September 08, 2004

ஆணழகனின் அலங்காரம்

ஆண்களின் அலங்காரம் எப்படி இருந்தது ஓர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்? இதைப் படியுங்கள்:

தனது சுருள்சுருளான தலைமுடியில் எண்ணெய் தடவிவிட்டு, அதை வாசனைக் கொட்டைகள் போட்டு அரைத்த நறுமண மயிர்ச்சாந்தினால் (ஷாம்பூ!) நன்றாகக் கழுவினான். விரலை முடிக்குள்ளே விட்டு, சிக்கு அவிழ்த்து, ஈரம் காயும்படிக் கோதியபடி, அதிலே அகில்புகை காட்டினான்.

மலையிலும், நிலத்திலும், மரக்கிளையிலும், சுனையிலும் வளரும் தேன்சுமந்த வண்ணவண்ணமான பூக்களை ஆய்ந்து, கலந்து தொடுத்த மாலையோடு, வெண்மையான பனங்குருத்தைத் தொடுத்த கண்ணியையும் தன்னுடைய தலையின் உச்சியில் அச்சம் தரும்படி அணிந்துகொண்டிருக்கிறான். இந்தப் பூமாலைகளைச் சுற்றி வண்டுகள் பறக்கும் ஓசை யாழிசைப்பது போல இருக்கிறது.

அதற்குமேல் ஒரு சுற்று மல்லிகையும், அரளியும் சேர்த்துக்கட்டிய சரத்தைச் சுற்றியிருக்கிறான். ஒரு காதிலே பார்த்தால் சிவந்த தீக் கொழுந்துபோல அழகான ஒரு மலர்க்கொத்து. பருத்த தோளின்மீது ஒரு பசுந்தளிர்க் கொத்து காற்றில் அசைகிறது. விரிந்து, புடைத்த வலுவான மார்பின்மீது நகைகளுக்கு நடுவில் வாசனைபொருந்திய சந்தனமாலையும் பொலிகிறது. அவனுடைய உருண்டு திரண்ட கையிலே அழகான வில் வைத்திருக்கிறான். தேர்ந்தெடுத்த அம்புகள் வைத்திருக்கிறான்.

நுண்மையான பூவேலை செய்த கச்சையை இடுப்பில் இறுக்கிக் கட்டியிருக்கிறான்.

----

மேற்கண்டவாறு வர்ணிக்கிறது அந்தக் காலத்து அழகான ஆண்மகனைக் குறிஞ்சிப்பாட்டு. இது பத்துப்பாட்டு வரிசையில் எட்டாவது. இதன் ஆசிரியர் கபிலர். குறிஞ்சித் திணைப் பாடல்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் மிகச்சிறந்ததாக இது கருதப்படுவதால் இதை 'பெருங்குறிஞ்சி' என்று அழைப்பார்கள். 261 அடிகளைக் கொண்ட இந்த நூலின் ஓரிடத்தில் தொண்ணூற்றொன்பது மலர்களின் பட்டியல் தரப்படுகிறது. அக்காலத்தில் என்னென்ன மலர்கள் இருந்தன என்று அறிய இது ஒரு நல்ல ஊற்றம்.

----

மேலே கண்ட விவரணையைத் தரும் பாடற்பகுதி இதோ: (கடினமாக இருந்தாலும் ஒருமுறையாவது படித்துப் பாருங்கள்)

எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்
தண் நறுந் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை 110

அணிமிகு வரி மிஞறு ஆர்ப்ப, தேம் கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங்குஞ்சியின்
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறுந்தொடையல் வெண்போழ்க் கண்ணி
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி
பைங்காற் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ, செந்தீ
ஒண் பூம் பிண்டு ஒரு காது செரீஇ
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி 120

மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்றுபடு நறுந்தார் பூணொடு பொலிய
செம்பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக்கையின்
வண்ண வரிவில் ஏந்தி, அம்பு தெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்குஅறக் கட்டி 125

இப்படி மேலே நடக்கிறது கதை. அவன் தன்னோடு ஒரு பயங்கரமான வேட்டை நாயை அழைத்து வருகிறான். அதைப் பார்த்து பயந்து போகின்றனர் கதாநாயகியும் தோழியரும். அப்போது அங்கே ஒரு காட்டு யானை வருகிறது.

இதற்குமேல் நான் சொல்லமாட்டேன். ஊகிக்க முடியாதவர்கள் குறிஞ்சிப்பாட்டைப் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அது சரி, இப்போது ஏன் பூ வைத்துக்கொள்வது பெண்கள்மட்டுமே என்றாகிவிட்டது? (தலைக்குக் குளித்து, சிக்கெடுத்துக் காயவைக்கும்போது சர்தார்ஜிகளைப் பார்க்கவேண்டும்; சிலசமயம் பின்னாலிருந்து பார்த்துப் பெண்தானோ என்று ஏமாந்தது உண்டு.

No comments: