March 04, 2010

புத்தரின் வாழ்வில்

 

தவத்தின் எதிரிகள்

கௌதமரின் தவத்தைக் கலைக்க அடுத்து வந்தவன் மாரன். (மாரன்: மறலி-தொன்மையான வேதம் கூறும் அஹி, விருத்ரன், நமூசி, விடாப்பிடியன் என்போர் இவரேயாம் என்று கூறுகிறார்கள் ஆனந்த குமாரஸ்வாமி மற்றும் ஐ.பி. ஹார்னர் தமது 'கோதம புத்தர்' என்ற நூலில்.)

மாரன் காமத்துக்கு மட்டும் தேவனல்ல, மரணத்தை விளைவிப்பவனும் அவனே. மிக இனிமையான குரலில் கௌதமரிடம் அவன் "அன்பிற்கினியவனே! நீ வாழ வேண்டியவன். வாழ்வதன் மூலமே நீ அறத்தை அனுசரிக்க முடியும். வாழ்வில் எதைச் செய்தாலும் சிரமப்படாமல் செய்ய வேண்டும். எவ்வளவு இளைத்துவிட்டாய்! எதற்காக இத்தனை கஷ்டம். சன்னியாச வாழ்க்கையால் எதைச் சாதிக்கப் போகிறாய். மனம் என்பதோ அடங்காத ஒன்று. சொல்வதைக் கேள், சுகமாய் இரு" என்று கூறினான்.

"மாரனே, தீயவை அனைத்துக்கும் தோழனே! எனக்கு ஆசைகாட்டப் பார்க்கிறாயா? நான் எளியவனாக இருக்கலாம். ஆனால், என் குறிக்கோள் மிக உயர்வானது. மரணமே வாழ்வின் முடிவாக இருக்கும் பட்சத்தில் அதைத் தவிர்க்க நான் முயலமாட்டேன். என்னிடம் அஞ்சாமை, விவேகம், உறுதி ஆகியவை உள்ளன. யாராலும் என்னை நிறுத்த முடியாது. அசுரனே! உன்னை நான் வெற்றி காண்பேன்.

உனது பட்டாளத்தின் முதல் வரிசையில் ஆசைகள் என்ற போர்வீரர்களை அனுப்புகிறாய்.

அடுத்த வரிசை சோர்வும், தளர்வும்;

மூன்றாவது வரிசையில் பசி, தாகம்;

நான்காவதோ காமம்;

ஐந்தாவதாகச் சோம்பேறித்தனமும் உறக்கமும்;

சந்தேகங்கள் ஏழாமவை;

எட்டவதாகப் போலித்தனமும் கோபமும்;

இறுதியில் சுய தம்பட்டம், பேராசை, முகஸ்துதி, வீண்கர்வம், மற்றவர்களை மட்டம் தட்டுதல்.

இவையல்லவோ உன் படையின் அணிவகுப்பு? தேவர்களையும் மனிதர்களையும் இந்தப் படைகளால் நீ பணியவைத்திருக்கிறாய். நான் விவேகத்தால் இவற்றை அழிப்பேன். பிறகு நீ மாரனே, என்ன செய்வாய்?” என்று தீரத்துடன் மாரனுக்குச் சவால் விட்டார் கௌதமர்.

கௌதமரின் உறுதியான விடையால் மானபங்கமுற்ற மாரன் சிறிதே தளர்ச்சி அடைந்து விலகினான்.

மாரனின் இரண்டாவது முயற்சி

மாரன் தன் முதல் முயற்சியில் தோல்வி கண்டாலும் விடுவதாக இல்லை. அதிலும் உணவு உட்கொள்ளாத கௌதமர் கிட்டத்தட்ட ஒரு நடமாடும் எலும்புக்கூடாக ஆகிவிட்டதில் அவனுக்கு நம்பிக்கை துளிர்த்தது. நைரஞ்சன நதிக்கரையில் உயிர்போகும் நிலையில் உட்கார்ந்து தவம் செய்யும் கௌதமரிடம் வந்து மீண்டும் வசீகரமான குரலில், “கௌதமரே! வற்றி வாடிப்போய் விட்டீரே. சாவு மிக அருகில் உள்ளது. வாழ்வதில்தான் பயன் உண்டு. பிரம்மசரியத்தைக் கைக்கொண்டு, வேள்வி புரிந்தால் புண்ணியத்தை அடையலாம். இந்தச் சிரமமான முயற்சிகள் எதற்கு?” என்று கேட்டான்.

கௌதமர் அதற்கு விடையாக, “தீயவனே! சுயநலம் கருதியே நீ இங்கு வந்திருக்கிறாய். எனக்குப் புண்ணியம் வேண்டாம். யாருக்கு வேண்டுமோ அவர்களிடம் போய் உன் உபதேசத்தைச் செய்.

“சிரத்தை, தவம், தீவிரம், வைராக்கியம் ஆகியவை என்னிடம் உள்ளன. என்னிடம் நீ வாழ்வைப் பற்றிப் பேசத் துணியாதே.

“நதிகள்கூட வறண்டு போகின்றன. எனது குருதி ஏன் வறளக்கூடாது? ரத்தம் வறண்டால், கபமும் பித்தநீரும் வறண்டுவிடும். என் உடலின் மாமிசம் வற்றிப் போகப் போக, என் அறிவு தெளிவடைகிறது. எனது மனம் ஒருமுகப்படுகிறது. எனது விவேகம் உறுதியாகிறது. மிக அதிகத் துன்பத்துடன் வாழும்போது, எனக்குக் காமம் ஏற்படுவதில்லை. என் தூய்மையைப் பார்த்தாயா?” என்றார்.

மாரனின் அரசுக்கே இது பெரிய சவால். அவனது ஆட்சி அழிக்கப்படலாம். இதை அவன் எதிர்கொண்டாக வேண்டும். தன் துணைவர்களைக் கேட்டபோது கௌதமருடன் போரிடுவதே ஒரே வழி என்று கூறினர். நினைத்தாலே அச்சம் தரும் கொடூரமான தன் படையை அணிவகுத்து வந்தான் மாரன். அவனது படைவீரர்கள் நினைத்த உருவத்தை எடுக்கும் மாயையில் வல்லவர்கள். அவர்களின் கைகளிலும் கால்களிலும் ஆயிரக் கணக்கான சர்ப்பங்கள் சுற்றிக்கொண்டு சீறியவண்ணம் இருந்தன. இடிகள், விற்கள், வேல்கள், முட்சங்கிலிகள், தடிகள், வாட்கள் என்று நினைத்தும் பார்க்கமுடியாத ஆயுதங்களை அவர்கள் ஏந்தி வந்தனர். அவர்கள் கோரமான, கோபமான முகத்தை உடையவர்களாக இருந்தனர். அவர்களின் கனத்த, அகன்ற நாவு வாய்க்கு வெளியே தொங்கியது. யானைத் தந்தம் போலக் கோரைப் பற்கள் இருந்தன. தம் ஆயுதங்களால் தாக்கியது போக அவர்கள் மலைகளையும் மரங்களையும் கூட எடுத்து கௌதமரின் மேல் எறிந்தார்கள்.

கௌதமரின்மேல் எதை எறிந்தாலும் அது பூவாக மாறி அவர்மீது பொழிந்தது.

மாரன் தானே நெருப்பாக மாறி கௌதமர் மீது நெருப்பு மழை பொழிந்தான். பயனில்லை.

மாரன் தானே காற்றாக மாறி கௌதமர் மீது புயலாக வீசினான். பயனில்லை.

வன்முறையால் கௌதமரை வெல்லமுடியாது என்று புரிந்துகொண்டான் மாரன். உடனே அவன் அப்சரசுகளை அனுப்பினான். ஒப்பற்ற அழகும், கலைகளில் தேர்ச்சியும் கொண்ட அவர்கள், தங்களால் இயன்ற அளவு கௌதமரின் மனத்தைக் காம வயப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்தனர். தங்கள் முப்பத்திரண்டு வகை அங்க லாவண்யங்களை மயக்குறும் வண்ணம் வெளிப்படுத்தினர். தேனினும் இனிய குரலில் காதல்மொழி பேசினர். ஓர் ஆடவனைக் கிளர்ச்சியூட்டுவதற்கான ஆயிரம் காமக்கலைகளையும் அவர்கள் கௌதமரின்மேல் பிரயோகித்தனர்.

கௌதம பிட்சு எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருந்ததன் மூலம் மாரனின் ஆட்சியை நிர்மூலமாக்கினார்.

இதைப் பார்த்து தேவர்கள் வியந்து, “கௌதம பிட்சுவைப் பாருங்கள். அவர் பரிசுத்தமானவராகவும் கருணையால் நிரம்பியவராகவும் இருக்கிறார். உலகின் இருள் சூரியக் கதிரின் எதிரே நில்லாததுபோல அவரது விடாமுயற்சியால் அவர் சத்தியத்தை அடைவார். சத்தியம் அவருக்கு ஒளி தரும்” என்று கூறிப் போற்றினார்கள்.

- நான் எழுதிய புத்தம் சரணம் நூலிலிருந்து

நீதிநெறி விளக்கம் - சில செய்யுள்கள்

“ஆஹா! ஸ்கூலுக்குப் போறேனே, ஒரே ஜாலியா இருக்கே” என்று கூறியபடி பள்ளிக்குக் கிளம்பும் குழந்தையை நாம் இதுவரை பார்த்ததில்லை. சரியாக பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில்தான் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, இருமல், ஜுரம் என்று ஏதாவது குழந்தைக்கு வரும். அதிலும் பரிட்சை நாளன்றைக்குக் கேட்கவே வேண்டாம்.

படிக்கத் தொடங்கும் காலத்தில் அது மலைவாழையாக இனிப்பதில்லை. ஆனால், சிரமப்பட்டு, ராப்பகலாகக் கண்விழித்துப் பல ஆண்டுகள் கல்வி கற்று, அது ஒருவனின் நற்குணத்துக்கும் நல்வாழ்க்கைக்கும் ஆதாரமாக அமையும்போது, இன்பம் தருகிறது. மிகத் தாமதமாக. ஆனால் ஒருவன் தொடர்ந்து காம நுகர்ச்சியில் ஊன்றி இருந்தால், அவ்வாறு துய்க்கும் காலத்தில் அது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சி போலத் தோன்றுகிறது. ஒரு சமயம் அதுவும் கைத்துப் போகிறது. அவ்வாறு அலுத்துப் போனபின்னர், அவன் வீண்செய்த நேரமும், சக்தியும் புலப்படுகிறது. காமத்தைக் கட்டுக்குள் வைத்துப் பிறவற்றையும் செய்தவர் தன்னைவிட முன்னே எங்கோ சென்றுவிட்டார் என்பது புரிகிறது. கட்டற்ற காமம் உடல்நலக் கேடுகளைத் தருகிறது.

சுருக்கமாகச் சொன்னால், கல்வி தொடக்கத்தில் துன்பமாகவும், காலக்கிரமத்தில் இன்பமாகவும் இருக்கிறது. வரம்பற்ற காமமோ, முதலில் இன்பம் போலத் தோன்றி, பின்னாளில் மிகப் பெரிய துன்பத்தைத் தருகிறது.

தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்
மடங்கொன்றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம்
முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது.
(2)

உண்பது இன்பம், உறங்குவது இன்பம். கவிதை இன்பம், காட்சிகள் இன்பம். கற்பது இன்பம், கடவுளை எண்ணி இருப்பதும் இன்பம். மனவாசலைத் திறந்து வைத்தால் ஒருவன் பெறத்தக்க இன்பங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், சில நிமிடங்களே அனுபவிப்பதான காமம் மனதை ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டால், பிற இன்பங்களை அந்த மனம் அடையாளம்கூடக் காண்பதில்லை. இறையுணர்வு என்கிற பேரின்பப் பெருங்கடலில் திளைத்திருப்பவர் சென்று உலக இன்பம் என்னும் சேற்றுக்குட்டையில் விழுவார்களோ?

சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில்.
87

வெளியே பார்வைக்கு ஒருவன் அனைத்தையும் துறந்துவிட்டவன் போலத் தோன்றுகிறான். ஆனால் அவன் மனமோ ஒவ்வோர் உலகப் பொருளையும் நாடி அலைகிறது. மனத்தால் துறவில்லாத ஒருவன் அணிந்திருக்கும் தவப்போர்வை ஒரு சாதாரண சட்டையளவுக்குக் கூட அவனுக்குப் பாதுகாப்புத் தராது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களில், குறைந்த பட்சம் மெய்யையாவது சட்டை மூடிக் காக்கும். ஆனால் மனத்தளவில் வைராக்கியமில்லாத துறவுப் போர்வையோ அவனது உடலைக்கூடப் போர்த்தாது. (என்றால், பிற புலன்களைப்பற்றிப் பேசவே தேவையில்லை.)

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது.
92

ஒல்லியாக இருக்கும் ஒருவன் விழுந்தால் அவன் அடிபடாமல் தப்பித்துவிடலாம். ஆனால் பருத்த உடலுடையவன் விழுந்தால் அடிபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது. (இறகு போன்று) கனமற்ற பொருள் தடாலென்று விழாது. அப்படியே விழுந்தாலும் நொறுங்கிவிடாது. ஆனால் (பூசணிக்காய் போன்ற) கனத்த, பெரிய உடலைக் கொண்டதன் வீழ்ச்சி தடாலடியாக (ஆரவாரத்தோடு கூடியதாக) இருக்கும் என்பதோடு அந்த வீழ்ச்சி அதற்குப் பெரிய பாதிப்பையும் உண்டாக்கும். (பெரியவர்களாகக் கருதப்படுபவர்களின் வீழ்ச்சியும் பெரிதாகவே இருக்கும்.)

மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப
வலியார்மற் றொன்றானு முய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமா லுய்யா பிற.
95

நீதிநெறி விளக்கச் செய்யுள்களை இயற்றியவர் குமரகுருபர சுவாமிகள்.

அன்புடன்
மதுரபாரதி