July 31, 2004

எத்தனை ஜன்னல்கள்

'ஜ' என்ற எழுத்தில் தொடங்குவதிலிருந்தே நீங்கள் அது தமிழ்ச்சொல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். மிகமிக அவசியமான அளவிற்கு மட்டுமே வடமொழி, உருது, பாரசீக அல்லது பிறமொழிச் சொற்களைக் கொள்வதனால் தமிழ் வளம்பெறும் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. ஆனால், அழகான பல சொற்களை ஓரங்கட்டிவிட்டு ஒரே ஒரு சொல் அங்கே வந்து உட்கார்ந்துவிடுமானால் அதில் எனக்கு வருத்தம் உண்டு. ஜன்னல் என்னும் போர்த்துக்கீசியக் கிளவி செய்த வேலை அதுதான்.

எத்தனைப் பழஞ்சொற்களை விலக்கிவிட்டு நாம் ஜன்னலையே பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போமா? அதிலும் எத்தனை நுட்பமான வித்தியாசங்களை இந்த நுவற்சிகள் காட்டுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.

காற்றுவாரி - கதவில்லாத சிறு சாளரம்; ventilator; window without shutters.
கானெறி -> கால் நெறி (காற்று வரும் வழி) - சாளரம்
திட்டி - சாளரம்
நுழை - பலகணி
பலகணி - சாளரம்
காலதர் - திட்டி
சாலேகம், சாலகம், சாலம் - latticed window (lattice என்பது உலோகம் அல்லது காறையால் பூவேலைப்பாடோ, குறுக்கும் நெடுக்குமாய் வடிவங்களோ அமைப்பது. படத்தில் காணப்படுவது)
நூழை - ஒருவகைச் சாலேகம்
கதிர்ச்சாலேகம் - இரும்புக்கம்பி பொருத்திய சாளரம்
பின்னற்சன்னல் - வலை பொருத்திய சாளரம்
குறுங்கண் - சிறிய துளைகளுடன் கூடிய அலங்காரச் சாளரம்; a kind of latticed window with small apertures;
குறுங்குடாப்பு - சாளரம் அல்லது கதவின் மேல், மழை வெய்யில் இவற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு, sunshade
காற்றுவாரிப்பலகை - வீட்டின் முகட்டில் இருக்கும் சாளரத்தில் காற்றை நிறுத்த அல்லது அனுமதிக்கப் பயன்படும் மரக்கதவு; movable wooden shutter of a ventilator or of a window near the roof.
நேர்வாய்க்கட்டளை - பல அடுக்கு வீட்டின் மேல் அடுக்கில் வைக்கும் சாளரம்.
பசுக்கற்சன்னல் -> (பசுக்கல் + சன்னல்) - மரத்தாலான கதவுகளை உடைய சாளரம். [பசுக்கல் - பலகைகளை இணைத்தல்]
இலைக்கதவு - இலைபோல் மரத்தட்டுக்கள் தொடுக்கப்பட்ட கதவு; venetian door or window.

இப்போது பிளாஸ்டிக்கில் இலையிலையாக மறைக்கும் (அல்லது திறக்கும்) venetian blind-ஐ நாம் எல்லா இடத்திலும் பார்க்கிறோம். அதை இலைத்தட்டி என்று சொல்லலாம். முன்பெல்லாம் கோடைக்காலத்தில் வெட்டிவேர் என்ற நறுமணமுள்ள வேரால் செய்த ஒரு மறைப்பைப் பயன்படுத்துவார்கள். அதில் தண்ணீர் தெளித்தால், காற்று அதன் வழியே வரும்போது தண்மையும், வேரிகொண்டதாகவும் இருக்கும். (வேரி - நறுமணம்) அதை வெட்டிவேர்த் தட்டி என்பார்கள். எனவேதான் வெனீஷியன் பிளைண்டு நம்மைக் குருடாக்காமல் அதை இலைத்தட்டி என்று சொல்வது அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

சந்தர்ப்பத்துக்கேற்பப் பயன்படுத்தியும், ஆரம்பத்தில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லையும் கொடுப்பதன்மூலமும் இச்சொற்களை மீண்டும் செலாவணிக்குக் கொண்டுவர முடியும். நிறையப் பொறுமையும், முயற்சியும் தேவை. அவ்வளவே. குறிப்பாக மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துடன் தொடர்புகொண்டவர்கள் இப்பணியைத் தொடங்கினால் 'தமிழால் முடியும்' என்பது வெறும் பேச்சாக இல்லாமல், நடப்புச் சாத்தியம் ஆகும். தவிரவும் 'செம்மொழி' என்று மார்தட்டிக்கொள்ளும் பெருமையைவிட, மொழியின் செழுமையை மீண்டும் பயனுக்குத் தருவது நாம் நம் தாய்மொழிக்குச் செய்யும் பெருந்தொண்டாகும்.

அள்ள அள்ளக் குறையாது - 1

'அள்ள அள்ளக் குறையாது' என்னும் என் கட்டுரையைத் தமிழோவியத்தில் படியுங்கள்:
http://www.tamiloviam.com/unicode/secondpage.asp?fname=07290406&week=jul2904

July 25, 2004

குறும்(புப்) பாக்கள்

ஆங்கிலத்தில் எட்வர்டு லியர் பிரபலப்படுத்திய லிமரிக்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அவர் எழுதும் முன் அவை Nonsense rhymes என்றே அறியப்பட்டன. மிக வேடிக்கையாக இருக்கும். இதன் தற்போதைய வடிவில் 5 அடிகள், அதில் 1,2,5 ஆம் அடிகளிலும், 3,4 ஆம் அடிகளிலும் rhyme ஆகும். இதைத் தமிழில் இயைபுத்தொடை என்று சொல்லுவார்கள்.

இது ரொம்பச் சரளமான வடிவம். நகைச்சுவை ததும்ப எழுதவேண்டியது. தமிழில் குறும்பா என்று சொல்லுவார்கள். எனக்கு இதைக் குறும்புப்பா என்று சொன்னாலும் சம்மதம். மடற்குழுக்களிலும், வலைப்பூக்களிலும் ஒரே சச்சரவு செய்துகொள்ளுகிறவர்களாகிவிட்டோமோ என்று தோன்றுகிறது. எனவே கொஞ்சம் மனநிலையை இலகுவாக்க என் பங்குக்குக் கொஞ்சம் குறும்பாக்கள்:

சின்னசாமி நகம்ரொம்ப நீட்டம்
கின்னசுலே போடணுமாம் நாட்டம்
பொண்ணுபாக்கப் போனா
நடுங்கிப்புட்டா மீனா
நகத்தைப்பாத்து உட்டாளய்யா ஓட்டம்!

சினிமாவில் நடிக்கவந்தா சின்னா
பேரைமட்டும் மாத்திக்கிட்டா 'டின்னா'
வெற்றிவிழா கண்டா
ஆகிவிட்டா குண்டா
வெளயாட்டா கனவு(க்)கன்னி யின்னா!

பாத்திடத்தான் பரமசிவம் குட்டை
கராத்தேயில் பலவண்ணப் பட்டை
சண்டைபோட்ட கிட்டு
தலையிலொரு தட்டு
கொடுத்ததுமே 'விக்'எகிற மொட்டை!

ஏட்டையா ஓடுவது பிந்தி
ஏனுன்னா பெரிசுகொஞ்சம் தொந்தி
ஒரேயொரு நாளு
ஓடுனாரு ஆளு
பாத்தாக்கக் கலியாணப் பந்தி!

நாயிபூனை வளத்திடுவா அல்லி
நல்லவார்த்தை அன்போட சொல்லி
பிராணிக்கெல்லாம் தோழி
பெண்ணரசி வாழி!
நடுங்கினாளாம், சுவத்திலதான் பல்லி!

எத்தனையோ பொண்ணை(ப்)பாத்துப் புட்டான்
எங்கஊரு வாத்தியாரு கிட்டான்
சாளேசுரம் கண்ணுல
கல்யாணமே பண்ணல
த்ரிஷாவுக்காக் காத்திருந்து கெட்டான்!

கவிஞரையா எழுதினாரு பாட்டு
கச்சிதமா வார்த்தையெல்லாம் போட்டு
மைக்குமுன்னே நின்னு
வாய்தொறந்தா ருன்னு
எல்லாருமே உட்டுட்டாங்க ஜூட்டு!

அய்யாகம்பை எடுத்துப்புட்டா கையிலே
அடிவிழுமே கைமுகம்தொ டையிலே
அடிச்சுட்டுப்போ கட்டும்
திட்டினாதான் கஷ்டம்
வாய்நெறய கும்பகோணம் போயிலே!

இதைப் பார்த்தபின் எல்லோரும் எழுதிக் குவிக்கலாமே. வாருங்கள் மரபிலக்கியத்துக்கு. சுட்டி வலதுகைப்பக்கம்.

July 13, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 4

எனது கண்ணாடி சொல்லும் கதைகளின் முதல் 3 பகுதிகளைப் படித்துவிட்டு, தமிழ்ச் சொற்பிறப்பியல் அறிஞரான இராம.கி. அவர்கள் ராயர் காபி கிளப்பில் முன்வைத்த கேள்வியும் அதற்கான என் மறுமொழியும்:

பளிங்கு என்பதைக் கண்ணாடி என்றே பொருள் கொள்ள முடியுமா என்ற கேள்வி எனக்கு உண்டு. மறுபளிக்கின்ற reflecting) பரப்பைக் கொண்ட எல்லா மண்ணூறல்களுமே (minerals) பளிங்குதான் என்றே நான் விளங்கிக் கொள்ளுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.


மறுபளிக்கும் எல்லாப் பொருள்களுமே பளிங்குதான் என்ற உங்கள் எண்ணத்துக்கு ஊற்றம் தராதவை இவை:

1. முன்பே கூறியது: பளிங்கு என்ற சொல் சலவைக்கல் என்ற பொருளில் இலக்கியங்களில் ஆளப்படவே இல்லை.

சலவைக்கல்லுக்கான பிற சொற்கள் - வெண்கல், வெள்ளைக்கல் என்பவையே. இவையும் OTL-இல் கிடைத்தனவே அன்றி இலக்கிய ஆட்சி கிட்டவில்லை. மதூர்க்கல் என்பதாக ஒரு கருப்பான, மிகப்பளபளப்பான சலவைக்கல் இருப்பதாகவும் தெரிகிறது.

2. முகம்பார்க்கும் கண்ணாடி: இதற்குத் தமிழில் படிமக் கண்ணாடி, பாண்டில் ஆகிய சொற்கள் இருந்தன. பாண்டில் என்பது மிகப்பழைய சொல். இதைப் புறப்பொருள் வெண்பாமாலையில் (6-12) காணமுடிகிறது. ஆடி என்ற சொல் பிரதிபலிக்கும் கண்ணாடியைக் குறித்தது என்பதைக் குறுந்தொகைப் பாடலில் இருந்து ஹரிகிருஷ்ணன் சுட்டியுள்ளார்.

கண்ணாடிவிடு தூது என்னும் 18-ஆம் நூற்றாண்டுப் பாடல் தர்ப்பணம், முகுரம், கஞ்சனம், அத்தம், படிமக்கலம், ஒளிவட்டம் ஆகிய சொற்களைத் தருகிறது. இதிலும் பளிங்கு என்ற சொல்காணப்படவில்லை.

யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதியில் புவனமெண்வச்சிரம் என்ற சொல் இருந்திருக்கிறது. அதாவது "உலகம் வைரம் என்று எண்ணுகிறது" என்று பொருள்படுகிற இது கண்ணாடிப் படிகத்தைத்தான் குறித்திருக்கிறது.

3. இப்போது 'திருப்பாவை' தரும் அழகான தட்டொளி என்னும் சொல். இது உலோகத்தைப் பளிக்கிய கண்ணாடி. தாமிரமும், வெள்ளீயமும் இன்னும் சில இரகசிய உலோகங்களையும் கலந்து செய்யும் இக்கண்ணாடி உலக அதிசயம். கேரளத்தில் பம்பையாற்றின் கரையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு மட்டுமே இக்கலை தெரியுமாம். சுட்ட களிமண்ணை மிக நுண்மையான பொடியாக்கி அதில் விளக்கெண்ணெய் சேர்த்து (யார் சொன்னது விளக்கெண்ணெய்க்கு வேறு பயன்கள் இல்லையென்று!) அந்தக் கலவையால் உலோகத் தட்டின் ஒருபுறத்தைப் பளபளப்பேற்றுவார்கள். இதற்கு 24-இலிருந்து 48 மணிநேரம் வரை ஆகலாம். இங்கே பக்கத்தில் காணப்படுவது உலோகக் கண்ணாடியே.

எனக்குக் கிட்டிய ஆதாரங்கள் உங்கள் பூட்கையை மெய்ப்படுத்தவில்லை. ஆனால் OTL பளிங்கு என்பதற்கு முகம்பார்க்கும் கண்ணாடி என்ற பொருளையும் தருகிறது. எனவே மறுபளிக்கும் கண்ணாடியை (reflecting mirror) பளிங்கு என்று குறிக்க முற்பட்டது பிற்கால வழக்காகத்தான் இருக்கவேண்டும்.

ஆயினும் நான் முதலில் எழுதிய கட்டுரையின் நோக்கம் mirror-பற்றிப் பேசுவது அல்ல. படிகக்கண்ணாடி என்ற வகைக் கண்ணாடி (1) நெடுநாட்களாகவே இந்தியாவில் அறியப்பட்ட ஒன்று (2) இதைப் பலவகையிலும் பயன்படுத்த இந்தியர் அறிந்திருந்தனர் என்று கூறுவதும் அதற்கான சான்றுகளைத் தருவதுமாகவே இருந்தது. திருக்குறளில் நான் சொன்னதுகூட அந்த இடத்தில் மறுபளிக்கும் கண்ணாடி என்பது பொருந்தாது, ஊடுருவும் கண்ணாடி என்று கொள்வதே குறளின் பொருளைத் தெளிவாக்கும் என்பதற்காகவே. 'உள்ளே இருப்பதை வெளியே காட்டுகிறது' என்று சிந்தித்தாலே என் விளக்கம் அதிகப்பொருத்தம் என்பது புரியும்.

இந்தக் கோணத்தில் சிந்திக்கவைத்தமைக்கு நன்றி. கதவைத் திறந்தே வைக்கிறேன். இன்னும் சான்றுகள் கிட்டலாம். அப்போது மீண்டும் பேசுவோம்.

July 07, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 3

கண்ணாடி சொல்லும் கதைகள் - 1 கண்ணாடி சொல்லும் கதைகள் - 2

"பளிங்குச் சொரிவு அன்ன பாய் சுனை", அதாவது கண்ணாடியை உருக்கி ஊற்றியது போலச் சுனையின் நீர் பாய்ந்து வருகிறது, என்று பத்துப்பாட்டில் ஒன்றான கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு சொல்கிறது. இதுவும் சங்ககாலத்து நூல் என்பதைப் பார்க்கவேண்டும்.

ஆகவே இதுவரையில் நமது பழநூல்கள் எல்லாமே பளிங்கு அல்லது பளிக்கு என்பதை படிகக் கண்ணாடி (crystal glass) என்றே கொண்டிருப்பதைக் கண்டோம். அது எங்குமே முகம்பார்க்கும் கண்ணாடி (mirror) என்ற பொருளில் பயன்படுத்தப் படவில்லை. அதே சங்க காலத்தவரான திருவள்ளுவரும் இச்சொல்லை நாம் கண்ட பொருளிலேயே தான் பார்த்திருக்கவேண்டும் என்று நினைக்கும்போது, நமக்குப் பெரிதும் பழக்கமான

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
(குறள் - 706)

என்ற குறளுக்கு ஒரு புதிய, தெளிவான, துல்லியமான பொருள் விளங்குகிறது. நாம் பளிங்கு என்றதும் முகம்பார்க்கும் கண்ணாடி அல்லது சலவைக்கல் என்றே தற்போது புரிந்துகொள்கிறோம். அதாவது "ஒரு பளபளப்பான சலவைக்கல்லில் அல்லது கண்ணாடியில் அதனருகே இருப்பது பிரதிபலிக்கிறது. அதேபோல ஒருவன் மனத்தில் கோபம் வருமெனின் அதை முகம் பிரதிபலிக்கும்" - இவ்வாறே நாம் புரிந்துகொள்கிறோம். இதிலே நாம் பொதுவாக இரண்டு தவறுகள் செய்கிறோம். ஒன்று 'பளிங்கு' என்பதைப் புரிந்துகொள்வதில். இதைத் தவறாகப் புரிந்துகொண்டதால் வரும் தவறு 'காட்டும்' என்பதற்குப் 'பிரதிபலிக்கும்' என்று கொண்ட பொருள்

நாம் இதுவரையில் விவரித்தபடி பளிங்கு என்ற சொல்லை ஒளி ஊடுருவும் படிகக் கண்ணாடித் தகடு என்ற பொருளில்தான் நமது பழைய இலக்கியங்கள் பயன்படுத்தி இருக்கின்றன.

அடுத்து நாம் செய்யும் தவறு, 'கடுத்தது' என்று சொல்லுக்குக் 'கோபம் கொண்டது' என்று பொருள் கொள்ளுதல். ஏன், ஒருவேளை அவன் மகிழ்ந்தாலோ அல்லது அஞ்சினாலோ அதை முகம் காட்டாதா? 'கடுப்பு' என்பதற்கு 'மிகுதல்' என்றும் பொருளுண்டு. ஆகவே, அவன் மனதில் அதிகமாய் ஏற்பட்ட உணர்வு எதுவோ அதுதான் 'கடுத்தது'.

வள்ளுவனின் மனத்தைக் காண்பதில் மிக வல்லவரான பரிமேலழகர் சொல்லும் பொருள் இவ்வாறு: "தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்குபோல, ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்." இவ்விளக்கத்தில் பரிமேலழகர் செய்தது ஒரே ஒரு தவறுதான் - 'பளிங்கு' என்பதற்குப் படிகம் என்று மட்டுமே பொருள் கண்டது. படிகம் தட்டையானதல்ல, ஒரு மணிபோன்ற வடிவம் கொண்டது. அதனருகில் ஒரு சிவப்பான பூ இருந்தால் படிகத்தில் சிவப்பு நிறம் தெரியும். ஆனால் அதன் வழியே பூவின் வடிவம் தெளிவாகத் தெரியாது.

ஆனால், நம்முடய பளிங்கிலோ மணிமேகலையில் சொன்னாற்போல "விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்", அதாவது ஒலிதான் வெளியே கேட்காது, உருவம் தெரியும். எனவே பரிமேலழகரும் வள்ளுவனின் மனம் காணவில்லை. 'அடுத்தது' என்பதற்கு 'பளிங்கின் மறுபுறத்திலிருப்பது' என்று பொருள். 'காட்டும்' என்றால் மறுபுறமிருந்த மணிமேகலையை உதயகுமாரன் பார்த்ததுபோல் முழுமையாகக் காட்டும் என்றுதான் பொருளே தவிர, 'அதன் நிறத்தை மட்டும் காட்டும்' என்று பொருள் அல்ல. "பளிக்குத் தகட்டின் அப்புறம் இருப்பது இப்புறம் தெரியும். அதேபோல, உள்ளத்தின் உள்ளே மிகுவது முகத்தின் வழியே வெளியே தெரியும்" என்பதுதான் இக்குறளின் சரியான பொருள்.

இக்கட்டுரையில் நான் கொடுத்திருக்கும் பளிங்கு பற்றிய இலக்கியக் குறிப்புகள் இதுவரையில் யாராலும் ஆய்ந்து சொல்லப் பட்டவையல்ல. கிரேக்க நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பிளைனி என்பவர் (கி.பி. 23-79) "இந்தியாவில் பார்ப்பது போல உலகில் வேறெங்கும் கண்ணாடியைப் பார்க்கமுடியாது, ஏனென்றால் படிகத்தை உடைத்துச் செய்யப்படுவது இது" என்று சொல்லியிருக்கிறார். இதைச் சொல்லும் ஆலன் மக்·பார்லேன் என்பவர் "இந்தியாவில் பழமையான கண்ணாடிப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார். குறிப்பாக "கண்ணாடியின் பிறப்பிடமான மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அருகில் இருந்தும்கூட இந்தியாவில் கண்ணாடித் தொழில்நுட்பம் செழிக்கவில்லை. கிறித்துவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணாடி செய்யத் தெரிந்த இந்தியர் கண்ணாடியில் வளையலும், மணிகளும் மட்டுமே செய்தனர்" என்கிறார்.

அரிக்கமேடு ஒரு காலத்தில் கண்ணாடி மணிகள் செய்வதில் முன்னோடியாக இருந்தது என்று சுவேவா லுச்சியோலா (Sveva Lucciola) என்னும் அம்மையார் கூறுகிறார். கி.மு. 400 முதல் கி.பி. 1600 வரை சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலம் கண்ணாடி மணிவகைகளைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதில் முன்னோடியாக அரிக்கமேடு இருந்ததை அவர் மிக வியப்போடு குறிப்பிடுகிறார். இதுவும் பெருமைப்படத் தக்கதே. ஆனால் நாம் அத்தோடு நிற்கவில்லை என்பதே என் வாதம்.

தமிழ் இலக்கியங்கள் கூறும் சான்றுகளின் படி கண்ணாடியினாலே மாளிகைகள், மாடங்கள், அகழியின் உட்புறத் தளங்கள் என்று பலவகையிலும் செய்யும் அளவுக்கு இந்தியர் முன்னேறியிருந்தார்கள் என்பதைக் காட்டினேன். அவர்கள் விவரிக்கும் பாங்கிலிருந்தே இவை வெறும் கவிஞர்களின் அதீதக் கற்பனையல்ல என்று புரிந்துகொள்ளவேண்டும். அதிலும் பளிங்கில் இத்தகையன செய்யலாம் என்பதை இந்திய நாடு இத்தனைப் பழங்காலத்தில் அறிந்திருந்தது என்பதையும் கண்ணாடியைப் பற்றிப் பேசும் பிறநாட்டினர் யாரும் சொல்லவில்லை. இதைப் படிக்கும் எவரேனும் இந்த இலக்கியச் சான்றுகளோடு, நமது அறிவியல் மேன்மையை உலக அரங்கில் நிறுவமுடியுமென்றால் நான் மிக மகிழ்வேன்.

July 06, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 2

கண்ணாடியின் வரலாற்றைப் பார்த்தால், கிறிஸ்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்குமுன் தழைத்த மீசோபொடாமியா (Mesopotamia - இதை மெசபடோமியா என்று உச்சரிப்பது தவறு) நாகரிகத்தில் கண்ணாடிப் பொருட்கள் காணப்பட்டனவாம். எகிப்து நாட்டில் கி.மு. 3500-இல் புழங்கிய பளிங்குச் சாமான்கள் கிடைத்துள்ளன. ஆனால் கண்ணாடியின் வரலாற்றில் இந்தியாவின் பெயர் இல்லை. ஏன் என்பது சிந்தனைக்குரியது. இப்போதிருக்கும் பதின்ம எண் வரிசை இந்தியாவில் தோன்றியதாக இருக்க, அதை 'அராபிய எண்கள்' என்று உலகம் சொல்லிவருவதைப் போன்றது.

சரி, வெறும் கண்ணாடி மாளிகைகள்தாம் இந்தியாவில் கட்டினார்களா? இல்லை வேறு பொருள்களும் செய்யப்பட்டனவா? கம்பராமாயணம் மது அருந்துவதற்கான கண்ணாடிக் கிண்ணத்தைக் குறிப்பிடுகிறது. இரண்டு வகைக் கிண்ணங்கள் பேசப்படுகின்றன:

பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி

(மிதிலைக்காட்சிப் படலம்: பாடல்-14)

[படிகக் கண்ணாடி வட்டிலில் வார்த்த மணமுள்ள, பசுங்கள்ளை அருந்தி]

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி


(உண்டாட்டுப் படலம்: பாடல் -17)

[மணி வட்டிலில் இருக்கும் கள்ளில் காணும் தன் போதையேறிய முகத்தைப் பார்த்து, வானத்தில் இருந்த நிலா மது அருந்தும் ஆசையால் வட்டிலுக்குல் விழுந்ததோ என்று எண்ணி..]

வள்ளம் என்பது உண்ண அல்லது பருகப் பயன்படும் கிண்ணம் அல்லது வட்டில். முதல் பாடல் வரியில் வரும் பளிக்கு வள்ளம் புரிகிறது. அது என்ன மணி வள்ளம்? சாதாரணமாக, மணி என்பது நவமணிகளையும், முத்தையும் குறிக்கும். இதே படலத்தில் கம்பன் மதுவருந்தத் தங்கக்கிண்ணங்களைப் பயன்படுத்தியதாகவும் சொல்கிறான். மணிகளைப் பதிப்பதானால் அதிலேதான் பதிக்கவேண்டும். அதைத் தவிர மீண்டும், மீண்டும் பல பாடல்களில் மணி வள்ளம் என்கிறானே. மணி என்பதற்குப் படிகம் (crystal) என்றும் பொருள் உண்டு. நாம் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியைப் பார்த்தால் பளிக்கறை என்பதற்கு Crystal Palace என்ற பொருளைப் பார்க்கலாம். இப்போதும் உயர்தரக் கண்ணாடியால் செய்யப்பட்ட கெட்டியான கண்ணாடிக் கோப்பை முதலியவற்றைக் 'கிரிஸ்டல்' (படிகக் கண்ணாடி) என்றே வழங்குவதை அறிந்திருக்கலாம். இவை சாதாரணக் கண்ணாடியால் செய்யப்பட்ட பாண்டங்களை விட விலை உயர்ந்தவை.

இதை நான் சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. கம்பன் இராமாயணத்தை எழுதிய காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்று பெரும்பாலும் சொல்கின்றனர். சிறுபான்மையினர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்கின்றனர். ஆனால் படிகக் கண்ணாடி (Crystal glass) முதன்முதலில் தயாரிக்கப்பட்டது 1765-இல் என்று சரித்திரம் சொல்கிறது. அப்படியானால் இந்தியா இதனை முதலிலேயே அறிந்து, பயன்படுத்தியது என்பதைப் பிறநாட்டு வரலாற்றறிஞர் அறியவில்லை என்றுதானே பொருள்? கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த பிளைனி என்ற கிரேக்க அறிஞர் இந்தியாவில் படிகக் கண்ணாடி இருந்ததாகச் சொல்வதைப் பின்னால் பார்க்கப் போகிறோம்.

நான் முன்னரே கூறிய கி.மு. 5000-இல் கண்ணாடியால் அம்புநுனிகள், கத்திகள் ஆகியவையும் செய்யப்பட்டதாக வரலாறு சொல்கிறது. எரிமலைக் குழம்பு உறைவதால் ஒருவகைக் கருப்பான கண்ணாடி இயற்கையிலேயே கிடைக்கும். இதை 'Obsidian' (ஆப்சிடியன்) என்பார்கள். இந்தக் கண்ணாடியாலேயே ஆதிகாலக் கருவிகள் செய்யப்பட்டனவாம். ஆனால், அவ்வாறல்லாது நல்ல படிகக் கண்ணாடியாலே செய்த நுகத்தடி பொறுத்திய தங்க ஏரினால் வேள்விக்கான நிலத்தைத் திருத்தும்போதே சிவதனுசோடு, சீதாப்பிராட்டியாரை உள்ளே வைத்த பேழை கிடைத்ததாக இராமாயணம் சொல்கிறது.

இரும்பு அனைய கரு நெடுங்கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து


(கார்முகப் படலம்: பாடல்-16)

[பெரிய கருப்பான இரும்புபோன்ற கொம்புகளை உடைய காளைச் சோடியின் புடைத்த பெரும் கழுத்தில் பளிங்கினாலான நுகத்தடியைப் பிணைத்து...]

அயோவா மாநிலப் பல்கலைக் கழகம் வலையில் பதிப்பித்திருக்கும் கண்ணாடியின் வரலாற்றின் படி கி.மு. 12000-த்திலேயே நீர்க்குடுவைகள், குப்பிகள் மற்றும் ஜாடிகளிலிருந்து நீர் ஒழுகாதிருக்கும் பொருட்டுச் சீனாக் களிமண் பூச்சுப் போன்றதொரு கண்ணாடிப் படலத்தைப் பூசினர் என்று தெரியவருகிறது. இத்துடன் ஒப்பிடத்தக்க ஒன்றைக் கம்பராமாயணத்தில் பார்த்தபோது எனக்கு வியப்புத் தாங்கவில்லை.

அயோத்தி மாநகரத்தைச் சுற்றி ஒரு மதிற்சுவர் இருந்தது. அதற்கு வெளியே செயற்கையாக அமைத்த அகழி ஒன்று இருந்தது. அகழியின் வெளிப்புறச் சுவர் வெள்ளியாலே அமைக்கப்பட்டிருந்தது. உள்புறம் முழுவதும் முதலில் தங்கத் தகட்டினால் பாவப்பட்டிருந்தது. தகட்டின்மேல் முன் சொன்னதுபோலப் படிகக் கண்ணாடிப் பூச்சு ஒன்று தரப்பட்டிருந்தது.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளிகட்டி உள்ளுறப்
பளிங்கு பொன்தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்
தளிந்த கல்தலத்தொடு அச்சலத்தினை தனித்துற
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே


(நகரப்படலம்: பாடல்-20)

இப்படி அமைத்ததாலே இரண்டு பயன்கள். ஒன்றைக் கம்பனே சொல்கிறான். இந்த அகழி கற்பாறைகளால் ஆன கோட்டையின் அருகே இருக்கிறது. கோட்டைக்கும் அகழிக்கும் இடைப்பட்ட பகுதியிலும் கருங்கல் தளம் உள்ளது. மேலே சொன்னதுபோல் அமைத்த அகழி ஒரு செம்மையாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே செயல்படும். எனவே கோட்டையின் கற்கள் அதில் தெரியும். அப்போது தூரத்திலிருந்து வருகின்ற எதிரிப் படையினருக்கு அகழிநீர் தெரியாது. கருங்கல் தளத்தின் தொடர்ச்சியாகவே தோன்றும். "தளிந்த கல் தலத்தொடு அச் சலத்தினைத் தனித்துறத் தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே" என்கிறான் கம்பன். அகழிநீரையும், கருங்கல் தரையையும் இனம் கண்டு பிரித்துச் சொல்லத் தேவராலும் முடியாதாம்!

அடுத்த பயன் கம்பன் சொல்லாதது. அகழி செயற்கையானது. அதற்கு நீரை நிரப்பியாக வேண்டும். அவ்வாறு நிரப்பிய நீர் இரண்டு வழிகளிலே வீணாகும். ஒன்று, பூமி இழுத்துக் கொள்ளும். இரண்டாவது, சூரிய ஒளியில் ஆவியாகிப் போகும். முன்பே நீர்க்குடுவை, குப்பி ஆகியவற்றுக்குச் சொன்னதுபோல் இந்தக் வலுவான கண்ணாடிப் பூச்சு நீர் ஒழுகிப்போக முடியாது தடுக்கும். மேலும் அகழியே ஒரு கண்ணாடி போலப் பளபளப்புடன் இருப்பதால், சூரிய ஒளி பெரும்பாலும் பிரதிபலிக்கப்பட்டு, நீர் வெம்மையாவதையும் குறைக்கும். அப்போது ஆவியாதல் மட்டுப்படும்.

இன்னும் உண்டு...

கண்ணாடி சொல்லும் கதைகள் - 1

இப்போதெல்லாம் பெருநகரங்களில் இருக்கும் வானுயர மகாவணிகக் கட்டிடங்களின் முன்புறம் முழுக்கக் கண்ணாடியால் மினுங்குமாறு கட்டப்படுகிறது. ஆனால் அவை ஒருவழிப் பார்வை கொண்டவையாய் உள்ளன. வெளியே இருப்பவருக்கு உள்ளிருப்பது தெரியாது. உள்ளே மெல்லிய வெள்ளீயப் படலம் கொண்ட மிதவைக் கண்ணாடி (float glass) வகையைச் சேர்ந்தவை அவை.

ஆனால் அவ்வாறில்லாமல் நிறமற்ற கண்ணாடியாலேயே அறை கட்டியிருந்ததை தமிழ்க் காவியமான மணிமேகலை விவரிக்கிறது. மாதவியின் மகளான மணிமேகலை, புத்தமதத்தை மேற்கொண்டு, துறவறம் பூண்டு, தன் தோழி சுதமதியோடு உவவனம் என்ற மலர்வனத்துக்குச் செல்கிறாள். அவள் மீது மிகவும் காதல் கொண்டிருக்கிறான் உதயகுமாரன். இவன் கரிகாற் சோழனின் வழிவந்த அரசகுமாரன். வழியிலே எட்டிகுமாரன் என்பவன் மூலம் மணிமேகலை உவவனம் போயிருக்கிறாள் என்பதை அறிந்து, அங்கே போய் அவளைத் "தேரில் ஏற்றிக்கொண்டு வருவேன்" என்று சொல்லிப் போகிறான்.

அவன் தேரொலி கேட்டதுமே அவளைச் சுதமதி பளிக்கறை என்னும் கண்ணாடி அறையில் வைத்துத் தாழிட்டுவிடுகிறாள். அந்தப் பளிக்கறை எப்படிப்பட்டது தெரியுமா?

விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதனுள்


(மலர்வனம் புக்க காதை: 63-64)

[விளிப்பறை போகாது - அழைத்தால் அது அறைக்கு வெளியே கேட்காது; மெய் புறத்து இடூஉம் - உருவத்தை வெளியே காட்டும்; பளிக்கறை - பளிங்கு அறை, கண்ணாடி அறை]

"அந்தக் கண்ணாடியறைக்கு வெளியே இருந்து பார்ப்பவர்க்கு உருவம் தெரியும், ஆனால் ஒலி வெளியே கேளாது". எனவே இந்தப் பளிக்கறை வெறும் கவிஞனின் கற்பனையல்ல. மிகத் துல்லியமாகக் கண்ணாடியறையின் தன்மை சொல்லப்படுகிறது.

உதயகுமாரன் வந்து தேடுகிறான். பளிக்கறைக்குள் பேரழகோடு பவழத்தால் செய்த பதுமை ஒன்று இருப்பதுபோல அவனுக்குத் தெரிகிறது. பிறகு மணிமேகலைதான் அது என்று உணருகிறான். அவனுக்கு அவசரம். ஒன்றுபோலக் கண்ணாடித் தகடாக இருக்கும் அந்தச் சுவற்றில் அவனால் தாழ்ப்பாள் எங்கே இருக்கிறது என்றுகூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை. கையால் தடவிப்பார்க்கிறான். பயனில்லை.

காவி அங்கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழொளி மண்டபம் தன் கையிற் தடைஇச்
சூழ்வோன்


(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை: 8-10)

[குவளைமலர் போல அழகிய கண்களை உடைய மணிமேகலைதான் அது என்பதைத் தெரிந்துகொண்டு உதயகுமாரன் தன் கையாலே தடவி மண்டபத்தின் தாழ்ப்பாளைத் தேடுகிறான்.]

கண்டுபிடிக்க முடியவில்லை. அவனால் தாழ்ப்பளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் என்ன பொருள்? தாழ்ப்பளையும் கண்ணாடிப் பொருளாலே செய்திருக்கிறார்கள் என்பதுதானே!

இதே போல சித்திரகூட மலைமீது அமைந்த ஒரு பளிக்கறையைப் பற்றி கம்பராமாயணம் சொல்கிறது. இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் சித்திரகூட மலையின் அழகை இரசித்தவாறு செல்லுகையில் இராமன் இவ்வாறு சொல்கிறான்:

அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்
களிப்பு இல் இந்தியத்து யோகியைக் கரக்கிலன் அதுபோல்
ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத் தெரிகின்ற
பளிக்கு அறைச் சில பரிமுக மாக்களைப் பாராய்


(அயோத்தியா காண்டம்: சித்திரகூடப் படலம்: பாடல் 11)

"இறைவன் மாயைக்குள்ளே தன்னை ஒளித்துவைத்துக் கொண்டிருந்தாலும், புலன்களால் வரும் சுகங்களை ஒதுக்கிய ஞானியருக்கு அவன் தன்னை ஒளித்துக்கொள்வதில்லை. அதுபோலத் தம்மை ஒளித்துக் கொள்ளமுயன்றும், வெளியே உருத்தெரிகின்ற பளிக்கறைக்குள் இருக்கும் கின்னரர்களைப் பார்" என்று இராமன் சொல்கிறான். கின்னரர் என்பவர் குதிரைத் தலையும் மனித உடலும் கொண்டவர். (ஆங்கிலத்தில் centaur என்று அழைப்பதன் தலைகீழ் இணைப்பு. 'Harry Potter and the Sorcerer's Stone' பார்த்திருந்தால் அதில் குதிரை உடலும் தலைப்பகுதியில் இடுப்பிலிருந்து தொடங்கும் மனிதனுமான உருவத்தைப் பார்த்திருக்கலாம்.)

இக்காலத்தில் நாம் பளிங்கு அறை என்றால் சலவைக்கல்லால் கட்டிய அறை என்று புரிந்துகொள்கிறோம். சலவைக்கல் என்பது சுண்ணாம்புக்கல்லின் வேறொரு பவுதீக வடிவம். நாம் தூய வெள்ளைக் கற்களையே சலவைக்கல் என்றாலும், பிற தனிமங்களின் கலப்பால் வெவ்வேறு நிறமும், கோலங்களும் படிந்த சலவைக்கற்களும் உண்டு. சலவைக்கல்லால் ஆனதொரு சிம்மாசனம் 'பாண்டுகம்பளம்' என்ற பெயரில் இந்திரனிடத்து இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 'பாண்டு' என்றால் வெண்மை. பாண்டவர்களின் தந்தைக்கு வெண்குஷ்டம் இருந்தது என்பதாலேயே அவன் பெயர் வந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் சலவைக்கல்லுக்கு ஒளி ஊடுருவும் தன்மை கிடையாது. எனவே இந்தக் கட்டுரையில் காணும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பளிங்கு என்ற சொல்லுக்கு சலவைக்கல் என்று பொருள் வராது.

ஆனால் முன்னரே நாம் பார்த்தது போல, பளிங்கு என்பது கண்ணாடி. அதிலும் ஒரு மாளிகை கட்டுமளவுக்குத் தடிமனும் உறுதியும் வாய்ந்த கண்ணாடிகளை இந்தியாவில் செய்தனர் என்பது வியப்பான செய்தி.

இன்னும் உண்டு...