July 13, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 4

எனது கண்ணாடி சொல்லும் கதைகளின் முதல் 3 பகுதிகளைப் படித்துவிட்டு, தமிழ்ச் சொற்பிறப்பியல் அறிஞரான இராம.கி. அவர்கள் ராயர் காபி கிளப்பில் முன்வைத்த கேள்வியும் அதற்கான என் மறுமொழியும்:

பளிங்கு என்பதைக் கண்ணாடி என்றே பொருள் கொள்ள முடியுமா என்ற கேள்வி எனக்கு உண்டு. மறுபளிக்கின்ற reflecting) பரப்பைக் கொண்ட எல்லா மண்ணூறல்களுமே (minerals) பளிங்குதான் என்றே நான் விளங்கிக் கொள்ளுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.


மறுபளிக்கும் எல்லாப் பொருள்களுமே பளிங்குதான் என்ற உங்கள் எண்ணத்துக்கு ஊற்றம் தராதவை இவை:

1. முன்பே கூறியது: பளிங்கு என்ற சொல் சலவைக்கல் என்ற பொருளில் இலக்கியங்களில் ஆளப்படவே இல்லை.

சலவைக்கல்லுக்கான பிற சொற்கள் - வெண்கல், வெள்ளைக்கல் என்பவையே. இவையும் OTL-இல் கிடைத்தனவே அன்றி இலக்கிய ஆட்சி கிட்டவில்லை. மதூர்க்கல் என்பதாக ஒரு கருப்பான, மிகப்பளபளப்பான சலவைக்கல் இருப்பதாகவும் தெரிகிறது.

2. முகம்பார்க்கும் கண்ணாடி: இதற்குத் தமிழில் படிமக் கண்ணாடி, பாண்டில் ஆகிய சொற்கள் இருந்தன. பாண்டில் என்பது மிகப்பழைய சொல். இதைப் புறப்பொருள் வெண்பாமாலையில் (6-12) காணமுடிகிறது. ஆடி என்ற சொல் பிரதிபலிக்கும் கண்ணாடியைக் குறித்தது என்பதைக் குறுந்தொகைப் பாடலில் இருந்து ஹரிகிருஷ்ணன் சுட்டியுள்ளார்.

கண்ணாடிவிடு தூது என்னும் 18-ஆம் நூற்றாண்டுப் பாடல் தர்ப்பணம், முகுரம், கஞ்சனம், அத்தம், படிமக்கலம், ஒளிவட்டம் ஆகிய சொற்களைத் தருகிறது. இதிலும் பளிங்கு என்ற சொல்காணப்படவில்லை.

யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதியில் புவனமெண்வச்சிரம் என்ற சொல் இருந்திருக்கிறது. அதாவது "உலகம் வைரம் என்று எண்ணுகிறது" என்று பொருள்படுகிற இது கண்ணாடிப் படிகத்தைத்தான் குறித்திருக்கிறது.

3. இப்போது 'திருப்பாவை' தரும் அழகான தட்டொளி என்னும் சொல். இது உலோகத்தைப் பளிக்கிய கண்ணாடி. தாமிரமும், வெள்ளீயமும் இன்னும் சில இரகசிய உலோகங்களையும் கலந்து செய்யும் இக்கண்ணாடி உலக அதிசயம். கேரளத்தில் பம்பையாற்றின் கரையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு மட்டுமே இக்கலை தெரியுமாம். சுட்ட களிமண்ணை மிக நுண்மையான பொடியாக்கி அதில் விளக்கெண்ணெய் சேர்த்து (யார் சொன்னது விளக்கெண்ணெய்க்கு வேறு பயன்கள் இல்லையென்று!) அந்தக் கலவையால் உலோகத் தட்டின் ஒருபுறத்தைப் பளபளப்பேற்றுவார்கள். இதற்கு 24-இலிருந்து 48 மணிநேரம் வரை ஆகலாம். இங்கே பக்கத்தில் காணப்படுவது உலோகக் கண்ணாடியே.

எனக்குக் கிட்டிய ஆதாரங்கள் உங்கள் பூட்கையை மெய்ப்படுத்தவில்லை. ஆனால் OTL பளிங்கு என்பதற்கு முகம்பார்க்கும் கண்ணாடி என்ற பொருளையும் தருகிறது. எனவே மறுபளிக்கும் கண்ணாடியை (reflecting mirror) பளிங்கு என்று குறிக்க முற்பட்டது பிற்கால வழக்காகத்தான் இருக்கவேண்டும்.

ஆயினும் நான் முதலில் எழுதிய கட்டுரையின் நோக்கம் mirror-பற்றிப் பேசுவது அல்ல. படிகக்கண்ணாடி என்ற வகைக் கண்ணாடி (1) நெடுநாட்களாகவே இந்தியாவில் அறியப்பட்ட ஒன்று (2) இதைப் பலவகையிலும் பயன்படுத்த இந்தியர் அறிந்திருந்தனர் என்று கூறுவதும் அதற்கான சான்றுகளைத் தருவதுமாகவே இருந்தது. திருக்குறளில் நான் சொன்னதுகூட அந்த இடத்தில் மறுபளிக்கும் கண்ணாடி என்பது பொருந்தாது, ஊடுருவும் கண்ணாடி என்று கொள்வதே குறளின் பொருளைத் தெளிவாக்கும் என்பதற்காகவே. 'உள்ளே இருப்பதை வெளியே காட்டுகிறது' என்று சிந்தித்தாலே என் விளக்கம் அதிகப்பொருத்தம் என்பது புரியும்.

இந்தக் கோணத்தில் சிந்திக்கவைத்தமைக்கு நன்றி. கதவைத் திறந்தே வைக்கிறேன். இன்னும் சான்றுகள் கிட்டலாம். அப்போது மீண்டும் பேசுவோம்.

No comments: