December 09, 2016

காஞ்சிப் பெரியவரும் பால் பிரண்டனும் - 1

பால் பிரண்டன் ஒரு நாத்திகர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் ரிஷிகள் இருக்கிறார்கள் என்று புத்தகங்கள் வாயிலாகக் கேள்விப்பட்டார். உண்மையான குரு, அப்படி ஒருவர் இருக்க முடியுமானால், அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார். அவர் ரமணரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை.

மும்பையில் ஓர் எகிப்திய மந்திரவாதி, மெஹர்பாபா என்ற பார்சி மகான், அமிலத்தைக் குடித்து ஜீரணம் செய்யும் ஒரு யோகி, பூமிக்குள் பள்ளம் தோண்டி மூச்சுவிடாமல் பலநாட்கள் இருந்த ஒரு யோகி, ஒரு வாய்பேசாத மௌனி என்று இப்படிப் பலதரப்பட்டவர்களையும் சந்தித்தார். யாரிடமும் அவருக்குத் திருப்தியாகவில்லை. சுப்பிரமண்யா என்பவர் பிரண்டனிடம் ரமணரைப் பாருங்கள் என்று கூறினார். மிகவும் மனம் தளர்ந்து போயிருந்த பிரண்டன் இனி யாரையும் பார்த்துப் பயனில்லை என்று கூறி மறுத்துவிட்டார். ஊருக்குத் திரும்பிப் போவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்.

அப்போது பிரபல எழுத்தாளராக இருந்த கே.எஸ். வெங்கடரமணி என்பவர் வந்து தான் செங்கற்பட்டில் முகாம் இட்டுத் தங்கியிருக்கும் கும்பகோணம் சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கப் போவதாகவும், தன்னுடன் வரலாம் என்றும் கூறி அழைத்தார். பால் பிரண்டன் அவருடன் போனார்.

அதுவரை காஞ்சிப்பெரியவர் வெளிநாட்டவர்களுக்குத் தரிசனம் கொடுத்ததில்லை. பால் பிரண்டனைச் சந்திக்க அதிசயமாக ஒப்புக்கொண்டார். மங்கிய குத்துவிளக்கின் வெளிச்சத்தில் அமைதியும் ஆன்மிகப் பேரொளியும் தவழும் சுவாமிகளைப் பார்த்தவுடனேயே பிரண்டனின் மனம் அமைதியுற்றது. அவரை வணங்கி, தன்னைச் சந்தித்ததற்கு நன்றி தெரிவித்தார். உலகில் இவ்வளவு போரும், அழிவும் இருக்கின்றதே, சமாதானமும் நட்பும் நிலவ என்ன செய்யலாம் என்ற தன் அக்கறையை வெளியிட்டார்.


அக்கிரமங்களும், அழிவுச் செயல்களும் அதிகப் படும்போதெல்லாம் உயரிய தெய்விகசக்தி வாய்ந்த மகான்கள் வந்து வழிகாட்டுவார்கள் என்றும், தனது சக்திக்கு மீறிய தெய்வ சக்தியை மனிதன் நம்பும்போது உலகில் அமைதியும் ஆனந்தமும் பெருகும் என்றும் பதிலளித்தார் சுவாமிகள். அதற்குப் பின் "நான் ஓர் உண்மையான யோகியை தரிசித்து குருவாக ஏற்றுப் பயனடையவே பாரதத்துக்கு வந்திருக்கிறேன்" என்று தனது வருகையின் காரணத்தைக் கூறினார்.

பால் பிரண்டனின் சிரத்தை சுவாமிகளுக்குப் புரிந்தது. "உங்களுக்குள்ளே ஒரு ஒளி தோன்றியிருக்கிறது. அதுவே உங்களுக்கு வழிகாட்டும்" என்று கூறினார். அன்றாடம் அதிகாலையிலும், அந்தி வேளியிலும் தியானம் செய்து வந்தால் கடவுள் சரியான குருவைக் காட்டுவார் என்று வழிகாட்டினார். "இல்லை, நீங்கள் எனக்குக் காட்டவேண்டும்" என்று அவரிடம் மன்றாடினார் பிரண்டன்.

"உங்கள் பயணத்தைத் தொடருங்கள். கடைசியாக, யார் உங்கள் உள்ளத்தை மிகவும் கவர்ந்தார் என்று யோசித்துப் பாருங்கள். அவர்தான் உங்கள் குரு. அவரிடம் மீண்டும் செல்லுங்கள்" என்றார் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள்.

இதுவரையிலும் யாருமே அவரைக் கவரவில்லை--இவர் ஒருவரைத் தவிர. இவரையே குருவாக இருக்கும்படிக் கேட்டால் என்ன? கேட்கவும் கேட்டார்.

"நான் ஒரு மடாதிபதி. எனக்கு ஏராளமான நிர்வாகப் பணிகளும் உண்டு. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குகிறேன் நான். தனிப்பட்ட சிஷ்யர்களுக்கு வழிகாட்ட எனக்கு நேரம் கிடையாது. உங்களுக்குத் தேவை அப்படிப்பட்டவர்கள்தாம்" என்றார் சுவாமிகள். பிரண்டனோ கொடாக்கண்டர். "அப்படித் தனிப்பட்ட சீடர்களை ஏற்று வழிகாட்டும் ஞானிகள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்து இருக்கிறார்களா?" என்று கேட்டார்.

சற்று யோசித்த சுவாமிகள் "காசிக்கு அருகிலுள்ள காடுகளில் ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர் அன்னிய தேசத்தவரை ஏற்றுக்கொள்ள மாட்டார். நீங்கள் திருவண்ணாமலைக்குப் போங்கள். மிக உயர்ந்த நிலையை அடைந்தவர் அவர். மகரிஷி என்று அவரை அழைப்பார்கள்" என்று கூறினார்.

இவ்வளவு நன்றாக ரமணரை வர்ணித்த சுவாமிகள் அவரைச் சந்தித்ததுகூட இல்லை. ஒருமுறை காஞ்சிப்பெரியவர் திருவண்ணாமலையில் முகாமிட்டிருக்கும் போது ரமணரை ஓர் அன்பர் "நீங்கள் சங்கராச்சாரிய சுவாமிகளைச் சந்தித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு ரமணரின் பதில் "நாங்கள் எப்போதும் ஒன்றாகத்தானே இருக்கிறோம். எப்படிச் சந்திப்பது!" என்பதாக இருந்தது.

(தொடரும்)
ரமண சரிதம், கிழக்குப் பதிப்பகம் வெளியீடு

No comments: