'ஜ' என்ற எழுத்தில் தொடங்குவதிலிருந்தே நீங்கள் அது தமிழ்ச்சொல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். மிகமிக அவசியமான அளவிற்கு மட்டுமே வடமொழி, உருது, பாரசீக அல்லது பிறமொழிச் சொற்களைக் கொள்வதனால் தமிழ் வளம்பெறும் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. ஆனால், அழகான பல சொற்களை ஓரங்கட்டிவிட்டு ஒரே ஒரு சொல் அங்கே வந்து உட்கார்ந்துவிடுமானால் அதில் எனக்கு வருத்தம் உண்டு. ஜன்னல் என்னும் போர்த்துக்கீசியக் கிளவி செய்த வேலை அதுதான்.
எத்தனைப் பழஞ்சொற்களை விலக்கிவிட்டு நாம் ஜன்னலையே பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போமா? அதிலும் எத்தனை நுட்பமான வித்தியாசங்களை இந்த நுவற்சிகள் காட்டுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
காற்றுவாரி - கதவில்லாத சிறு சாளரம்; ventilator; window without shutters.
கானெறி -> கால் நெறி (காற்று வரும் வழி) - சாளரம்
திட்டி - சாளரம்
நுழை - பலகணி
பலகணி - சாளரம்
காலதர் - திட்டி
சாலேகம், சாலகம், சாலம் - latticed window (lattice என்பது உலோகம் அல்லது காறையால் பூவேலைப்பாடோ, குறுக்கும் நெடுக்குமாய் வடிவங்களோ அமைப்பது. படத்தில் காணப்படுவது)
நூழை - ஒருவகைச் சாலேகம்
கதிர்ச்சாலேகம் - இரும்புக்கம்பி பொருத்திய சாளரம்
பின்னற்சன்னல் - வலை பொருத்திய சாளரம்
குறுங்கண் - சிறிய துளைகளுடன் கூடிய அலங்காரச் சாளரம்; a kind of latticed window with small apertures;
குறுங்குடாப்பு - சாளரம் அல்லது கதவின் மேல், மழை வெய்யில் இவற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு, sunshade
காற்றுவாரிப்பலகை - வீட்டின் முகட்டில் இருக்கும் சாளரத்தில் காற்றை நிறுத்த அல்லது அனுமதிக்கப் பயன்படும் மரக்கதவு; movable wooden shutter of a ventilator or of a window near the roof.
நேர்வாய்க்கட்டளை - பல அடுக்கு வீட்டின் மேல் அடுக்கில் வைக்கும் சாளரம்.
பசுக்கற்சன்னல் -> (பசுக்கல் + சன்னல்) - மரத்தாலான கதவுகளை உடைய சாளரம். [பசுக்கல் - பலகைகளை இணைத்தல்]
இலைக்கதவு - இலைபோல் மரத்தட்டுக்கள் தொடுக்கப்பட்ட கதவு; venetian door or window.
இப்போது பிளாஸ்டிக்கில் இலையிலையாக மறைக்கும் (அல்லது திறக்கும்) venetian blind-ஐ நாம் எல்லா இடத்திலும் பார்க்கிறோம். அதை இலைத்தட்டி என்று சொல்லலாம். முன்பெல்லாம் கோடைக்காலத்தில் வெட்டிவேர் என்ற நறுமணமுள்ள வேரால் செய்த ஒரு மறைப்பைப் பயன்படுத்துவார்கள். அதில் தண்ணீர் தெளித்தால், காற்று அதன் வழியே வரும்போது தண்மையும், வேரிகொண்டதாகவும் இருக்கும். (வேரி - நறுமணம்) அதை வெட்டிவேர்த் தட்டி என்பார்கள். எனவேதான் வெனீஷியன் பிளைண்டு நம்மைக் குருடாக்காமல் அதை இலைத்தட்டி என்று சொல்வது அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.
சந்தர்ப்பத்துக்கேற்பப் பயன்படுத்தியும், ஆரம்பத்தில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லையும் கொடுப்பதன்மூலமும் இச்சொற்களை மீண்டும் செலாவணிக்குக் கொண்டுவர முடியும். நிறையப் பொறுமையும், முயற்சியும் தேவை. அவ்வளவே. குறிப்பாக மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துடன் தொடர்புகொண்டவர்கள் இப்பணியைத் தொடங்கினால் 'தமிழால் முடியும்' என்பது வெறும் பேச்சாக இல்லாமல், நடப்புச் சாத்தியம் ஆகும். தவிரவும் 'செம்மொழி' என்று மார்தட்டிக்கொள்ளும் பெருமையைவிட, மொழியின் செழுமையை மீண்டும் பயனுக்குத் தருவது நாம் நம் தாய்மொழிக்குச் செய்யும் பெருந்தொண்டாகும்.
3. இப்போது 'திருப்பாவை' தரும் அழகான தட்டொளி என்னும் சொல். இது உலோகத்தைப் பளிக்கிய கண்ணாடி. தாமிரமும், வெள்ளீயமும் இன்னும் சில இரகசிய உலோகங்களையும் கலந்து செய்யும் இக்கண்ணாடி உலக அதிசயம். கேரளத்தில் பம்பையாற்றின் கரையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு மட்டுமே இக்கலை தெரியுமாம். சுட்ட களிமண்ணை மிக நுண்மையான பொடியாக்கி அதில் விளக்கெண்ணெய் சேர்த்து (யார் சொன்னது விளக்கெண்ணெய்க்கு வேறு பயன்கள் இல்லையென்று!) அந்தக் கலவையால் உலோகத் தட்டின் ஒருபுறத்தைப் பளபளப்பேற்றுவார்கள். இதற்கு 24-இலிருந்து 48 மணிநேரம் வரை ஆகலாம். இங்கே பக்கத்தில் காணப்படுவது உலோகக் கண்ணாடியே.
ஆனால், நம்முடய பளிங்கிலோ மணிமேகலையில் சொன்னாற்போல "விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்", அதாவது ஒலிதான் வெளியே கேட்காது, உருவம் தெரியும். எனவே பரிமேலழகரும் வள்ளுவனின் மனம் காணவில்லை. 'அடுத்தது' என்பதற்கு 'பளிங்கின் மறுபுறத்திலிருப்பது' என்று பொருள். 'காட்டும்' என்றால் மறுபுறமிருந்த மணிமேகலையை உதயகுமாரன் பார்த்ததுபோல் முழுமையாகக் காட்டும் என்றுதான் பொருளே தவிர, 'அதன் நிறத்தை மட்டும் காட்டும்' என்று பொருள் அல்ல. "பளிக்குத் தகட்டின் அப்புறம் இருப்பது இப்புறம் தெரியும். அதேபோல, உள்ளத்தின் உள்ளே மிகுவது முகத்தின் வழியே வெளியே தெரியும்" என்பதுதான் இக்குறளின் சரியான பொருள்.
வள்ளம் என்பது உண்ண அல்லது பருகப் பயன்படும் கிண்ணம் அல்லது வட்டில். முதல் பாடல் வரியில் வரும் பளிக்கு வள்ளம் புரிகிறது. அது என்ன மணி வள்ளம்? சாதாரணமாக, மணி என்பது நவமணிகளையும், முத்தையும் குறிக்கும். இதே படலத்தில் கம்பன் மதுவருந்தத் தங்கக்கிண்ணங்களைப் பயன்படுத்தியதாகவும் சொல்கிறான். மணிகளைப் பதிப்பதானால் அதிலேதான் பதிக்கவேண்டும். அதைத் தவிர மீண்டும், மீண்டும் பல பாடல்களில் மணி வள்ளம் என்கிறானே. மணி என்பதற்குப் படிகம் (crystal) என்றும் பொருள் உண்டு. நாம் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியைப் பார்த்தால் பளிக்கறை என்பதற்கு Crystal Palace என்ற பொருளைப் பார்க்கலாம். இப்போதும் உயர்தரக் கண்ணாடியால் செய்யப்பட்ட கெட்டியான கண்ணாடிக் கோப்பை முதலியவற்றைக் 'கிரிஸ்டல்' (படிகக் கண்ணாடி) என்றே வழங்குவதை அறிந்திருக்கலாம். இவை சாதாரணக் கண்ணாடியால் செய்யப்பட்ட பாண்டங்களை விட விலை உயர்ந்தவை.