February 02, 2017

ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 2



வைத்திய நாதனாக இருந்து தனது அன்பர்களின் நோய்களையெல்லாம் குணப்படுத்திய பகவானுக்கு எப்படி நோய் வந்தது என்ற கேள்வி எழுவது இயற்கையே என்பதாக நேற்று முடித்திருந்தோம். இனிப் பார்க்கலாம்.

'உடலின் வாரிசு நோய்' என்றார் பகவான். நோய்கள் பாவத்தின் பலன் என்பது இந்தியத் தத்துவம். பிராரப்தம் என்பார்கள். பாவ புண்ணியங்களை முழுதுமாய் எரித்துவிட்டவன் தானே ஞானி. ஆனால் சரித்திரத்தில் பார்த்தால் இயேசு சிலுவையில் அறையுண்டார், ராமகிருஷ்ண பரமஹம்சர் தொண்டையில் புற்றுநோய் கண்டு இறந்தார் என்று காண்கிறோம். இவர்களுக்கு ஏது பிராரப்தம்?

இந்த மகான்கள் தமது மிதமிஞ்சிய கருணையால் பிறரது பாவங்களை ஏற்றுக்கொண்டார்கள்.

அன்பரொருவர் தான் பெரிய பாவி என்று கருதினார். பகவானிடம் சரணடைந்தார். ரமணர் சொன்னார் 'சரி, நான் என்ன கேட்டாலும் கொடுப்பாயல்லவா?' என்றார். 'ஆமாம் சுவாமி' என்றார் அன்பர்.

'முதலில் உன் புண்ணியங்களை எனக்குக் கொடுப்பதாகச் சொல்' என்றார். 'சுவாமி, நான் எங்கே புண்ணியம் செய்தேன், உங்களுக்குக் கொடுப்பதற்கு. என் வாழ்வை நீங்கள் அறியமாட்டீர்கள்' என்றார். 'பேசாமல் நான் சொல்கிறபடிச் செய்' என்றார் பகவான்.

'சரி, என் புண்ணியத்தை எல்லாம் கொடுத்தேன்' என்றார். அடுத்து பகவான் சொன்னார் 'இப்போது உன் பாவத்தை எல்லாம் எனக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்'.

'ஐயோ பகவானே. நான் கொடிய பாவி' என்று அழுதார் அன்பர். 'சொல்லவே முடியாத பாவங்கள் செய்தவன் நான்' என்றார் அவர்.

'பரவாயில்லை, அதைப்பற்றி உனக்கென்ன. கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே உன் வேலை' என்று கூறினார். மிகுந்த துயரத்துடன் தனது பாபங்களையும் கொடுப்பதாகச் சொன்னார் அன்பர். அந்த நிமிடமே அவரது மனதில் மிகுந்த நிம்மதி ஏற்பட்டது, வாழ்க்கை மாறிப்போனது. பகவான் அவரது பாபங்களைச் சுமந்தார்.

இன்னும் பார்ப்போம்...

(தொடரும்)

ஆதாரம்: ரமண சரிதம், மதுரபாரதி எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது

No comments: