February 03, 2017

ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 3



கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒருமுறை ரமண பகவான் முன்னிலையில் தரிசனக் கூடத்தில் உட்கார்ந்திருக்கையில் அவரது ஆள்காட்டி விரலில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை, ஆனால் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்தில் பகவான் தனது ஆள்காட்டி விரலை நீவி விட்டுக் கொள்வதைப் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி, அவரது விரலிலிருந்த வலி முற்றிலும் நீங்கிவிட்டது. இவ்வாறு பகவான் கருணையினால் ஏற்ற நோய்கள் எவ்வளவோ.

ஒரு கதை உண்டு. நெடுநாள் தவம் செய்த ஒருவரின் முன்னே ஸ்ரீ கிருஷ்ணன் தோன்றினார். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார் கிருஷ்ணன். பக்தர் தனது வலது காலில் இருந்த யானைக்கால் நோயை இடது காலுக்கு மாற்றும்படி வரம் கேட்டார். ஆச்சரியப்பட்ட கிருஷ்ண பகவான் 'நீ நோய் குணமாகும்படி வேண்டியிருக்கலாமே. அதைவிட்டு ஏன் கால் மாற்றி வைக்கும்படிக் கேட்டாய்?' என்று வினவினார். அதற்கு பக்தர் சொன்னார் 'பிராரப்தத்தால் வந்த நோயை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். உன் வரத்தால் குணமாகிவிட்டதென்றால், மறுபடி அதை அனுபவிக்க இன்னொரு பிறவி எடுக்க வேண்டியதாகிவிடும்' என்றாராம் அவர்.

எனவே அவரவர் பிராரப்தத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். ஆனால் பெருங்கருணை கொண்ட மகான்கள் பிறரது துன்பத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒருவன் ரயிலுக்குப் போகும்போது தன்னுடன் பெட்டியை எடுத்துப் போகிறான். ரயிலில் ஏறியபின் பெட்டியை அதற்கான இடத்தில் வைத்துவிடுகிறானா அல்லது உள்ளேயும் அதைத் தன் தலைமேலே வைத்துக்கொண்டிருக்கிறானா? அப்படி வைத்துக் கொண்டிருப்பவனைப் பார்த்துச் சிரிக்கமாட்டார்களா? இந்த உதாரணத்தைத் தான் பகவான் சொன்னார். "குரு என்று ஒருவரை ஏற்றபின் ஏன் எல்லா பாரங்களையும் நீயே சுமந்துகொண்டிருக்கிறாய்? பெட்டியை அதற்கான இடத்தில் வைத்துவிட்டுப் பயணம் செய்வதுதானே உன் வேலை!' என்று கூறினார். தன்னிடம் வந்து சரணாகதி அடைந்தவர்களின் முழு பாரத்தையும் தானே ஏற்றார் ரமண பகவான்.

ஆதாரம்: ரமண சரிதம்

No comments: