May 16, 2004

திருக்குறள் சொல்லும் தீக்கள் - 2

அதிகாரத் தீயில் குளிர்காய
====================

நல்ல குளிர்ப் பிரதேசங்களிலே இருக்கறவங்களுக்குக் கணப்புன்னா என்னான்னு தெரியும். அங்கே வீடுகளிலேயே Fire Place இருக்கும். இப்பத்தான் எல்லாத்துக்குமே மின்சாரத்தில வந்துடுச்சே. முன்னாலே அதுக்குள்ளே மரத்துண்டுகளைப் போட்டு எரிப்பாங்க.

நம்ம எம்.ஜி.ஆர் ஒரு படத்துக்காக காஷ்மீர் போய்ட்டு ஒரு அதிசயத்தைப் பார்த்தார். அங்கே நெருப்புக்குக் கூட வாக்மன் பதிப்பு இருந்தது. அவர்கள் தம் ஆடைக்குள்ளேயே கணப்புச்சட்டியை வைத்துக்கொண்டு போவதைப் பார்த்து "மடியினில் நெருப்பைக் கட்டிக்கொண்டார் என்னும் பழமொழி இவர்தான் படைத்தாரோ" என்று பாடுவார். ஞாபகம் வந்திடுச்சா?

ஆக, குளிர்காயணும்னா நெருப்புக்கு எவ்வளவு பக்கத்திலே இருக்கமுடியுமோ அவ்வளவு பக்கத்திலே இருக்கணும். ஆனால் போய்த் தொடக்கூடாது - அவ்வளவு நெருக்கம் கூடாது. அதுக்காக வெலகி இருக்கறம்னு சொல்லிப்புட்டுத் தொலவுல போய்ட்டா வெப்பம் ஒறைக்காது - கிடுகிடுன்னு பல்லு தந்தியடிக்கும், ஒடம்பு நடுங்கும். குளிர் தாங்காது.

இதை நடைமுறை வாழ்க்கையிலே யோசிச்சுப் பாருங்க:

அரசன் கிட்டே நெருங்கிய வட்டத்திலே இருக்கறவங்களும் இதைப்போலத்தான் என்று சொல்றாரு வள்ளுவர். இப்போ அமைச்சர், டி.ஐ.ஜி என்று பெரும்பதவியில் உள்ளவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவங்க பக்கத்திலே இருக்கற வரைக்கும் அவங்க செல்வாக்குலே குளிர்காயலாம். தள்ளிப்போனாப் போச்சு, ஒரு பய மதிக்கமாட்டான். அதுக்காக ஒரேயடியா ஒட்டிக்கிட்டீங்கன்னா, அடுத்த தேர்தல்லே ஆட்சி மாறின ஒடனே பொய்க்கேசு போட்டு முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க.

இன்னொரு வகைக் கஷ்டம் என்னன்னா, திடீர்னு யாராவது ஏதாவது கோள் சொல்லி ஐயாவுக்கு (அம்மாவுக்கும்தான்) உங்களைப் பிடிக்காமப் போயிடுச்சுன்னா, கையைத்தட்டி "யாரங்கே, இவனைக் கழுவில் ஏற்றுங்கள்!" அப்படீன்னுடுவாங்க. ஏன் கோள் சொல்றாங்க, பொறாமைதான். "உனக்கும் எனக்கும்தான் நெருக்கம், இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்", சர்த்தானா?

ஆகவே பதவியில், செல்வத்தில், செல்வாக்கில் மிகமிக உயரத்தில் இருப்பவர்களிடம் பழகும்போது - தீக்காய்வது போல - ரொம்ப விலகிவிடாமலும், அதே நேரத்திலும் ஒரேயடியாகப் போய் ஈஷிக்காமலும் பழகணுங்கறாரு வள்ளுவரு.

எப்படி?

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்


(குறள்: 691)

இன்னும் பலவகைத் தீக்களையும் சொல்லியிருக்காரு. ஒவ்வொண்ணாப் பார்ப்போம். தொடர்ந்து இங்கே வாங்க. வந்து உங்க கருத்தை எழுதுங்க.

1 comment:

Anonymous said...

very good. romba nanRaaka irukkirathu. plz continue. adikakdi ezuthungkaL. (Unamiyais sola veendumenil ipapdi ezutha veendum ena enakkum aasai irunthathu. aanaal intha tamiz pulamai enakku varathe:(

vaazththukaL. thodarungkal.

anbudan,
M.K.Kumar