May 18, 2004

உங்களுக்கு அறிவு இருக்கிறதா?

கோவிச்சுக்காதீங்க, நான் கேட்டது வள்ளுவன் சொன்ன மாதிரி அறிவு.

உடனே "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்..." என்று தொடங்கிவிடுவீர்கள். "அந்த அறிவு என்கிட்ட இருக்கிறது என்று சொல்வீர்கள். எனக்கு அறிவில்லை என்று சொல்லிக்கொண்ட முட்டாளை இதுவரை பார்த்ததில்லை.


அறிவுன்னா என்னான்னு இன்னொரு மாதிரியும் வரையறுத்திருக்கிறார் வள்ளுவர். அதைப் புரிஞ்சுக்கறதுக்கு முன்னாலே ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

ஒட்பம் என்று ஒரு சொல் தமிழில் இருக்கிறது. இது ஒண்(மை) [ஒளி] என்ற வேர்ச்சொல்லில் கிளைத்தது. இவற்றின் பொருளைப் பார்ப்போம்:

ஒட்பம்: அறிவு, அழகு, ஒளி, நன்மை, மேன்மை, ஒண்மை, குறைவு; (கழகம்)
intelligence; prescience; wisdom; 1. beauty; 2. benefit; 3. excellence (TLS) - OTL

ஒண்மை: அழகு, ஒழுங்கு, ஒளி, அறிவு, நன்மை, மிகுதி, விளக்கம், கூரிய அறிவு, இயற்கையழகு, அறநெறி. (கழகம்)
1. brilliancy, splendour, brightness; 2. natural grace, beauty; 3. good, goodness, excellence; 4. knowledge, clearness of understanding, wisdom; 5. luxuriance, fullness, abundance.(OTL)

இப்போ குறள்:

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.


(அறிவுடைமை, 425)

குறளின் பொருள்:

"உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம். அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்" என்பது பரிமேலழகரின் விளக்கம்.

தழீஇயது என்ற சொல்லுக்கு நட்பாக்குவது என்று பொருள்கண்ட பரிமேலழகர் தன்னுடைய பொறியில் தானே சிக்கிக்கொண்டுவிட்டார். ஏனென்றால் அந்நட்பை மலர்ச்சியும் கூம்புதலும் இல்லாமல் வைத்துக்கொள்ளும் நிலையே அறிவு என்று சொல்லி, அறிவுடைமையின் பரந்துபட்ட பொருளைத் திடீரென்று நட்புக்குள் குறுக்கிவிட்டார். பின்னால் வந்த பலரும் ஏறத்தாழ இந்த நட்புவலையிலே சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள் என்பதைப் பல உரைகள் நிரூபிக்கின்றன.

ஆனாலும் குதிரையேறிய சுந்தரர் சாதாரண ஆளல்ல. இந்தக் குறளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கான சூட்சுமத்தையும் அவரே சொல்லிவிடுகிறார். எப்படி?

அது அப்படியே இருக்க, நாம ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு சின்னப் பகுதியைப் பார்ப்போம்:

சுயம்புவ மனு என்னும் அரசருக்கு உத்தானபாதர், பிரியவிரதன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவனுக்கு அரசாள்வதில் சிறிதும் விருப்பமில்லாமல் போகவே தந்தை இளையவன் பிரியவிரதனை அழைத்து அரசனாகக் கட்டளையிட்டார். அவனும் இறைச்சிந்தனையுடயவனாய் இருக்கவே, காட்டுக்குத் தவம் செய்யப்போகிறான். பெரிய கதையைக் குறுக்குவோம்: நாரதர், பிரம்ம தேவர் முதலியோர் அவன் தவம் செய்யும் குகைக்குப் போய் அவனது உலகியல் கடமைகளை உணர்த்த அவன் திரும்பி வந்து ராஜ்யபாரம் ஏற்கிறான்.

பிரியவிரதன் பெருவீரனாக இருக்கவே பகையற்று வாழ்ந்தான். ஒருநாள் அவன் மேருமலைக்குப் போகையிலே, உலகின் ஒருபகுதி இருளாகவும், மற்றொரு பகுதி பகலாகவும் இருப்பதைக் காண்கிறான். (பாகவதத்தின் காலம் என்ன? எப்போது முதல் பாரதத்தினர் உலகில் ஒருபகுதி பகலாக இருக்கும்போது மற்றொரு பகுதி இரவாக இருந்ததை அறிந்திருந்தனர் போன்ற வியப்பான சங்கதிகளை ஆய்வாளர் விளக்கவேண்டும்). அக்காலத்தோர் மேருமலையை உலகின் மையமாகக் கருதினர். சூரியன் இதைச் சுற்றிவருவதாகவும் கூறினர். இது Geocentric Theory என்றழைக்கப் பட்டது.

விஷயத்துக்கு வருவோம். இப்படி மேருவைச் சுற்றிவருவதால் எப்போதும் உலகின் ஏதாவதொரு பகுதி இருளாக இருப்பது பிரியவிரதனுக்குப் பிடிக்கவில்லையாம். அவன் சூரியனோடு போரிட்டு, வென்று, உலகில் இருள் என்பதே இல்லாமல் செய்தான் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். நல்லவேளையாக மீளவும் யாரோ ஒரு அரசன் முன்னிருந்த நிலையே (status quo ante) கொண்டுவந்திருக்கவேண்டும்.

குளத்திலே இருக்கிற தாமரை காலையில் சூரியனைப் பார்த்து மலரும். சூரியன் மறைந்தால் வாடிவிடும். தாமரைக்கு வேறெதுவும் பொருட்டல்ல. ஆனால் மரக்கொம்பில் இருக்கும் மாம்பூவின் மலர்ச்சி சூரியனைப் பொறுத்ததல்ல. வாடி உதிரும்வரை மரத்தின்மேல் மலர்ந்திருக்கும். இப்போது பரிமேலழகரின் விளக்கத்தைக் கேளுங்கள்: "(உயர்ந்தோரோடு) கயப்பூப் போல வேறுபடாது, கோட்டுப் பூப்போல ஒருநிலையே நட்பாயினான் எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்."

கயம் என்றால் குளம். கயப்பூ - குளப்பூ. இரவில் மலரும் அல்லி போன்ற நீர்ப்பூக்களும் இருக்க நமக்கு ஏனோ மலர்தலும் கூம்பலும் என்ற உடனே தாமரையைத் தானே நினைவுக்கு வருகிறது?

தாமரைக் காடான இராமனை தசரதன் கூப்பிட்டு "புனையும் மா முடி புனைந்து, இந்த நல் அறம் புரக்க நினையல் வேண்டும்" என்கிறான். அப்படி, முடிபுனைந்து மன்னனாக வேண்டும் என்று சொன்னபோதும் இராமன் "காதல் உற்றிலன், இகழ்ந்திலன்; 'கடன் இது' என்று உணர்ந்தும்" அப்பணியை ஏற்கிறான். "ஹைய்யா! நான் ராஜாவாகப் போறேன்" என்று மூன்றுமுறை கூரை தலையில் இடிக்கும்படிக் குதிக்கவில்லை. தோளிலிருந்த துகிலையெடுத்துக் கொண்டு சாலையிலெல்லாம் "நான் ஆணையிட்டால்..." என்று பாடியபடி ஓடவில்லை. "ஐயையோ! நமக்கு அரசாட்சியெல்லாம் வாணாம்ப்பா. நான் சுதந்திரப் பறவை" என்று கழட்டிக் கொள்ளவும் இல்லை. மாமன்னன் சொன்னதைச் செய்வதல்லவா எந்தன் பணி என்று அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.

இராமன் முடிபுனையப் போகிறான் என்று உலகமே களியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் அவனைப் பேரன்புடன் வளர்த்து ஆளாக்கிய சிற்றவை அழைக்கிறாள். தன் மேலாடையைப் பணிவோடு கையில் மடக்கிவைத்துக் கொண்டு, வாய்பொத்தி, "நாள் முழுதும் மேயப் போயிருந்த தாய்ப்பசுவை மாலையில் வந்ததும் கண்ட கன்றைப் போன்ற" இராமன் நின்றானாம்.

பரதன் அரசாள்வான்; நீ காட்டுக்குப் போய்த் தவம்செய்துவிட்டுப் பதினான்காண்டுகள் கழித்து வா என்ற இரண்டு இரண்டு செய்திகளை மன்னன் சொல்லச் சொன்னதாகக் கைகேயி சொன்னபோது இராமன் என்ன செய்தான்? பின்னால் அசோகவனத்தில் சீதை அனுமனிடம் சொல்கிறாள்:

'மெய்த் திருப்பதம் மேவு' என்ற போதினும்
'இத் திருத் துறந்து ஏகு' என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.


ஆமாம், 'நீ பட்டமேற்க வேண்டும்' என்றபோதும் சரி, 'காட்டுக்குச் சாமியாராகப் போ' என்ற சொல்லைக் கேட்டபோதும் சரி, இராமன் முகம் தாமரையைப் போலத்தான் இருந்ததாம். ஆனால் இது சித்திரத் தாமரை. உண்மையான கயப்பூ இருளைக் காண வாடுமே. இந்தப் பூ கைதேர்ந்த ஓவியன் கிழியில் தீட்டிய தாமரைப்பூ. எப்படி கிரேக்கத் தாழியில் பொறித்திருக்கும் மரத்தைப் பார்த்து "ஓ மகிழ்ச்சியான கிளைகளே! நீங்கள் இலையை உதிர்ப்பதில்லை, வசந்தத்தை நீங்கள் வழியனுப்புவதுமில்லை" (Ode on a Grecian Urn by John Keats) என்று கீட்ஸ் சொல்கிறானோ, அதே போல இந்த ஓவியத் தாமரைக்கும் மாற்றம் இல்லை. அட இராமனின் அறிவு வள்ளுவன் சொன்னாற்போல 'மலர்தலும் கூம்பலும் இல்லது' ஆக இருக்கிறதே!


ஏன்? கதிரவன் இன்னொரு புறம்தான் போயிருக்கிறானே தவிர, ஒரேயடியாகக் காணாமற் போய்விடவில்லை என்கிற விஷயம் இந்த முட்டாள் தாமரைக்கு தெரியவில்லை (முள்+தாள் தாமரை என்று சிலேடை பேசவில்லை நான்). தாமரை ஒரே நாளில் வாடுகிற பூவல்ல. தினமும் சூரியன் மறைவதையும் மீண்டும் மறுநாள் வருவதையும் பார்த்தும் கூட அது மாலையில் கூம்புவதை விடுவதில்லை.

மனிதனின் ஒட்பம் அத்தகையதல்ல. ஒருமுறை பார்த்தால் உள்ளே அதைச் சேமித்து வைத்துக்கொண்டுவிடுவான். கதிர்போனாலும் இது நிரந்தர இருளல்ல என்னும் தெளிவு அவனது அறிவுக்கு உண்டு. இருக்கவேண்டும். ஆனால், வாழ்வின் இருளான சமயங்களில்? நம்பிக்கை இழந்துவிடுகிறானே! குமுறி அழுத எத்தனை இரவுகள், அஞ்சி நடுங்கிய எத்தனை இரவுகள், தற்கொலை செய்துகொண்டுவிடலாமா என்று மறுநாள் காலையைச் சந்திக்கக் கூசிய எத்தனை இரவுகள் - ஒளிமயமானதாக விடிந்திருக்கின்றன! "நானா அப்படி அஞ்சினேன்!" என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும்படி ஆகியிருக்கின்றதே. அன்று நாம் அஞ்சிய சூழ்நிலைகள் இன்று நகைக்கிடமாய்க் கூட ஆகிவிட்டிருக்கின்றனவே.

ஆனால், அதனை அடுத்தூர்வது அ·தொப்பதில் என்கிற ஒட்பம் இருப்பவன் இராமனைப்போலவே மலர்வதும் இல்லை, கூம்புவதும் இல்லை. ஏனெனில் அவனது அறிவு இவ்வுலகையே அரவணைத்ததாய் (உலகம் தழீஇயது), (பகல், இரவு; இன்பம், துன்பம்; பிறப்பு, இறப்பு போன்ற) உலகின் இருமைகளைப் புரிந்துகொண்டதாய் இருக்கிறது. அந்தப் புரிதலால் மனம் சமநிலை எய்தியிருக்கிறது. மெய்யான அறிவு இதுதான்.

இந்த வெளிச்சத்தில் (ஒட்பத்தில்!) மீண்டும் திருக்குறளின் பொருளைப் பார்ப்போம்:

(சூரியனின் ஒளி உலகனைத்தையும் தழுவியிருப்பதை அறியாது) மலர்வதையும் கூம்புவதையும் (தாமரைப்பூப் போலச்) செய்யாமலிருப்பதே அறிவுடையான் செயல். ஏனென்றால் அவனது ஒட்பம் (wisdom) உலகத்தின் (இருமைகள் கூடிய) இயல்பை முழுதுமாய் அரவணைத்துச் செல்வதாய் இருக்கிறது.

ஆரம்பத்தில் கேட்ட கேள்வி மீண்டும் இதோ - உங்களுக்கு (இத்தகைய) அறிவு இருக்கிறதா?

5 comments:

Anonymous said...

From: வாசன் [ tamil_amigo at yahoo dot com ]

திரு.பாரதி

வாழ்த்துகள்.

உங்களுடைய விவேகாநந்தர் கட்டுரைகளை வலைப்பதிக்க எண்ணியிருந்தேன்.காலம் கை கூடவில்லை.அவற்றை pdf
வடிவில் வைத்துள்ளேன்.தேவைப்பட்டால் சொல்லுங்கள்.

Madhurabharati said...

¿ýÈ¢ Å¡ºý. þ¾¢ø äÉ¢§¸¡Êø À¾¢óЦ¸¡û¸¢§Èý.

SnackDragon said...

//உங்களுக்கு அறிவு இருக்கிறதா?//
நல்ல கேள்வி,
இதையேதான் நானும் என்னைப்பார்த்து அடிக்கடி கேட்டுக்கிறேன். :-)

Madhurabharati said...

¿ýÈ¢. þôÀÊì §¸ðÎì ¦¸¡ûÅо¡ý «È¢× þÕ츢ÈÐ ±ýÀ¾ü¸¡É ¿¢åÀ½õ ;-)

சுந்தரவடிவேல் said...

உங்கள் எழுத்துக்களை இப்போதுதான் முதன்முதலாக வாசிக்கிறேன். செறிவு! இமயம், சூரியனைப் பற்றிய பத்திகளைப் படித்த போது "மேரு வலந்திரிதலான்" நினைப்புக்கு வந்தது. அப்படியென்றால் நம் முன்னோர்கள் வானியலில் மாறுபட்ட/தவறான? கருத்துக்களைக் கொண்டிருந்தனரா?