December 26, 2013

புத்தம் சரணம்: சாரிபுத்திரரின் கதை

குருவின்மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதைக் காட்ட ஒரு கதை:

சிராவஸ்தி நகருக்குத் தெற்கே ஒரு நதி இருந்தது. அதன் அக்கரையில் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருப்பவர்களைக் கடைத்தேற்றும் பொருட்டு ஒருநாள் ததாகதர் அங்கு சென்றார். அங்கே நதிக்கரையிலிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார். அவரது தோற்றப் பொலிவைக் கண்டு ஈர்க்கப்பட்ட கிராமத்து மக்கள் அங்கே திரண்டனர். ஆனால் புத்தர் தனது தர்மத்தை விளக்க முற்பட்டபோது அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.

ததாகதர் கிளம்புவதைப் பார்த்த சாரிபுத்திரருக்குத் தானும் அவரது அறவுரையைக் கேட்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவர் வந்தபோது ஆற்றின் கரையில் படகு இருக்கவில்லை. ஆனால் ஆழமாகவும் வேகமாகவும் நீர் ஓடிக்கொண்டிருந்தது. 'இந்த நீரின்மேல் நடந்துபோய் நான் ததாகதரை அடைவேன். என்னை இது தடுக்காது' என்று கூறியபடி அவர் அதில் கால் வைத்தார். நதி ஒரு சலவைக்கல் தளம்போலக் காலுக்கடியே கிடந்தது.

நதியின் நடுப்பகுதியை அடைந்தபோது நீரோட்டம் மிகுந்த விசைகொண்டதாக இருந்தது. பேரலைகள் வீசின. அவரது மனம் தளர்ந்தது. உடனே அவரது
கால்கள் நீரில் அமிழத் தொடங்கின. மீண்டும் புத்தர்மேல் மனதைச் செலுத்தி உறுதிப்படுத்திக் கொண்டு நடந்தபோது நீர் அவரைத் தாங்கி நின்றது.
படகோ பாலமோ இல்லாமல் அத்தனை சுழல்கொண்டு ஓடும் நீரைக் கடந்து அவரால் எப்படி வரமுடிந்தது என்று வியப்போடு சாரிபுத்திரரை அவர்கள்
கேட்டனர்.

'புத்தரின் குரலைக் கேட்கும்வரை நான் அறியாமையில் இருந்தேன். அவரது மொழி எனக்குத் தெளிவைத் தந்தது. எனவே அவரது சொற்பொழிவை
இங்கு கேட்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தேன். நம்பிக்கை ஒன்றே என்னை இங்கு அழைத்துவந்தது. இப்போது நான் ஐயனின் திருமுன்னர்
மகிழ்ச்சியோடு நிற்கிறேன்' என்று கூறினார் சாரிபுத்திரர்.

'நன்றாகக் கூறினாய் சாரிபுத்திரா. நீ கொண்டது போன்ற நம்பிக்கையே உன்னைப் பிறவிக்கடலில் அக்கரை சேர்க்கும்' என்று கூறிய ததாகதர் 'நீங்கள்
உங்கள் தளைகளை அறுத்தெறிந்து உலகவாழ்வின் மறுகரையை அடையும் சத்தியத்தை அறிய வாருங்கள்' என்றார். பின்னர் தனது தர்மத்தை அவர்
விளக்கிக் கூறியபோது அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு, மனம்மாறி தர்மத்தில் சரண்புகுந்தனர்.

புத்தம் சரணம்கிழக்கு பதிப்பகம் வெளியீடு

No comments: