September 07, 2004

மரணத்தின் வாசலில்...

நாமெல்லோரும் வசதியாக, சவுகரியமாக, நல்ல வேலை மற்றும் வருமானத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில்கூடப் பொழுதுவிடிந்து பொழுதுபோனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும், நமது தொழிலிலும், நமது நாட்டின்மீதும் இன்ன பிறவற்றின் மீதும் எண்ணற்ற குறைகளைச் சொல்லியே காலத்தைக் கழிக்கிறோம். அலுத்துக் கொள்கிறோம். தேடிப் பிடித்த வசவுகளால் வைகிறோம். நம்மையும் நோகடித்துக்கொண்டு பிறரையும் நோகச் செய்கிறோம்.

ஒரு மரணதண்டனைக் கைதியின் மனநிலையும், வாழ்வும் எப்படி இருக்கும்? அதுவும் செய்யாத கொலைக்காகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தால்?

சி.ஏ. பாலன் என்ற பொதுவுடைமைக் கட்சித் தொண்டர் திருப்பூரில் நடந்த ஒரு கொலைக்காக 1950-ல் கைது செய்யப்பட்டார். அவர்தான் கொலையாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோயம்புத்தூர் சிறையில், தூக்குமரத்தின் அருகில் இருக்கும் மரணதண்டனைக் கைதிகளுக்கான death row-வில் சிறிய அறையில் அடைத்துவைக்கப் பட்டிருந்தார். அதைப் பற்றி அவர் எழுதுவது:

====
மேற்கோள்:::
====

பத்தடி நீளமும் எட்டடி அகலமும் கொண்ட ஓர் அறையில் இரவும் பகலும் அடைத்துப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். அதுவும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவனை.

அங்கே அவனால் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சூரியனைப் பார்க்க முடியும். இரவில் நிலவைப் பல வருடங்கள் நான் காணவே இல்லை. தேய்பிறையின்போது காலையிலும் வளர்பிறையின்போது மாலை நான்கு மணிக்கும் சூரிய வெளிச்சத்தின் பிரகாசத்தில் ஒளி மங்கிய சந்திரனை மட்டுமே என்னால் காணமுடிந்தது. வசந்த ருதுவின் பூரண நிலவைக் கம்பிகளுக்கிடையே நோக்கியவாறு நான் வெகுநேரம் நின்று கொண்டிருந்தது உண்டு.

காலையில், காலைக்கடன்களுக்காகக் காவலாள் பார்வையில் வெளியே விடப்படும்போது, கிருஷ்ணபட்சத்தின் ஆரம்பமானால், கோயமுத்தூரைத் தொட்டபடி மேற்குத் திசையில் இயற்கை அமைத்ததொரு உறுதியான கோட்டை போல உயர்ந்து நிற்கும் மேற்கு மலைத் தொடர்களின் உச்சியிலே மறையப் போகும் மனக்கலக்கத்துடன் வாடிய முகத்துடன் விளங்கும் வெண்மதியையும், தனது செங்கதிர்களைப் பரப்பிக்கொண்டு ஒரு புதிய காலகட்டத்தின் உதயம்போல் குணதிசையில் எழும்புகிற பாலசூரியனையும் பார்த்துக் கொண்டு நிற்பது எனது வழக்கம். 'கண்ணுள்ளபோது காட்சி தெரியாது' என்று சொல்வது போல இவைகளையெல்லாம் வேண்டுமளவு பார்க்கக் கொடுத்து வைத்தவர்களுக்கு இந்த உதயாஸ்தமனங்களில் அசாதாரணமாக ஒன்றும் தோன்றாது. எனக்கோ மனத்துக்குள் ஏதேதோ காவிய ரசனை.

வேண்டாம்; அங்கெல்லாம் ஒன்றும் போகவேண்டாம். உன்மத்தமோ சித்தப் பிரமையோ ஏற்பட்டுவிடும். இப்போது வாழவேண்டும்! ஆத்ம தைரியத்தோடும் ஆதர்ச நிஷ்டையோடும் வாழவேண்டும். மரணதண்டனை ரத்தாகி இனி ஒரு வாழ்க்கை கிட்டுமானால் ஆரோக்கியமுள்ளவனாக வாழவேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய வெண்டுமென்றால் இலட்சியம் எப்படியோ, அப்படி ஆரோகியமும் இன்றியமையாதது. ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவைகளே என்னுடைய கோஷங்களாக இருக்கட்டும். உள்ளுணர்ச்சியோ மற்றெதுவுமோ எனக்கு ஏற்பட்டதனால் அல்ல. என்னால் எடுக்கப்படவேண்டிய--நான் எடுத்துக்கொண்ட தீர்மானம் இது.

====
:::மேற்கோள் முடிவு
====

பத்துமாதமும் 27 நாட்களும் மரணதண்டனைக் கைதியாகச் சொல்லொணாத் துன்பங்களைத் தாங்கியபின், உச்சநீதிமன்றம் வரை மரணதண்டனையை ஊர்ஜிதம் செய்துவிட்டபின், இறுதியில் அப்போதைய தமிழக இராஜாஜி மந்திரிசபை மற்றும் மக்களின் இயக்கங்கள், பொதுவுடமைத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவரது மரணதண்டனையை ஜனாதிபதி ஆயுள்தண்டனையாகக் குறைத்தார்.

சி.ஏ. பாலன் தனது இந்த அனுபவத்தை மலையாளத்தில் எழுத, அதை தூக்குமரத்தின் நிழலில் என்று தலைப்பிட்டு ஹேமா ஆனந்ததீர்த்தன் மிக அருமையாக மொழிபெயர்த்து, குமுதத்தில் தொடராக வெளிவந்தது. வாழ்க்கையை மதிக்கும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது.

Are we counting our blessings?

4 comments:

ராஜா said...

மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி! இதைப் பற்றிய என் கருத்துக்களை என் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். அதன் சுட்டி: http://raja.yarl.net/archives/002332.html

Balaji-Paari said...

Thanks for this post.
Thookku medai kurippu- vaasithuleergalaa?. Mudinthaal athai patriyum ezhuthavum.
Thanks again

Chandravathanaa said...

பயனுள்ள பதிவு. நன்றி!

dondu(#11168674346665545885) said...

குமுதத்தில் தொடராக வந்த போது படித்திருக்கிறேன். விறுவிறுப்பான தொடர். ஆனால் என்ன, கடைசி வரை தன்னுடைய வழக்கின் விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆகவே இவருக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு சரியா இல்லையா என்பது தெரியாமல் போயிற்று.

ஆனாலும் நல்ல புத்தகம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்