்டுபோய் விடுகிறது. மற்றவர்கள் கேலி செய்வதால் ஏற்படும் மனவியல் ரீதியான சிக்கல்கள் வேறு.

அரை வயிற்றுக்கு உணவு, கால்வயிறு நீர் உட்கொள்ள வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். மீதி கால்வயிறு காலியாக இருக்க வேண்டும். நம்முடைய இரைப்பை சுருங்கி விரிவதன் மூலம்தான் உணவு செரிக்கிறது. அது சுருங்கவே முடியாமல் தலையணையில் பஞ்சு அடைப்பது போல உணவை அடைத்துவிட்டால்.....!

வயது ஏற ஏற, பிற சுவைகளைக் குறைத்துக் கொண்டே வந்து ஒரே சுவை, அதாவது இறைவனின் அழகிய வடிவத்தின் சுவை, அவனுடைய திகட்டாத திருப்பெயரின் மீது சுவை என்று மாறிவிட்டால், வாழ்க்கை அதிகம் சுவைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

(தொடரும்)

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

June 13, 2013

அருணாசல அற்புதம் 2: கிரிவலம் தரும் பெருநலம்

ரமணாச்ரமத்திலிருந்து அண்ணாமலை தரிசனம்

சென்ற ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று ஆருத்திரா தரிசனம் என்னும் திருவாதிரை நாள் வந்தது. அது சிவபெருமானுக்கு விசேடமான நாட்களில் ஒன்று. மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுதையே!என்றுதான் சிவபக்த சிரோமணியான நந்தனார் சிதம்பரத்துக்குப் போய்த் திருச்சிற்றம்பலவனைத் தரிசிக்க ஆசைகொண்டு பாடினார்.

ஆனால் 1879ஆம் ஆண்டில் ஆருத்திரா தரிசனம் டிசம்பர் 29ஆம் தேதியன்று வந்தது. அன்றிரவு மணி ஒன்று இருக்கும். திருச்சுழி என்ற ஊரில் அழகம்மாள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும் அவ்வூர்க் கோவிலுக்குள் பூமிநாதர் நுழையவும் சரியாக இருந்தது. இப்போதுபோல மகப்பேறு வசதிகள் இல்லாத காலத்தில் அவருடன் இருந்தவர் கண் தெரியாத ஒரு பெண்மணி. ஆனால், என்ன ஆச்சரியம்! குழந்தை பிறந்த அதே நேரத்தில் அவள் கண்முன்னே ஒரு மின்னல்வெட்டு தோன்றி மறைந்தது. அழகம்மை, இவன் தெய்வீகப் பிறவியாக இருக்கவேண்டும்என்றாள் அந்த முதியவள்.

அந்தக் குழந்தைதான் வெங்கட்ராமன். பின்னாளில் ரமண மகரிஷி என்ற மாபெரும் ஞானச்சுடராகத் திருவண்ணாமலையில் பிரகாசிக்கப் போகிறவன். ரமணரையே அருணாசலத்தின் அற்புதம் என்று கூறிவிட முடியும். அகிலமெல்லாம் அத்தலத்தின் மகிமை பரவியுள்ளதென்றால் அதற்கு வித்திட்டவர் ரமணர்தான். 

மலையைச் சுற்றுவதா?

பதினான்காம் வயதில் ஞானத்தைப் பெற்றுவிட்ட, அதற்குப் பிறகு எந்தவித ஆன்மீக சாதனையும் தேவைப்படாத ரமணரும்கூட செம்மலையாக நின்ற செம்மலை வலம் வருவதில் பெருமகிழ்ச்சி கண்டதுண்டு.

தேவராஜ முதலியார் என்றொரு ரமண பக்தர் இருந்தார். நல்ல அரசுப் பதவியில் இருந்த அவர் தன்னைப் பெரிய அறிவாளி என்று நினைப்பார். அதே நேரத்தில் சோம்பேறித்தனமும் அவரிடம் இருந்தது. ஜடமான அந்த மலையைச் சுற்றி வருவதில் என்ன பயன் என்று நினைத்துக் கொள்வார். பிற்காலத்தில் அவர் ரமணாச்ரமத்துக்கே வந்து தங்கிவிட்டார். அப்போது தனது சந்தேகத்தை மகரிஷியிடம் கேட்டேவிட்டார்.

அதற்கு பகவான் கூறினார், “கிரிப்பிரதட்சிணம் செய்வது எல்லோருக்கும் நல்லதே. அதில் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமில்லை. நம்பிக்கை உள்ளவரோ அற்றவரோ ஆனாலும் எப்படி நெருப்பு தன்னைத் தீண்டியவரைச் சுடுகிறதோ, அதுபோலவே இம்மலையும் தன்னை வலம்வரும் எல்லோருக்கும் நன்மை தரும்.”

கேள்வி கேட்பதே அறிவின் அடையாளம் என்று நினைப்பவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். தேவராஜ முதலியாரும் அப்படிப்பட்டவர்தான். சர்க்கரை இனிக்குமா?” என்று கேட்டுக்கொண்டே இருப்பவனுக்கு அதன் சுவை புரிவதே இல்லை; ஒரு துளி எடுத்து நாக்கில் வைத்துக்கொள்பவன் அதற்குப் பிறகு கேள்வி கேட்பதில்லை. தேவராஜ முதலியாரும் கிரிவலத்தின் பலனைப் பற்றி ரமணரைக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுப்பவராகவே இருந்தார்.

இத்தனை கேள்விகளை ஏன் எழுப்புகிறாய்? எந்தப் பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உடற்பயிற்சியாவது ஆகிவிடும், போய் வாஎன்றார் ஒருமுறை. மற்றொரு முறை ஒருமுறை சுற்றி வா. அருணாசலம் உன்னை வசீகரிப்பதை நீயே உணர்வாய்என்றார்.

இறுதியாக முதலியார் இரு வாரங்களுக்கு ஒருமுறை திருச்சுற்று வரத் தொடங்கினார். அவர் கூறுகிறார், “ஆரம்ப நாட்களில் எனது இப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடந்தன. பகவான் என்னிடம் கூறியிருந்தபடியே அருணாசலம் என்னை ஈர்க்கத் தொடங்கியது.....பிரதட்சிணம் செய்வதால் எல்லா விதத்திலும் நற்பயன் பெற்றிருக்கிறேன் என்பது என் அனுபவம்.

தமிழறிஞரும் கவிஞருமான முருகனார் பெற்ற அனுபவம் இன்னும் உயர்ந்தது. நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எனக்குத் தேகான்ம புத்தி (உடலே தான் என்னும் உணர்வு) மறைந்ததுஎன்கிறார்.

தியானம் செய்ய இயலாதவர்கள் அருணாசலத்தைப் பிரதட்சிணம் செய்வதால் தம் முயற்சியில் வெற்றி பெறுவர்என்று ரமண பகவான் பலரிடமும் சொன்னதுண்டு.


முயற்சி செய்துதான் பாருங்களேன்!

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....

June 05, 2013

கதாதரனின் மூன்று கேள்விகள்

கதாதரன் மிகச் சிறியவனாக இருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். தந்தையார் இருந்த காலத்திலேயே குடும்பம் ஒன்றும் செழிப்பான நிலையில் இருக்கவில்லை. மூத்தமகன் ராம்குமார் கொல்கத்தாவுக்குச் சென்று அங்கே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கினார். கதாதரன் அங்கே சென்று அண்ணனோடு இருக்க வேண்டியதாயிற்று.

அண்ணன் ராம்குமாருக்கு கதாதரன் பள்ளிக்குச் சென்று நவீன கல்வி கற்க வேண்டுமென்று ஆசை. அதை அவனிடம் கூறினார். அவனோ ஒரு தெய்வீகப் பாடலைக் கேட்டாலே ஆனந்த பரவசத்தில் மூழ்கிவிடுகிற அற்புதச் சிறுவன். அண்ணன் கூறியதைக் கேட்டதும் அவன் தனக்குத் தானே மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டான்.

“இந்தக் கல்வி கற்பதால் எனக்கு பக்தியும் ஆன்ம போதமும் ஏற்படுமா?” என்பது முதல் கேள்வி. “இல்லை” என்று அழுத்திக் கூறியது மனம்.

“என் தந்தையாரைப் போலவே தெய்வ பயமும், நேர்மையும் கொண்டவனாக என்னை ஆக்குமா?” என்பது இரண்டாவது கேள்வி. “இல்லை” என்றது அவனது மனச்சாட்சி.

“இந்தக் கல்வியின் வழியே நான் கடவுளை உணர்ந்து, அஞ்ஞானத்திலிருந்து தப்பி, உலகப் பொருட்களைத் துய்க்கும் ஆசையிலிருந்து விடுபடுவேனா?” என்பது மூன்றாவது கேள்வி. மனத்தின் பதிலில் மாற்றம் இல்லை.

“பிறகு இந்தக் கல்வியை வைத்துக்கொண்டு என்ன செய்வது! இதனால் உலகின் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து தெய்வ அனுபூதியைத் தரமுடியாது. என் ஆன்மீக லட்சியங்களைத் தூக்கி எறிவதைவிட, வாழ்நாள் முழுவதும் கல்வியறிவு இல்லாதவனாகவே இருந்து, கடவுள் மார்க்கத்தில் செல்வதையே விரும்புகிறேன்” என்று தீர்மானித்தான் கதாதரன்.

ராம்குமார் மீண்டும் கேட்டபோது, “அண்ணா! வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? என் இதயத்தை ஒளிரச் செய்யும் ஞானமே எனக்குத் தேவை. அதற்குப் பின் எனக்குத் தேவைகளே இருக்க மாட்டா” என்றான் கதாதரன் மிக அழுத்தமாக.

மெத்தப் படித்த கல்விமான்களும் இந்தப் படிப்பறிவில்லாப் பரமஹம்சனைத் தேடி வரவேண்டியதாயிற்று பிற்காலத்தில். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் விவேகானந்தர். அந்தச் சிறுவன் கதாதரன்தான் உலகம் போற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

(தகவல்: The Life of Swami Vivekananda - by His Eastern and Western Disciples; Published by Advaita Ashrama, Kolkatta)

June 01, 2013

அருணாசல அற்புதம் 1: செம்மலைக்கு நிகர் எம்மலை!

அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம் 
அது பூமியின் இதயம்

என்பது அருணாசல மகாத்மியத்தில் நந்தி வாக்காக வருவது. இந்த அழகிய செய்யுளை எழுதியவரோ அருணாசலம் என்று கூறியவுடனே நம் நினைவுக்கு வருகின்ற பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள். எல்லாத் தலங்களையும் விட மகிமையில் உயர்ந்தது என்பதனாலே இது ‘தலம் யாவினும் அதிகம்’ என்று சொல்லப்படுகிறது.

வணிகமும் செல்வமும் செழிக்கும் இடங்களையே தேடித்தேடிப் போய்க் குடியேறிக் கொண்டிருக்கிற காலம் இது. ஆனால் திருவண்ணாமலைத் தலமோ அருளாலே நிறைந்தது. ‘என்றுமே அறவோர் அன்பர்க்கு இருப்பிடம்’. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான சித்தர்கள் வசிக்குமிடம். “ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் அருணாசலம்” அல்லவோ அது. தபோதனர் என்றால் தவத்தையே செல்வமாக, தவத்தால் பெற்ற ஞானத்தையே பெருஞ்செல்வமாகக் கொண்டவர்களைக் குறிக்கும். ஞானிகளை மட்டுமல்லாமல் ஆன்மீகத் தேடல் கொண்ட அனைவரையும் இந்த மலை வா என்று அழைத்தபடியே இருக்கும்.

அருணம் என்றால் சிவந்த நிறம். அசலம் என்றால் மலை. இந்தப் பகுதியில் வசிப்போர் செம்மலை என்று பெயரிட்டுக்கொள்வதுண்டு. சோணம் என்றாலும் சிவப்புதான். சோணாசலம் என்ற பெயரும் அண்ணாமலைக்கு உண்டு. ‘சித்திரமாம் இஃதெல்லாம் செம்மலையே’ என்று ரமணர் அருணாசல பஞ்சரத்னத்தில் கூறுகிறார்.

குன்றாத நெருப்புக் குன்றம்

சிவப்பு நெருப்பின் நிறம். அண்ணாமலை என்பது அக்கினி மலை. அந்த அக்கினி மலையை அடையாளம் காட்டுவதாகத்தான் இங்கே அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளன்று இந்தக் குன்றத்தின் உச்சத்தில் ஏற்றப்படுகின்றது. ஆண்டுதோறும் இந்த ஞானப் பேரொளியின் தரிசனத்தை அன்பர்கள் தொலைக்காட்சி வழியே கண்டு களித்திருப்பீர்கள்.

இந்த நெருப்புக் குன்றம் வெறும் பௌதிகப் பொருளல்ல. வெறும் கல்லென்று இதைக் கருதுவதற்கில்லை. இது ‘சித்கனம்’ எனப்படும் ஞானத்திரள். அதனால்தான் திருஞானசம்பந்த மூர்த்திகள் திருவண்ணாமலைத் தேவாரத்தில் ‘ஞானத்திரளாய் நின்ற பெருமான்’ என்று விதந்து பாடுகிறார். அதற்கொரு புராணக் கதை உள்ளது.

சிவமலையே இந்தச் செம்மலை

ஒருமுறை பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்றொரு விவாதம் எழுந்தது. விவாதம் வலுத்து, சண்டை என்ற நிலைக்குப் போய்விட்டது. படைப்புக்கும் கடவுளுக்கும் காக்கும் கடவுளுக்கும் இடையே போர் மூண்டால் பிரபஞ்சம் என்ன ஆவது? அப்படியே அச்சத்தில் உறைந்து நின்றது. தேவர்கள் எல்லாரும் ஓடிச் சென்று சிவபெருமானிடம் இதற்கு வழி செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.

நீறாடிய பெருமான் நெருப்புத் தூணாக மாறி அங்கே நின்றுவிட்டான். போராடிய இருவருக்கும் அசரீரியாக ஒரு குரல் கேட்டது, “எனது பாதத்தையும், உச்சியையும் கண்டுபிடிக்க இருவரும் ஆளுக்கொரு புறமாகப் புறப்படுங்கள். யார் முதலில் இரண்டில் ஒன்றை எட்டுகிறாரோ, அவரே பெரியவர்!” என்றது அந்தக் குரல். “நல்லது, நாமே அதிக சக்திசாலி, சவாலைச் சந்தித்து, வெற்றி பெற்று எமது மேன்மையை உலகுக்கு நாட்டுவோம்” என்று இருவருமே எண்ணினர்.

திருமாலுக்கு வராக அவதாரம் எடுத்த அனுபவம் கைகொடுத்தது. தான் ஒரு காட்டுப்பன்றியாக மாறி, பூமியைக் குடைந்துகொண்டு அக்னிஸ்தம்பத்தின் அடியை நோக்கிக் கிளம்பினார். பூதேவி எப்படியும் அவருக்கு உதவியாகத்தானே இருப்பாள்!

பிரம்மா அன்னத்தை வாகனமாகக் கொண்டவர். ஆனால் இந்தமுறை வானில் ஏறி உயரப் பறக்க வேண்டிய நிலை வரவே, தானே தன் வாகனத்தின் வடிவெடுத்து, அன்னமாகப் பறந்தார். மேலே, மேலே போய்க்கொண்டே இருக்கிறார், ஆனால் உச்சியை அடைய முடியும் என்று தோன்றவில்லை. அவ்வளவு உயர்ந்து நின்றது அந்த செஞ்சடை நெருப்புத் தூண்.

சற்றே மனம் தளர்ந்த நேரத்தில்தான் பிரம்மா அந்தத் தாழம்பூவைப் பார்த்தார். அது செஞ்சடையிலிருந்துதான் விழுந்திருக்க வேண்டும். “இதைக் கொண்டுபோய்க் காண்பித்தால் போதுமே, நாம் உச்சியை அடைந்ததற்குச் சாட்சியாக இருக்குமே” என்று ஓர் எண்ணம் தோன்ற, அந்தத் தாழம்பூவைக் கையில் பற்றிக்கொண்டு, தாழ இறங்கினார். அவரது தாழ்ச்சிக்கு அதுவே காரணமானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

திருமாலுக்கும் எட்டவில்லை சோதிவானவனின் திருவடி. ஆனால், தனது இயலாமையை ஒப்புக்கொண்டு மேலே ஏறிவந்தார். பொய்மையைத் துணைக் கொள்ளாத காரணத்தால் அவரும் நிலையில் தாழாது உயர்ந்தார். சிவஜோதியைத் துதித்துப் பாடி நின்றது நீலமணி நெருப்பு! தாழம்பூவைச் சாட்சியாகக் கொண்டு தாழ்ந்த செயல் செய்த பிரம்மனோ வானவர்முன் வெட்கித் தலைகுனிய வேண்டியதாயிற்று.

அடிமுடி காணாத அக்கினியின் பிரகாசத்தையும் வெப்பத்தையும் தாள முடியாமல் வானோரும் மண்ணோரும் தவித்தனர். “ஐயனே! குளிர வேண்டும்!” என்று மன்றாடினர். கையில் நெருப்பேந்தினாலும் தலையில் கங்கையை வைத்திருக்கும் ஐயனோ கருணைகூர்ந்து, “குளிர்ந்தோம்! ஆதவனின் ஒளியைப் பெற்று நிலவு எப்படி அமுத ஒளியைத் தருகிறதோ, அதுபோல புவியின் எல்லா ஆன்மீகத் தலங்களும் அண்ணாமலையிடமிருந்தே தெய்வீக சக்தியைப் பெற்று ஒளிதரும்” அன்று அருளினார் அரவணி பூண்ட ஐயன்.

இத்தலத்தை நினைத்ததும் அத்தன் ஆனந்தன் அருணா ரமணனே நமது நினைவுக்கு வருகிறான் என்றபோதும், சேஷாத்திரி சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் போலப் பல மகான்களின் வசிப்பிடமாக இருந்து சித்தபூமியாக இருந்து வருவது அருணாசலம். இதனை வலம்வருவதன் பெருமை சொல்லி மாளாதது. வரும் நாட்களில் இவற்றைப் பற்றி மேலும் மேலும் பார்த்து நம் அருணகிரி வலத்தைத் தொடர்வோம்.

(தொடரும்)

- ’Impress Mag' இதழில் வெளியான எனது கட்டுரைத் தொடரின் முதல் பகுதி