May 21, 2004

நெருப்புக்குள் தூங்க முடியுமா? - 1

காயசண்டிகை என்று ஒரு வித்தியாதர மங்கை இருந்தாள். காஞ்சனன் என்பவனின் மனைவி. இருவரும் ஒரு நாள் பொதியமலையின் அழகைப் பார்த்து வரலாமே என்று கிளம்பினார்கள். காதல் மயக்கத்தில் இருந்தனர்.

பொதிய மலையின் சாரலில் ஒரு நதி இருந்தது. அதிலே நீராடுவதற்காக விருச்சிகன் என்றொரு முனிவன் இறங்கியிருந்தான். அவன் பன்னிரண்டு வருடங்கள் உண்ணாமல் விரதம் இருந்து வந்திருக்கிறான். கரையின்மேல் பனம்பழம் போலக் கருப்பானதும் பெரியதுமான ஒரு நாவல் பழத்தை, தேக்கிலையின் மேலே வைத்துவிட்டுக் குளிக்க நீரில் இறங்கி இருக்கிறான். அந்த நாவல் பழம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுக்கக் கூடியது. அதை உண்ணுபவர்களுக்கு அதன்பின் பன்னிரண்டு ஆண்டுகள் பசியெடுக்காது. குளித்துவிட்டு வந்து, பூசை முடித்துவிட்டு விருச்சிகன் அந்த நாவற் கனியை உண்ணவேண்டும்.

காயசண்டிகையும் காஞ்சனனும் காதல் மயக்கத்தில் பொதியமலையின் அழகைப் பருகியபடி நடந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தன் முன்னாலே என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அந்த நிலையில் காயசண்டிகை அந்த அரிய நாவல் பழத்தைக் காலால் மிதித்துச் சிதைத்துவிடுகிறாள்.

குளித்துவிட்டு வந்த விருச்சிக முனிவர் இதைப் பார்க்கிறார். கோபம் வருகிறது அவருக்கு. "பெண்ணே, இந்த திவ்வியமான கனியை நீ சிதைத்துவிட்டாய். உனக்கு இனி மீண்டும் வானுலகம் செல்லும் மந்திரம் மறந்து போகும். அதுமட்டுமல்ல, அடுத்த முறை இந்தக் கனி மீண்டும் பழுத்து, நான் உண்ணா நோன்பினை முடிக்கும் வரையில் பன்னிரண்டாண்டுகள் நீ யானைத்தீ நோயாலே வாடுவாய்" என்று சபித்துவிடுகிறார்.


யானைத்தீ எப்படிப் பட்டது தெரியுமா? பசித்தீ - தீராத பசித்தீ. காயசண்டிகை அதை ஒரு அழகான உதாரணத்தோடு விளக்குகிறாள் கேளுங்கள்: "திருமால் இராமபிரானாக உலகில் அவதரித்தபோது, இலங்கைக்குப் பாலம் கட்டுவதற்காகக் குரங்குகள் கொண்டு வந்து எத்தனை மலைகளை விட்டெறிந்தாலும் கடலின் வயிறு நிரம்பாதது போல, எவ்வளவு உண்டாலும் தீராத பசித்தீயைக் கொண்டிருக்கிறது என் வயிறு."

"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைந்த ஞான்று
குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்
பட்டேன்"


(மணிமேகலை - உலக அறவி புக்க காதை: 9-14)

[நெடியோன் - திருமால்; முந்நீர், அளக்கர் - கடல்]

அப்படிப் பசித்தீ கொண்டவளால் தூங்கமுடியுமா? இங்கே பசித்தீக்குக் காரணம் முனிவன் தந்த சாபம். ஆனால் சாதாரணமாக நம்மைச் சுற்றிக் காணப்படும் பசிக்குக் காரணம் வறுமை.

மற்ற எல்லாவற்றிற்கும் உவமை சொல்லும் வள்ளுவன் "வறுமையைவிடக் கொடியது என்னவென்றால்" என்று தொடங்கி, யோசித்துப் பார்த்துவிட்டு, "வறுமையேதான்" என்கிறான். அதற்கு ஒப்பாகவோ, மிகையாகவோ வேறொன்றை அவனால் சொல்ல முடியவில்லை.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது


(குறள் 1041, நல்குரவு)

தற்போதையத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ளமுடியாத வறியவனுக்கு மறுமை, புண்ணியம் என்கிற எண்ணங்கள் தோன்றவே வழியில்லை. எனவேதான் "பசித்தவனுக்குக் கடவுள் ரொட்டி வடிவத்தில் வருகிறார்" என்று சொல்வதுண்டு. ஏழை ஒருவன் எத்தனை நியாயமான, அறிவுமிகுந்த சொற்களைச் சொன்னாலும் அதற்குப் பிறர் செவிசாய்க்க மாட்டார்கள்.
ஒரு கவிஞன் கூடத் தன் பத்து விரல்களிலும் வைரமோதிரங்களை அணிந்துகொண்டு, பின்னால் இரண்டுபேர் அவன் சொல்வதற்கெல்லாம் ஜால்ரா போட, இடுப்பிலே பட்டு வேட்டி அணிந்து நல்ல பந்தாவாகப் போய் நின்று கவிதை சொல்வானென்றால், அவனுடைய கவிதை விஷம்போல, வேப்பங்காய்போல இருந்தாலும் எல்லோரும் கூடிநின்று "ஆஹா, ஓஹோ! அற்புதம்!" என்று புகழ்வார்களாம். நான் சொல்லவில்லை, அவ்வை சொல்கிறாள்:

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.


ஏழைசொல் அம்பலமேறாதது மட்டுமல்ல, அவன் செய்வதையும் சொல்வதையும் திரித்துக் கூறிப் புரளி பேசுவார்களாம் மற்றவர். அவனது குடும்பத்தினரின் நடத்தையைச் சந்தேகப்பட்டு அவதூறு சொல்வார்களாம். இவையெல்லாவற்றையும் வள்ளுவப் பெருமான் தன் குறளிலே பொதிந்து வைத்திருக்கிறார்.

இன்னும் உண்டு...

No comments: