May 27, 2004

பாக்காததும் பூக்காததும்...

நாம இலக்கியம் படிக்கும்போது எத்தனையோ கேள்விப்படுகிறோம். ஆங்கிலத்திலே phoenix, dragon என்றெல்லாம் படித்ததுமே 'இதெல்லாம் கவிஞர்களின் புருடா' என்று சொல்லிவிடுகிறோம். அதை அழகாக 'கற்பனை' என்றும் சொல்லலாம். போகட்டும், தமிழில் படிக்கும்போது பல பூக்களும், பிராணிகளும் உண்மையா கற்பனையா என்றே தெரிவதில்லை. காரணம் நமக்கு யாரும் தேடிப்பிடித்து எது எந்தப் பூ என்று சொல்லவில்லை. அப்படிச் சிலவற்றை இங்கே அறிமுகப் படுத்துகிறேன்.

முதலில் ஞாபகத்துக்கு வருவது காந்தள் மலர்தான். தமிழறிஞரும், கலைமகள் இதழைத் தொடங்கியவருமான வாகீசகலாநிதி கி.வா.ஜகன்னாதன் அவர்கள் தான் தொடங்கிய புத்தகப் பதிப்பகத்துக்கு காந்தளகம் என்றே பெயர் வைத்திருந்தார். அவர் காந்தள்மலர் எப்போதுமே பெண்களின் கைக்கு உவமையாகச் சொல்லப்படுவது.

சீதை இராமரோடு வனவாசம் போகும்போது காட்டிலே ஒரு காந்தள் பூவின் மேல் ஒரு கிளி உட்கார்ந்து கோதிக்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் இராமனுக்கு சீதை தன் கையில் ஒரு மாந்தளிரை வைத்துக் கொண்டிருந்தாற்போலத் தோன்றுகிறதாம்.


சேந்து ஒளி விரி செவ்வாய்ப் பைங்கிளி செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக் கோதுவ, கவின் ஆரும்
மாந்தளிர், நறு மேனி மங்கை! நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய்!


[அழகிய சிவந்த அலகினைக் கொண்ட பசுங்கிளிகள், அடர்ந்து நிற்கும் காந்தள்மலர் மீது ஏறித் தம் சிறகைக் கோதுகின்றன. அது நறுமணம் வீசும் மேனிகொண்ட நீ, உனது மாணிக்கம் சூடிய முன்கையில் ஒரு மாந்தளிரை ஏந்தினாற்போல உள்ளது. இந்த அழகைக் காணுவாயாக!]

குமுதம், செவ்வாம்பல், செவ்வல்லி, செங்கழுநீர் ஆகிய பெயர்கள் ஒரே பூவைக் குறிப்பன.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை


என்று கம்பன் கோசல நாட்டை வர்ணிக்கும்போது சொல்கிறான். எருமைமாட்டின் குளம்புகள் பதிந்ததால் ஏற்பட்ட குழிகளிலும் கொள்ளைகொள்ளையாகக் செங்கழுநீர் பூக்கிறதாம்.

அல்லி என்பது சாதாரணமாக வெள்ளை நிறத்திலிருக்கும். நீலநிற அல்லியை நீலம், கருங்குவளை, காவி, குவளை என்றெல்லாம் சொல்வார்கள். விழித்துப் பார்க்கும் அழகிய கண்களுக்கு உவமையாக அடிக்கடி சொல்லப்படும் பூ இதுதான். பாரதியாருக்கு குவளைக்கண்ணன் என்று ஒரு நண்பர் இருந்தாரே நினைவிருக்கிறதா?

"எட்பூ ஏசிய நாசியாய்" என்று பெண்ணின் அழகான மூக்குக்கு எள்ளுப்பூவை உதாரணமாகச் சொல்கிறது மனோன்மணீயம். பக்கவாட்டுத் தோற்றம் கிடைத்தால்தான் காரணம் சரியாக விளங்கும். கிடைக்காததால் இதையே இங்கு இட்டிருக்கிறேன்.


இராமனைக் காயாம்பூ நிறத்தவன் என்று கம்பன் வர்ணிப்பான். இந்த நிறம் பாருங்கள், எவ்வளவு அழகு!


முருக்கிதழ் என்று சிவந்த உதடுகளைக் கவிதைகள் வர்ணிக்கும். முறுக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 'முருக்கான்' (தாம்பூலம்) தரித்த மலையாள மங்கையின் உதடும் இல்லை. இதை வடமொழி பலாசம் என்றும் சொல்லும். தமிழிலே முள்ளூமுருங்கை, புரசமரம். இந்த மரம் ஏராளமாகப் பூத்திருக்கும்போது காடு தீப்பற்றி எரிவதுபோல இருக்கும் என்பதால் இதை Flame of the forest என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.


இப்போது அனிச்சப்பூ. இது விருந்தினர் மனதின் மென்மைக்கு உவமையாகச் சொல்லப்படுவது. பல சுவையான விதங்களில் இது திருக்குறளில் கையாளப்படுகிறது. இதைத் தனியாகத்தான் விளக்கவேண்டும். ஒரு முக்கியமான விஷயம் - இப்படி ஒரு பூ கிடையாது. கற்பனைதான்.

6 comments:

இராம.கி said...

murukka maram is also known as purasai maram. In purasaivakkam sivan koil, this tree exists as thala maram.

anputan,
iraamaki

Madhurabharati said...

¿£í¸û ¦º¡øÅÐ ºÃ¢§Â. «¨¾ §Á§Ä §º÷òÐÅ¢ð§¼ý.

«ýÒ¼ý
ÁÐÃÀ¡Ã¾¢

Kumar said...
This comment has been removed by a blog administrator.
V.Subramanian said...

–.––––––––––––––––––––
ஓம்.அன்புடன் திரு மதுரமொழியாரே!வணக்கம்.சந்தனமும் சண்பகமும், தே மாவும் தீம்பலவும் ஆயினியும் கோங்கும் வேங்கையும் விரிந்து படர்ந்த அடர் மலர்வனச் சோலைக்கு அழைத்துச் சென்று நாற்றம் ஒன்றினைமட்டும் தரவழியின்றி கண்ணுக்கு விருந்தாய் வண்ணமலர் தோற்றம் தந்து அவ்வன்ன மலர் நினைவுறுத்தும் கம்பனையும் முன்னிருத்தி அரியதொரு செயல்விளக்கம் படைத்தீரையா! வாழ்க!
அன்புடன்,வெ.சுப்பிரமணியன்,ஓம்.–––––––––––––––––––

Sethu Subramanian said...

VS:
நான் படித்தது :
.......ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் ...குரவமும் திரிந்து ....

எங்கு என்று எப்போது நினைவில்லை.

Madhurabharati said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள

ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும்
விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும்
மல்லிகையும் மௌவலொடு மணம் கமழ்ந்து, பாதிரியும்
பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து,

என்பது வருவது இறையனார் அகப்பொருளில்.